ஞாயிறு, 13 நவம்பர், 2016

எளிமையான தமிழ்ச் சந்தி இலக்கணம்

சந்தி இலக்கணம் மிக எளிமையானது! முயன்றால் வெகுவிரைவில் கற்றுக்கொள்ளலாம். நான் 1975-இல் முனைவர் பட்டப் படிப்புக்காகப் பேராசிரியர் பொற்கோ அவர்களின் மாணவராகச் சேர்ந்தேன். அப்போது சந்திபற்றிய தெளிவு எனக்குக் கிடையாது. என்னைப் போன்ற பிற மாணவர்களுக்காகவும் பேராசிரியர் சில வகுப்புகளை நடத்தினார். அதன் சுருக்கமே பின்னர் '' நாமும் தமிழில் தவறில்லாமல் எழுதலாம் '' என்ற நூலாக வெளிவந்தது. அதிலிருந்து தினந்தோறும் ஒரு விதியைச் சந்தி இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு முகநூலில் அளிக்கிறேன். சில விதிகள் கட்டாயமாகப் பின்பற்றப் படவேண்டியவை. அவற்றை முதலில் தருகிறேன்.
(1) இரண்டாம் வேற்றுமை - '''' வேற்றுமை - விகுதியை ஏற்று வருகிற எந்த ஒரு பெயர்ச்சொல்லையடுத்தும் (நிலைமொழி), வல்லின எழுத்தை முதலாகக்கொண்ட ஒரு பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் அல்லது வேறு எந்தவகைச் சொல் (வருமொழி) வந்தாலும், நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் வல்லொற்று ( வருமொழியின் முதல் வல்லொற்று) மிகும். இதற்கு விதிவிலக்கே கிடையாது. கண்ணை மூடிக்கொண்டு, வல்லொற்றை இடலாம்.
வல்லொற்றுகள் என்பவை க்,ச்,த்,ப், ட்,ற். இவற்றில் ட், ற் இரண்டும் சொல்லின் முதலாகத் தமிழில் வராது. எனவே வருமொழியில் க், ச், த், ப் நான்கு மட்டுமே வரும். இவையே மிகும்.
(எ-கா.) கண்ணனைக் கண்டேன்.
கண்ணனைப் பாண்டியன் கண்டான். 
கண்ணனைத் திட்டாதீர்கள்!
கண்ணனைச் சென்னைக்குப் போகச்சொல்!

கண்ணனைப் பார்த்தபிறகு போகலாம்.
கண்ணனைப்பற்றி என்ன நினைக்கிறாய்?

(2) நான்காம் வேற்றுமை விகுதியாகிய ''கு'', ''க்கு'' என்ற விகுதிகளை ஏற்று நிலைமொழியாக ஒரு பெயர்ச்சொல் அமையும்போது, வல்லின ஒற்றை (க்,ச்,த்,ப்) முதலாகக்கொண்ட சொற்கள் வருமொழியாக வந்தால், அங்குத் தவறாமல் வருமொழியின் அந்த முதல் ஒற்று மிகும். 
(எ-கா.)

அவனுக்குக் கொடுத்தேன்.
அவருக்குக் காட்டினேன்.

அவனுக்குச் சிறப்பே அவனது நாவன்மைதான்.
அவருக்குச் சொன்னேன்.

எனக்குப் பகைவர்களே கிடையாது.
அவனுக்குப் பாம்பைக் கண்டால் பயம்.

எனக்குத் தந்தான்.
யாருக்குத் தெரியும்?

இந்தச் சந்தி விதிக்கு விதிவிலக்கே கிடையாது.
நேற்று நாம் பார்த்தது இரண்டாம் வேற்றுமை '''' பற்றியது!
இன்று பார்ப்பது நான்காம் வேற்றுமை ''க்''/ ''க்கு'' பற்றியது.

எனவே '''' என்ற இரண்டாம் வேற்றுமை விகுதியையும் ''க்''/ ''க்கு'' என்ற நான்காம் வேற்றுமை விகுதியையும் பெற்றுவருகிற பெயர்ச்சொற்கள் நிலைமொழிகளாக அமைந்து, வருமொழிகளாக வல்லின ஒற்றை (க்,ச்,த்,ப்) முதலில் பெற்றுவருகிற பெயர்ச்சொற்கள் அமைந்தால், விதிவிலக்கின்றி, இடையில் வருமொழிகளின் முதல் வல்லொற்று மிகும்.
இந்த இரண்டு விதிகளையும் பின்பற்றினாலே பெரும்பான்மை இடங்களில் சந்திப்பிழைகளைத் தவிர்க்கலாம்.
வேற்றுமைபற்றிய அறிவும் மிக இன்றியமையாதது. ஒரு தொடரில் உள்ள பெயர்ச்சொற்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையில் உள்ள உறவே வேற்றுமை உறவு என்பதாகும்.
'' நான் அவருக்கு உண்மையை விளக்கினேன்''.
இங்கு ''நான்'' என்பது ''விளக்கிய'' செயலைச் செய்தவர்.
''அவருக்கு'' என்பது ''விளக்கிய'' செயல் யாருக்கு நடைபெற்றது என்பதைக் காட்டுகிறது.
''உண்மையை'' என்பது எது '' விளக்கப்பட்டது'' என்பதைக் குறித்து நிற்கிறது.

இந்தத் தொடரில் அமைந்துள்ள மூன்று பெயர்ச்சொற்களும் ( ''நான்'', ''அவர்'' ''உண்மை'') ''விளக்கினேன்'' என்ற வினைச்சொல்லோடு வேறுபட்ட உறவுகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் உள்ள உறவைத்தான் - தொடரியல் உறவைத்தான் - வேற்றுமை என்று தமிழ் இலக்கணத்தில் குறிப்பிடுகிறோம். மேற்காட்டிய தொடரில் அமைந்துள்ள மூன்று பெயர்ச்சொற்களும் ''விளக்கு'' என்ற வினைச்சொல்லோடு வேறுபட்ட உறவுகளைக் கொண்டுள்ளது. எனவே இதை வேற்றுமை என்று அழைக்கிறோம்.
''நான் கடையில் வேலை பார்த்தேன்''
''நான் முருகன் கைகளில் இருந்த வேலைப் பார்த்தேன்''

முதல் தொடரில் ''வேலை'' என்பது பணியைக் குறிக்கிறது. இறுதி எழுத்தாகிய '''' வேற்றுமை விகுதி இல்லை. மாறாக, ''வேலை'' என்ற சொல்லின் ஒரு பகுதியே அது. எனவே வருமொழியில் வல்லின ஒற்று முதல் எழுத்தாக அமைந்தாலும், ஒற்று மிகாது.
ஆனால் இரண்டாவது தொடரில் '''' என்பது ''வேல்'' என்ற பெயர்ச்சொல்லோடு இணைந்த இரண்டாம் வேற்றுமை விகுதி. எனவே இங்கு வல்லின ஒற்று மிகுகிறது.
இதை ஏன் இங்குச் சொல்கிறேன் என்றால், மாணவர்கள் '''' இறுதியாக வருகிற எல்லாச் சொற்களிலும் ஒற்று இட்டுவிடக்கூடாது. சொல்லைப் பகுத்து, அங்குள்ள '''' வேற்றுமை விகுதியா அல்லது அந்தச்சொல்லின் பகுதி எழுத்தா என்று கண்டறியவேண்டும். வேற்றுமை விகுதியான '''' வந்தால்மட்டுமே , வல்லொற்று இடவேண்டும்.
அதுபோல,
'' நான் கணக்கு செய்தேன்'' என்பதில் ''க்கு'' என்பது ''கணக்கு'' என்ற சொல்லின் ஒரு பகுதியே! எனவே இங்கு ஒற்று இடக்கூடாது.

''நான் ஊருக்குப் போனேன்'' என்பதில் ''க்கு'' என்பது நான்காம் வேற்றுமைவிகுதி. இது ''ஊர்'' என்ற பெயர்ச்சொல்லோடு இணைகிறது. எனவே இங்கு ஒற்று இடவேண்டும்.
எனவே மாணவர்கள் நிலைமொழியின் இறுதி எழுத்துகளைமட்டும் மனதில் வைத்துக்கொண்டு, ஒற்று இட்டுவிடக்கூடாது. அவை முழுச்சொற்களின் பகுதி எழுத்துகளா அல்லது வேற்றுமைவிகுதிகளாக என்பதைக் கண்டறிய வேண்டும். இதற்குச் சொல்லைப் பகுத்து ஆராயும் அறிவு தேவை.
இலக்கணம் என்றாலே கசப்பானது.. அதிலும் சந்தி இலக்கணம் மிகவும் கசப்பானது என்ற ஒரு உணர்வு பொதுவாக மாணவர்களிடையேயும் பொதுவான நண்பர்களிடையேயும் இருக்கிறது. அவ்வாறு கருதுவது தவறு... இலக்கணம் கணிதம் போன்றது... மிக எளிமையானது... சந்தி விதிகள் கணிதப் பண்பு உடையது என்பதை நண்பர்களுக்கு விளக்கி , இலக்கணத்தின்மீது விருப்பத்தை உருவாக்கவே இங்கு நான் முயல்கிறேன். நண்பர்கள் தங்கள் அடிப்படை எழுத்துப்பணிகளில் பயன்படுத்தத் தேவையான இலக்கணத்தைமட்டுமே இங்கு விளக்க விரும்புகிறேன். எனவே படிப்படியாக இந்தத் தொடரைக் கொண்டுசெல்ல விரும்புகிறேன். அறிஞர்களுக்கிடையே நீடிக்கும் மிகப்பெரிய கருத்துவேறுபாடுகளில் இங்கு முதலில் ஈடுபட நான் விரும்பவில்லை. நண்பர்கள் இதைப் புரிந்துகொண்டு, உதவ வேண்டுகிறேன்.
(3) ''த்து'' ''ட்டு'' ''ற்று'' '''' ''ய்'' - ''செய்து'' வாய்பாட்டு வினையெச்ச விகுதிகளுக்குப் பின் வல்லொற்று மிகும்!
--------------------------------------------------------------------------------- 
முன்பு கூறிய இரண்டு சந்திவிதிகளும் கட்டாயச் சந்தி விதிகள் என்று பார்த்தோம். '' அவனைப் பார்த்தேன்'', ''அவனுக்குக் கொடுத்தேன்'' என்ற இரண்டு தொடர்களிலும் - இரண்டாம் வேற்றுமை '''', நான்காம் வேற்றுமை ''கு/க்கு'' ஆகியவற்றிற்குப் பின்னர் கண்டிப்பாக வல்லொற்று மிகும் என்று பார்த்தோம்.

அதுபோன்று மற்றொரு கட்டாயச் சந்தியை இன்று பார்க்கலாம். வினைச்சொற்களை - முற்றுவினை, எச்ச வினை என்று இரண்டாக இலக்கணத்தில் பிரித்துப்பார்க்கிறோம். பொதுவாக, வினைச்சொற்கள் கால விகுதிகள் ஏற்கும். அதுபோல, திணை எண் பால் விகுதிகளையும் ஏற்கும். '' படித்தான்'' என்ற வினைச்சொல்லை மூன்றாகப் பிரிக்கலாம். படி + த்த் + ஆன் .... இதில் ''படி'' என்பது வினையடிச்சொல். ''த்த்'' என்பது இறந்தகாலத்தைக் காட்டும் விகுதி. ''ஆன்'' என்பது படர்க்கை, ஆண்பால், ஒருமை ஆகிய பண்புகளைக் காட்டும் திணை எண் பால் விகுதி. இவ்வாறு திணை எண் பால விகுதியோடு ஒரு வினைச்சொல் முடிந்தால் அதை முற்றுவினை அல்லது வினைமுற்று என்று அழைக்கிறோம்.
ஆனால் ''புத்தகம் வேண்டும்'' , '' என்னால் முடியும்'' ''அது இல்லை'' போன்ற தொடர்களில் ''வேண்டும்'', ''முடியும்'', ''இல்லை'' ஆகியவற்றில் திணை எண் பால் விகுதி இல்லாமல் இருந்தாலும் வினைமுற்றுகள்தாம்.
முதலில் பார்த்த திணை எண் பால் விகுதிகள் ஏற்கிற வினைச்சொற்கள், அவற்றை ஏற்காமல் வந்தால், அவற்றை வினைமுற்று என்று அழைக்கக்கூடாது. அவற்றை வினையெச்சம் அல்லது எச்சவினை என்று அழைப்பார்கள். எடுத்துக்காட்டாக , ''படித்து'' என்பதைப் பின்வருமாறு இரண்டாகத்தான் பிரிக்கமுடியும்.
''படி + த்து'' - இதைச் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சம் என்று கூறுவார்கள்.
அதுபோன்று, 
''படிக்க (படி+க்க )'' .... ''செய'' வாய்பாட்டு வினையெச்சம்
''படித்தால் (படி+த்தால்)'' .. நிபந்தனை வினையெச்சம்
''படிக்காமல் (படி+க்காமல்)''... எதிர்மறை வினையெச்சம்
''படிக்காது (படி+க்காது)''.... எதிர்மறை வினையெச்சம்

ஆகியவற்றிலும் திணை எண் பால் விகுதிகள் வரவில்லை. எனவே இவையும் வினையெச்சங்கள்தான். வினைமுற்றுகள் இல்லை.
இவற்றில் இன்று நாம் பார்க்க இருக்கிற வினையெச்சம் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சம். இந்த வினையெச்சங்களின் விகுதிகள் .... ''து'' (செய்து) , ''த்து'' (படித்து), '' று (கொன்று) , ''ற்று'' (விற்று) , ''ந்து'' (வந்து), ''ண்டு (ஆண்டு), ''ட்டு (கேட்டு) '''' (ஓடி), ''ய்''(போய்) ஆகியவையாகும். ஆகவே இந்தச் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சத்திற்கு ஒன்பது மாறுபட்ட விகுதிகள்! இவற்றில் ''து'', ''த்து'' ''ந்து'' ''று'' ''ற்று'' ''ட்டு'' ஆறும் குற்றியலுகரத்தில் முடிகின்றன. இந்த ஆறில் ''த்து'' என்பதில் இறுதி ''து''யானது குற்றியலுகரத்தில் முடிவதோடு மட்டுமல்லாமல். அதற்கு முன் மற்றொரு வல்லின எழுத்தும் வருகிறது. எனவே இதை வன்தொடர்க் குற்றியலுகரம் என்று அழைப்பார்கள். அதுபோல, ''ற்று'' என்பதில் இறுதி ''று'' -க்கு முன்னர் ''ற்'' என்ற மற்றொரு வல்லினம் வருகிறது. இதுவும் வன்தொடர்க் குற்றியலுகரம்தான். அதுபோன்று ''ட்'' க்குமுன்னர் வல்லினம் வருகிறது. இதுவும் வன்தொடர்க் குற்றியலுகரம்தான். ஆனால் ''து'' ''று'' ''டு'' வுக்குமுன், மெல்லினமும் (''வந்து'' ''கொன்று'' ''ஆண்டு''), இடையினமும் (''செய்து'')வந்துள்ளன . எனவே இவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள் இல்லை.
மேற்கண்ட வன்தொடர்க் குற்றியலுகர விகுதியான ''த்து'', ''ற்று'' ''ட்டு'' என்பவற்றிலும் '''', ''ய்'' ஆகிய விகுதிகளிலும் முடிகிற ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சங்களுக்குப் பின்னர் வல்லின எழுத்தை முதலாகக்கொண்ட வருமொழிகள் வந்தால், அங்கே வல்லினம் மிகும். 
(எ-கா.)
நான் படித்துப் பார்த்தேன் - நான் விற்றுப் பார்த்தேன்.
நான் சட்டையைப் போட்டுப் பார்த்தேன்.
நான் ஓடிப் பார்த்தேன் - நான் செடியை நட்டுப் பார்த்தேன்.
நான் போய்ப் பார்த்தேன்.

ஆனால்,
'' நான் செய்து பார்த்தேன்'' என்பதில் வல்லொற்று மிகவில்லை. காரணம், இங்கு வன்தொடர்க்குற்றியலுகரம் விகுதி வரவில்லை. மாறாக, இடையின எழுத்து முன் வருகிற இடைத்தொடர்க் குற்றியலுகர விகுதியே வருகிறது!

''நான் வந்து பார்த்தேன்'' என்பதிலும் ''நான் கொன்று போட்டேன்'' என்பதிலும் '' நான் ஆண்டு பார்த்தேன்'' என்பதிலும் மிகவில்லை. காரணம், இங்கும் வன்தொடர்க்குற்றியலுகரம் விகுதி வரவில்லை. மாறாக, மெல்லின எழுத்து முன் வருகிற மென்தொடர்க் குற்றியலுகர விகுதியே வருகிறது!
''த்து'' ''ட்டு'' ''ற்று'' '''' ''ய்'' ஆகிய ஐந்து ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சங்களுக்குப் பின்னர் வல்லொற்று மிகும்.
இந்தச் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சத்திற்கான சந்தி விதியும் கட்டாயச் சந்தி விதியாகும். இதையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றலாம்.
குற்றியலுகரம் என்றால் என்ன? 
-------------------------------------------------------------------------------------------------
தமிழ்ச் சொற்களில் ( வேர்ச்சொற்களில்) இறுதியில் வல்லொற்று - வல்லின எழுத்து - தனித்து வராது. ஆனால் உயிர் எழுத்துகளோடு இணைந்து உயிர்மெய் எழுத்துகளாகத்தான் வரும். அவற்றில் முக்கியமானது உகர எழுத்தோடு வருவது ஆகும். இந்த உகரத்திலும் தனிக் குறில் அடுத்து வருகிற சொற்களின் இறுதியில் வருகிற உகரத்திற்கும் ஏனைய உகரத்திற்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. முதலில் கூறப்படுகிற உகரம் உதடுகள் குவிந்து பிறக்கிற உகரமாகும். . இதை முற்றியலுகரம் என்று அழைப்பார்கள். (எ.கா.) அது, இது, எது, மது போன்றவை. பிற உகரங்கள் எல்லாம் உதடு குவியாமல் பிறக்கிற உகரங்கள் ஆகும். ஒலிக்கும் நேர அளவும் குறைந்திருக்கும் இவற்றைக் குற்றியலுகரம் என்று அழைப்பார்கள்.(எ.கா.) கொக்கு, குரங்கு, நல்கு, எஃகு, ஆடு, அழகு, மிலாறு. இவற்றை அந்த குற்றியலுகரம் இணைந்து வருகிற வல்லின எழுத்துகளுக்கு முன்னர் வருகிற எழுத்துகளை அடிப்படையாகக்கொண்டு வகைப்படுத்தலாம். வல்லின எழுத்துகள் வந்தால் அது வன்தொடர்க் குற்றியலுகரம் (கொக்கு) ; மெல்லினம் வந்தால் மென்தொடர்க் குற்றியலுகரம் (குரங்கு); இடையினம் வந்தால் இடைத்தொடர்க் குற்றியலுகரம் (நல்கு); ஆய்தம் வந்தால் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ( எஃகு); தனிநெடில் வந்தால் நெடில்தொடர்க்குற்றியலுகரம் (ஆடு); உயிர் எழுத்துகள் வந்தால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் (அழகு, மிலாறு). இந்தக் குற்றியலுகரச் சொற்களின் புணர்ச்சி இயல்பு முற்றியலுகரப் புணர்ச்சியின் இயல்பிலிருந்து மாறுபட்டது. . எனவே தொல்காப்பியர் குற்றியலுகரப் புணர்ச்சிக்குத் தனி இயலே வகுத்திருக்கிறார். இங்கு நாம் பார்த்தது வன்தொடர்க்குற்றியலுகரப் புணர்ச்சி விதியாகும். அதுவும் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சச் சொற்களுக்கான புணர்ச்சி இலக்கணமாகும்.

இலக்கணத்தில் வாய்பாடு ( Paradigm ) என்றால் என்ன ? 
----------------------------------------------------------------------------------------
இந்த வினா மிகச் சரியான வினா ! நன்றி! கணக்குப் பாடத்தில் வட்டத்தின் பரப்பளவு πr^2 என்று படிக்கிறோம். அது எந்த வட்டமாக இருந்தாலும் - சிறிய வட்டமோ பெரிய வட்டமோ அது பிரச்சினை இல்லை- அதன் பரப்பளவு மேற்குறிப்பிட்ட வாய்பாட்டின் அடிப்படையில் தெரிந்துகொள்ளலாம். r என்ற வட்டத்தின் ஆரம் - அதன் மதிப்பு - மாறலாம்.. ஆனால் அதன் பரப்பளவு இந்த வாய்பாட்டின் அடிப்படையில்தான் அமையும். அதற்குக் காரணம், எல்லா வட்டங்களின் இயல்புகளும் ஒன்றுதான். அதுபோல ஒரு சொல் வினைச்சொல்லாக இருந்தால் போதும், வினையெச்ச வாய்பாட்டின் அடிப்படையில் அதனுடைய பல்வேறு வடிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதுவே இங்கு வாய்பாடு என்று அழைக்கப்படுகிறது. பேரா. பொற்கோ அவர்கள் தனது '' இலக்கணக் கலைக் களஞ்சியம்'' என்ற நூலில் இதுபற்றிப் பின்வருமாறு கூறுவார்.: '' ஒரே இலக்கண இயல்பை உடைய நூற்றுக்கணக்கான சொற்களை ஒரே வகையில் அடக்கிக்கொண்டு அந்த வகையில் உள்ள ஒரு சொல்லை அந்த வகைக்குக் குறியீடுபோல ஆளும் வழக்கம் தமிழிலக்கணங்களில் நாம் தொன்றுதொட்டுக் காணும் மரபுகளில் ஒன்று. ஓடு, ஆடு, நில், கேள், செல் முதலாய வினையடிகள் எல்லாவற்றையும் செய் என்னும் சொல்லால் குறிப்பதும், ஓட, ஆட, பாட நடக்க எனவரும் எல்லாச் சொற்களையும் செய என்னும் சொல்லால் குறிப்பதும் மேற்காட்டிய மரபுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இங்கே விளக்கிய இந்த முறையினை வாய்பாட்டு முறை என்பர். ஒரே இலக்கண இயல்புடைய நூற்றுக்கணக்கான சொற்களைக் குறிக்க்க் குறியீடாகப் பயன்படும் சொல்லினை வாய்பாட்டுச் சொல் என்பர். நில், கேள், செல் முதலாயவற்றைச் செய் வாய்பாட்டு வினைகள் என்றும் ஓட, பாட, ஆட முதலாயவற்றைச் செய வாய்பாட்டு வினைகள் என்றும் இலக்கணப் புலவர்கள் சுட்டுவது வழக்கம்'' (பக்கம் 154-55).

ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லைத் தெரிந்துகொண்டால், அதன் வேறுபட்ட இலக்கண வடிவங்களைத் தெரிந்துகொள்கிறோம். எடுத்துக்காட்டாக , go என்ற வினைச்சொல்லைக் கொடுத்தால், மாணவர்கள் go, goes, went, gone, going, to go என்று கூறிவிடுவார்கள். அதாவது ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லுக்கு ஆறு வடிவங்கள் உண்டு. அவற்றில் go, goes, went ஆகிய மூன்றும் வினைமுற்றுகள்! தனித்துவரும் (They go, He goes, He went) . ஏனைய மூன்றும் gone, going, to go மூன்றும் தனித்து வராது. He has gone, He is going, He likes to go என்று தன்னுடன் வேறு சில இலக்கணச் சொற்களை எடுத்துக்கொண்டுதான் வரும். எனவே இவை வினையெச்சங்கள். எனவே ஒரு மாணவருக்கு ஒரு வினைச்சொல்லைக் கொடுத்தவுடன் அதன் ஆறு வடிவங்களையும் - மூன்று வினைமுற்று வடிவங்கள், மூன்று வினையெச்ச வடிவங்கள் - வரவழைத்துவிடுவார். இதுவே வாய்பாடு.
மொழிமுதல் குற்றியலுகரம் .....
----------------------------------------------------
(பெ. முத்துராஜ்) : ஐயா வணக்கம் மொழிமுதல் குற்றியலுகரம் பற்றி(நுந்தை) விளக்கந்தந்தால் நன்றாக இருக்கும்.

ந.தெ.சு. : உதடு குவிந்து உகரம் பிறந்தால் முற்றுகரம்... உதடு குவியாமல் பிறந்தால் குற்றுகரம் என்பது பேச்சொலியல் விதி ஆகும். குற்றியலுகரம் பொதுவாகச் சொற்களின் இறுதியில் வல்லொற்றுகளோடு இணைந்துதான் வரும். ஆனால் சொல் முதலில் குற்றுகரம் வருமா?
தொல்காப்பியத்தில் மொழிமரபில் இரண்டு நூற்பாக்கள் இதுபற்றிக் கூறுகின்றன.
''குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின், 
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்'' (67)

''முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅது , 
அப்பெயர் மருங்கின் நிலையிய லான'' (68).

தாய், தந்தை, மகன், மகள் போன்ற சொற்கள் உறவு முறைமை காட்டும் பெயர்ச்சொற்கள் ஆகும். அதுபோன்று ''நுந்தை'' என்பது ''நுன்( உன்) தந்தை'' என்ற ஒரு முறைப்பெயர் ஆகும். பாரதியார் ''எந்தை'' என்று (என் +தந்தை) என்று கூறியிருக்கிறார் அல்லவா?
''நுந்தை''யில் சொல் முதலில் நகரமும் (ந்) அதனுடன் குற்று உகரமும் இணைந்து வருகிறது. எனவே ''ந்'' தான் முதலில் வந்து, அதைப்பின் தொடர்வதே '''' ஆகும் என்பதால், இதை மொழிமுதல் குற்றியலுகரம் என்று சொல்லக்கூடாது என்று மயிலைநாதர் கூறுகிறார். ஆனால் இரண்டுமே இணைந்து உயிர்மெய்யாக வருவதால் அவ்வாறு சொல்லலாம் என்பதும் ஒரு கருத்து.
இதையொட்டிய மற்றொரு கருத்து: ''கட்டு'' என்ற சொல்லின் இறுதி உகரம் முற்றியலுகரமாக இருந்தால் அது பெயர்ச்சொல்லைக் குறிக்கும் என்றும் குற்றியலுகரமாக இருந்தால் அது வினைச்சொல்லைக் குறிக்கும் என்பதும் இலக்கண ஆசிரியர்களின் கருத்து. எனவே முற்றியலுகரமும் குற்றியலுகரமும் ஒரே இடத்தில் வந்து பொருள் வேறுபாட்டைத் தருகின்றன. ''எத்தனை கட்டு உள்ளன'', ''அதைக் கட்டு''... முதல் ''கட்டு'' பெயர்ச்சொல், இரண்டாவது ''கட்டு'' வினைச்சொல். அதுபோல, ''ஓடு'' வும் இறுதி உகரம் முற்றுகரமாக இருந்தால் பெயர்ச்சொல், குற்றுகரமாக இருந்தால் வினைச்சொல் என்றும் கூறுவார்கள்.
ஆனால் ''நுந்தை'' என்ற சொல்லில் உள்ள உகரத்தை முற்றுகரமாக ஒலித்தாலும், குற்றுகரமாக ஒலித்தாலும் ஒரே பொருள்தான் என்று தொல்காப்பியர் கருதுகிறார். இன்றைய தமிழில் இந்த மொழிமுதல் குற்றியலுகரம் கிடையாது என்று கூறலாம்.
(4) செய / செய்ய வாய்பாட்டு வினையெச்சத்தில் சந்தி..
-------------------------------------------------------------------------------------
நாம் முன்னர் பார்த்தபடி, செய அல்லது செய்ய என்பது மற்றொரு வினையெச்ச வடிவம். இந்த வடிவத்தில் வினையடியோடு '''' சேர்கிறது. இடையில் வேறு எந்த இலக்கண விகுதிகளும் கிடையாது. ஆனால் வேர்ச்சொல்லை அடிச்சொல்லாக மாற்றுவதற்குத் தேவையான எழுத்துகள் - ''க்'', ''க்க்'' சேரலாம்.

''போ'' என்பது ''போக (போ+க்+அ) என்று மாறும்! ''படி'' என்பது ''படிக்க (படி+க்க்+அ) '' என்று மாறும். அதுபோல சில வினையடிகளுக்கு மாற்று வடிவங்கள் இருக்கும். ''வா'' என்பதற்கு மாற்றுவடிவம் ''வர்'' ஆகும்.
மேற்கூறிய வினையெச்ச வடிவங்களோடு '''' சேர்ந்து ''செய / செய்ய'' வினையெச்ச வடிவம் அமையும்.
இந்த வினையெச்ச வடிவத்திற்குப் பல பயன்பாடுகள் உண்டு. ஆனால் அவற்றைப்பற்றிப் பின்னர் சொல்லிலக்கணம்பற்றிப் பேசும்போது விரிவாகப் பார்க்கலாம்.
(4.1.) சந்தியில் எந்தவொரு ''செய, செய்ய'' வினையெச்ச வடிவங்களுக்குப்பிறகும், வல்லொற்றை - வல்லின எழுத்தை- முதலாகக்கொண்ட சொற்கள் வருமொழிகளாக அமைந்தால், அங்குத் தவறாமல் வல்லொற்று மிகும். இதற்கு விதிவிலக்கே கிடையாது.
வரச் சொல் .... எழுதச் சொல் ... போகச் சொல்
செய்யச் சொல்... நீந்தத் தெரியும்... எழுதப் பழகிக்கொள்

இதுவும் ஒரு கட்டாயச் சந்தி!
(4.2. ) இதுமட்டுமல்ல, செய/ செய்ய வடிவத்தில் அமைகிற பிற இலக்கணவகைச்சொல்கூட இதுபோன்று ஒற்று ஏற்று வரும். ''மிக'' என்ற அகர ஈற்று வல்லடையானது ''மிகு'' என்ற வினைச்சொல்லின் செய வாய்பாட்டு வினையெச்ச வடிவமாக அமைந்துள்ளது. எனவே '' மிகப் பெரிது'' என்று வல்லொற்று ஏற்று அமைகிறது.
(4.3.) வினையடை விகுதியாக அமைகிற ''ஆக'' என்பதுகூட வரலாற்றில் ''ஆகு'' என்பதின் செய வாய்பாட்டு வினையெச்ச வடிவம் என்று கொள்ளலாம். எனவே ,
'' வேகமாக (வேகம்+ஆக)'' என்ற வினையடையானது ''வேகமாகப் போ'' என்று வல்லொற்று ஏற்று வருகிறது என்று சொல்லலாம்.

(4.4.) ''செய்ய'' என்பதின்பின்னர் ''கூடிய'', ''தக்க'', ''கூடாத'' என்ற பெயரெச்சக் குறிப்பன்கள் வரும்போதுகூட வல்லொற்று மிகும்.
''செய்யத்தக்க'' , ''செய்யக்கூடிய'' , ''செய்யத்தக்க''
''சொல்லத்தகாத'' , ''செய்யக்கூடாத'' .............

(4.5.) செயவென் எச்சத்தின்பின் , போ, பார், கூடு, படு, பெற போன்ற துணவினைகள் வரும்போதும் வல்லொற்று மிகும்.
''அழப்போகிறது'', ''வரக்கூடும்'', '' வழங்கப்படும்'', ''போகப்பார்த்தான்'' , சொல்லப்பட்டது'' ''கூறப்பெற்றது''
(4.6.) செய அல்லது செய்ய வாய்பாட்டு வினையெச்ச வடிவத்தில் வருகிற '''' இறுதிபோலவே , பெயரெச்சத்திலும் '''' இறுதி வருகிறது. ஆனால் இந்தப் பெயரெச்ச '''' விகுதியானது காலவிகுதிக்குப்பின்னரே வரும். ''படித்த (படி+த்த்+அ)'' , ''படிக்கிற (படி+க்கிறு+அ)'' ''செய்த (செய்+த்+அ)''.
எனவே வினையடிக்குப்பின்னர் காலவிகுதி வந்து, அதன்பின்னர் பெயரெச்ச விகுதியாக அமைகிற '''' வேறு! வினையடிக்குப்பின்னர் கால விகுதி அமையாமல் நேரடியாக வினையெச்ச விகுதியாக இணைகிற '''' விகுதி வேறு. இதில் குழப்பமே தேவையில்லை.
அதாவது அகரத்தில் முடிகிற எச்சங்கள் எல்லாம் வினையெச்சங்கள் இல்லை. வினைச்சொல்லில் காலவிகுதிக்குப் பின்னர் அமைகிற அகர (பெயரெச்ச) விகுதி வேறு! கால விகுதி அமையாமல் வினையடியைத் தொடருகிற அகர (வினையெச்ச) விகுதி வேறு!
எனவே செய/ செய்ய வாய்பாட்டு வினையெச்சத்திற்குப் பின்னர் வல்லினங்களை முதலாகக்கொண்ட வருமொழிகள் வரும்போது, கட்டாயமாக வல்லொற்று மிகும். இதையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றலாம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

5 கருத்துகள்:

sirajmlk சொன்னது…

thanks a lot sir. i had a big challenge to understand sandhi vidhihal now bit fine thanks again

Unknown சொன்னது…

அருமையான விளக்கம். உங்கள் பணி தொடரட்டும்.

Unknown சொன்னது…

Idapakkam eanbathai eavaru pirika vendu m with grammar rule

Dr. M. Ramakrishnan சொன்னது…

பயன் பெற்றேன். மிக்க நன்றி.

ஜான் சாலமோன் சொன்னது…

ஐயா மிக்க நன்றி 🙏

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India