சனி, 13 ஜனவரி, 2024

பெண்ணுரிமை . . .

 ''பெண்ணுரிமை'' குரல் இன்று ஓங்கி ஒலிப்பதற்குக் காரணம் . . .  சமுதாயப் பொருளாதாரக் கட்டமைப்பின் வளர்ச்சி அடிப்படையா? தனிநபர்களின் அல்லது இயக்கங்களின் ''பேச்சுக்கள்'' அடிப்படையா? மற்றொரு பதிவில் நான் இட்ட சில கருத்துக்கள்!

--------------------------------------------------------------------------

நண்பர் திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள்:

------------------------------------------------------------------------

//கணித்துறையில் ஒரு மென்பொருளின் பயனாளர்களின் (based on required Scale and performance) எண்ணிக்கையைப்பொறுத்து அந்த மென்பொருளின் அமைப்பு மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கப்படவேண்டும். அடிப்படையில் எண்ணிக்கையைப்பொறுத்து தீர்வின் அடிப்படை மாறும். - அந்தவழியில் அமைந்ததே என் ஐயம்!

இதுபோன்ற மாற்றம் ஒரு சமுதாயத்தினுள்ளும் நடக்கிறதா? காட்டாக,

1) போரினால் ஏற்கனவே ஒடுக்கப்பட்ட “மிகச்சிறிய எண்ணிக்கையில் ஆண்களைக்கொண்ட” ஒரு சமூகம் பெண்களை குழந்தைபிறக்கவைக்கும் ஓர் இயந்திரமாகப்பார்த்து அவர்களை வீட்டோடு உட்காரவைப்பது அச்சூழலில் அது ஓர் அறிவார்ந்த செயலாகும் என்று சொல்லமுடியுமா? அங்கு நாம் இன்று பேசும் பெண்ணுரிமைக்கு இடம் இருக்கமுடியுமா?//

ந. தெய்வ சுந்தரம்

----------------------------------------------------------------------

நன்றி நண்பரே. தாங்கள் எழுப்பியுள்ள ஐயங்கள் உறுதியாகத் தீர்க்கப்படவேண்டும்.

(1) எண்ணிக்கையும் மாற்றமும்: இதை நாம் அளவுமாற்றம் (Quantitative Change) , பண்புமாற்றம் (Qualitative change) என்று கொள்ளலாம். தாங்கள் கூறுவதுபோல அளவுமாற்றம் (எண்ணிக்கை மாற்றம்) ஒரு கட்டத்தில் பண்புமாற்றமாக ( பொருளின் அடிப்படைப் பண்புமாற்றம்) மாறும். இது எல்லாப்பொருள்களின் மாற்றங்களிலும் வளர்ச்சிகளிலும் நடைபெறுகிற ஒன்று. 

இதை விளக்குவதற்குப் பொதுவாக ஒரு எடுத்துக்காட்டைக் கொடுப்பார்கள். தண்ணீரைச் சூடுபடுத்தச் சூடுபடுத்த அதன் வெப்பநிலையின் அளவு மாறுகிறது. இருப்பினும் ஒரு கட்டம்வரை தண்ணீர் தண்ணீர்தான். ஆனால் 100 டிகிரியை எட்டும்போது அது நீராவியாக மாறுகிறது. 101 ஆவது டிகிரியை நாம் பார்க்கமுடியாது. அதற்குமேல் தண்ணீரின் வெப்ப நிலை அளவில் மாறாது. அதே வேளையில் தண்ணீர்தான் நீராவியாக மாறியிருந்தாலும், தண்ணீரின் இயல்புவேறு, நீராவியின் இயல்பு வேறு. நீராவி ஆனபிறகு அதன் இயக்குசக்தி பன்மடங்கு ஆகும். மிகப்பெரிய பொறிகளையும் அது இயக்கும். ஆனால் தண்ணீருக்கு அந்தச் சக்தி கிடையாது. ஆகவே, தண்ணீரிலிருந்துதான் நீராவி தோன்றினாலும் தண்ணீரின் பண்பு வேறு; நீராவியின் பண்பு வேறு. இதுபோல்தான் தண்ணீரின் வெப்பநிலையைக் குறைக்கக் குறைக்க ஒரு கட்டத்தில் அது பனிக்கட்டி ஆகிவிடுகிறது. தண்ணீரின் பண்பு வேறு; பனிக்கட்டியின் பண்புவேறு. உடம்புக்கு ஒத்தணம் கொடுப்பதிலையே இதைத் தெரிந்துகொள்ளலாம். தண்ணீரைக்கொண்டு ஒத்தணம் கொடுக்கமாட்டார்கள். பனிக்கட்டியைக்கொண்டுதான் ஒத்தணம் கொடுப்பார்கள். இதன் அடிப்படை . . . எந்தவொரு பொருளிலும் மாற்றம் ஒரு கட்டம் வரை அளவுமாற்றமாகவே தொடரும். ஆனால் ஒரு கட்டத்தை அடைந்தவுடன் மாற்றமானது அளவு மாற்றமாகத் தொடராமல் பண்பு மாற்றமாக மாறிவிடும். இந்த வளர்ச்சி விதி உலகில் அனைத்துக்கும் பொருந்தும்.

(2) மனிதசமுதாய வரலாற்றில் . . . அதன் தொடக்கத்தில் . . . பெண்களே தீர்மானமான சக்தியாக நீடித்தார்கள். ஆண்கள் இல்லை. அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, ஆண்களின் தொழில் வேட்டையாடுவது; பெண்களின் தொழில் காய் கனிகள் பொறுக்குவது. இதில் வேட்டைத் தொழிலில் தினந்தோறும் வேட்டைப் பொருள் கிடைக்கும் என்பது உறுதி இல்லை. ஆனால் காய் கனி பொறுக்கும் தொழில் தினந்தோறும் உறுதியாக உணவுப்பொருள் கிடைக்கும். மேலும் சிறு அளவில் காய் கனி விவசாயத்தையும் (Primitive agriculture) பெண்கள் செய்துவந்துள்ளார்கள். எனவே பெண்களின் தொழிலே நிரந்த வருமானத்திற்கான தொழிலாக தொடக்ககாலச் சமுதாயத்தில் நிலவியுள்ளது. மேலும் வேட்டைக்கு வேண்டிய ஆள் பலத்தை அளிப்பதற்கு அடிப்படையான குழந்தை பிறப்பு பெண்களைச் சார்ந்தே உள்ளது. குழந்தையைச் சுமந்து, பெற்று, வளர்த்து, அவர்களை வேட்டைக்கு ஆள்பலமாக அளித்தது பெண்களே. மேலும் ஒரு காரணம் கூறலாம். ஒரு குழந்தைக்கு இவள்தான் அம்மா என்று அந்தக் குழந்தையின் அம்மாவைச் சுட்டிக்காட்டமுடியும், ஆனால் குடும்பம் என்ற ஒரு அமைப்பு தோன்றாத ஒரு மனித சமுதாய வரலாற்றில் இவர்தான் ஒரு குழந்தையின் தந்தை என்று சுட்டிக்காட்டமுடியாது. எனவே இந்த வகையிலும் பெண்களுக்கே அப்போது மதிப்பு. எனவேதான் மனித குல வரலாற்றில் தொடக்கக் காலகட்டத்தில் நிலவியது பெண்வழிச் சமுதாயமே (Matriarchal society) . முதலில் தோன்றியது பெண்தெய்வ வழிபாடே. அத்தனைச் சடங்குகளும் குழந்தை பெறுதல் தொடர்பானதே (fertility rituals) . இந்தத் தொடக்ககாலச் சமுதாயம் அப்படியே நீடிக்கவில்லை. 

(3) இரும்புபோன்ற உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நிலைத்தைப் பண்படுத்தி, பெரிய அளவில் விவசாயம் செய்யும் வளர்ச்சியைச் சமுதாயம் அடைந்தது. அப்போதுதான் பெண்களின் பொருள் உற்பத்தியைவிட ஆண்களின் பொருள் உற்பத்தி முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. வேட்டைத் தொழிலும் வளர்ந்தது. தனியுடைமையும் தோன்ற ஆரம்பித்தது. இதன் விளைவு, ஒரு பெண் ஒரு ஆணுக்குமட்டுமே குழந்தைபெற்றுத்தரும் ''மனைவியாக'' ஆக்கப்பட்டாள். ''குடும்ப அமைப்பு'' தோன்றியது. பெண் ''வீட்டுக்குள்'' தள்ளப்பட்டாள். ஆண் வழிச் சமுதாயம், ஆண் ஆதிக்கச் சமுதாயம் தோன்றி நிலவத் தொடங்கியது. பலதார மணம் தோன்றியது. ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன்தான்; ஆனால் ஒரு ஆணுக்குப் பலதாரங்கள் இருக்கலாம் (Polygamy) . ஆங்காங்கே பல புருஷ மணமும் (Polyandry) இருந்தது என்பதற்கு மகாபாரத துரோபதை கதையே எடுத்துக்காட்டு.

இவ்வளவு விரிவாக இதை நான் எழுதியதற்குக் காரணம் . . . மனித சமுதாய வரலாற்றில் பெண் எப்போதுமே ''அடிமையாகவே'' இருந்ததுபோலவும் முதலாளித்துவ சமுதாயத்தில்தான் பெண்களுக்கும் '' உரிமைகள்'' அளிக்கப்பட்டுள்ளதுபோலவும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மாயையை தகர்ப்பதற்கே ஆகும். 

பொருளாதார உற்பத்தியில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்குப் பங்கு ஏற்படும்போதுதான் பெண் விடுதலை, பெண் உரிமை என்பதெல்லாம் முழுமையடையும். பொருளாதார உற்பத்திக்கு உடல் உழைப்பைவிட இயந்திரங்கள் (கணி உட்பட) துணை என்பது வளர்ச்சியடையும்போது, ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பொருள் உற்பத்தியில் ஈடுபடமுடியும். இன்றுகூட கிராமங்களிலும் நகரங்களிலும் சம்பாதிக்கிறார்கள் என்று சிலர் கூறலாம். ஆனால் பெண்களுக்கு அளிக்கப்படும் வேலைகள் என்ன என்பதைப் பார்த்தால் உண்மை தெரியும். விவசாயத்தில்கூட நாற்று நடுவது, களை பிடுங்குவது, அறுக்கப்பட்ட கதிர்களைச் சுமப்பதுபோன்ற வேலைகளிலும் கட்டிடங்கள் கட்டுவதில் செங்கல் சுமப்பது போன்ற வேலைகளிலும்தான் பெண்கள் இங்கு அதிகமாக ஈடுபட்டுள்ளார்கள். அதற்கான கூலிகூட ஆண்களுக்கு இணையானது கிடையாது. மற்றபடி, ஆசிரியப்பணி, கோப்பு எழுதுகிற பணியாளர்கள்பணி, வங்கிப்பணி என்ற உடலுழைப்பைச் சாராத வேலைகளில்தான் பெண்களுக்கு வாய்ப்பு உண்டு. அதன் பயனாக, இடைத்தட்டு , மேல்தட்டு வர்க்கங்களின் வீடுகளில் பெண்களுக்கு ஓரளவு ''உரிமை '' உள்ளது! ஆனால் இதற்கும் ''எல்லை'' உண்டு! ஆங்காங்கே விதிவிலக்காக, பெண்கள் வாகனங்கள் ஓட்டலாம். டிராக்டர்கள் ஓட்டலாம்! அவ்வளவுதான். மற்றபடி , பெண்களுக்கு இன்றும் வீடுகளில் . . . குடும்பங்களில் . . . சமையல், குடும்பத்தினருக்குப் பணிவிடை, கணவனுக்குச் சுகம் அளிப்பது, குழந்தை பெறுவது, குழந்தை வளர்ப்பது போன்ற வேலைகள்தான். எனவே இன்றும் பெண்கள் சமுதாய அடிப்படையில் பார்க்கும்போது ஆண்களுக்கு அடுத்த நிலைதான்! எதிர்காலத்தில் இது மாறும். அதுவேறு.

இன்றைக்குப் பெண்களுக்குச் சற்று ''மதிப்பு'' அளிக்கப்படுகிறது என்றால், அதற்குக் காரணம், சமுதாய வளர்ச்சியே . . . அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியே . . . அதுவும் முதலாளித்துவ உற்பத்திக்குத் தேவைப்படுகிற வளர்ச்சியே பெண்களின் நிலையில் சற்று வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.  'பெண்ணுரிமை'' பற்றிப் பேசமுடிகிறது. சில தனிநபர்கள், அல்லது ''தலைவர்கள்'' அல்லது சில இயக்கங்கள் இந்த வளர்ச்சிச் சூழ்நிலையில் 'பெண்ணுரிமைக்கு'' ஒரு எல்லைக்கு உட்பட்டு ''முக்கியத்துவம் அளித்துப்'' பேசமுடிகிறது. அதை வரவேற்கிறோம். ஆனால் இவர்களே ஒரு நூற்றாண்டுக்குமுன்னால் இதைப் பேசியிருந்திருக்கமுடியாது! அப்போதைய சமுதாயக் கட்டமைப்பு வேறு!

சில நூற்றாண்டுகளுக்குமுன்பு பாரதியார் போன்று ஒரு கவிஞன் தோன்றி, பெண்ணுரிமைபற்றிப் பாடியிருக்கமுடியாது! பெண்களை ஓரளவு ''வீட்டுச் சிறையிலிருந்து'' மீட்டிருக்கமுடியாது! ''ஆண் ஆதிக்கம்'' சற்றாவது இன்று தளர்ந்திருக்கிறதே, அது அன்று நடந்திருக்கமுடியாது! ஆனால் இன்றும் அடிப்படையில் பெண்கள் ''தங்கச் சிறையில்தான்'' வாழ்கிறார்கள்! பெண்களுக்கு முழுமையான விடுதலை என்பது . . .  ஆண்களுக்கு இணையான சுதந்திரம் என்பது . . .  இங்கு ஏற்பட இன்னும் ஓரிண்டு நூற்றாண்டு காத்திருக்கவேண்டுமோ என்றுதான் நினைக்கத்தான் தோன்றுகிறது!

தமிழ்நாட்டு மக்களின் ''கல்விக்கண்களைத் '' திறந்தது யார்?

 தமிழ்நாட்டு மக்களின் ''கல்விக்கண்களைத் '' திறந்தது யார்? முகநூலின் இன்னொரு பதிவில் நான் பதிவிட்ட ஒரு கருத்து!

----------------------------------------------------------------------------------------------------------------------------

கல்வி என்ற கற்றல் குறிப்பிட்ட சமுதாய அமைப்பைச் சார்ந்தது. தனிநபர்களின் விருப்புவெறுப்புக்களைப் பொறுத்தது இல்லை. முதலாளித்துவ சமுதாய அமைப்பில் . . . நிறம், மதம், மொழி தாண்டி . . . உழைப்புச்சக்தியை விலைகொடுத்து வாங்குவதே முதலாளித்துவ வர்க்கத்தின் நோக்கம். இந்த நோக்கமும் போக்கும் முதலாளித்துவ சமுதாயத்திற்கு முந்தைய சமுதாய அமைப்பில் நிலவவில்லை. அதற்குக் காரணம் அவற்றின் அடிப்படைச் சுரண்டல் தன்மை . . . மனிதனையும் அவனு உழைப்பையும் மொத்தமாக விலைக்கு வாங்குவது (அடிமைச் சமுதாயம்). அல்லது உழைப்பாளியின் ''உழைப்பை'' விலைக்கு வாங்குவது (நிலவுடைமைச்சமுதாயம்) என்பதாகும். அதற்கேற்பவே அச்சமுதாயங்களில் ''கல்வி'' ''அறிவு'' ஆகியவை நிறம், மதம், மொழி போன்றவற்றைச் சார்ந்து இருந்தன.

அதுபோன்று முதலாளித்துவ உற்பத்திமுறைக்குத் தேவையான ''அறிவு சார்ந்த உழைப்புசக்தியை'' தங்களின் நோக்கத்திற்கு ஏற்ப வடிவமைக்க முதலாளித்துவ வர்க்கம் விரும்பியது. இந்த ''அறிவுசார்ந்த உழைப்புச்சக்தியை'' நிறம், மதம், மொழிதாண்டி ''உருவாக்குவதே'' முதலாளித்துவ வர்க்கத்தின் நோக்கம். அதையொட்டியே முறைசார் கல்வி தோற்றுவிக்கப்படுகிறது.

முதலாளித்துவ வர்க்கம் தனது நாடு தாண்டி, காலனி ஆதிக்கத்தை விரிவுபடுத்தும்போது, அந்தக் காலனி நாடுகளிலும் தனக்குத் தேவையான அளவுக்கு ''முறைசார் கல்வியை'' செயல்படுத்தியது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆங்கிலேய முதலாளித்துவத்தின் ''காலனி ஆதிக்க நோக்கத்தை" நிறைவேற்றுவதற்கு மெக்காலேயைப்போன்ற ''ஆங்கிலேய அறிவாளிகள்'' பலர் களம் இறக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியே இன்று இந்தியாவில் நிலவும் முறைசார் கல்வி. இந்த முறைசார் கல்வி நிறுவனத்தின் உச்சகட்ட வளர்ச்சி நிறுவனமே ஐ ஐ டிகள்!

மேலும் தற்போதைய ஏகாதிபத்திய வளர்ச்சி நிலையில் . . . உலகெங்கும் உள்ள ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு இந்திய ''அறிவுசார்ந்த உழைப்பைத் தரும்'' படிப்பாளிகளை இங்கு உள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களும் ''உற்பத்தி செய்கின்றன''! அவர்களைப் பலவகைகளில் ''பணிசெய் அனுமதி (Work permit) , ஹைச் 1 விசா (H1B Visa) போன்றவற்றைக் கொடுத்து, இந்தியாவிலிருந்தே கடத்திச்செல்கின்றன ஏகாதிபத்தியங்கள்! இங்கு நிலவுகிற வேலையில்லாத் திண்டாட்டமும் மேலைநாடுகளில் கிடைக்கிற ''வசதிகளும்'' அதற்கு உதவுகின்றன!

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மாகராஷ்டிரம், குஜராத் போன்ற எந்தவொரு மாநிலமும் விதி விலக்கு இல்லை! இந்த நோக்கில் தமிழ்நாட்டிலும் தோன்றி வளர்ந்து நீடிக்கிற ''முறைசார் கல்வி வளர்ச்சியைப் '' பார்க்காமல், நீதிக்கட்சி, காங்கிரஸ்கட்சி, திராவிடக்கட்சிகள் போன்றவைதான் தமிழ்நாட்டுக்குக் ''கல்விக்கண்'' கொடுத்தார்கள் என்ற அடிப்படையில் விவாதிப்பது . . . ஏகாதிபத்தியங்களின் காலனி, அரைக்காலனி. நவீன காலனித்துவ '' மோசடி நோக்கங்களை'' திரையிட்டு மறைப்பதாகவே அமையும். அதுமட்டுமல்ல, ஆங்கிலேய முதலாளித்துவ, ஏகாதிபத்தியத்தின் காலனித்துவ ''முறைசார் கல்விக்கு'' சாம்பிராணி போட்டவையே மேற்குறிப்பிட்டவை எல்லாம்! அந்தப் ''பட்டத்தையும் மதிப்பையும்'' வேண்டுமென்றால் அவற்றிற்குக் கொடுக்கலாம்! அவ்வளவுதான்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

எந்தவொரு பிரச்சனையையும் சமுதாயத்தின் இயங்கியல் அடிப்படையில் ஆய்வுசெய்யவேண்டும் ! அந்த இயக்கத்தின்போது சில தனிநபர்களுக்குச் சில முக்கியப் பங்கு இருக்கலாம்! அந்த முக்கியப் பங்குகளையும் அவர்களுக்குக் கொடுப்பது அவர்கள் வாழ்ந்த சமுதாய அமைப்பே என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். அவ்வாறு பார்க்காமல், ''இவர்'' செய்தார், 'அவர்'' செய்தார் என்று கூறுவது வரலாற்றைத் தீர்மானிப்பது தனிநபர்கள் இல்லை, மாறாக சமுதாய அமைப்பே என்பதை மறைப்பதே ஆகும். அறிவியல் கண்டுபிடிப்புகளும் அப்படியே. ஒரு அறிவியல் கண்டுபிடிப்புக்குத் தேவையை உருவாக்குவதும் அதற்குரிய வசதி வாய்ப்புக்களை அளிப்பதும் அப்போது நிலவுகிற சமுதாய அமைப்பே. ஒரு நியூட்டன் கண்டுபிடிப்பு அல்லது ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பு 10 -ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கமுடியாது. அப்போது அதற்கான தேவையும் வளரவில்லை . . . அதற்கான வசதி வாய்ப்புச் சூழலும் கிடையாது!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

 

மனித சமுதாயத்தின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் எவ்வாறு நிகழ்கின்றன, அவற்றில் சமுதாய அமைப்பின் பங்கு என்ன, தனிநபர்கள் பங்கு என்ன ஆகியவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள ஆர்வமுடைய நண்பர்கள் உறுதியாகப் படிக்கவேண்டிய இரண்டு நூல்கள் . . . Science and Civilization in Ancient China (by Joseph Needham) , Science in History ( J D Bernal). இந்தியாவில் நிலவிய சூழல்பற்றித் தெரிந்துகொள்ள தேபி பிரசாத் சட்டோபாத்யாவின் நூல்களைப் படிக்கலாம்.

வியாழன், 11 ஜனவரி, 2024

எழுத்துத்தமிழ் இலக்கணமும் கணினித்தமிழ் இலக்கணமும் வேறுபட்டதா?

 எழுத்துத்தமிழ் இலக்கணமும் கணினித்தமிழ் இலக்கணமும் வேறுபட்டதா?

---------------------------------------------------------------------- --------------------------------------------------
பேராசிரியர் நண்பர் நெடுஞ்செழியன் வேலாயுதம் அவர்கள்:
//என்னுடைய கேள்வி என்னவென்றால் கணினிக்காக உருவாக்கப்படும் இந்தத் தோன்றல் விதி, மொழியில் இல்லாத ஒன்றுதானே. எனவே கணினிக்காக உருவாக்கும் இந்தத் தோன்றல் விதியை, மொழி வழக்கைக் காத்தல் பொருட்டு, தோன்றிக் கெடுதல் என கணினிக்கு வழங்கலாமே .//
நான் புரிந்துகொண்டது சரிதான் என்றால், பேராசிரியர் அவர்களின் கருத்து . . .
1) பேச்சுத்தமிழ்தான் எழுத்துத் தமிழுக்கு அடிப்படை; எனவே சில புணர்ச்சி விதிகள் பேச்சுவழக்கில் இல்லையென்றால் அதை ஏன் எழுத்துத்தமிழில் தக்கவைக்கவேண்டும்?
2) கணினிக்கு வேண்டுமென்றால் பொருள் மயக்கம் தோன்றாமல் இருப்பதற்குத் ''தேவையற்ற'' புணர்ச்சி விதிகளை அளிக்கலாம்.
முதல் கருத்துக்கு எனது பதில் நேற்றே கூறியிருந்தேன். தமிழ் ஒரு இரட்டைவழக்குமொழி (diglossic language) . தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து மொழிவழிச் செயல்பாடுகளையும் (language functions) மேற்கொள்வதற்கு பேச்சுத்தமிழும் வேண்டும், எழுத்துத்தமிழும் வேண்டும். எங்குப் பேச்சுத்தமிழ் பயன்படுத்தவேண்டும், எங்கு எழுத்துத்தமிழ் பயன்படுத்தவேண்டும் என்பதை ஒரு தனிநபர் தீர்மானிக்கவில்லை; மாறாக, தமிழ்ச் சமுதாயமே தீர்மானிக்கிறது.
ஆங்கிலம், தமிழ் மொழிகளைப் பொறுத்தமட்டில் எங்கு ஆங்கிலம், எங்குத் தமிழ் என்பதை ஒரு தனிநபர் முடிவு செய்துகொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒருவர் தனக்கு ஆங்கிலம் தெரியும், தான் படித்தவர் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவார். ஆனால் அது கட்டாயம் இல்லை. தமிழைப் பயன்படுத்தலாம். தடை இல்லை! நீடிக்கின்ற தடைகள் எல்லாம் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டவையே! இதை இருமொழியம் என்று கூறுவார்கள் (bilingualism) .
அல்லது சில இடங்களில் கட்டாயமாக ஆங்கிலமும் சில இடங்களில் கட்டாயமாகத் தமிழும் பயன்படுத்தவேண்டும் என்று சூழல் தோன்றலாம். இதுபோன்ற சூழல் இருந்தால் அதை இரட்டை வழக்கு இருமொழியம் ( Bilingualism with diglossia) என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் இது கிடையாது.
எனவே , இன்றைய சூழலில் பேச்சுவழக்கும் எழுத்துவழக்கும் ஒரே மொழியின் இரட்டைவழக்குகளாகவே நீடிக்கின்றன. இது ஒரு சமுதாயமொழியியல் சிக்கல் (Sociolinguistic problem) . தமிழ்மொழி வரலாற்றில் இந்தச் சூழல் எப்போது தோன்றியது, இது உண்மையில் ஒரு சிக்கலா, சிக்கல் என்றால் எப்படி இதைத் தீர்ப்பது என்பது வேறு ஆய்வு. அதில் நான் இப்போது நுழையவில்லை. ஆனால் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று இரண்டு தமிழ் வழக்குக்களும் ஒருவருக்குத் தேவை. நாம் இரண்டு வழக்குக்களையும் வைத்துக்கொண்டுதான் இன்று தமிழ்ச்சமுதாயத்தில் செயல்படுகிறோம்.
எழுத்துத்தமிழுக்காகப் பேச்சுத்தமிழ் இலக்கணத்தை மாற்றுவதும் பேச்சுத்தமிழுக்காக எழுத்துத்தமிழ் இலக்கணத்தை மாற்றுவதும் இன்றைய கட்டத்தில் இயலாத ஒரு செயல். நாம் இயற்கையாகப் பேசும்போது, ''நான் படிச்சேன்; நான் உடைச்சேன்; எலெயெப் பறி; ஒலகத்தில் இது இருக்கிறது'' என்று பேசுகிறோம். ஆனால் நம்மை எழுதச்சொன்னால், உறுதியாக நாம் ''நான் படித்தேன்; நான் உடைத்தேன்; இலையைப் பறி; உலகத்தில் இது இருக்கிறது'' என்றுதான் எழுதுவோம்.
அடுத்து, எழுத்துத்தமிழுக்கும் பேச்சுத்தமிழுக்குமான இலக்கணங்களில் பெரிய வேறுபாடு கிடையாது. ஒலியன் அளவில்தான் (phonological differences) வேறுபாடு. 'இலை' - 'எலெ' - இங்கு 'இ' ஆனது 'எ' ஆக மாறுகிறது; 'படித்தான்' - 'படிச்சான்' - இங்கு இறந்தகால விகுதி -த்த்- என்பது பேச்சுத்தமிழில் -ச்ச்- என்று மாறுகிறது. ஆனால் 'கொடுத்தான்' என்பது 'கொடுச்சான்' என்று மாறாது. 'உண்மை' என்பது 'ஒண்மை' என்று மாறாது. எங்கும் மாறும் , எங்கு மாறாது என்பதற்குத் தெளிவான விதிகள் உண்டு. 'கொடுத்தான்' என்பது 'கொடுச்சான்' என்று மாறாது; 'உண்மை' என்பது 'ஒண்மை' என்ற மாறாது.
மேலும் எழுத்துத்தமிழைப் பள்ளிகளில் முறையாகக் கற்காதவர்களும் தமிழ் நாளிதழ்களை வாசித்துக்காட்டினால் புரிந்துகொள்வார்கள் (Comprehension ability) ; மேடையில் எழுத்துத்தமிழில் பேசினால் புரிந்துகொள்வார்கள். அவர்களால் எழுத்துத்தமிழைப் பயன்படுத்தமுடியாமல் (Performance disability) இருக்கலாம். அவ்வளவுதான்! எனவேதான் எழுத்துத்தமிழ் - பேச்சுத்தமிழைத் தமிழின் இரட்டைவழக்குக்கள் (diglossic language) என்று மொழியியலாளர்கள் அழைக்கிறார்கள். இரு வழக்குக்கள் (two dialects) என்றோ இரு மொழிகள் (two languages) என்றோ அழைக்கவில்லை. ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் அல்லது இரட்டைப் பழங்கள். இரு குழந்தைகளோ அல்லது இரு பழங்களோ இல்லை. இந்த நுட்பமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இது ஒருபுறம் இருக்க . . . இங்குப் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் கூறியது, பேச்சுவழக்கே எழுத்துவழக்குக்கு அடிப்படை என்றும் அதனால் பேச்சுவழக்கில் ஒரு புணர்ச்சி விதி இல்லையென்றால், அதை ஏன் எழுத்துத்தமிழில் பயன்படுத்தவேண்டும்? விட்டுவிடலாமே!
மனிதமூளை அளவுக்குக் கணினிக்கு மொழியறிவு கொடுக்கமுடியாது என்பதால், வேண்டுமென்றால் கணினித்தமிழில் அந்த புணர்ச்சிவிதியை வைத்துக்கொள்ளுங்கள் என்பது அவர் கருத்துபோல் தெரிகிறது.
ஏற்கனவே பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் என்று இருப்பதே ஒரு சிக்கல் என்று நாம் நினைக்கும்போது, மூன்றாவதாகக் கணினித்தமிழ் என்ற ஒரு தனித் தமிழ் உருவாக இடம் கொடுக்கவேண்டுமா?
பேராசிரியர் கூறுவதில் ஒரு உண்மை உண்டு. அதாவது கணினிக்கு ஒரு தொடரின் பொருண்மையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்குத் தேவையான உலகறிவு (World knowledge / ontology / Pragmatic knowledge) இல்லாததால், அனைத்து மொழிக்கூறுகளையும் - இலக்கணம் உட்பட - தெளிவாகவும் வெளிப்படையாகவும் (Explicitly) கொடுக்கவேண்டிய சூழல் உண்டு.
ஆனால் இந்தச் சிக்கலைத் தற்போதைய கணினிமொழியியல் (Computational Linguistics) ஆய்வு பெரிய அளவுக்குத் தீர்த்துக்கொள்ளும் திறன் கணினிமொழியியலில் நீடிக்கிறது. ''நான் பழம் சாப்பிட்டேன்'' என்பதில் செயப்படுபொருளான 'பழம்' இரண்டாம் வேற்றுமை உருபை - 'ஐ'- எடுக்காமல் இருந்தாலும் மனிதமூளை தனது உலகறிவைக்கொண்டு ஐயத்தைத் தீர்த்துக்கொள்கிறது; அதுபோல 'மாமா நேற்று வந்தார், அவர் எனக்குப் பரிசு அளித்தார்' என்ற தொடரில் 'அவர்' என்பது யார் என்பதை முந்தைய தொடரிலிருந்து மனித மூளை புரிந்துகொள்கிறது.
ஆனால் கணினி இவ்வாறு புரிந்துகொள்ளமுடியுமா? அதற்குத் தெளிவாக, 'நான் பழத்தைச் சாப்பிட்டேன்' ; 'மாமா நேற்று வந்தார், அந்த மாமா எனக்குப் பரிசு அளித்தார்' என்று கொடுக்கவேண்டாமா? உண்மைதான் . . . இது சிக்கல்தான்!
ஆனால் இன்று கணினிமொழியியலில் இதுபோன்ற பொருள் மயக்கம் (Word sense ambiguity) , இலக்கண மயக்கம் (Grammatical ambiguity) ஆகியவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான மொழியியல் உத்திகள் (Computational linguistic formalisms and disambiguation techniques) தோன்றி நிலவுகின்றன.
இதுபோன்றவற்றைப்பற்றிப் படிப்பதுதான் கணினிமொழியியல் (Computational Linguistics). இந்தத் துறையானது வெறும் கணினியியல் இல்லை; வெறும் மொழியியல் இல்லை. மாறாக, கணினிக்கு மொழியைக் கற்றுக்கொடுப்பதற்கான ஒரு புதிய துறை.
'படித்தான்' என்பதில் -த்த்- என்பது இறந்தகால விகுதி; ஆனால் 'அத்தான்' என்பதில் உள்ள '-த்த்-' இறந்தகால விகுதி இல்லை என்று கணினியால் இன்று தெரிந்துகொள்ளமுடியும். சொற்பொருண்மை மயக்கம் (Word Sense ambiguity) இலக்கண வகைப்பாடு மயக்கம் ( grammatical ambiguity) ,சுட்டுப்பொருள் மயக்கம் ( Anaphora ), தொலைதூரச் சார்பு ( long distance dependency) போன்ற சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதற்கு நிகழ்தகவு இயலைக் (Probabilistic statistics) கொண்டும், ஆழ்நிலை கற்றல் (Deep Learning) , நரம்புப்பின்னல் அமைப்பு (Neural Network) போன்ற பல நுட்பமான உத்திகள் அல்லது வழிமுறைகள் தற்போது கணினிமொழியியல் துறையில் நீடிக்கின்றன.
எனவே, இன்றைய எழுத்துத்தமிழை - அதன் இலக்கண அமைப்பை அடிப்படையாகக்கொண்டே - கணினிக்குக் கற்றுக்கொடுக்கமுடியும். எனவே கணினித்தமிழ் , கணினித்தமிழ் இலக்கணம் என்பதெல்லாம் தேவை இல்லை. எழுத்துத்தமிழையும் எழுத்துத்தமிழாகக் கணினி புரிந்துகொள்ளமுடியும்; அதுபோன்று, பேச்சுத்தமிழையும் பேச்சுத்தமிழாகவே கணினியால் புரிந்துகொள்ளமுடியும்.
மேடைகளில் 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ' என்று பேசப்படுகிற 'முத்தமிழ்' வரிசையில் கணினித்தமிழை வைப்பது சரியில்லை. முத்தமிழ் என்பதுங்கூட தமிழை - பொதுத்தமிழை- எந்தக் கருத்தாடலுக்குப் (Discourse) பயன்படுத்துகிறோம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட வேறுபாடுதான். மூன்றிலும் பொதுத்தமிழ்தான் பயன்படுகிறது. சில சில நடை வேறுபாடு (Stylistic differences) இருக்கும் . கருத்து வெளிப்பாட்டு உத்திகள் மாறுபடும். அவ்வளவுதான். அதுபோல் 'அறிவியல் தமிழ்' என்பதும் ஒரு கருத்தாடல் நடை வேறுபாடுதான். அதிலும் பொதுத்தமிழ்தான் பயன்படுகிறது. அனைத்திலும் பயன்படுகிற தமிழ் இலக்கணம் இன்றைய எழுத்துத்தமிழ் இலக்கணமே. அவற்றிற்கென்று தனி மொழி இலக்கணம் கிடையாது!
விரும்புக
கருத்துத் தெரிவி
பகிர்

புல்தரை? புற்றரை? புல்த்தரை?

 புல்தரை? புற்றரை? புல்த்தரை? - தமிழ் இலக்கணம், மொழியியல் ஆய்வாளர்கள் கவனத்திற்கு ! ( படிப்பதற்குச் சற்றுச் சோர்வாகத்தான் இருக்கும். எனவேதான் ஆய்வாளர்களுக்கு என்று கூறியுள்ளேன்.)

--------------------------------------------------------------------------
கணிதத்தில் ஒன்றிலிருந்து அதில் உள்ள மற்றொன்றை வருவிக்க அல்லது வெளிப்படுத்த derivation -ஐப் பயன்படுத்தும்போது, ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்லத் தெளிவான கணித விதிகள் இருக்கும். அதுபோன்றதுதான் மொழியிலக்கணமும். தமிழிலக்கணம் இவ்வாறுதான் அமைந்துள்ளது.
புல் + தரை --> புல்+ த் + தரை --> புற்தரை --> புற்றரை . புணர்ச்சி விதிகளின்படி இவ்வாறு வரும். ஆனால் தற்காலத்தமிழில் ''புல்தரை'' என்றே எழுதப்படுகிறது. ஆனால் . . . (1) 'புல்' என்ற பெயர்ச்சொல்லும் 'தரை' என்ற பெயர்ச்சொல்லும் இணைந்து தொகையாக மாறும்போது, இடையில் ஒற்று வரவேண்டும். அப்போது அது 'புல்த்தரை' என்று அமையும். (2) இதற்கு அடுத்த கட்டமாக, 'புற்தரை' ; (3) அதற்கு அடுத்த கட்டமாக 'ற்' தனக்கு அடுத்த 'த்' என்பதை 'ற்' என்று மாற்றும் - 'புற்றரை'.
இதை மொழியியலில் Reciprocal assimilation என்று அழைப்பார்கள். அதாவது முதலில் ஒற்று தோற்றம் (புல்த்தரை); அடுத்து, திரிதல் (புற்தரை); மூன்றாவதாக அடுத்து ஒரு திரிபு (புற்றரை).
ஆனால் தற்காலத்தமிழில் 'புற்றரை' என்று எழுதுவது கிடையாது. ஆனால் மேற்கண்ட திரிபுகள் நடைபெறாத நிலையில் . . . புல்த்தரை என்று எழுதினால்தான் பெயர்த்தொகையாக அமையும். (பால் + குடம் --> 'பாற்குடம்' அல்லது 'பால்க்குடம்' (நெல்லை தமிழில்) என்று அமையவேண்டும். அவ்வாறு இல்லாமல் 'பால்குடம்' என்று எழுதுவது சரி இல்லை.)
இரண்டு பெயர்ச்சொல்கள் இணைந்து தொகையாக மாறும்போது ஒற்று மிகவேண்டும். அது மிகுந்தபிறகு, நான் மேலே என் உரையில் கூறியபடி திரியலாம்; அல்லது திரியாமல் இருக்கலாம்; ஆனால் ஒற்று மிகுந்தால்தான் இது பெயர்த்தொகையாக அமையும். இதில் ஏதாவது ஒன்று நடைபெறவில்லையென்றால், பெயர்த்தொகை கிடைக்காது.
(1) ''புல் தரையில் வளர்ந்துள்ளது''
(2) ''மாடு புல்த்தரையில் (புற்றரையில்) படுத்துள்ளது''.
முதல் தொடரில் ''புல்'' எழுவாய். ''தரையில்'' என்பது பயனிலையில் அமைகிற வேற்றுமைத்தொடர்.
இரண்டாவது தொடரில் 'புல்த்தரை'' என்பது பயனிலையில் அமைகிற ஒரு வேற்றுமைத்தொடர். இதில் 'புல்' எழுவாய் இல்லை. 'மாடு' எழுவாய்.
மேற்குறிப்பிட்ட வேறுபாட்டை வெளிப்படுத்த உறுதியாக ஒற்று மிகவேண்டும். அதற்கு அடுத்து திரிவது திரியாதது வேறு ஒரு பிரச்சினை.
இங்கு ஒற்று வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது தொகை என்பதைச் சுட்டிக்காட்டத்தான் வருகிறது.
ஆகவே , அவ்வாறு இல்லாமல் ''மாடு புல் தரையில் படுத்துள்ளது'' என்று எழுதினால் , பொருண்மை மயக்கம் ஏற்படும். (1) தரையில் மாடு படுத்துள்ளதா (2) புல்த்தரையில் மாடு படுத்துள்ளதா? ''மாடு புல்'' என்பது 'ஆண் பெண்' (ஆணும் பெண்ணும்) என்ற உம்மைபோல 'மாடும் புல்லும்' என்று அமைந்துவிடும்.
இதுபோன்ற இடங்களில் கணினிக்குத் தமிழ் கற்பிக்கும்போது, கணினியானது பொருண்மை மயக்கம் இல்லாமல் மேற்குறிப்பிட்ட தொடர்களைப் புரிந்துகொள்வதற்கு ஒற்று உறுதியாகத் தேவை. மனிதர்களுக்கு உலக அறிவு (Pragmatic knowledge) இருப்பதால் ஒற்று இல்லையென்றாலும், இத்தொடர் அமைகிற மொழிச்சூழல், மொழிசாராப் புறச்சூழல் (linguistic context and nonlinguistic context) வைத்துக்கொண்டு, பொருண்மை மயக்கம் இல்லாமல் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அந்த அறிவு இல்லாத கணினிக்கு 'புல்த் தரை'' அல்லது ''புற்றரை'' என்றே தரவுகளைக் கொடுக்கவேண்டும். இது முழுக்க முழுக்க ஒரு கணித விதி.
தமிழ்க் கட்டமைப்பு அல்லது இலக்கணம் தெளிவான கணித விதிகள்போன்று இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
தமிழ், மொழியியல் மாணவர்கள் இதுபோன்று இலக்கணத்தை ஆராய்ந்து படித்தால் சிறப்பாக இருக்கும்.
விரும்புக
கருத்துத் தெரிவி
பகிர்

புதன், 10 ஜனவரி, 2024

நாள்களா? நாட்களா?

 

நாள் + கள் (பன்மைவிகுதி) என்பது நாள்கள் என்று அமையுமா அல்லது நாட்கள் என்று அமையுமா? - ஒரு விளக்கம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெயர்த்தொகைகளில் நடுவில் ஒற்று மிகும். ஏனைய இடங்களில் ஒற்று மிகாது. 'நாள்' 'கள்' இரண்டும் பெயர்ச்சொற்களாக அமைந்து, பெயர்த்தொகை உருவானால், தொகைப் புணர்ச்சி விதியின்படி ஒற்று இடையில் மிகுந்து, , நாள் + க் + கள் = நாள்க்க்ள் என்று அமையும்.

தமிழில் மெய்ம்மயக்க விதிகளில் முதல் மெய்யாக 'ய்' 'ர், 'ழ்' என்பது மட்டுமே அமையமுடியும். பிற மெய்கள் முதல் மெய்யாக வரமுடியாது. எ-கா. வாய்க்கால் (வாய்க்க்ஆல்) , பார்த்தான் (பார்த்த்ஆன்) , வாழ்த்து (வாழ்த்த்உ).

எனவே நாள்+க்+கள் ('நாள்க்க்அள்' ) என்பதில் 'ள்க்' என்பது 'ட்' என்று திரியும். எனவே 'நாட்கள்' என்ற பெயர்த்தொகை கிடைக்கிறது. இரண்டு பெயர்களுக்கும் இடையில் ஒற்று மிகுவது பெயர்த்தொகைக்கே உரிய புணர்ச்சி விதி ஆகும்.

இங்குப் பார்க்கவேண்டியது, 'ள்க்' என்று மெய்ம்மயக்கம் தமிழில் உண்டு - 'கொள்கை'. எனவே நமது எடுத்துக்காட்டில் 'ள்க்' என்பது 'ட்' என்று மாறுவதற்குக் காரணம், தொகை என்ற உறவைக் காட்டுவதற்கே ஆகும். அதேவேளையில் மூன்று மெய்மயக்கங்களில் முதல் மெய்யாக 'ள்' இருக்கமுடியாததால், 'ள்க்' இரண்டும் இணைந்து 'ட்' என்று திரிகிறது.

ஆனால் 'கள்' என்பது இங்குப் பன்மைவிகுதியாக இருந்தால் - அதாவது ஒரு பெயர்ச்சொல்லாக இல்லாமல் இருந்தால் - நடுவில் 'க்' ஒற்று மிகாது. எனவே நாள் + கள்' என்றே அமையும். எனவே இங்கு 'ள்' என்பது 'ட்' என்று திரியாது. ஏற்கனவே கூறியபடி தமிழ் மெய்ம்மயக்கங்களில் 'ள்க்' அனுமதிக்கப்படுகிறது. எனவே இங்கு எந்தவிதத் திரிதலுக்கும் இடம் இல்லை! 'நாள்கள்' என்றே அமையும்.

மூன்று மெய்ம்மயக்கங்களில் முதல் இரண்டு மெய்களும் இணைந்து கீழ்க்கணவாறு திரியும்.

ள் + வல்லினம் --> ட் ( கள் + குடம் --> கட்குடம்)

ண் + வல்லினம் --> ட் ( மண் + குடம் --> மட்குடம்)

ல் + வல்லினம் --> ற் ( கல் + பாறை --> கற்பாறை)

ன் + வல்லினம் --> ற் ( பொன் + காலம் --> பொற்காலம்)

இன்றைய தமிழில் மேற்கூறிய திரிதல்கள் இல்லாமலும் தொகைச் சொற்கள் அமைகின்றன.

கண்பார்வை, பெண்குணம், முன்கோபம், வான்கோழி, புல்தரை, பகல்தூக்கம் - இவற்றில் இரண்டு சொல்களுக்கும் இடையில் ஒற்று மிகவில்லை. ஆனால் ஒற்று மிகுந்தால் அதைத் தவறு என்றும் கூறமுடியாது. 'கட்பார்வை' என்று ஒருவர் எழுதினால் புணர்ச்சிவிதிப்படி சரிதான். இதுபற்றி மேலும் கருதிப்பார்க்கவேண்டும்.

மேலும் தமிழ் இலக்கண ஆய்வாளர்கள் சிலர் ஒரு பெயர்ச்சொல்லை அடுத்து 'கள்' உட்பட எந்த இலக்கண விகுதி வந்தாலும் ஒற்று மிகாது என்றும் கூறுகிறார்கள். தொல்காப்பியம்படி, புணர்ச்சி விதிகள் எல்லாம் இரண்டு சொல்களுக்கு இடையில்தானே ஒழிய, சொல்லுக்கும் விகுதிக்கும் இடையில் கிடையாது என்றும் கூறுகின்றனர். இதையும் கருதிப்பார்க்கவேண்டும்.

(மேற்கூறிய விதியை - மூன்று மெய்ம்மயக்கங்களில் - ய், ர், ல் தவிர , மற்ற இடங்களில் திரிதல் நடைபெறும் என்பதை எனக்குச் சுட்டிக்காட்டியவர் என் நண்பர் கணினி நிரலாளர் திரு. சு. சரவணன் அவர்கள். அவருக்கு நன்றி.)

நாள் + காட்டி என்று இரண்டுசொல்களையும் பெயர்ச்சொற்கள் என்றுகொண்டால் 'நாட்காட்டி' தான் சரி. மற்றொரு கருத்தும் உள்ளது. பெயருக்கும் வினைக்கும் இடையில் ஒற்று மிகாது. 'நாள் - காட்டு' --> நாள்காட்டு என்று வினை உருவாகி, அதன்பின்னர் '' என்ற பெயராக்கவிகுதியை எடுத்தால், 'நாள்காட்டி' என்றுதான் கூறவேண்டும் என்ற ஒரு கருத்தும் உள்ளது. தமிழில் '' என்பது வினைகளிலிருந்து பெயர்களை உருவாக்கும் விகுதி. படகு+ ஓட்டு --> படகோட்டு + இ --> படகோட்டி. நகம் + வெட்டு --> நகம்வெட்டு --> நக(ம்)வெட்டி.

அறம் + காவல் --> அறக்காவல். இங்கு 'அறம் ' 'காவல்' இரண்டும் பெயர்ச்சொல்கள்.

ஆனால் 'அறங்காவல்' என்ற சொல்லில் அறம் + கா --> அறங்கா என்பது வினை; பின்னர் இதில் 'அல்' என்ற தொழிற்பெயர் விகுதி இணைந்து 'அறங்காவல்' என்று அமைகிறது. இங்கு 'அறக்காவல்' என்று அமையவில்லை. அறங்காவல், அறங்காவலர் என்றுதான் கூறுகிறோம். அறம் + காவல் என்றால் அறக்காவல்; அறம் + காவலர் என்று கொண்டால் அறக்காவலர். ஆனால் இன்று நாம் பயன்படுத்துவது அறங்காவல், அறங்காவலர். இதையும் நண்பர்கள் கருதிப்பார்க்கலாம்.

ஆகவே, நண்பர் மாலன் அவர்கள் கூறுவதுபோல, நாள் + காட்டி என்று பெயர்தொகையாகப் பார்த்தால் நாட்காட்டி என்பதே சரி. ஆனால் நாள் + காட்டு என்று கொண்டு, பின்னர் '' பெயராக்கவிகுதியை இணைத்தால், 'நாள் + காட்டு --> நாள்காட்டு + இ --> நாள்காட்டி. இங்கு திரிதல் கூடாது. இதுபோன்ற சொல்கள் நிறைய இன்று இருக்கின்றன - படகோட்டி, நகவெட்டி, தேரோட்டி, காரோட்டி, மரங்கொத்தி. ஆகவே அடிப்படை வடிவங்கள் என்ன, அவற்றின் இலக்கண வகைப்பாடுகள் என்ன என்று தெரிந்தால்தான் புணர்ச்சியில் தவறு ஏற்படாது.

மரங்கொத்தியா, மரக் கொத்தியா - இரண்டுமே சரிதான், அடிப்படை வடிவங்களை நாம் எப்படி எடுக்கிறோம் என்பதைப் பொறுத்து!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India