திங்கள், 26 டிசம்பர், 2022

கருத்தாடலில் (Communication - Discourse) மனிதமூளையின் இரண்டு புலங்கள்

 

கருத்தாடலில் (Communication - Discourse) மனிதமூளையின் இரண்டு புலங்கள் . . .

---------------------------------------------------------------------------------------------------------------------------

''நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?''

''நான் என்ன சொல்லவருகிறேன் என்பது தெரியுதா?'"

''காதில் ஏறுகிறதா''

''இந்தக் காதில் வாங்கி, அந்தக் காதிலே விட்டுவிடாதே''

''நான் சொல்வதைப்பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்''

''நான் சொல்வதைக் கொஞ்சம் அசைபோட்டுப் பாருங்கள்''

''நான் சொல்லவந்தது வேறு; நீங்கள் அதைப் புரிந்துகொண்டது வேறு''

மேற்கண்டவைபோன்ற தொடர்களை நாம் அடிக்கடிப் பயன்படுத்துகிறோம்!

மொழி என்பது கருத்தாடல்களின் ஒரு முக்கியப் பகுதி! இதில் மொழிப்புலன் (Language Domain) முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் மொழியுடன் நாம் பயன்படுத்துகிற மொழி சாராக்கூறுகளான ( non-verbal means) படம் , அட்டவணை, முகத் தோற்றம், குரல் ஏற்ற இறக்கம், உடல்மொழி போன்ற பலவற்றைப் பயன்படுத்துகிறோம்.

அத்தோடு நமது மூளையில் அமைந்துள்ள ''அறிவுப் புலனும்'' (Cognition Domain - Knowledge Domain) நமது கருத்தாடலில் இடம்பெறுகிறது. எந்தக் கருத்துக்கு - எந்தச் சூழலில் - யாரிடம் - எந்தவகையான சொற்களையும் தொடர்களையும் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பது மூளையின் மொழிப் புலம்மட்டும் இல்லை!

மொழிப்புலமானது சொற்களையும் தொடர்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கிறது. ஆனால் அறிவுப்புலத்தின் செயற்பாடு மிக மிக முக்கியமானது.

இன்றைய தானியங்கு மொழிபெயர்ப்பு (Automatic Machine Translation) மென்பொருள்களில் இதுதான் மிகப் பெரிய சிக்கல். மூளையின் அறிவுப்புலத்தைக் கணினிக்கு அளிப்பதில்தான் சிக்கல் இருக்கிறது. இந்தப் பணி வெற்றியடையும்போதுதான் மனிதன் - கணினி (Man - Machine communication) இடையிலான கருத்தாடல் வெற்றிபெறும்; மொழிபெயர்ப்பும் வெற்றியடையும்.

மொழிப்புலமானது அறிவுப்புலத்தோடு முறையாக இணைந்து செயல்படும்போதுதான் எந்தக் கருத்தாடலும் வெற்றிபெறும்.

மொழிப்புலம் , அறிவுத்திறன் புலம் - இரண்டின் கூறுகள் என்ன ? இதுபற்றிய ஆய்வு ஒருபுறம்.

அடுத்து, இந்த இரண்டு புலங்களும் மனிதமூளையில் எவ்வாறு உயிரியல் அடிப்படையில் (Biological base) அமைந்து செயல்படுகின்றன என்பதுபற்றிய ஆய்வு வளர்ச்சி அடைவது ஒரு தேவை; மற்றொன்று இந்த இரண்டு புலங்களையும் கணினியின் மூளையில் - மின்னணுக்கருவியில் (Electronic Chip) - எவ்வாறு அமைப்பது என்பது பற்றிய ஆய்வு மற்றொரு தேவை.

மூளையின் (Human Brain) இந்த உயிரியல் அடிப்படைகளைக் கணினியின் மின்மூளைக்குக் (Electronic Brain - Electronic Circuits) கொடுக்கமுடியுமா?

மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றார் தங்கள் ஆய்வுகள் மொழிப்புலம்தொடர்பானது பற்றிமட்டுமே என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். மொழிப்புலனில் இருந்து அறிவுப் புலத்திற்குச் செல்லும் மொழிதொடர்பான கூறுகளைப்பற்றிய ஆய்வே அவர்களது ஆய்வுகள். அறிவுப்புலனுக்குச் சென்றடைந்த மொழிக்கூறுகள் எவ்வாறு அறிவுப்புலனைப் பயன்படுத்தி, கருத்தாடலாக வெளிவருகிறது என்பது அடுத்த உயர்நிலை ஆய்வாகும். அதுபோன்று அறிவுப்புலனிலிருந்து மொழிப்புலனுக்குக் கருத்தாடலுக்காக ஒரு கருத்து எவ்வாறு அனுப்பப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் அடங்கும்.

இந்த ஆய்வுகள் வெற்றியடையும்போதுதான் மனிதன் - மூளை கருத்தாடல், தானியங்கு மொழிபெயர்ப்பு மென்பொருள் உருவாக்கம் வெற்றி அடையும்.

அதனால்தான் இயற்கைமொழி ஆய்வில் (Natural Language Processing - NLP) இன்று செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) , கணினிக் கற்றல் (Machine Learning) ஆகியவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. சில நேரங்களில் தொழில்நுட்பம் வளர்ந்துவிடும்; ஆனால் அதற்குப் பின்புலமான அறிவியல் அந்த அளவுக்கு வளராமல் இருக்கலாம்.

இயற்கைபற்றிய அறிவியல் வளர்ச்சி அடையாத காலக்கட்டத்திலேயே மனிதன் பல்வேறு தொழில்நுடபங்களை உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறான் என்பது உண்மை. ஒரு பொருளைக் கொடுத்தால் அதை மற்றொரு பொருளாக மாற்றும் தொழில்நுட்பம் முதலில் வளர்ந்துவிடலாம். ஆனால் அதற்குப் பின்புலமாக இருக்கிற அறிவியல் உண்மை பின்னர் தோன்றலாம்.

மேற்கூறிய இரண்டு புலன்களையும்பற்றிய அறிவியல் வளர வளரத்தான் மொழித்தொழில்நுட்பமும் வளர்ச்சியடையும். இந்த அறிவியல்கள் வளர்ச்சி அடையாமல், மொழித் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையமுடியாது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India