திங்கள், 16 ஜனவரி, 2023

வன்தொடர்க் குற்றியலுகரத்தில் புணர்ச்சி . .

 வன்தொடர்க் குற்றியலுகரத்தில் புணர்ச்சி . . . 

திரு இராமசாமி செல்வராசு

-------------------------------------------

ஐயா, ஒரு தெளிவுக்காக எழுதுகிறேன்/கேட்கிறேன். மேலே (2) (3) எனக் குறிப்பிட்ட பத்திகளில் பெயரை அடுத்து வினை வந்தால் புணர்ச்சி விதிகளின்படி ஒற்று மிகாது எனக் குறித்திருக்கிறீர்கள். அதை மேலும் நுட்பமாகச் சொல்லவேண்டுமானால், இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகாது என்னும் விதியைச் சொல்லலாமா? இதுதவிர வேறு ஏதேனும் விதியைச் சுட்டுகிறீர்களா?

வன்தொடர்க்குற்றியலுகரங்கள் குறித்த விதிகள் (ஒற்று மிகும்) முதன்மையானவை என்பதோடு ஒப்புகிறேன். பல இடங்களில் அவ்வாறே எழுதிவருகிறேன். பாட்டுப்பாடு, கருத்துக்கூறு... இப்படியாக.

ந. தெய்வ சுந்தரம்

-------------------------------

ஆமாம் நண்பரே. ''கருத்து கேள்'' என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது. 'கருத்து' என்ற பெயர்ச்சொல்லுக்குப்பிறகு 'கேள்' என்ற செயப்பாட்டு வினைச்சொல் நிற்கிறது. 'கருத்தைக் கேள்' என்பதுதானே அதன் பொருள். 'கருத்து பேசுகிறது'' என்ற தொடரில் 'கருத்து' என்பது எழுவாயாக நிற்பதால், ஒற்று மிகாது.

ஆகவே இந்த இடத்தில் (எழுவாய் - பயனிலை வினை ) நிலைமொழி வன்தொடர்க்குற்றியலுகரமாக இருந்தாலும், வருமொழியானது வல்லினத்தில் தொடங்கினாலும் ஒற்று மிகாது. அத்துடன் இரண்டாம் வேற்றுமைத்தொகை உறவு இருந்தால்தான் ஒற்று மிகும். ஆனால் 'கருத்து பேசுகிறது' என்பதில் அந்த உறவு இல்லை. எனவே ஒற்று மிகாது.

எனவே தாங்கள் கூறியதுபோல . . . ''(1) நிலைமொழியானது வன்தொடர்க் குற்றியலுகரத்தில் அமைந்து, (2) நிலைமொழி வல்லினத்தில் தொடங்குவதால்மட்டுமே ஒற்று மிகும் என்று கூறமுடியாது; அதனுடன் மற்றும் ஒரு வரையறையையும் முன்வைக்கவேண்டும். அதாவது (3) இரண்டாம் வேற்றுமைத்தொகை என்ற உறவு நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில் அமையவேண்டும்''.

ஆனால் 'தீ பிடித்தது' , 'பூ பூத்தது' என்ற தொடரில் எழுவாய் ஓரசை நெடிலாக இருந்தால் , ஒற்று மிகுந்து வந்தாலும் தவறு இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது 'தீ- பிடி' , 'பூ-பூ' தொடர்கள் இரண்டாம் வேற்றுமைத் தொடர்கள் இல்லை.


வாழ்த்துகள் - வாழ்த்துக்கள் ?

 

வாழ்த்துகள் - வாழ்த்துக்கள் ?

------------------------------------------------------------------------------------------------------------------

பேராசிரியர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள்

----------------------------------------------------------------------------

வாழ்த்துகள்  அல்லது வாழ்த்துக்கள் - எது சரியானது?

ந. தெய்வ சுந்தரம்

-----------------------------------------------------------------------------------------

இதுபற்றி எனது கருத்தை ஏற்கனவே பல இடங்களில் தெரிவித்துள்ளேன். இருப்பினும் பேராசிரியர் கேட்பதால் மீண்டும் அதை எழுதுகிறேன். (1) பழந்தமிழ் இலக்கணங்களின்படி, செய்து வாய்பாட்டு வினையெச்சங்களில் - வன்தொடர்க்குற்றியலுகரமாக அமைகிற வினையெச்சங்களையடுத்து (படித்துப் பார்த்தான், கேட்டுப் பார் ) வல்லினங்களில் தொடங்கும் சொற்கள் வந்தால், ஒற்று மிகும்.
(2) ஆனால் கருத்து, படிப்பு, வாழ்த்து போன்ற வன்தொடர்க்குற்றியலுகரங்களில் அமைகிற பெயர்ச்சொற்களில் ஒற்று மிகாது. 'கருத்து கேள், வாழ்த்து கூறு'
(3) ஆனால் புணர்ச்சியில் எழுத்து, சொல், தொடர் அடிப்படைகளில் அமைகிற புணர்ச்சி விதிகளுக்குக் கட்டுப்படாமல் - அல்லது அவற்றைவிட உயர்நிலையில் அமைகிற ஒரு விதியாக வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் நிலைமொழியாக அமைந்து, அவற்றையடுத்து வல்லினங்களில் அமைகிற சொற்களோ அல்லது விகுதிகளோ வந்தால் ஒற்று மிகுகிறது. கருத்து கேள், வாழ்த்து கூறு போன்ற சொற்கள் பெயரையடுத்து வினைகள் வருகின்றன. புணர்ச்சி விதிகளின்படி இங்கு ஒற்று மிகாது. ஆனால் மிகுந்துதான் வருகிறது - ''கருத்துக் கேள், வாழ்த்துக் கூறு'' ;
''ஆட்டுக்கல், ஒட்டுப்பலகை'' போன்ற வினைத்தொகைகளிலும்கூட ஒற்று மிகுகிறது. வினைத்தொகையில் பொதுவாக ஒற்று மிகாது.
எனவே வன்தொடர்க்குற்றியலுகர வினையெச்சங்களுக்கு ஒப்பாக வன்தொடர்க்குற்றியலகரத்தை இறுதியாகக்கொண்ட பெயர்ச்சொற்கள் அமையும்போதும் அவற்றையடுத்து வல்லினங்களில் தொடங்கும் சொற்கள் வந்தால் ஒற்று மிகுகிறது. இதை ஒப்புமையாக்கம் - by analogy - அடிப்படையில் என்று கூறலாம்.
இந்த விளக்கத்தைவிட மற்றொரு விளக்கத்தில் எனக்கு உட்ன்பாடு. அதாவது புணர்ச்சிவிதிகளைத் தர அடிப்படையில் - ranking - வரிசைப்படுத்தினால் (Optimality Theory என்ற இன்றைய மொழியியல் கோட்பாட்டின் அடிப்படையில்) , மற்ற எல்லா விதிகளையும்விட வன்தொடர்க்குற்றியலுகரச் சொற்கள் - அவை வினையாகவோ, பெயராகவோ என்னவாக இருந்தாலும் - அவற்றையடுத்து வல்லினங்களில் தொடங்கும் சொற்கள் அமைந்தால், ஒற்று மிகும்.
இந்த ஒற்று மிகும் விதியானது சொல் - சொல் என்பதற்குமட்டுமல்லாமல், சொல் + விகுதிக்கும் செயல்படுகிறது. ஆனால் புணர்ச்சி என்பது சொல் + சொல்லுக்கே பழந்தமிழில் பொருந்தும் என்று கூறுவார்கள். எனவே 'கள்' பன்மை விகுதி என்பதால் ஒற்று மிகாது என்றும் கூறுவார்கள். ஆனால் இன்றைய தமிழில் புணர்ச்சி விதிகள் சொல் + விகுதிகளிலும் செயல்படுகின்றன. எனவே, வாழ்த்து + கள் - > வாழ்த்துக்கள் என்று அமைந்தாலும் தவறு என்று கொள்ளமுடியாது.
ஒரு செய்தியை மனதில் கொள்ளவேண்டும். ஒருவர் தனது எழுத்தில் ஒரு இடத்தில் ஒற்று இட்டுவிட்டு, அடுத்த இடத்தில் ஒற்று இடாமல் இருக்கக்கூடாது. பழந்தமிழ் இலக்கண விதியின் அடிப்படையில் வாழ்த்துகள் ( பன்மை விகுதியை இணைக்கலாம் என்றால்) என்று எழுதலாம்; அல்லது இன்றைய தமிழின் வளர்ச்சியின் அடிப்படையில் வாழ்த்துக்கள் என்று எழுதலாம். இதில் சரி, தவறைத் தீர்மானிப்பதில் பழந்தமிழா இன்றைய தமிழா என்ற அடிப்படை தேவைப்படுகிறது.
இதற்குமேல் இதில் நான் ''குழப்பத்'' தயார் இல்லை!

கணினித்தமிழில் ஒரு சிக்கல் !

கணினித்தமிழில் ஒரு சிக்கல் !

------------------------------------------------------------------------------------------------------------------- 

சொற்பிழை திருத்துவதற்கான மென்பொருள் கருவியை உருவாக்கும்போது இதுபோன்ற பல சிக்கல்கள் நீடிக்கின்றன. மேலும் அயல்மொழிச்சொற்களுக்குப்பதிலாகத் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவதற்கான கருவியை உருவாக்கும்போது வருகிற ஒரு பெரிய சிக்கலே ... ஒரு சொல் தமிழ்ச்சொல்லா இல்லை அயல்மொழிச் சொல்லா என்பதை முடிவு செய்வது ஆகும். (1) ஒரு குறிப்பிட்ட சொல் தமிழ்ச்சொல்தான் என்கின்றனர் அறிஞர்கள் சிலர் !( 'சில அறிஞர்கள்' ???) ! (2) 'இல்லை, இல்லை. வடமொழிச்சொல்தான் என்றகின்றனர் வேறு சிலர்! (3) இதற்கு அப்பாற்பட்டு அன்புக்குரிய இராமகி ஐயா போன்றவர்கள் ' இது தமிழ்ச்சொல்தான் . . . ஆனால் இதை வடமொழிக்காரர்கள் கடன் பெற்றுக்கொண்டு சில மாற்றங்களைச் செய்துள்ளார்கள். பின்னர் இந்த மாற்றத்துடன் அந்தச் சொல் தமிழுக்குத் திரும்பிவரும்போது வடமொழிச்சொல்போல் தோற்றமளிக்கிறது. உண்மையில் அது தமிழ்ச்சொல்தான் ( வேஷ்டி - வேட்டி) '' என்கின்றார்கள். சொற்பிறப்பியல் துறையில் (etymology) அறிவில்லாத என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சிக்கல்!

--------------------------------------------------------------------------------------------------------

தமிழ் இலக்கணத்தில் தொழிற்பெயர் (verbal noun) , வினையாலணையும்பெயர் (participial noun / conjugated noun) என்ற வகைப்பாடு நீடிப்பது உண்மையில் தமிழ் இலக்கணத்தின் சிறப்பை எடுத்துக்காட்டிநிற்கிறது. இவை இரண்டும் முழுப்பெயரும் இல்லை; முழு வினையும் இல்லை; இரண்டின் தன்மைகளையும் பெற்று நிற்கிற ஒரு இலக்கணவகைப்பாடு! (+ பெயர் + வினை ' -'அர்த்தநாரிஸ்வரர்' !!!)
மேலும் 'படித்தல்' என்ற தொழிற்பெயர் காலம் காட்டாது; ஆனால் இன்றைய வளர்ச்சிகளான 'படிக்கிறது' 'படித்தது' 'படிப்பது' என்ற தொழிற்பெயர்கள் காலம் காட்டிநிற்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------

இன்றைய தமிழில் 'வாழ்த்து' 'பாராட்டு' போன்றவை பன்மை விகுதிகளை ஏற்றே பயன்படுத்தப்பட்டு வருகின்றன். நானும் 
வாழ்த்துக்கள்
, பாராட்டுக்கள், நிலைபாடுகள் என்றே எழுதிவந்தேன். எனக்கும் இதில் தெளிவான ''நிலைபாடு'' எடுக்கமுடியவில்லை.
ஆனால் தாங்கள் கூறுவதுபோல 'வாழ்த்து' 'பாராட்டு' என்று எழுதும்போது மனநிறைவு இல்லை! '
வாழ்த்துக்கள்
' 'பாராட்டுக்கள்' என்று எழுதினால்தான் நிறைவாக இருக்கிறது.
இதுபோன்றவற்றில்தான் ஒரு தரப்படுத்தம் (standardization) வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்திவருகிறேன்.
நான் ஒரு 'தமிழ் வாத்தியார்' என்பதால் இலக்கணக் கருத்துக்களைப்பற்றி உரையாடும்போது, மிகுந்த 'கவனத்துடன்' இருக்கவேண்டியுள்ளது. இதுதான் உண்மை!
இன்றைக்குப் (பெரும்பான்மை) தமிழ்மக்கள் பயன்படுத்துகின்ற இலக்கணமா? தொல்காப்பியர், நன்னூலார் போன்ற பழந்தமிழ் இலக்கண ஆசிரியர்கள் பின்பற்றிய இலக்கணமா? எதைப் பின்பற்றுவது?

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

தொழிற்பெயர்களும் முழுப்பெயர்களும் ஒன்றுதானா?

தொழிற்பெயர்களும் முழுப்பெயர்களும் ஒன்றுதானா?

-------------------------------------------------------------------------------------------------------------------

 ஐயா, ஒரு ஐயம்! ஒரு சொல் பெயர்ச்சொல்லாக இருந்தால் அதற்குப்பின்னர் வேற்றுமை விகுதிகளை இணைக்கலாம்; அதற்கு முன்னர் பெயரடையையும் நிறுத்தலாம். எ-கா. 'அழகான வீட்டை' . பன்மை விகுதியை இணைக்கலாம். - 'வீடுகள்'.

வினைச்சொல்லாக இருந்தால் அதற்குப் பின்னர் காலவிகுதிகளை இணைக்கலாம்; அதற்கு முன்னர் வினையடையையும் நிறுத்தலாம்.

எ-கா. 'அழகாகக் கட்டியுள்ளான்'.

வினைச்சொல்லிருந்து முழுப்பெயர் உருவாகலாம். 'படி' -> படிப்பு.

ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் இன்னொரு வகை இருக்கிறது. 'படித்தல்' (இன்றைய தமிழில் படிப்பது, படித்தது, படிப்பது ஆகியவையும் அடங்கும். ) இவற்றுடன் பின்னர் வேற்றுமை விகுதிகளை இணைக்கலாம்; அதனால் பெயர்ச்சொல் தன்மை பெறுகிறது. முன்னர் வினையடைகளை இணைக்கலாம். எனவே வினைத்தன்மை பெறுகிறது.

ஆனால் இவற்றுடன் தாங்கள் கூறியுள்ளதுபோல, பன்மை விகுதியை இணைக்கமுடியது - ''*படித்தல்கள்'; ( எனவே இச்சொற்கள் பெயருக்குரிய பண்புகளையும் பெறுகிறது; வினைக்கு உள்ள பண்புகளையும் பெறுகிறது. இவற்றிக்கு முன்னர் பெயரடைகளை இடமுடியாது. 'வேகமாக படித்தல்' என்று கூறலாம்; ஆனால் 'வேகமான படித்தல்' என்பது சரியில்லைபோல் தோன்றுகிறது. வினையாலணையும் பெயர்களுக்கும் இப்பண்புகள் உண்டு. 'வேகமாக வந்தவனை'.

'படிப்பு' என்பதில் வேற்றுமை விகுதிகளையும் இணைக்கலாம்; முன்னர் பெயரடைகளையும் நிறுத்தலாம் ('வேகமான படிப்பை'). 'படித்தல்' என்பதில் வேற்றுமை விகுதிகளையும் இணைக்கலாம். ஆனால் முன்னர் வினையடைகள் வரும் ('வேகமாகப் படித்தலை' 'வேகமாகப் படிப்பதை').

ஆனால் 'படிப்பு' என்று முழுமையாகப் பெயராக அமைந்த ஒன்றையும் 'படித்தல்' என்ற பெயருக்கும் வினைக்கும் இடையில் உள்ள தொழிற்பெயரையும் ஒன்றாகப் பார்க்க இயலாது எனக் கருதுகிறேன். 'படிப்பு' 'வாழ்த்து', 'பாராட்டு' 'மகிழ்ச்சி' ஆகியவற்றை முழுப்பெயராகவே கொள்ளவேண்டும் என்பது எனது கருத்து. வேற்றுமை விகுதி, பன்மை விகுதி ஆகியவற்றை ஏற்கும்; தனக்கு முன்னர் பெயரடைகளை நிறுத்திக்கொள்ளலாம்.

இவற்றைத் தொழிற்பெயர்கள் என்று அழைக்கக்கூடாது எனக் கருதுகிறேன். பெயர், வினை ஆகிய இரண்டின் பண்புகளையும் இவை பெற்றிருப்பதால், இவற்றைத் தனிவகைகளாக - தொழிற்பெயர், வினையாலணையும் பெயர்' என்று - இலக்கணம் கொள்கிறதோ என்ற ஐயம் எனக்கு.

இருப்பினும் தாங்கள் எதோ ஒரு அடிப்படையில்தான் இவற்றைத் தொழிற்பெயர்கள் என்று அழைத்துள்ளீர்கள் எனக் கருதுகிறேன். அப்படியென்றால் 'படிப்பு' என்பதும் 'படித்தல்' என்பதும் ஒன்றா? அவற்றிற்கு இடையில் வேறுபாடு இல்லையா? தொழிலை இவை சுட்டிக்காட்டுவதால்மட்டுமே இவற்றைத் தொழிற்பெயர் என்று கருதுகிறீர்களா? அவ்வாறு கருதலாமா? நீண்ட நாள்களாக எனக்கு இதில் ஐயம் . தங்களுடைய கருத்தை எதிர்பார்க்கிறேன்.

ஒரு சொல் ஏற்கும் இலக்கணவிகுதிகள், அச்சொல்லுக்கு முன் வருகிற சொற்கள் ஆகியவைதான் அந்தக் குறிப்பிட்ட சொல்லின் இலக்கணவகைப்பாட்டைத் (பெயரா, வினையா, பெயரெச்சமாக, வினையெச்சமா ?) தீர்மானிக்கிறது என்று கருதலாமா?

மேலும் பருண்மையான (concrete nouns) பொருள்களைக் குறிக்கும் பெயர்ச்சொற்களோடு பன்மை விகுதி இணைகிறது; ஆனால் நமது செயல்கள், பண்புகள் ஆகியவற்றைக் குறிக்கிற பெயர்ச்சொற்களோடு (abstract nouns) பொதுவாகப் பன்மை விகுதி சேராது என்று கூறலாமா?

(ஆங்கிலத்தில் "gerund" என்அழைக்கப்படுகிற இலக்கணவகைப்பாட்டை தமிழ்த் தொழிற்பெயருக்கு இணையான ஒரு கலைச்சொல்லாகப் பார்க்கலாம் - walking, eating , killing போன்றவை. " He is walking - Walking is good". முதல் எடுத்துக்காட்டில் walking வினையெச்சம். இரண்டாவது எடுத்துக்காட்டில் gerund. ஆனால் இதுபற்றி மேலும் ஆராயவேண்டும்.)

-----------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் இலக்கணத்தில் தொழிற்பெயர் (verbal noun) , வினையாலணையும்பெயர் (participial noun / conjugated noun) என்ற வகைப்பாடு நீடிப்பது உண்மையில் தமிழ் இலக்கணத்தின் சிறப்பை எடுத்துக்காட்டிநிற்கிறது. இவை இரண்டும் முழுப்பெயரும் இல்லை; முழு வினையும் இல்லை; இரண்டின் தன்மைகளையும் பெற்று நிற்கிற ஒரு இலக்கணவகைப்பாடு! (+ பெயர் + வினை ' -'அர்த்தநாரிஸ்வரர்' !!!)

மேலும் 'படித்தல்' என்ற தொழிற்பெயர் காலம் காட்டாது; ஆனால் இன்றைய வளர்ச்சிகளான 'படிக்கிறது' 'படித்தது' 'படிப்பது' என்ற தொழிற்பெயர்கள் காலம் காட்டிநிற்கும்.

--------------------------------------------------------------------------------------------------------------



ஒவ்வொரு சொல்லுக்கும்பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது!

 ஒவ்வொரு சொல்லுக்கும்பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது!

--------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு ! தமிழகம் !
தற்போதைய தமிழக அரசியல் சூழலில் . . .
ஒருவரைப் பார்த்து . . . ''நீங்கள் 'தமிழ்நாடா' அல்லது 'தமிழகமா' என்று கேட்டாலே போதும் . . . அவர் எந்த அரசியல் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்!
இனி . . . தமிழ்நாட்டில் இந்த இரண்டு சொற்களும் மரபுத்தொடர்கள்போன்று அமைந்துவிடும்!
'அவர் என்ன பெரிய அரிச்சந்திரனா?'
'அவள் என்ன பெரிய சீதையா?'
'அவர் என்ன பெரிய ராமனா?'
'அவள் என்ன பெரிய சீதையா?'
'அங்கே மதுரையா, சிதம்பரமா?'
'அவர் என்ன தமிழ்நாடா?'
'அவர் என்ன தமிழகமா?'
இனி ஒவ்வொருவரும் மிகக் கவனமாக இத்தொடர்களைப் பயன்படுத்துவார்கள்! எதேச்சையாக ஒருவர் இந்த இரண்டில் ஒன்றைப் பயன்படுத்தினாலும் . . . அவரைப்பற்றி மற்றவர்கள் 'முடிவுக்கு' வந்துவிடுவார்கள்! சிக்கலாக ஆகிவிடும்!
கவனம் தேவை! இவற்றை வெறும் 'சொற்கள்தானே' என்று நினைத்துவிடமுடியாது! பெரிய 'அரசியலே' இவற்றின்பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறது!

தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் மேலாண்மையை எவ்வாறு நிலைநாட்டுவது?

 தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் மேலாண்மையை எவ்வாறு நிலைநாட்டுவது?

--------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் அனைத்து நிறுவனங்களும் அங்காடிகளும் தங்களது பெயர்ப்பலகையில் பெயர்களைத் தமிழில் பெரிய எழுத்தில் எழுதவேண்டும்; 

அதற்கு அடுத்த நிலையில்தான் ஆங்கிலமோ பிறமொழிகளோ இடம்பெறவேண்டும் என்று தமிழ்நாட்டில் சட்டம் இருப்பதுபோல ...

அவற்றின் உள்ளேயும் இடம்பெறுகின்ற பெயர்ப்பலகைகளில் தமிழ் முதல் இடத்தைப்பெறவேண்டும்; அதற்குப்பின்னர் மற்ற மொழிகள் இடம்பெறவேண்டும் என்று சட்டம் இயற்றப்படவேண்டும். மீறுகின்றவற்றிற்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.

மேலும் தமிழுக்கு உரிய முன்னுரிமை கொடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படலாம்.

இவ்வாறுதான் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என்பதை நிறுவவேண்டும். பயிற்றுமொழி, வணிகமொழி, நிர்வாகமொழி, வழிபாட்டுமொழி என்று பல முனைகளில் தமிழ்மொழி மேலாண்மை பெறவேண்டும். இதற்குத் தமிழ்நாடு அரசே தேவையான சட்டங்களை நிறைவேற்றலாம். இதற்கு எந்தவகையிலும் ஒன்றிய அரசு தடையாக அமையமுடியாது. 

ஒன்றிய அரசு அலுவலகங்கள், பிற நிறுவனங்களில் வேண்டுமென்றால் இந்திமொழியோ ஆங்கிலமொழியோ இடம்பெறவேண்டும் என்று கூறலாம். அவ்வளவுதான்! அதனால் நமக்கோ தமிழுக்கோ சிக்கல் இல்லை! ஆனால் அங்கேயும் தமிழ்மொழிக்குத்தான் முதலிடம் அளிக்கப்படவேண்டும். தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழ்மொழியைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறமுடியாது. அவ்வாறு கூறினால், அதை எதிர்த்துப் போராடி, தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்டலாம்.

இவைபோன்ற செயல்பாடுகள்தான் தமிழின் மேலாண்மையை . . . தமிழ் இனத்தின் அடையாளமான தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டி நிற்கும்.

இதுவே தமிழ்மேம்பாட்டுத்திட்டத்தில் முதலிடம் பெறவேண்டிய செயல்பாடுகளாகும்!

தமிழர்கள் தாமாகவே முன்வந்து தமிழ்மொழி மேலாண்மைக்குத் தேவையானவற்றைச் செய்யவேண்டும் என்பது உண்மைதான்! ஆனாலும் தமிழ்நாடு அரசாங்கமும் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மக்களுக்குத் தமிழ் போய்ச்சேரவேண்டும்! அதுதான் தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் நாம் அளிக்கும் உண்மையான விருது ஆகும்! தமிழறிஞர்களுக்குச் சிலைகள், விருதுகள், பண உதவி போன்றவையெல்லாம் தேவைதான்! வரவேற்கப்படவேண்டியதுதான்! நான் மறுக்கவில்லை! ஆனால் அவையெல்லாம் அதற்கு அடுத்த கட்டச் செயல்பாடுகளாகத்தான் இருக்கவேண்டும என்பது எனது கருத்து.

------------------------------------------------------------------------------------------------------------

இதையெல்லாம் எவ்வாறு மாற்றியமைப்பது? தமிழர்கள் தாமாகவே முன்வந்து இதைச் செய்யவேண்டும் என்பது உண்மைதான்! ஆனாலும் தமிழ்நாடு அரசாங்கமும் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மக்களுக்குத் தமிழ் போய்ச்சேரவேண்டும்! அதுதான் தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் நாம் அளிக்கும் உண்மையான விருது ஆகும்! தமிழறிஞர்களுக்குச் சிலைகள், விருதுகள், பண உதவி போன்றவையெல்லாம் அதற்கு அடுத்த கட்டச் செயல்பாடுகளாகத்தான் இருக்கவேண்டும என்பது எனது கருத்து.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

''காற்று அடித்து மணி ஒலிக்கும்'' என்றோ அல்லது ''மேசையின்மீது படிந்துள்ள தூசி காற்றடித்து விலகும்'' என்றோ நினைத்துக்கொண்டு நாம் சும்மா உட்காரமாட்டோம் அல்லவா? திட்டமிட்டுத் தமிழ் மேம்பாட்டுத் திட்டங்கள் இங்குச் செயல்படுத்தப்படவேண்டும். ஒருவரின் உள்ளார்ந்த உடம்பு உறுப்புக்கள் நலமுடன் இருக்கவேண்டும்! அதற்குப்பிறகுதான் உடலின் வெளித்தோற்றத்தை அழகுபடுத்தும் செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதுவும் தேவைதான்! ஆனால் உள்ளார்ந்த உடல்நலமே அடிப்படை என்பதை நினைவில்கொள்ளவேண்டும். விழாக்கள், விருதுகள் தமிழுக்கு நாம் அளிக்கிற முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன என்பதில் ஐயம் இல்லை! ஆனால் அதற்கும்மேல் தமிழ்மொழியின் உள்ளுறுப்புக்கள் - அகரமுதலிகள், இலக்கண உருவாக்கங்கள், கலைச்சொல்லாக்கங்கள், தரப்படுத்தங்கள், கணினித்தமிழ் போன்றவை - தேவையான செழுமையுடன் இருக்கவேண்டும் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இது தற்போது எதிர்பார்க்கிற அளவுக்கு இல்லை என்பதே உண்மை!


காய்கனிக் கடையில் ஆங்கிலம் . . . ஆங்கிலம் மட்டுமே! தமிழுக்கு இடம் இல்லை!

 காய்கனிக் கடையில் ஆங்கிலம் . . . ஆங்கிலம் மட்டுமே! தமிழுக்கு இடம் இல்லை! 

------------------------------------------------------------------------------------------------------------------

அடையாறில் உள்ள ஒரு காய்கனிக்கடையில் - ''பழமுதிர்ச்சோலையில்'' - சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு இரண்டையும் வாங்குவதற்காகச் சென்றேன். பொதுவாக, இந்த இரண்டு கிழங்குகளும் சென்னையில் அவ்வளவாகத் தெரியாது. பொங்கலையொட்டிச் சில கடைகளில் கிடைக்கிறது.

இந்தக் கிழங்குகளைத் தேடும்போது, சரியாக அடையாளம் காணமுடியவில்லை. அளவுத் தோற்றம் குழப்பத்தைக் கொடுத்தது! அவற்றின் மேல் உள்ள பெயர்ப்பலகைகளைப் பார்த்தால், பெயர்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. எனக்கு அவற்றின் ஆங்கிலப்பெயர்கள் தெரியாது. என்ன செய்வது?

பற்றுச்சீட்டு போடுகிற பெண்மணியிடம் கேட்டேன். அவர் இதுதான் சிறுகிழங்கு, இதுதான் சேனைக்கிழங்கு என்று சொன்னார்கள். 

எனவே காய்கனிகளின் ஆங்கிலப் பெயர்கள் தெரியாமல் . . . தமிழ்நாட்டில் ... தமிழ் உணர்வு . . . தமிழின உணர்வு மிகுந்த தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரியாமல் நமக்குத் தேவையான சாதாரணப் பொருள்களைக்கூட வாங்கமுடியாது! தாய்மொழி உணர்வு வாழ்க! 

அதற்கு ஒரே வழி ... ஆங்கிலப்பெயர்கள் தெரியாத என்னைப் போன்றவர்கள் சிறுகடைகளை நோக்கிச் செல்லவேண்டும் . . . பழமுதிர்ச்சோலைகளுக்குப் போகக்கூடாது!

அல்லது லிப்கோ அகராதியில் இறுதியில் பொருள்களின் ஆங்கிலப் பெயர்கள் பின்னிணைப்பாகக் கொடுத்திருப்பார்கள்! அதைப் படித்துவிட்டு . . . தேர்வு எழுதிவிட்டுச் செல்லவேண்டும். பல்பொருள் அங்காடிகளிலும் ('சூப்பர் மார்க்கெட்')

இதே சிக்கல்! கடுகு, கொத்தமல்லி, சீரகம், பூண்டு, காயம் ..... இவை போன்ற அனைத்துக்கும் ஆங்கிலப் பெயர்களைத் தெரிந்துகொண்டுதான் கடைகளுக்குச் செல்லவேண்டிய ஒரு ''தமிழ் உணர்வுச்'' சூழல் இங்கே!

--------------------------------------------------------------------------------------------------------------------------

இருமொழி இருந்தால்கூட பரவாயில்லை. ஆனால் ஆங்கிலம்மட்டுமே இருக்கிறது. அடுத்து, நான் கூறியது பற்றுச்சீட்டு போடும் இடம் இல்லை. காய்கள் இருக்கிற இடம். என்ன காய் என்று விளக்குகிற இடம். எனவே பார்கோட் சிக்கல் இல்லை இது.

-------------------------------------------------------------------------------------------------

அடுத்து, ஆங்கிலம் என்ன, வேறு எந்த மொழியை வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளட்டும். ஆனால் பொருள்கள் தமிழில் எழுதப்படவேண்டும். ஒன்று இது தமிழ்நாடு. இரண்டாவது கடைகளுக்கு வரும் மக்கள் பெரும்பாலானோர் தமிழ் மக்கள். எனவே தமிழ் கட்டாயம் முதலிடத்தில் இருக்கவேண்டும். அதுவே என் கோரிக்கை. இது மொழி வெறி இல்லை. பயன்பாட்டு நோக்கிலும், தமிழ் இங்குத் தாய்மொழி என்ற அடிப்படையிலும் கூறுகிறேன்.

------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் அனைத்து நிறுவனங்களும் அங்காடிகளும் தங்களது பெயர்ப்பலகையில் பெயர்களைத் தமிழில் பெரிய எழுத்தில் எழுதவேண்டும்; அதற்கு அடுத்த நிலையில்தான் ஆங்கிலமோ பிறமொழிகளோ இடம்பெறவேண்டும் என்று தமிழ்நாட்டில் சட்டம் இருப்பதுபோல ...

அவற்றின் உள்ளேயும் இடம்பெறுகின்ற பெயர்ப்பலகைகளில் தமிழ் முதல் இடத்தைப்பெறவேண்டும்; அதற்குப்பின்னர் மற்ற மொழிகள் இடம்பெறவேண்டும் என்று சட்டம் இயற்றப்படவேண்டும். மீறுகின்றவற்றிற்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.

மேலும் தமிழுக்கு உரிய முன்னுரிமை கொடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படலாம்.

இவ்வாறுதான் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என்பதை நிறுவவேண்டும். பயிற்றுமொழி, வணிகமொழி, நிர்வாகமொழி என்று பல முனைகளில் தமிழ்மொழி மேலாண்மை பெறவேண்டும். இதற்குத் தமிழ்நாடு அரசே தேவையான சட்டங்களை நிறைவேற்றலாம். இதற்கு எந்தவகையிலும் ஒன்றிய அரசு தடையாக அமையமுடியாது. ஒன்றிய அரசு அலுவலகங்கள், பிற நிறுவனங்களில் வேண்டுமென்றால் இந்திமொழியோ ஆங்கிலமொழியோ இடம்பெறவேண்டும் என்று கூறலாம். அவ்வளவுதான்! அதனால் நமக்கோ தமிழுக்கோ சிக்கல் இல்லை! தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழ்மொழியைப் பயன்படுத்தக்கூடாது என்று கூறமுடியாது. அவ்வாறு கூறினால், அதை எதிர்த்துப் போராடி, தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்டலாம்.

இவைபோன்ற செயல்பாடுகள்தான் தமிழின் மேலாண்மையை . . . தமிழ் இனத்தின் அடையாளமான தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டி நிற்கும்.

இதுவே தமிழ்மேம்பாட்டுத்திட்டத்தில் முதலிடம் பெறவேண்டிய செயல்பாடுகளாகும்!

---------------------------------------------------------------------------------------------------------------------------




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India