திங்கள், 26 டிசம்பர், 2022

கருத்தாடலில் (Communication - Discourse) மனிதமூளையின் இரண்டு புலங்கள்

 

கருத்தாடலில் (Communication - Discourse) மனிதமூளையின் இரண்டு புலங்கள் . . .

---------------------------------------------------------------------------------------------------------------------------

''நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?''

''நான் என்ன சொல்லவருகிறேன் என்பது தெரியுதா?'"

''காதில் ஏறுகிறதா''

''இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதிலே விட்டுவிடாதே''

''நான் சொல்வதைப்பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்''

''நான் சொல்வதைக் கொஞ்சம் அசைபோட்டுப் பாருங்கள்''

''நான் சொல்லவந்தது வேறு; நீங்கள் அதைப் புரிந்துகொண்டது வேறு''

மேற்கண்டவைபோன்ற தொடர்களை நாம் அடிக்கடிப் பயன்படுத்துகிறோம்!

மொழி என்பது கருத்தாடல்களின் ஒரு முக்கியப் பகுதி! இதில் மொழிப்புலன் (Language Domain) முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் மொழியுடன் நாம் பயன்படுத்துகிற மொழி சாராக்கூறுகளான ( non-verbal means) படம் , அட்டவணை, முகத் தோற்றம், குரல் ஏற்ற இறக்கம், உடல்மொழி போன்ற பலவற்றைப் பயன்படுத்துகிறோம்.

அத்தோடு நமது மூளையில் அமைந்துள்ள ''அறிவுப் புலனும்'' (Cognition Domain - Knowledge Domain) நமது கருத்தாடலில் இடம்பெறுகிறது. எந்தக் கருத்துக்கு - எந்தச் சூழலில் - யாரிடம் - எந்தவகையான சொற்களையும் தொடர்களையும் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பது மூளையின் மொழிப் புலம்மட்டும் இல்லை!

மொழிப்புலமானது சொற்களையும் தொடர்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கிறது. ஆனால் அறிவுப்புலத்தின் செயற்பாடு மிக மிக முக்கியமானது.

இன்றைய தானியங்கு மொழிபெயர்ப்பு (Automatic Machine Translation) மென்பொருள்களில் இதுதான் மிகப் பெரிய சிக்கல். மூளையின் அறிவுப்புலத்தைக் கணினிக்கு அளிப்பதில்தான் சிக்கல் இருக்கிறது. இந்தப் பணி வெற்றியடையும்போதுதான் மனிதன் - கணினி (Man - Machine communication) இடையிலான கருத்தாடல் வெற்றிபெறும்; மொழிபெயர்ப்பும் வெற்றியடையும்.

மொழிப்புலமானது அறிவுப்புலத்தோடு முறையாக இணைந்து செயல்படும்போதுதான் எந்தக் கருத்தாடலும் வெற்றிபெறும்.

மொழிப்புலம் , அறிவுத்திறன் புலம் - இரண்டின் கூறுகள் என்ன ? இதுபற்றிய ஆய்வு ஒருபுறம்.

அடுத்து, இந்த இரண்டு புலங்களும் மனிதமூளையில் எவ்வாறு உயிரியல் அடிப்படையில் (Biological base) அமைந்து செயல்படுகின்றன என்பதுபற்றிய ஆய்வு வளர்ச்சி அடைவது ஒரு தேவை; மற்றொன்று இந்த இரண்டு புலங்களையும் கணினியின் மூளையில் - மின்னணுக்கருவியில் (Electronic Chip) - எவ்வாறு அமைப்பது என்பது பற்றிய ஆய்வு மற்றொரு தேவை.

மூளையின் (Human Brain) இந்த உயிரியல் அடிப்படைகளைக் கணினியின் மின்மூளைக்குக் (Electronic Brain - Electronic Circuits) கொடுக்கமுடியுமா?

மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றார் தங்கள் ஆய்வுகள் மொழிப்புலம்தொடர்பானது பற்றிமட்டுமே என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். மொழிப்புலனில் இருந்து அறிவுப் புலத்திற்குச் செல்லும் மொழிதொடர்பான கூறுகளைப்பற்றிய ஆய்வே அவர்களது ஆய்வுகள். அறிவுப்புலனுக்குச் சென்றடைந்த மொழிக்கூறுகள் எவ்வாறு அறிவுப்புலனைப் பயன்படுத்தி, கருத்தாடலாக வெளிவருகிறது என்பது அடுத்த உயர்நிலை ஆய்வாகும். அதுபோன்று அறிவுப்புலனிலிருந்து மொழிப்புலனுக்குக் கருத்தாடலுக்காக ஒரு கருத்து எவ்வாறு அனுப்பப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் அடங்கும்.

இந்த ஆய்வுகள் வெற்றியடையும்போதுதான் மனிதன் - மூளை கருத்தாடல், தானியங்கு மொழிபெயர்ப்பு மென்பொருள் உருவாக்கம் வெற்றி அடையும்.

அதனால்தான் இயற்கைமொழி ஆய்வில் (Natural Language Processing - NLP) இன்று செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) , கணினிக் கற்றல் (Machine Learning) ஆகியவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. சில நேரங்களில் தொழில்நுட்பம் வளர்ந்துவிடும்; ஆனால் அதற்குப் பின்புலமான அறிவியல் அந்த அளவுக்கு வளராமல் இருக்கலாம்.

இயற்கைபற்றிய அறிவியல் வளர்ச்சி அடையாத காலக்கட்டத்திலேயே மனிதன் பல்வேறு தொழில்நுடபங்களை உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறான் என்பது உண்மை. ஒரு பொருளைக் கொடுத்தால் அதை மற்றொரு பொருளாக மாற்றும் தொழில்நுட்பம் முதலில் வளர்ந்துவிடலாம். ஆனால் அதற்குப் பின்புலமாக இருக்கிற அறிவியல் உண்மை பின்னர் தோன்றலாம்.

மேற்கூறிய இரண்டு புலன்களையும்பற்றிய அறிவியல் வளர வளரத்தான் மொழித்தொழில்நுட்பமும் வளர்ச்சியடையும். இந்த அறிவியல்கள் வளர்ச்சி அடையாமல், மொழித் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையமுடியாது.

 

தமிழ் ஆய்வாளர்களின் கவனத்திற்கு ! தமிழ் இலக்கணத்தின் வியக்கத்தக்க கணிதப் பண்பு

 

தமிழ் ஆய்வாளர்களின் கவனத்திற்கு ! தமிழ் இலக்கணத்தின் வியக்கத்தக்க கணிதப் பண்பு

--------------------------------------------------------------------------------------------------------------------------

கணினியியல் அறிஞர் நண்பர் திரு. சுந்தர் இலட்சுமணன் அவர்கள் 'மரம் = பட்டை' என்பது ஏன் 'மரப்பட்டை' என்று அமைகிறது? இதற்கு விதிகள் உண்டா? என்ற ஒரு மிகச் சரியான ஐயத்தை முன்வைத்துள்ளார். ஆனால் இதற்கான எனது பதில் கருத்து நீண்டுவிட்டதால், தனியாகவே இதைப் பதிவிடுகிறேன். நண்பர்களின் பொறுமையை வேண்டுகிறேன்! நேரம் கிடைக்கும்போது படித்துத் தங்கள் கருத்துக்களைக் கூறினால் நல்லது.

திரு. சுந்தர் இலட்சுமணன்

------------------------------------------------------------------------

ஐயா, மரம் பட்டை - இங்கே மகரம் நீங்கியபின் பகர ஒற்று இரட்டிப்பதற்கான ஒலிப்புத்தேவை எதுவும் உள்ளதா? அதாவது அசையின் தொடக்கத்தில் வல்லெழுத்து மெலியக்கூடாது என்பதற்காக இருக்குமா? ம-ர-பட்-டை என அசைபிரிக்கும்போது பட என்பதிலுள்ள பகரம் மெலிந்திருக்கக்கூடாதென்பதற்காக ம-ரப்-பட்-டை என பகர ஒற்று இரட்டிப்பதாகக் கொள்ளலாமா? https://dravidianlinguisticsblog.wordpress.com/.../an.../

- இங்கே ஒருவர் வல்லொலி புணர்ச்சியில் மிகுதியாகத் தங்கிவிடுவது எதனால் என்று கேட்டுள்ளார். அவருக்கு விடைபகர முயன்று வருகிறேன். அதற்காகவே இவ்வையம்.

ந. தெய்வ சுந்தரம் + திரு. சு. சரவணன்

-----------------------------------------------------------------------

நண்பர் சுந்தர் இலட்சுமணன் அவர்கள் எழுப்பியுள்ள ஐயத்திற்கு விடைதர முயல்கிறேன் (!).

ஏற்கனவே முகநூல் பதிவு ஒன்றில் அண்மையில் வேற்றுமைத்தொகையில் (உருபும் பயனும் தொக்கி நிற்கும் பெயர்த்தொகை) புணர்ச்சிபற்றி ஒரு கருத்தை முன்வைத்திருந்தேன். எனக்குக் கணினித்தமிழில் உதவிபுரிந்துவரும் மென்பொறியாளர் திரு. சரவணன் அவர்களின் கருத்தே அது. இந்த வகை பெயர்த்தொகையில் வருமொழியானது வல்லினத்தில் தொடங்கினால் நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் வருமொழியின் வல்லின எழுத்து உறுதியாக மிகும்; மிகவேண்டும். இது ஒரு பொது புணர்ச்சி விதி.

(1) நிலைமொழியின் இறுதி எழுத்து உயிராக இருந்தால் வருமொழியின் வல்லினத் தொடக்கம் மிகும். ''பள்ளி + பாடம் - பள்ளிப்பாடம்; தெரு + திண்ணை -> தெருத்திண்ணை''

(2) நிலைமொழியின் இறுதி எழுத்து உயிராக இல்லாமல், மெய் ஒற்றுக்களில் முடிந்தாலும் வருமொழியின் தொடக்க வல்லினம் மிகும்.

ஆனால் இதில் ஒரு முக்கியமான துணை விதியும் செயல்படுகிறது.

தமிழில் சொல்லின் இறுதியில் நீடிக்கும் மெய் ஒற்றுக்கள் - ம் , ண், ன், ய், ர், ல், ள், ழ் என்ற எட்டு மெய்களே. (ங், ஞ், ந், வ் வராது - பழந்தமிழில் இதற்கு விதிவிலக்கு இருக்கலாம்) )

இவற்றில் ம், ண், ன், ல், ள் ஆகியவை ஒரு வகையிலும் ய்,ர், ழ் ஆகியவை வேறொரு வகையிலும் செயல்படுகின்றன. ஆனாலும் இவை அனைத்திலும் வருமொழியின் தொடக்க வல்லினம் மிகும் .

ய், ர், ழ் ஆகியவை நிலைமொழி இறுதியில் வரும்போது, புணர்ச்சியால் மிகுகிற வல்லினம் அப்படியே நீடிக்கும். 'வாய் + கால் - வாய்க்கால் ; தேர் + தடம் -> தேர்த்தடம்; கூழ் + பானை -> கூழ்ப்பானை. இவ்வாறு மிகும்போது, தமிழின் அசையமைப்பு விதிகளும் செயல்படுகின்றன. 'வாய்க்கால்' என்பதை அசைகளாகப் பிரித்தால் , 'வாய்க் - கால்' ; முதல் அசையின் தொடக்கம் 'வ்' ; அசையின் உச்சி '' ; அசையின் ஒடுக்கம் 'ய்க்'; தமிழில் அசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வரலாம்; ஆனால் முதல் மெய் 'ய், ர், ழ்' ஆகிய மூன்றில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்; பிற மெய்கள் வரக்கூடாது. எனவே மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுக்களில் தொகைச்சொற்களில் 'ய்க்' 'ர்த்' 'ழ்க்' ஆகியவை வெளிப்படையாக வரமுடியும்; எனவே வருகின்றன.

(3) ம், ன், ல், ள் ஆகிய நான்கு மெய்களும் நிலைமொழிகளின் இறுதியாக வரும்போதும், வருமொழிகளில் வல்லினங்கள் வந்தால் ஒற்று மிகும். ஆனால் ஒரு துணைவிதி அங்கே செயல்படுகிறது.

'கல் + குடம்' என்பதில் 'கல்க்குடம்' என்று புணர்ச்சி விதிப்படி 'க்' மிகும்; ஆனால் அவ்வாறு மிகும்போது, வருமொழியில் முதல் அசையின் ஒடுக்கமாக 'ல்க்' என்ற கூட்டு வருகிறது. ஆனால் இது தமிழ்மொழி அசை அமைப்பு விதிகளின்படி தவறு; ஆனாலும் வேற்றுமைத்தொகை என்ற அடிப்படையில் வல்லின ஒற்று மிகவும் வேண்டும். இந்தச் சிக்கலைத் தமிழ் இலக்கணம் மிகச் சிறப்பாகக் கையாளுகிறது.

'' கல் + க் + குடம் -> கல்க்குடம் என்பதில் 'ல்' எழுத்தும் பங்கு கொள்ளவேண்டும்; புணர்ச்சியால் தோன்றுகிற ''க் '' எழுத்தும் பங்குகொள்ளவேண்டும். 'அதாவது 'க்' என்பதின் வல்லினத் தன்மையும் அதேவேளையில் 'ல்' என்ற இடையினத்தின் தன்மையும் - இரண்டும் - நீடிக்கவேண்டும். 'ல்' என்பதற்கு இணையான வல்லினம் 'ற்'; இந்த 'ற்' இல் வல்லினப் பண்பும் இருக்கிறது; அதேவேளையில் 'ல்' என்பதோடு உறவும் உள்ளது. எனவே 'ல்க்' என்ற அசை ஒடுக்கமானது 'ற்' என்று மாறி அமைகிறது.

இதன் பயனாகவே ன் + க் என்பதும் 'ற்' என்று மாறுகிறது;

'ள்க்' 'ண்க்' என்ற இணைகள் 'ட்' என்ற வல்லினமாக மாறுகிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள். தமிழின் அசை அமைப்பு விதிகளும் பின்பற்றப்படுகிறது; இந்தவகை பெயர்தொகைகளில் வல்லினம் மிகும் என்பதும் நீடிக்கிறது.

இதையே புணர்ச்சி இலக்கணத்தில் ''திரிதல்'' என்று அழைக்கிறோம். முதலில் வல்லின ஒற்று மிகுந்து, பின்னர் அது தனக்கு முந்தைய மெய்யோடு இணைந்து, வேறொரு மெய்யாகத் திரிகிறது. அதாவது ''தோன்றல்'' என்ற ஒரு புணர்ச்சி செயல்பாடு நிகழ்ந்து, பின்னர் தமிழ் அசை அமைப்பு விதியைத் தக்கவைக்க ''திரிதல் '' செயல்பாடு நடைபெறுகிறது. ''தோன்றல்' இல்லாமல் இங்கு ''திரிதல்'' கிடையாது!

(4) ஆனால் நிலைமொழியின் இறுதியில் 'ம்' என்ற மெல்லினம் வந்தால் ? அப்போதும் வல்லின ஒற்று மிகும். மரம் + பட்டை -> மரம்ப்பட்டை ; 'ம்ப்ப்' என்ற மூன்று மெய் இணை தோன்றுகிறது. ஆகவே மேலே (3) கூறப்பட்டுள்ளதுபோல, 'ம்ப்' என்பது 'ப்'ஆக மாறுகிறது. அதற்குக் காரணம், 'ம்' என்பதற்கு இணையான வல்லினம் 'ப்' தானே! ( ல்க், ன்க் -> ற் ; ள்க், ண்க் -> ட் என்பதுபோல!) ஆகவே 'ம்ப்' என்ற இணையானது 'ப்' என்று அமைகிறது. இங்கும் புணர்ச்சி விதியும் செயல்படுகிறது; தமிழ் அசை அமைப்பு விதியும் மீறப்படவில்லை. எனவே 'மரம் + ப் + பட்டை - மரம்ப்பட்டை -> மரப்பட்டை.

இங்கு முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டிய தமிழ் இலக்கண விதிகள் ; (1) உருபும் பயனும் தொக்கிநிற்கும் பெயர்த்தொகையில் வல்லின ஒற்று மிகும் (2) அவ்வாறு மிகும்போது, தமிழ் அசை அமைப்பு விதியும் தக்கவைக்கப்படவேண்டும். அதாவது ஒரு மொழியசையின் ஒடுக்கமாக 'ய், ர், ழ் + பிற மெய்கள் என்பது அமையலாமே ஒழிய, பிற மெய் இணைப்புக்கள் அமையக்கூடாது. இந்த இரண்டு விதிகளுமே இங்குச் செயல்படுகின்றன.

எனவேதான் 'பால் + குடம் -என்பது 'பாற்குடம்' என்று அமையவேண்டும். அல்லது 'பால்க்குடம்' என்று அமையவேண்டும். 'பால்குடம்' என்று எழுதக்கூடாது.

நண்பரே. தமிழ் இலக்கணத்தின் சிறப்பு இது! கணினிக்கு விதிவிலக்குகள் இல்லாமல் இலக்கண விதிகளைக் கொடுக்கவேண்டிய ஒரு சூழலில் எங்களுக்குக் கிடைத்துள்ள ஒரு விளக்கம். இது சரியா தவறா அல்லது மாற்றவேண்டுமா என்பதைத் தங்களைப்போன்ற தமிழ் இலக்கண ஆய்வாளர்கள்தான் கூறவேண்டும். ஒரு முயற்சி . அவ்வளவுதான்! மொழியியல் கற்றுக்கொடுப்பது . . மனித மொழியின் அமைப்பு, செயல்பாடு ஆகியவற்றின் பண்புகள் அனைத்துக்கும் விதிவிலக்கு இல்லாத விதிகளைக் கண்டறியவேண்டும் என்பதே ஆகும்!

ஆய்வில் ஒரே கட்டத்தில் அனைத்துச் சிக்கல்களையும் தீர்ககமுடியாது . எனவே ஒரு கட்டத்தில் நம்மால் விளக்கமுடியாத சிக்கல்களைப் புறனடையாக வைக்கலாம். அடுத்த ஒரு கட்டத்தில் விளக்கம் கிடைக்கலாம். அப்போது புறனடையிலிருந்து அதை விலக்கிக்கொள்ளலாம். கணினியில் இதை hardcoding என்பதில் அடக்கிக்கொள்வார்கள் எனக் கருதுகிறேன்.

(1) எழுத்து வழக்கில் தாங்கள் (திரு சுந்தர் இலட்சுமணன்) கருதுவது போல , பொதுவாக உருபன்கள் மறைவதில்லை. ஆனால் பேச்சுத்தமிழில் சில உருபன்களின் முதல் எழுத்துமட்டுமல்லாமல், முழு உருபனே மறையும். எடுத்துக்காட்டாக, 'வருகிறேன்' என்ற எழுத்துத்தமிழ்ச் சொல்லில் மூன்று உருபன்கள் - வரு - கிறு-ஏன் ' - என்ற மூன்று உருபன்கள் இருக்கின்றன. ஆனால் இதற்கான சில பேச்சு வழக்குக்களில் 'வரேன்' என்று அமையும்போது 'வர் - ஏன்' என்ற இரண்டு உருபன்கள்மட்டுமே நீடிக்கின்றன; நிகழ்கால விகுதி மறைந்துதான் உள்ளது. வேறுவகையிலும் இதற்கு விளக்கம் கூறலாம். 'வர்றேன்' என்று பேச்சுவழக்கைக்கொண்டு, 'வர் - ற் - ஏன்' என்றுஉம் விளக்கம் அளிக்கலாம். இதில் மூன்று உருபன்களும் நீடிக்கின்றன. ஆனால் அவற்றின் வடிவங்கள் வேறு.

(2) எனது கருத்து, பேச்சுவழக்கை அடிப்படையாகக்கொண்டு, எழுத்துவழக்கின் புணர்ச்சி விதிகளை ஆராய்வது சரியாக இருக்காது.

(3) நிலைமொழியின் இறுதியில் - அதாவது சொல்லின் இறுதி அசையானது அசை உச்சியோடு (Peak) நின்று (அதாவது உயிரோடு நின்றுவிட்டால்) , வருமொழியின் முதல் அசையின் தோற்றமாக (Onset) வல்லினம் நின்றால், நிலைமொழியின் இறுதி அசையானது வல்லினத்தை முதலாகக்கொண்ட வருமொழியின் முதல் அசையோடு இணைவதற்கு இயலாமல், தனக்கு ஒரு அசை ஒடுக்கத்தை (Coda) இணைத்துக்கொள்கிறது. அதாவது நிலைமொழியின் இறுதி அசையானது வருமொழியின் ஒரு வல்லினத்தைக்கொண்ட அசை ஒடுக்கத்தை (Coda) உருவாக்கிக்கொள்கிறது. தமிழில் பெயரெச்சம், பெயரடைகளைக்கொண்ட பெயர்த்தொடர்களைத் தவிர (Noun phrases) , பிற தொடர்கள் அனைத்துக்கும் மேற்கூறிய விளக்கம் பொருந்திவருகிறது. இந்தப் பிற தொடர்களில் நிலைமொழியானது உயிரில் முடிந்து, வருமொழியின் முதல் எழுத்து (அதாவது முதல் அசையின் தொடக்கம்) வல்லினமாக இருந்தால், இடையில் வருமொழியின் வல்லின முதல் எழுத்து தோன்றும். இதற்கு மொழியசையின் (linguistic syllable ) அமைப்பே அடிப்படை என்று கொள்ளலாம்.

(4) ஆனால் நிலைமொழியின் இறுதி எழுத்து மெல்லினம், இடையினத்தில் (non-stop or non-plosives) அமைந்தால் (ம், ண், ன், ய், ர், ல், ள், ழ் - 8 எழுத்துக்கள்) , தோன்றலும் திரிதலும் நடக்கிறதே! அதற்கு என்ன விளக்கம் அளிப்பது? இந்த எட்டு மெய்களும் வல்லினங்களின் பிறப்பாக்கத்தைவிட (articulation) , உயிர்களின் பிறப்பாக்கத்தோடு அதிகமான உறவுகள் கொண்டுள்ளன என்று கூறலாமா? அவ்வாறு கொண்டால், நிலைமொழியின் இறுதி அசை அமைப்பும் வருமொழியின் முதல் அசை அமைப்புமே வல்லின ஒற்று மிகுவதற்குக் காரணம் என்று கூறலாம். ஆனால் இது எந்த அளவுக்குச் சரியானது என்பது மேலும் ஆராயப்படவேண்டும.

(5) மேலும் தொகை (compounds) என்ற ஒரு அமைப்பு தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இதுபோல வல்லின ஒற்றின் தோற்றத்திற்குக் காரணம் என்றும் கூறலாம். ஆனால் தாங்கள் கூறியதுபோல வினைத்தொகையில் இதுபோன்ற வல்லின ஒற்றுத் தோன்றல் இல்லை ( ஆட்டுக்கல், ஒட்டுப்பலகை போன்ற வன்தொடர்க்குற்றியலுகர நிலைமொழிகளைத்தவிர).

ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக எனக்குப் படுகிறது : மொழியசை அமைப்புக்கும் ( Structure of linguistic syllables) புணர்ச்சிக்கும் ( morphophonemic changes) மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எனவேதான் தற்போதைய Optimality Theory -இல் இயற்கைமொழிகளின் மொழியசை ஆய்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. Sonarity wave போன்ற கோட்பாடுகள் எல்லாம் அநேகமாக எல்லா மொழிகளுக்கும் பொருந்திவருகிறது. ஒலியன்களுக்கும் உருபன்களுக்கும் இடையில் நீடிக்கிற மொழியசை அலகானது மொழி ஆய்வில் மிக மிக முக்கியமானது. ஆனால் தமிழில் மொழியசை ஆய்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதே எனது கருத்து. அசை என்றாலே யாப்பு அசைக்குச் (Prosodic syllables) சென்றுவிடுகிறோம்.

 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India