திங்கள், 21 மார்ச், 2022

மொழியியல் துறையில் பயன்படுத்தும் கலைச்சொற்கள் ஆங்கிலமொழியின் அடிப்படையில் அமைந்ததா? ஒரு ஐயத்திற்கு விடை ...

 மொழியியல் துறையில் பயன்படுத்தும் கலைச்சொற்கள் ஆங்கிலமொழியின் அடிப்படையில் அமைந்ததா? ஒரு ஐயத்திற்கு விடை ...

---------------------------------------------------------------------------------------------------------------------------
மொழியியல் கோட்பாடுகள் ''ஆங்கிலமொழிக்கான கோட்பாடுகள்'' என்ற ஒரு தவறான கருத்தை அகற்றத் தொடர்ந்து நான் பதிவிட்டுவருகிறேன். எந்தவொரு அறிவியல் கோட்பாடும் குறிப்பிட்ட மொழி சார்ந்தது இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். அதுபோன்றே மொழியியல் துறையின் கோட்பாடுகளும்!
அடுத்து, ஒரு ஐயம் நண்பர்களிடையே நிலவுகிறது. ''மொழியியல் துறையின் கலைச்சொல்லாக்கங்கள் ஆங்கிலத்தில் நிலவும் கலைச்சொற்களின் மொழிபெயர்ப்புக்களே! ஏன் அவற்றைத் தமிழ் இலக்கணங்களில் பயன்படுத்துகிற கலைச்சொற்களைக்கொண்டு பயன்படுத்தக்கூடாது?''
நியாயமான ஒரு கருத்துத்தான்! ஆனால் இவ்விடத்தில் ஒரு உண்மையை நாம் காணவேண்டும். எந்தவொரு அறிவியல்துறையிலும் அத்துறைக்கே உரிய சிறப்புக் கருத்துக்களுக்கே கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. கருத்துக்கள் உலகப் பொதுமையானவை. ''தமிழகத்தில் இயற்பியல், வேதியியல் போன்ற துறைகளில் நிலவுகிற கருத்துக்கள் வேறு. பிற நாடுகளில் அவை வேறு'' என்பது தவறுதானே! குறிப்பிட்ட அறிவியலில் நிலவுகிற அல்லது அதற்குத் தேவைப்படுகிற கருத்துக்களுக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட மொழியினரும் தங்கள் தங்கள் மொழிகளில் கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்கின்றனர். இதை மொழிபெயர்ப்பு என்று கூறுவதைவிட கருத்துப்பெயர்ப்பு என்று கூறவேண்டும்..
ஆங்கிலத்தில் "mass" "velocity" "acceleration" "gravity" என்ற நிலவுகிற சொற்களுக்கான மொழிபெயர்ப்பாகத் தமிழில் கலைச்சொல் உருவாக்கப்படவில்லை. மாறாக, அவற்றின் பொருளைத் தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு, கலைச்சொற்களை உருவாக்குகிறோம். இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.
கலைச்சொற்களை உருவாக்குவதற்குச் சில தெளிவான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறோம்.
(1) சில பொருள்கள் அல்லது கருத்துக்களுக்கு, அவற்றையும் அதற்கான வேறுமொழிகளில் பயன்படுத்துகிற சொற்களையும் அப்படியே பெற்றுக்கொள்கிறோம். இதைக் ''கடன் வாங்குதல்'' (loan) என்று கூறுகிறோம். குறிப்பிட்ட பொருளுக்கான அல்லது கருத்துக்கான முழுத் தெளிவு கிடைக்கிறவரை இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. பின்னர் நாமே கருத்துக்களின் அடிப்படையில் கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்கிறோம்.
(2) குறிப்பிட்ட கருத்துக்களுக்கு அல்லது பொருள்களுக்கு ஏற்கனவே நிலவுகிற சொற்களைக் கலைச்சொல்லாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்."atom" என்பதற்குத் தமிழில் ஏற்கனவே நிலவிவருகிற 'அணு' என்ற சொல்லைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்திகிறோம்.
(3) சில பொருள்களுக்கு அவற்றின் பொருண்மையை நன்கு விளங்கிக்கொண்டு, தமிழில் உள்ள சொற்களைக்கொண்டு புதிய சொற்களை உருவாக்கி, கலைச்சொல்லாகப் பயன்படுத்துகிறோம். "radio" என்பதற்கு 'வான் + ஒலி' என்ற இரண்டு சொற்களை இணைத்து 'வானொலி' என்ற கலைச்சொல்லை உருவாக்கிப் பயன்படுத்துகிறோம்.
(4) சில சொற்களுக்கு ஆங்கிலச்சொற்களை (நம்மிடையே பெரும்பாலும் ஆங்கிலமே நீடிப்பதால்) மொழிபெயர்க்கிறோம். "Head constable" என்பதற்குத் 'தலைமைக் காவலர்'' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
(5) பல சொற்களுக்கு நமது தமிழறிஞர்கள் - குறிப்பாக வேர்ச்சொல் ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரானர், அருளி, அரசேந்திரன், மதிவானண், இராமகி ஐயா போன்றவர்கள்- குறிப்பிட்ட பொருளின் பண்புக்கூறுகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, தமிழில் அவற்றிற்கான அடிச்சொற்களைக்கொண்டு , நமக்குக் கலைச்சொல்லாக்கத்தில் உதவுகிறார்கள்.
மொழியியல் துறைக் கலைச்சொற்களும் மேற்படி அடிப்படைகளில்தான் தோன்றி நிலவுகின்றன. குறிப்பிட்ட இலக்கணக் கருத்துக்கள் அல்லது இலக்கணச்சொற்கள் தமிழிலும் நிலவும்போது, நமது இலக்கண ஆசிரியர்கள் பயன்படுத்திய சொற்களையே பயன்படுத்துகிறோம். 'பெயர்' 'வினை' 'விகுதி' 'பெயரெச்சம்' 'வினையெச்சம்' 'பெயரடை' 'வினையடை' போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள். இவையெல்லாம் ஆங்கிலத்தில் உள்ள "noun" "verb" "Relative participle" "Verbal Participle" "adjective" "Adverb" ஆகியவற்றின் மொழிபெயர்ப்புக்கள் இல்லை. தமிழ் இலக்கணங்களில் காணப்படுகிற சொற்களே!
மொழியியலின் சில கருத்துக்கள் அல்லது வகைப்பாடுகள் தற்போதைய அறிவியல் முன்னேற்றக் காலகட்டத்தில் மிக நுட்பமாக வரையறுக்கப் -பட்டிருக்கும். அந்த நுட்பங்கள் முந்தைய காலகட்டத்தில் நிலவாமல் இருக்கலாம். அதற்கான சொற்கள் தமிழ் இலக்கண நூல்களில் இல்லாமல் இருக்கலாம். அப்போது அக்கருத்துக்களை நாம் புரிந்துகொண்டு, தமிழ்ச் சொல்லமைப்பு விதிகளுக்கு உட்பட்டு, புதிய கலைச்சொற்களை உருவாக்குகிறோம். எடுத்துக்காட்டாக, 'பேச்சொலி (Phones)' 'ஒலியன் (Phoneme)' 'மாற்றொலி (Allophone) , வரிவடிவு அல்லது எழுத்து (grapheme) துணைவரிவடிவம் அலது துணையெழுத்து (allograph) , 'உருபன் (Morpheme)' 'மாற்றுருபு (Allomorph)' 'வெற்றுருபு (Empty morph)' போன்ற கலைச்சொற்கள். இவை உலக அளவில் மொழியியல் துறையில் நிலவும் கருத்துக்களுக்கான கலைச்சொற்கள். இவை ஆங்கிலத்தின் மொழிபெயர்ப்புக்கள் இல்லை.
மொழியியலில் தற்போது தோன்றி நிலவும் புதுக் கருத்து நுட்பங்களை, அவற்றின் பொருண்மையைப் புரிந்துகொண்டு, தமிழகத்தின் மொழியியலாளர்கள் இக்கலைச் -சொற்களை உருவாக்குகிறார்கள். இவையெல்லாம் ''ஆங்கிலத்தின் மொழிபெயர்ப்பு'' என்று கருதக்கூடாது. அந்தத் தவறான அடிப்படையில் தமிழின் மொழியியல் சொற்களை ''ஆங்கில அடிப்படையில்'' உருவாக்குகிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது.
கலைச்சொல்லாக்கத்தில் முதலில் கடைபிடிக்கவேண்டிய மொழிசார்ந்த ஒரு உண்மை... தமிழ்ச்சொற்களின் மொழியசை அமைப்பைப் பாதிக்கக்கூடாது என்பதாகும். சொல் முதலெழுத்து, இறுதியெழுத்து, மெய்ம்மயக்கங்கள் ஆகியவற்றைப் புறக்கணிக்கக்கூடாது. புணர்ச்சி விதிகள் பின்பற்றப்படவேண்டும்.
இந்த அடிப்படையில்தான் தமிழுக்கு மொழியியல் துறையில் கலைச்சொல்லாக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. 'discourse" என்ற கலைச்சொல்லுக்குச் 'சொல்லாடல்' 'உரையாடல்' 'கருத்தாடல்' 'சொற்கட்டு' என்ற பல சொற்கள் முன்வைக்கப்பட்டு, இன்று பெரும்பாலும் 'கருத்தாடல் ' ஏற்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், discourse என்பது மொழிசார் கூறுகளைமட்டுமல்லாமல், மொழிசாராக்கூறுகளையும் இணைத்து, ஒரு கருத்தைப் புலப்படுத்த ஒருவர் மேற்கொள்ளும் செயல் என்பதால் இச்சொல் இன்று பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
சொல்லாக்கத்தில் கருத்தும் தவறாக அமைந்திவிடக்கூடாது; குறிப்பிட்ட மொழியின் இலக்கணமும் புறக்கணிக்கப்பட்டுவிடக்கூடாது. மிக, மிக அதிகமான கவனம் தேவைப்படுகிறது.
எனவே மொழியியலில் இன்று பயன்படுத்துகின்ற கலைச்சொற்களை ''ஆங்கில மொழிபெயர்ப்பு'' என்று தவறாகக் கருதிவிடக்கூடாது. மொழியியல் துறையின் கருத்துக்களுக்கான பொருள் பெயர்ப்பாகவே கருதவேண்டும்.
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

ஞாயிறு, 20 மார்ச், 2022

தொல்காப்பியர், பவணந்தியார் போன்ற இலக்கண ஆசிரியர்களுக்கும் ... மொழியியல் அறிஞர்களுக்கும் .. பிற அறிவியல் துறைகளின் அறிவியலாளர்களுக்கும் இடையிலான ஒற்றுமை...

தொல்காப்பியர், பவணந்தியார் போன்ற இலக்கண ஆசிரியர்களுக்கும் ... மொழியியல் அறிஞர்களுக்கும் .. பிற அறிவியல் துறைகளின் அறிவியலாளர்களுக்கும் இடையிலான ஒற்றுமை...

--------------------------------------------------------------------------------------------------------------------------

இலக்கணமும் மொழியியலும் அறிவியல் துறைகள் என்பதே எனது நிலைபாடு. ஏன்?
ஒரு இயற்பியல் அறிவியலாளர் என்ன செய்கிறார்? உலகில் உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டிலுமே உள்ளடங்கியுள்ள இயற்பியல் பண்புகளைக் கண்டறிய முயல்கிறார். ஒரு குறிப்பிட்ட இயற்பியல் பண்பு உலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் - உயிருள்ள, உயிரற்ற பொருள்களிலும் - இருக்கிறது என்று கொள்வோம். அந்த இயற்பியல் பண்பை அல்லது இயற்பியல் இயக்கத்தைப் பொதுமைப்படுத்தி, அதற்குப் பின்னால் இயங்குகிற புறவய விதிகளை எடுத்து முன்வைக்கிறார். கணிதத்தின்மூலமாகவோ அல்லது வேறு துறைகளின் உதவியுடனோ அந்தப் புறவய விதிகளை வெளிப்படுத்துகிறார்.
ஒரு அணுவை உடைத்தால் - பிளந்தால், அதற்குள் எவ்வளவு ஆற்றல் கிடைக்கும் என்பதை ஜன்ஸ்டீன் E - mc square என்ற கணித வாய்பாடுமூலம் விளக்கினார். ஆற்றலும் (Energy) பருண்மைப் பொருளும் (Matter) வடிவங்களில்தான் வேறுபடுகின்றன; ஆனால் இரண்டும் ஒன்றே என்று கூறினார். ஆற்றல்பற்றிய இந்த விதி அனைத்துப் பொருள்களுக்கும் பொருந்தும். அப்போதுதான் அது அறிவியல் அடிப்படையான வாய்பாடாக அமையமுடியும். புவி ஈர்ப்பு விதியானது பூமி என்ற கிரகத்திற்கு மட்டுமல்ல, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களுக்கும் பொருந்தும்.
இலக்கண ஆசிரியர்களும் மொழியியல் ஆய்வாளர்களும் இதுபோன்றே தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மொழியில் ஒருவர் தன் பிறப்புமுதல் இறப்புவரை பயன்படுத்துகிற மொழித்தொடர்கள் கோடிக்கணக்கில் இருக்கலாம். அம்மொழியில் உருவாக்கப்படுகிற இலக்கியங்களில் கோடிக்கணக்கான தொடர்கள் அமையலாம். ஆனால் அந்தக் கோடிக்கணக்கான மொழித்தொடர்களுக்கும் பின்னே நிலவுகிற விதிகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்தான் அமைந்திருக்கும். அந்த விதிகளே கோடிக்கணக்கான மொழித்தொடர்களையும் உருவாக்குகின்றன. இந்த விதிகள் நமது கண்ணுக்கு நேரடியாகத் தெரியாது. உடம்படுமெய் ஏன் வருகிறது, எந்த இடத்தில் எந்த உடம்படுமெய் வருகிறது , ஏன் அவ்வாறு வருகிறது என்பதை விளக்கும் விதிகளை இலக்கண ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர்.
இதுபோன்ற குறிப்பிட்ட விதிகளைக் கண்டறிவதே இலக்கண ஆசிரியர்கள், மொழியியல் ஆய்வாளர்களின் பணியாகும். குறிப்பிட்ட மொழிக்கான இலக்கண ஆசிரியர்கள் அம்மொழியில் கிடைக்கும் மொழித்தொடர்களைத் தரவுகளாகக்கொண்டுதான் இந்த விதிகளைக் கண்டறியமுடியும். தனது சொந்தக் கற்பனையில் விதிகளை உருவாக்கமுடியாது. நீடிக்கிற விதிகளைக் கண்டறியவேமுடியும். எந்த ஒரு அறிவியல் விதியும் கற்பனையில் உதிப்பது இல்லை. அவை யதார்த்தத்தில் நீடிக்கின்றவையே. விதிகள் உருவாக்கப்படவில்லை (not invention); அவை கண்டறியப்படுகின்றன (discovery).
இந்தத் தரவுகள் எப்படி அமையவேண்டும்... அமைக்கப்படவேண்டும் என்பதுபற்றிய தெளிவு இலக்கண ஆசிரியர்களுக்கு இருக்கும். இருக்கவேண்டும். அதன்பின்னர் அத்தரவுகளை வகைப்படுத்தி, அந்த வகைகளுக்குப்பின்னர் நீடிக்கிற அமைப்பு விதிகளை... இயக்குவிதிகளைக் கண்டறிகிறார்கள். இதுவே குறிப்பிட்ட மொழிக்கான இலக்கணம். இதில் இலக்கண ஆசிரியர்கள் தங்கள் விருப்புவெறுப்புக்களுக்கு இடம் தரமாட்டார்கள். தரவும் கூடாது. ஒரு இலக்கண ஆசிரியரின் சிறப்பு.... அவர் தனது ஆய்வுக்கு அடிப்படையாகக்கொண்ட தரவுகள்... அத்தரவுகளின் உள்ளார்ந்த அமைப்பை விளக்கும் முறை... அந்த அமைப்புக்களுக்குப்பின்னர் நீடிக்கிற இலக்கண விதிகள் ஆகியவற்றைப் பொறுத்தே உள்ளது. அவரது இலக்கணம் அந்தக் குறிப்பிட்ட மொழியில் .... அந்த மொழி பேசும் மக்கள் பயன்படுத்தும் அனைத்துத் தொடர்களையும் விளக்குவதாக அமையவேண்டும்; அனைத்துத் தொடர்களுக்கும் பொருந்தவேண்டும். விதிவிலக்குகள் என்றால் அதை விதிவிலக்கு என்று கூறவேண்டும்.
மொழியியல் துறை தோன்றியபிறகு ... பல்வேறு மொழிகளை ஆய்வதற்கான சூழல் தோன்றியுள்ளது. அதன் பயன்.... மனித இனத்தின் அனைத்து இயற்கைமொழிகளுக்கும் இடையிலான பொது விதிகளையும் கண்டறிய முடிகிறது. ஒப்பிலக்கணங்கள் (Comparative Grammars) தோன்றமுடிகிறது. அனைத்து மொழிகளையும் மனித மூளையே உருவாக்குகிறது என்பதால், ஆயிரக்கணக்கான மொழிகள் நிலவினாலும்... அவற்றின் மொழித்தொடர்களின் அமைப்புக்களில் பல ஒற்றுமைகளைக் காணமுடிகிறது. இதன் தொடர்ச்சியாக... எந்தவொரு மொழியையும் ஆராய்வதற்குத்த தேவையான மொழி ஆய்வு முறை தோன்றியுள்ளது. இதுவே மொழியியல்.
கண்ணுக்குத் தெரியாத இயற்கைப் பண்புகளையும் ... உயிரினத்தின் மரபணுவையே ஆய்வுசெய்யக்கூடிய இந்த அறிவியல் உலகில்... ஆயிரக்கணக்கான மொழிகளுக்கிடையே ... அவற்றில் நிலவும் கோடியே கோடி மொழித்தொடர்களுக்குப்பின்னர்... நிலவுகிற அமைப்பு, இயக்கம் ஆகியவற்றிற்கான விதிகளைக் கண்டறிகிற மொழியியல் துறையானது... குறிப்பிட்ட மொழிக்கான இலக்கணங்களை உருவாக்கிய இலக்கண ஆசிரியர்களின் பணிகளின் அடுத்தகட்ட வளர்ச்சியே ஆகும். எனவே இலக்கண ஆசிரியர்களையும் மொழியியல் ஆய்வாளர்களையும் எதிர்த் துருவங்களாக நிறுத்திப் பார்ப்பது அறிவியல் கண்ணோட்டம் இல்லை!
அதுபோன்று .. பிற இயற்கை, சமூக அறிவியல்போன்று... இலக்கண அறிவியலும் மொழியியல் அறிவியலும் புறவயமான அறிவியல்களே. குறிப்பிட்ட மொழிக்கான ஆய்வுக்குமட்டுமே இடம்தந்த முந்தைய சமூகச் சூழல் இன்று மாறி... மனித இனத்தின் எந்தவொரு மொழியையும் ஆய்வுசெய்வதற்குத் தேவையான மொழியியல் கோட்பாடுகளை முன்வைக்கிற ஒரு வளர்ச்சிநிலையை இன்றைய சமுதாயம் பெற்றுள்ளது. அதன் பயனாகவே, குறிப்பிட்ட மொழி ஆய்வானது மனித இனத்தின் அனைத்துமொழிகளையும் ஆய்வதற்கான துறையாக , மொழியியல் துறையாக வளர்ந்துநிற்கிறது. இலக்கண ஆசிரியர்களும் மொழியியல் ஆய்வாளர்களும் பிற அறிவியல்துறை ஆய்வாளர்கள்போன்று அறிவியல் ஆய்வாளர்களே என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

சனி, 19 மார்ச், 2022

சோசலிசப் புரட்சிகளின் பின்னடைவுகளும் ரசியா - உக்ரைன் போரும் ...

  சோசலிசப் புரட்சிகளின் பின்னடைவுகளும் ரசியா - உக்ரைன் போரும் ...

------------------------------------------------------------------------------------------------------------------------
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சுரண்டும் ஆளும் வர்க்கங்கள் - சுரண்டப்படும் ஆளப்படுகிற வர்க்கங்கள் என்ற வர்க்க அடிப்படையில் நீடித்துவந்த மனித சமுதாயம்... தனது வளர்ச்சிப்போக்கில் ... குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில் ... முதலாளித்துவ சமுதாயமாக மாற்றத்தையும் வளர்ச்சியையும் பெற்றது. மனித சமுதாயத்தின் இந்தப் புறவயமான வளர்ச்சிகளை மிகத் தெளிவான, அறிவியல்பூர்வமான ஆய்வுமுறைகளைக்கொண்டு ஆய்வு செய்த காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் ... இந்த முதலாளித்துவ வளர்ச்சியானது தனக்கு அடுத்த கட்ட வளர்ச்சியாக சோசலிச சமுதாயமாக மாறுவது தவிர்க்க இயலாத ஒன்று என்று எடுத்துரைத்தனர். சோசலிசம் என்பது ''தங்கள் தலைகளில் உதித்த'' ஒரு கற்பனைச் சமுதாயம் இல்லை... மாறாக, புறவய வளர்ச்சியில் தவிர்க்க இயலாத ஒரு சமுதாய வளர்ச்சிக்கட்டம் என்பதை அரசியல் பொருளாதார அடிப்படையில் விளக்கினர். இந்தச் சோசலிசக் கட்டமைப்பு ஒரு கட்டத்தில் கம்யூனிச சமுதாயமாக வளர்ச்சியடையும் என்பதையும் விளக்கினர். ஆனால் இந்த வளர்ச்சி ஒரு நீண்ட கால இயக்கமாகவே அமையும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.
சோசலிசக் கட்டமைப்புக்கான வளர்ச்சிக்கால கட்டத்தில் ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பம் ... அதுவரை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆளும் வர்க்கங்களாக நீடித்த சுரண்டும் வர்க்கங்கள் ஆளப்படும் வர்க்கங்களாக அமைகின்றன; பாட்டாளிவர்க்கத் தலைமையிலான உழைக்கும் வர்க்கங்கள் ஆளும் வர்க்கங்களாக அமைகின்றன; அவற்றின் கைகளிலேயே அரசு இயந்திரம் நீடிக்கும். அந்த அரசு இயந்திரத்தின் உதவிகொண்டு... சோசலிசப் பொருளாதார அமைப்பைக் கட்டுவதோடு.... தொடர்ந்து நீடிக்கிற பழைய சுரண்டும் வர்க்கங்களின் அரசியல் பொருளாதார ஆணிவேர்களை அகற்றும் ; இறுதியில் வர்க்கவேறுபாடற்ற மனித சமுதாயம் தோன்றி நிலவும்.
இந்த மாற்றங்கள் எல்லாம், வளர்ச்சிகளெல்லாம் தனிமனிதர் கற்பனைகள் இல்லை; மாறாக, சமுதாயத்தின் புறவய வளர்ச்சிவிதிகள் என்பதைப் பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்.
ஆனால் இந்தச் சோசலிச சமுதாயமானது தனது முழுவளர்ச்சியை .. கம்யூனிச சமுதாயத்தை நோக்கிய வளர்ச்சியை ... குறுகிய காலத்தில் பெற்றுவிடமுடியாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்த சுரண்டும் - சுரண்டப்படும் வர்க்க சமுதாயத்தை ஒரு சில ஆண்டுகளில் ... குறுகிய காலகட்டத்தில் ... முழுமையாகத் தகர்த்துவிடமுடியாது. அவை நீடிப்பதற்கான பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் வேரோடு பிடுங்கப்பட்டு எறியப்படும்வரை... அவை மீண்டும் தற்காலிகமாக ஆளும் வர்க்கங்களாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்பதையும் கம்யூனிசத் தலைவர்கள் உணர்ந்தே இருந்தனர். எனவேதான் பாட்டாளி வர்க்கங்கள் ஆளும் வர்க்கங்களாக இருந்தாலும்... சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும்... கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளுக்குள்ளும்... பழைய, ஆட்சியை இழந்த வர்க்கங்கள் தங்களது நேரடி நடவடிக்கைகளின்மூலம், கருத்து, பண்பாட்டு ஆதிக்கத்தின்மூலமும் ... தாங்கள் இழந்த ஆட்சியைக் கைப்பற்றக் கடுமையாகப் போராடும். அதாவது வர்க்கப்போராட்டங்கள் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த அளவுக்கு உறுதியாக முன்னேறுகிறார்களோ, அந்த அளவுக்குத்தான் பிற்போக்கு வர்க்கங்களின் சதிகளை முறியடிக்கமுடியும்.
இந்த அடிப்படையில் தோழர் லெனின் , தோழர் ஸ்டாலின் போன்றோர் 15 நாடுகளை உள்ளடக்கிய சோவியத் சோசலிசக் குடியரசை நிறுவியபிறகும்.... பாட்டாளிவர்க்கத்தின் அரசை வலிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதுபோன்று சீனாவிலும் தோழர் மாசேதுங் மேற்கொண்டார்.
மற்றொரு பிரச்சினை... சோசலிச நாடுகளில் தொடர்ந்து நீடித்துவந்த சுரண்டும் வர்க்கங்கள் மட்டுமல்லாமல், வெளியே நீடித்த அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்தியங்களும் சோசலிச அரசுகளை வீழ்த்த பல வகைகளில் முயன்றன.
குறிப்பாக, ரசியாவில் தோழர் ஸ்டாலின் மறைவுக்குப்பின்னர் ஆட்சியிலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இருத்திக்கொண்ட குருசேவ்... நடைமுறையில் உள்நாட்டில் சோசலிசத்தைப் பலவீனப்படுத்தவும், வெளியே பிற ஏகாதிபத்திய நாடுகளுடன் கூட்டு சேரவும் தீவிரமாக ஈடுப்பட்டார். அவருக்குப்பின்னர், பிரஸ்நேவ், கோர்பாச்சோ ஆகியோர் அவரது வழியைப் பின்பற்றினர். இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் முழுமையாக உதவியது. குறிப்பாக, 1990 -ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் புஸ், அவரைத்தொடர்ந்து ரீகன் பலவகைகளில் மேற்குறிப்பிட்ட திருத்தல்வாதத் தலைவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கினர். கிழக்கு ஜெர்மனியில் நீடித்த சோசலிச அரசைக் கவிழ்த்து, ஏகாதிபத்திய மேற்கு ஜெர்மனிய அரசுடன் இணைத்து, ஒன்றுபட்ட ஜெர்மன் ஏகாதிபத்தியத்தை 1990-இல் நிறுவியது. அதையொட்டி, கோர்போச்சோவின் முதலாளித்து வளர்ச்சிப்பாதையை முழுமையாக ஆதரித்து, 1991- டிசம்பர் 26 ஆம் ஆண்டு.... கம்யூனிசக் கொடி இறக்கப்பட்டு... 15 நாடுகளைக்கொண்ட சோவியத் குடியரசைத் தனித்தனியே பிரிந்துசெல்வதற்கு அமெரிக்க ரீகன் அரசு உதவியது.
அதுபோன்று சீனாவில் மாசேதுங் மறைவுக்குப்பின்னர், சோசலிச அரசும் ஒரு ஏகாதிபத்திய அரசாக மாறியது. இவ்வாறு உலக அளவில் சோசலிச முகாம் தற்காலிகப் பின்னடைவைக் கண்டது. சோசலிச நாடுகள் - குறிப்பாக ரசியாவும், சீனாவும் ஏகாதிபத்திய அரசுகளாக மாறியபிறகு... ஏகாதிபத்தியத்திற்கே உரிய பிற்போக்குத் தன்மையால் ... பிற நாடுகளைப் பங்குபோட... தங்களுக்குள்ளும் பிற ஏகாதிபத்திய நாடுகளுடனும் போர்களை - நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடுத்து வருகின்றன.
இந்த நோக்கில் .. தற்போதைய ரசியா - உக்ரைன் போரைப் பார்க்கவேண்டும். உக்ரைன் ரசியா ஏகாதிபத்தியத்தோடு நிற்பதா, அல்லது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய முகாமோடு நிற்பதா? இதுதான் தற்போதைய பிரச்சினை.
சோசலிச சோவியத் உடைபட்டுச் சிதற ஒரு முக்கியக் காரணியாக இருந்த அமெரிக்கா முகாம் - ரசியா, உக்ரைன் என்று பிளவுபடக் காரணமாக இருந்த அமெரிக்க ஏகாதிபத்திய முகாம்... தற்போது உக்ரைனைத் தனது ஆளாக மாற்றிக்கொண்டு, ரசியா ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முயல்கிறது. உக்ரைன் அரசில் தற்போதைய அதிபருக்கு முன்னால் இருந்த அதிபர்கள் ரசிய ஆதரவாளர்களாக இருந்தார்கள். இப்போது இருப்பவர் அமெரிக்க ஆதரவாளராக இருக்கிறார். சோவியத் சோசலிச அரசை 15 நாடுகளாகப் பிரித்து, சோவியத் குடியரசு நாடுகளில் புரட்சியாளர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம்... தற்போது ரசியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் போரை ரசித்துக்கொண்டிருக்கிறது.
உக்ரைன் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக அங்குள்ள பாட்டாளி வர்க்கம் போராடி... சோசலிச அரசை மீண்டும் நிறுவுவதே சரியான போராட்டம். ஆனால் அதை அங்குள்ள மக்களே மேற்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக, உக்ரைன்மீது தன் ஆதிக்கத்தை நிறுவிக்கொள்ள ரசியா போர் தொடுத்துள்ளது ஏகாதிபத்திய விரிவாக்கமே!
எனவேதான்... நாம் இந்தப் போரில் ரசியாவின் நடவடிக்கைகளை எதிர்க்கவேண்டியுள்ளது.
உக்ரைன் ஆட்சியாளர்களுக்கு எதிரான அந்த நாட்டு மக்களின் போராட்டங்களை .. புரட்சியை... ஆதரிப்பது முற்போக்காளர்களின் கடமை. ஆனால் உக்ரைன் ஆட்சியாளர்களைத் தங்களது முகாம்களில் இணைத்துக்கொள்ளப் போராடும், ரசியா, அமெரிக்கா முயற்சிகளை ஏற்கமுடியாது!
ஆனால் ஊர் பிளவுபட்டால் ... கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல... சோவியத் சோசலிசக் குடியரசைப் பலவீனப்படுத்தி.... சிதறயடித்து... இன்று ஒரு கட்டத்தில் சோசலிச நாடுகளாக இருந்த ரசியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நடப்பதை ஏகாதிபத்திய முகாம்கள் ரசித்துக்- கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையான முற்போக்காளர்கள் ... புரட்சியாளர்கள்... வேதனைப்- படுகிறார்கள்! தற்காலிகப் பின்னடைவுகளுக்கு உட்பட்டுள்ள ரசியா, உக்ரைன், ஜெர்மனி போன்ற நாடுகளில் பாட்டாளி வர்க்கங்கள் மீண்டும் ஆளும் வர்க்கங்களாக மாறி.... உலக சமூக அமைப்பை... அடுத்த கட்ட சோசலிச வளர்ச்சிக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள்! உறுதியாக இந்த முயற்சி வெற்றிபெறும். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் ... குறுகிய காலகட்டத்தில் .. நடைபெற்றுவிடும் என்று நினைத்துவிடக்கூடாது. இறுதி வெற்றி சோசலிசத்திற்கு என்றாலும்.... இதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்!
சோசலிச நாடுகளில் ஏற்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட தற்காலிகப் பின்னடைவுகளை முன்னிலைப்படுத்தி.... சோசலிசம், கம்யூனிசம் தோல்வி அடைந்துவிட்டது என்று சோசலிச எதிர்ப்பாளர்கள் ... சுரண்டும் வர்க்கங்கள், ஏகாதிபத்திய முகாம்கள் ... மக்களைத் திட்டமிட்டு ஏமாற்ற முயல்கிறார்கள். ஆனால் புறவய வளர்ச்சி விதிகளின் அடிப்படையில் மனித குலம் சோசலிசத்தை.... கம்யூனிசத்தை ... நோக்கி முன்னேறுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிடமுடியாது. புவி ஈர்ப்பு விசை என்பது எந்த அளவு அறிவியல் அடிப்படையில் அமைந்த .. யாராலும் மறுக்கமுடியாத... மாற்றமுடியாத இயற்கைவிதியோ... அதுபோன்றதே மனித சமுதாயம் சோசலிசத்தை... கம்யூனிசத்தை நோக்கி உறுதியாகச் செல்லும் என்பதும் ஆகும்!

மக்கள் ஆட்சி ... பாட்டாளி மக்கள் ஆட்சி ...

 மக்கள் ஆட்சி ... பாட்டாளி மக்கள் ஆட்சி ...

--------------------------------------------------------------------------(சமூக மாற்றத்தில் நம்பிக்கை உள்ள அன்பர்கள் நேரம் கிடைக்கும்போது இதைப் படிக்கலாம்!)
திரு செயபாண்டியன் கோட்டாளம்:
// மக்களாட்சிக்கும் பாட்டாளிமக்களாட்சிக்கும் என்ன வேறுபாடு? பாட்டாளிமக்கள் மக்களல்லரோ?//
ந. தெய்வ சுந்தரம்:
மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் ஒரு உயர்ந்த கட்டம் முதலாளித்துவ சமுதாயம். அச்சமுதாயத்தில் முதலாளி வர்க்கம் ஒருபுறமும் பாட்டாளி - தொழிலாளி வர்க்கம் மறுபுறமும் நிற்கின்றன.
முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில் பிற சுரண்டும் வர்க்கங்களும் - நிலப்பிரபுத்துவ சக்திகளும் - ஒரு புறம் திரண்டு நிற்கின்றன. இந்தப் பிற சுரண்டும் வர்க்கங்கள் முதலாளித்துவம் ( உற்பத்தி சக்திகள்- productive forces - முழுமையாகச் சமூகமயப் - படுத்தப்படப் பட socilaised productive forces - socialised production) வளர வளர.... தங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ... அழிந்துகொண்டிருக்கும் வர்க்கங்களே. ஆனால் அவற்றின் தற்காலிக நீடிப்பானது ... பாதுகாப்பானது ... வளர்ந்த சுரண்டும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தைச் சார்ந்தே உள்ளது. மேலும் முதலாளித்துவ வர்க்கத்தின் நோக்கமும் இந்தப் பிற சுரண்டும் வர்க்கங்களை இல்லாமல் ஆக்குவதுதான்! ஆனால் அதுவரை உழைக்கும் வர்க்கங்களை எதிர்த்துப் போராடுவதற்காகத் தற்காலிக ஒற்றுமையை அவற்றுடன் பேணுகின்றது. தனது நலன்களைப் பாதுகாத்துக்கொளவதோடு, பிற சுரண்டும் வர்க்கங்களின் நலன்களையும் - தனியுடமைகளையும் - பாதுகாக்கும்!
அதுபோல, முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சியில் பாட்டாளி வர்க்கமானது தங்களது உழைப்புச்சக்தியை முதலாளிகளுக்கு விற்பதைத்தவிர வேறுவழியொன்றும் இல்லாத.... இழப்பதற்கு வேறு எந்தவொரு உடமையும் இல்லாத... வர்க்கமாக அமைகிறது. இந்த வர்க்கத்தின் ஒட்டுமொத்த நலனே ... உழைப்புச்சக்தி சமுகமயப்படுத்தப்பட்டதுபோல, அந்த உழைப்பின் விளைபொருள்களை ... பயன்களை... சமூகமயப்படுத்தப்படுதலில்தான் உள்ளது. எந்தவிதத் தனியுடமையும் இல்லாமல் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவதுதான் அதன் நோக்கமாக இருக்கமுடியும்! அப்போதுதான் ஒட்டுமொத்த சமுதாயத்தின் உற்பத்தி வளர்ச்சியும் அடுத்த உயர்நிலைக்குச் செல்லும். இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றிபெறுவதுதான் இந்த வர்க்கத்தின் நோக்கமாகும். எனவேதான் இந்த வர்க்கம் சமுதாயத்தின் முற்போக்கு வர்க்கமாகப் பார்க்கப்படுகிறது!
அதே வேளையில் பிற சுரண்டப்படும், ஒடுக்கப்படும் வர்க்கங்களும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் அங்கு நீடிக்கும். இவையும் சோசலிச சமுதாயத்தின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும். இவற்றின் இறுதி நலன்களும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் வெற்றியில்தான் அடங்கியுள்ளன. ஆனால் இந்த வர்க்கங்கள் சிறு சிறு உடமைகளைக்கொண்ட வர்க்கங்களாகவும் இருக்கும்.
எனவே தனியுடமையை ஏற்றுக்கொள்ளும் வர்க்கங்களாக இருக்கும். தனியுடமைச் சிந்தனை உடையவையாக இருக்கும். எனவே சோசலிச கட்டமைப்பை ஒரு கட்டம்வரை ஏற்றுக்கொள்ளாமல்... ஆனால் அதேவேளையில் முதலாளித்து வர்க்கத்தின் தலைமையிலான சுரண்டும் வர்க்கங்களின் அரசு அகற்றப்படுவதிலும் ஆர்வம் கொள்ளும். சிறு சிறு தனியுடமைகளையும் ஆதரிக்கும். எனவே முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக இருக்காது. ஊசலாட்டம் இருக்கும்.
எனவே பாட்டாளி வர்க்கம் இந்தப் பிற சுரண்டப்படும் சிறு சிறு வர்க்கங்களுக்குத் தலைமை அளிப்பதாக இருக்கவேண்டியுள்ளது. வர்க்கங்களையே இல்லாமல் ஆக்குவதில்தான் சோசலிச சமுதாயத்தின் வளர்ச்சி அடங்கியுள்ளது. முதலாளித்துவ அணியில் உள்ள அனைத்துச் சுரண்டும் வர்க்கங்களுக்கும் எதிராக நிற்கிற .... பாட்டாளிவர்க்கம் உட்பட பிற சுரண்டப்படும் வர்க்கங்கள், இனங்களைத்தான் பொதுவாக ''உழைக்கும் மக்கள் '' என்று அழைக்கிறோம். இந்த எல்லா சுரண்டப்படும் வர்க்கங்களின் ஆட்சியைப் பொதுவாகப் பாட்டாளி வரக்க்த்தின் தலைமையிலான 'மக்களாட்சி'' ''ஜனநாயக ஆட்சி''என்றும், அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை முழுமையான பாட்டாளிவர்க்க ஆட்சி என்றும் அழைக்கலாம்.
அனைத்துச் சுரண்டப்படும் வர்க்கங்களின் நலன்களையும் பிரதிபலிக்கும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் மக்களாட்சி இருந்தால்தான் , அடுத்த கட்ட சோசலிச வளர்ச்சியைச் சமுதாயம் எட்டும். அது பாட்டாளிவர்க்கத்தின் முழுமையான ஆட்சியாக அமையும். அதற்கு அடுத்த கட்டம்.... வர்க்கங்களே இல்லாத ஒன்றாக ,, கம்யூனிச சமுதாயமாக மனித சமுதாயம் மாறும். இது நமது சிந்தனையைச் சார்ந்த ஒரு கற்பனை இல்லை. பிற அறிவியல்போன்று... முறையான சமூக ஆய்வில் காரல் மார்க்ஸும் பிரடரிக் எங்கல்சும் முன்வைத்த சமூக அறிவியல் ஆகும்.
வர்க்கமற்ற ஒரு சமுதாயத்தை நிறுவுவதில்தான் ஒட்டுமொத்த மக்களின் நலன்கள் அடங்கியுள்ளது. அப்போதுதான் வர்க்கமற்ற - சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்கள் என்ற வேறுபாடு இல்லாத - சமுதாயம் மலரும். ஆனால் அந்த வளர்ச்சியை எட்டுவதற்கு வர்க்கப்போராட்டங்கள் தேவைப்படுகின்றன. அதில் ஒரு கட்டம், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அனைத்து உழைக்கும் மக்களையும் கொண்ட அரசு. அதற்கு அடுத்த கட்டம் , பாட்டாளி வர்க்கத்தை மட்டும்கொண்ட சோசலிச அரசு.
இந்த அரசில் சமுதாயத்தில் ஆட்சியிழந்த முதலாளித்து வர்க்கம் பல முனைகளில் பாட்டாளி வர்க்க ஆட்சியை வீழ்த்தப் போராடும். சோசலிச அரசுகளை உள்ளிருந்தும் வெளியிருந்தும் ஆட்சியிழந்த முதலாளித்து வர்க்கம், ஏகாதிபத்திங்கள் போராடும். ஆட்சியை... அரசை.... கைப்பற்றும்! பாட்டாளிவர்க்கம் தற்காலிகப் பின்னடவுகளைச் சந்திக்கும்! (சோவியத் ரசியாவிலும், சீனாவிலும், ஜெர்மனியிலும் தற்போது நடைபெற்றுள்ளது இதுதான்!) ஆனால் இறுதியில் அது வீழ்த்தப்படும். அதற்கும் அடுத்த கட்டமே, வர்க்கங்களே இல்லாத மக்கள் அரசு. இதுவே சமுதாய வளர்ச்சியின் உயர்ந்த கட்டமான 'மக்களாட்சி'. இது இன்றைக்கு ஒரு கற்பனையாகச் சிலருக்குத் தெரியலாம். ஆனால் இதுவே சமுதாய வளர்ச்சிபற்றிய அறிவியல் அடிப்படையிலான ஒரு உண்மை!
சில நூற்றாண்டுகளுக்குமுன்னர்... சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் போகமுடியும் என்றால், யாராவது நம்பியிருப்பார்களா? ஆனால் இன்று? ஒரு சில விநாடியில் உலகம் முழுவதும் இணையம் வழியாகத் தொடர்புகொள்ளமுடியும் என்று அன்று நினைத்திருப்பார்களா? ஒரு சில மணிநேரத்தில் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் பறக்கமுடியும் என்று எதிர்பார்த்து இருக்கமுடியுமா?
அதுபோன்றதுதான் நான் கூறும் சமூக அறிவியல் அடிப்படையிலான சமூக வளர்ச்சி! ஆனால் இந்த மாற்றங்கள் எல்லாம் என்னுடைய வாழ்க்கையிலேயே வந்துவிடும் என்று நான் நினைத்தால், அது தவறானது. பல நூற்றாண்டுகள் ஆகலாம். கற்கால மனித சமுதாயம் இன்றைய அறிவியல் சமுதாயமாக மாறி வர எத்தனை நூற்றாண்டுகள் ஆகியுள்ளன என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், இந்த உண்மை விளங்கும்! அறிவியலுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ ''நம்பிக்கைகளை'' இன்னும் நம்பிக்கொண்டிருக்கிற நாம்.... அறிவியல் அடிப்படையிலான இந்த சமூக வளர்ச்சி இயலை ...புறவயமான சமூக வளர்ச்சி விதிகளை ஏன் ''இயலாத'' ஒன்று என்று நினைக்கவேண்டும்?

சமூக அறிவியலுக்கும் பிற இயற்கை அறிவியல்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு....

 சமூக அறிவியலுக்கும் பிற இயற்கை அறிவியல்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு....

---------------------------------------------------------------------------------------------------------------------------
இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல்களின் பயன்பாடுகளை முதலாளித்துவ சக்திகள் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த அறிவியல்களின் கண்டுபிடிப்புகள் வர்க்க நலன்களைக் கொண்டதாக இருக்காது. அதாவது வர்க்கப் பண்புகள் இருக்காது. இயற்கைவிதிகளின் கண்டுபிடிப்புகள் எல்லாம் அனைவருக்கும் - வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு- பயன்படும்.
ஆனால் சமூக அறிவியல், இலக்கியம் ஆகியவற்றில் - தத்துவம், அரசியல் , பொருளாதாரம், சமூகவியல், மானிடவியல், வரலாறு, இலக்கியத் திறனாய்வு போன்றவற்றில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். உண்மையான - புறவயமான சமூகவியல் உண்மைகளைச் சுரண்டும் வர்க்கங்கள் மறைக்கமுயலும். வரலாறு, பொருளாதாரம் என்ற போர்வையில் அவை தங்களுக்குச் சாதகமான ''கருத்துக்களை'' முன்வைத்து, உண்மைகளை மறைத்து, உழைக்கும் வர்க்கங்களை ஏமாற்றமுயலும். தங்களது கல்விமுறையில் இதையே அவை செய்யும். தங்களது ''கண்டுபிடிப்புக்களை'' ''கருத்துக்களை'' வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட - அனைவருக்கும் பொதுவான ஒன்றாகக் காட்டமுயலும். இதற்குக் காரணம்... புறவயமான சமூகவியல் விதிகள் அந்த வர்க்கங்களின் நலன்களுக்கு எதிராக அமைவதுதான் ஆகும். இதை வெளிப்படுத்திய காட்டியவர்கள்தான் மார்க்சும் எங்கல்சும், லெனினும், ஸ்டாலினும், மாசேதுங்கும் ஆவர். இவர்கள் அனைவரும் உழைக்கும் வர்க்கங்களின் நலன்களுக்காகச் சமூக ஆய்வில் ஈடுபட்ட காரணத்தால், சமூகவியலின் உண்மைகளை - புறவய விதிகளை- வெளிக்கொணர்வதில் இவர்களுக்கு அச்சம் கிடையாது.

இடைத்தட்டு வர்க்கச் சிந்தனையாளர்களின் மார்க்சிய எதிர்ப்பு.....

 இடைத்தட்டு வர்க்கச் சிந்தனையாளர்களின் மார்க்சிய எதிர்ப்பு.....

------------------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை அறிவியல்களையும் சமயத் தத்துவங்களையும் முதலாளித்துவ சமூகக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிற நண்பர்கள் சிலர்.... சமூகம்பற்றிய அறிவியலை - குறிப்பாக மார்க்ஸ். எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் போன்றோரின் சமூக அறிவியலை - ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றுதான்.
ஆளும் சுரண்டும் வர்க்கங்கள் ஏற்றுக்கொள்ள- மாட்டார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இடைத்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த சிலர் - குறிப்பாக மூளை உழைப்பைச் சார்ந்த இடைத்தட்டு வர்க்கப் பிரிவினர் , அறிவியலார்கள், ஆய்வாளர்கள் சிலர் - ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது, சற்று வேதனையாக இருக்கும். அவர்களின் மறுப்புக்குக் காரணம்... அவர்கள் இல்லை... அவர்களின் மனதில் சுரண்டும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கும் சிந்தனைமுறை, தத்துவம், சமூகவியல் போன்றவை ஏற்றப்பட்டுள்ளன. அவர்களது வாழ்க்கைமுறைகளிலும் மனதிலும் நீடிக்கிற - மறைமுகமாகத் திணிக்கப்பட்டுள்ள - முதலாளித்துவச் சமுதாயக் கல்வியும் மற்றவையும்தான் காரணம்!
மேலும் சிறு உடமைகள் இவர்களுக்கு இருக்கலாம். நல்ல ஊதியம், மற்ற வசதிகளை முதலாளித்துவச் சமுதாயம் அளித்திருக்கலாம். இவையெல்லாம் சோசலிச சமுதாயத்தில் ''பறிக்கப்பட்டுவிடும்'' என்ற ஒரு பொய்ம்மை அவர்களது பார்வையிலும் சிந்தனையிலும் மறைமுகமாகத் திணிக்கப்- பட்டிருக்கின்றன. சோசலிசம் தனிமனித உரிமைகளுக்கு எதிரானது, சர்வாதிகாரப் போக்கு உஉடையது என்று கூறப்பட்டுள்ளது. இவர்களும் முதலாளித்துவப் பணக்காரர்களும் ஒன்றுதான் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இவர்களுக்கு இந்த முதலாளித்துவச் சமுதாயத்தில் பெறுகிற நலன்களைவிட, சோசலிச சமுதாயத்தில் கிடைக்கும் நலன்களே அதிகமாக இருக்கும்; ஒட்டுமொத்தி சமூக நலன்களின் அடிப்படையில் தனிமனித உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பது மறைக்கப்படுகிறது.
ஆனால் இவ்வாறு அவர்களை மூளைச் சலவை செய்திருக்கும் முதலாளித்துவ வர்க்கம்... சோசலிசத்தையும் புறவயமான சமூக அறிவியலையும் ''கம்யூனிசம் திணித்து, மூளைச் சலவை செய்யும்'' என்ற ஒரு பொய்ம்மையைப் பரப்பிவைத்திருக்கிறது. மேலும் அது இவர்கள் மூலமே கீழ்த்தட்டு வர்க்க மக்களையும் மூளைச் சலவை செய்யப் பயன்படுத்தும். உண்மையில் இந்த இடைத்தட்டு வர்க்கங்கள் ''தாங்களும் டாடாவாகவும், பிர்லாவாகவும், அம்பானியாகவும்'' என்ற ஒரு கற்பனையில் இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் இவர்கள் மேலும் மேலும் கீழ்த்தட்டு வர்க்கங்களாகவே மாறிக்கொண்டிருப்பார்கள். அதற்குக் காரணங்களாக '' இவர்களது முற்பிறவி பாவம்'' ''கடவுள் இன்னும் கருணை காட்டவில்லை'' ''ராசி பலன்கள் சரியில்லை'' ''உழைப்பு போதாது'' போன்றவை முன்வைக்கப்படும்.
ஆனால் இவர்கள் உண்மையிலேயே உழைக்கும் வர்க்க மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. இவர்களது மனதில் விதைக்கப்பட்டுள்ள பலவகை ''பொய்ம்மைகளை'' உறுதியாக அழிக்கமுடியும். ஆனால் அதற்குக் காலமும் தேவை... பொறுமையும் தேவை!
எனவேதான் ... மார்க்சியம், கம்யூனிசம்பற்றி அவர்கள் அடிப்படையில்லாத பல்வேறு கருத்துக்களை கம்யூனிசத்திற்கு எதிராக முன்வைத்தாலும், அவர்களை எதிரிகளாக உழைக்கும் வர்க்க நலன்களுக்காகப் போராடுபவர்கள் பார்க்கக்கூடாது. இதுவே என் நிலைபாடு!
இயற்கை அறிவியலில் மிகச் சிறந்த ஜே டி பர்னால் (J D Barnal)), ஜோசப் நீடாம் (Joseph Needham) , கோசாம்பி (Kosambi)போன்றோர்கள்... பொருளாதாரத் துறையில் மிகப் பெரிய பேராசிரியர்களான பால் ஸ்வீசி (Pall M Sweezy), பாரன் (Baran), பெத்லேஹிம் (Bettelheim), மாரிஸ் டாப் (Maurice Dobb), லியோ ஹியூபர்மேன் (Leo Huberman), மேக்டாப் (Harry Magdoff) போன்றோர்கள் ,,, தத்துவம், இலக்கியத்துறையின் பேராசிரியர்கள் ஜார்ஸ் தாம்சன் (Geeorge Thomson), மேரிஸ் கார்ன்ஃபர்த் (Maurice Cornforth), தேபி பிரசாத் சட்டோபாத்யாயா (Debi Prasad Chattopadya), வரலாற்றுத்துறையின் பேராசிரியர்களான ரோமிலா தாப்பர் (Romila Thapper), இர்பான் ஹபீப் (Irfan Habib) , மொழியியல் துறை மேதை சோம் சாம்ஸ்கி (Noam Chomsky) ... பட்டியல் நீளும். இவர்கள் எல்லோரும் முதலாளித்துவக் கல்விமுறையில் படித்துவந்தவர்கள் என்றாலும்... மார்க்சியத்தின் புறவயமான சமூக அறிவியலை ஏற்றுக்கொண்டவர்கள்.
மேற்குறிப்பிட்ட பேராசிரியர்கள்போன்று.... கல்வி, ஆய்வு, பண்பாடு, தத்துவம், இயற்கை அறிவியல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள்... உழைக்கும் வர்க்கங்களுக்கான நிலைபாடுகளை எடுத்து... இயற்கை, சமூகம் பற்றிய பொய்ம்மைகளை எதிர்த்துப் போராடி... உண்மையான, புறவயமான சமூக அறிவியலை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும். சமூக முன்னேற்றத்திற்கான பணிகளில் ஒரு சிறிதாவது நமது பங்கு இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்து, ஏதாவது ஒரு வகையில் சமூகத்திற்காக உழைக்கவேண்டும். அப்போதுதான் அவர்களது வாழ்க்கை ஒரு நிறைவான வாழ்க்கையாக அமையும்!
வழக்கறிஞர் சு. கலைச்செல்வன், முத்தையா சுப்பிரமணியம் மற்றும் 10 பேர்
2 கருத்துகள்
3 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India