வியாழன், 7 செப்டம்பர், 2023

'சனாதனம்'' பற்றித் தெளிவான விடை காணவேண்டும்!

 ''சனாதனம்'' பற்றித் தெளிவான விடை காணவேண்டும்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தற்போது நாடளவில் ''சனாதனம்'' பற்றிய கருத்துமோதல் தீவிரமடைந்துவருகிறது. இந்த நேரத்தில் இதற்கான சில விளக்கங்களை நாம் தேடவேண்டியுள்ளது.

இரண்டுவகை பிரச்சினைகள் . . மக்களுக்கு! ஒன்று பொருளாதாரப் பிரச்சினை, இரண்டு , தத்துவம், உரிமை, கோட்பாடு தொடர்பான பிரச்சினை. பொருளாதாரப் பிரச்சினைகளிலும் இன்றைய சமூக அமைப்புக்குள்ளேயே தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை; மற்றொன்று, சமூக அமைப்பை அடிப்படையிலேயே மாற்றினால்தான் தீரும் பிரச்சினை.

மக்கள் மேற்கூறிய இரண்டு பிரச்சினைகளுக்காவும் போராடவேண்டும்; குரல் எழுப்பவேண்டும். 

''சனாதனப்'' பிரச்சினை மேற்கூறியவற்றில் எதில் அடங்கும் என்பதைப் பார்க்கவேண்டும்.

'சனாதனம்' என்பதற்கு 'விளக்கங்கள்' ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறுகிறார்கள். இதிலும் தெளிவு வேண்டும். மொத்தத்தில் 'இந்து மதத்தைக்' குறிக்கிறதா? அல்லது பழைய சமுதாயத்தில் நிலவிய ''மூட நம்பிக்கை, பண்பாடு, உடன்கட்டை ஏறுதல், ஆண் ஆதிக்கம் ' போன்றவையா?

மேற்கூறியதில் இரண்டாவதைக் கணக்கில் கொண்டால், அவை மதங்களுக்கு அப்பாற்பட்டு, பழைய சமுதாயத்தில் பின்பற்றப்பட்டவையாக இருக்கின்றன. இஸ்லாமியம், கிறித்துவம் இரண்டும் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகத்தான் இந்தியாவில் நிலவத் தொடங்கின. அதற்குமுன் இந்து ( சைவம், வைணவம் ) , புத்தம், சமணம், சார்வாகம் போன்றவைதான் இங்கு நீடித்தன. அந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரிடமும் ( மதம் தாண்டி) மேற்கூறிய பண்பாடுகள் பின்பற்றுப்பட்டதா? இல்லையா? 

மேலும் கிறித்தவர்கள், இசுலாமியர்கள் இடையேயும் அவர்களது மத அடிப்படையில் சில 'சடங்குகள்' நீடிக்கின்றன. அவற்றையும் கணக்கில் கொள்ளவேண்டுமா? இவை போன்ற ஐயங்களுக்குத் தெளிவான விடைகள் தேவை.

(1) பிராமணியம், பூஜை செய்யும் உரிமை, சமஸ்கிருதம் , தீண்டாமை - இவற்றை மட்டுந்தான் சனாதனம் குறிக்கிறதா? தமிழகம் தாண்டியும் இவைதானா? 

(2) தமிழகத்தில் இன்று பிராமணர் அல்லாத இந்து மக்கள் அனைவரும் பல்வேறு சடங்குகளை ( திருமணம், இறப்பு, மனை, வீடு கட்டுதல், பிறந்தநாள் மொட்டை, காது குத்தல் போன்றவை) பிராமணியப் புரோகிதர்களைக்கொண்டு , சமஸ்கிருத சுலோகம் கொண்டு செய்வதும் இதில் அடங்குமா? 

(3) பிராமணர்கள் பிற சாதியினரைத் தீண்டத் தகாதவர்களாக கருதுவது மட்டும் இதில் அடங்குமா? அல்லது பிரமாணர் அல்லாத இடைமட்டச் சாதியினர் , தலீத் மக்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதவது இதில் அடங்குமா? 

(4) கிராமப்புற ஓட்டல்களில் ''தனிக்கோப்பை'' நடைமுறை இதில் அடங்குமா? தலீத் மக்கள் இன்னும் பல கிராமங்களில் ''அக்கிரகாரத்தில்'' மட்டும் இல்லாமல் பிற இடைத்தட்டு சாதியினர் தெருவிலும் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்று கூறப்படுகிறது. 

இதுபோன்று இன்னும் நிறைய பிற்போக்கு, மக்கள் விரோத நடைமுறைகள் உள்ளன. இவையெல்லாம் நிலவுடமைச் சமுதாயத்தின் பிற்போக்கு, ஒடுக்குமுறைப் பண்பாட்டில் அடங்குமா? அல்லது ''சனாதனத்தில்'' அடங்குமா?

எனவே, சமூக உணர்வாளர்கள் இந்த நேரத்திலாவது இவைபற்றிய தெளிவை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியது முக்கியச் சமூகக் கடமையாகும். இந்தப் பிரச்சினையை வெறும் ''வாக்கு வங்கிப் பிரச்சனையாக'' பார்ப்பது தவறு என்று கருதுகிறேன்.

என்னுடைய ஆய்வு வினாக்கள் . . . ''சனாதனத்தில்'' அடங்கியதாகக் கூறப்படுபவற்றில் எது எது பழைய நிலவுடமைச் சமுதாயத்தின் பிற்போக்குப் பண்பாடு, நடைமுறைகள்? எது எது மதம் சார்ந்தவை? 

இந்தப் பிற்போக்குப் பண்பாடுகள், நடைமுறைகள் ஒட்டுமொத்தச் சமுதாய மாற்றத்தைப் பொறுத்தவையா? அல்லது மதங்களைப் பொறுத்தவையா? 

ஒட்டுமொத்தச் சமுதாய அமைப்பின் பண்பாடு, நடைமுறைகள் மதங்களில் ஊடே வெளிப்படும் என்பதிலும் எனக்கு ஐயம் இல்லை! இரண்டுக்கும் இடையில் கறாரான பாகப் பிரிவினை கிடையாதுதான்!

-----------------------------------------------------------------------------------------------------------------------

முதற்படி . . . வீடுகளில் ''சடங்குகளை'' ஒழிப்பது. குழந்தை பிறப்பு முதல், புதுமனை புகுவிழாவில் கணபதி ஹோமம், திருமணத்தில் புரோகிதர் நடத்தும் சடங்குகள், தாலி அணிவித்தல் ( பெண்ணுக்குமட்டுமே தாலி, ஆணுக்குக் கிடையாது!) , இறப்பு , திதி போன்ற வீட்டுக்குவீடு நடைபெறுகிற சடங்குகளைக் கைவிடவேண்டும்.

இதற்கும் முதற்படி . . . மேற்கூறிய சடங்குகளை உடனடியாகக் கைவிட முடியவில்லையென்றால், அவற்றைப் புரோகிதர்கள் , சமஸ்கிருத மந்திரம் இல்லாமல் நடத்தலாம். இதை வீட்டுக்குவீட்டு நடைமுறைப்படுத்தவேண்டுமென்று பகுத்தறிவுவாதிகள், பகுத்தறிவுக் கட்சிகள் , பகுத்தறிவு இயக்கங்கள் உடனடியாகத் தமிழகத்தில் முழக்கம் வைக்கவேண்டும்.

அடுத்து, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்பற்றுவதனால்தானே '' புரோகிதர்கள்'' தேவைப்படுகின்றனர்.அவற்றைக் கைவிடவேண்டுமென்று பகுத்தறிவுக் கட்சிகள் ( அரசாங்கத்தை இப்போது விட்டுவிடலாம்!) , பகுத்தறிவு இயக்கங்கள் முழக்கங்களை முன்வைக்கவேண்டும்.

இந்த இரண்டிலும் வெளிப்படையாக மேற்கூறிய இயக்கங்கள் தங்கள் நிலைபாடுகளைத் தெளிவாக வெளிப்படுத்தவேண்டும். ஒரு இயக்கமாகவே தொடரவேண்டும். இயக்கத் தலைவர்கள் அதற்கு முன்மாதிரியாக நடத்திக்காட்டவேண்டும். ஊருக்கு உபதேசம் என்று ஆகிவிடக்கூடாது.

-----------------------------------------------------------------------------------------------------------------------

என்னைப் பொறுத்தவரையில் . . . மதங்கள் என்று வந்துவிட்டாலே . . . அங்கே ''சடங்குகள்'' வந்துவிடும்! மதத்திற்கு மதம் தங்கள் சடங்குகளில் வேறுபடலாம். அவ்வளவுதான்! சில ''தத்துவக் கருத்துக்கள்'' நிறுவனமாக்கப்படுவதுதானே ''மதங்கள்''! மொட்டை அடிப்பது, மிளகு உப்பு வாங்கிப்போடுவது, தேர் இழுப்பது போன்ற சடங்குகள் எல்லாம் வெவ்வேறு வகைகளில் எல்லா ''மத நிறுவனங்களிலும்'' இங்கு நீடிக்கின்றன.

-----------------------------------------------------------------------------------------------------------------------

குடும்பத்தின் தோற்றம், குடும்பத்தில் ஆண் ஆதிக்கம், பெண்ணடிமை போன்றவற்றிற்கு அடிப்படை சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களே. இதற்கும் தற்போது பேசப்படுகிற 'சனாதனம்' என்பதற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது எனக் கருதுகிறேன். ஆனால் இவற்றைத் தக்கவைக்கப்பதற்கான பல ''கருத்தியல்களையும்'' ''சடங்குகளையும்'' உருவாக்கித் தக்கவைப்பதில் 'சனாதனத்திற்குப்' பங்கு உண்டு. ஆனால் இந்தச் ''சனாதனத்தை'' புறக்கணிப்பதால், இன்றைய குடும்ப அமைப்பின் ''ஜனநாயக விரோதப் பண்புகளை'' அழித்துவிடமுடியாது. ஒரு சோசலிசப் பொருளாதார அமைப்பில்தான் பெண்களுக்குச் சமுதாயத்தின் பொருளாதார உற்பத்தியில் ஆண்களுக்கு இணையாகச் சம பங்கு கிடைக்கும். அப்போதுதான் குடும்பத்தில் நீடிக்கிற ஆண் ஆதிக்கமும் பெண்ணடிமையும் ஒழியும். இன்று தமிழ்நாட்டில் ''சனாதனத்தைக்'' கண்டிக்கிற குடும்பங்களில் ஆண் ஆதிக்கம் இல்லையா? பெண்ணடிமை இல்லையா? பிற்போக்குச் சடங்குகள் இல்லையா? அல்லது இந்தக் குடும்பங்கள் ( பிராமணர் அல்லாத பிற உயர் சாதிகள், இடைத்தட்டுச் சாதிகளின் குடும்பங்கள்) தலித் மக்களின்மீது ''சாதி ஒடுக்குமுறைகளை'' பிரயோகிக்கவில்லையா?

சனாதனம் இன்றைய ''குடும்ப அமைப்புமுறையைத் '' தோற்றுவிக்கவில்லை. மாறாக, இந்தக் குடும்ப அமைப்புமுறை தோன்றியபிறகு, அதற்கேற்ப . . . அதைத் தக்கவைக்க . . . சமூகத்தின் மேல்தளத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்தச் 'சனாதனம்' ! ''ஜனநாயக விரோதக் குடும்ப அமைப்புமுறை'' நீடிப்பதற்கான ''சடங்குகள், புரோகிதங்கள், புரோகிதர்கள்'' போன்றவற்றை உள்ளடக்கியதுதான் ''சனாதனம்''!

ஒருவேளை மக்களின் ஒன்றுபட்ட உண்மையான முயற்சியால் தற்போது கூறப்படுகிற 'சனாதனம்' ஒழிக்கப்படுவதால் இன்றைய ''குடும்ப அமைப்பின்'' ஜனநாயக விரோதப் பண்புகள் அழிந்தால் நல்லதுதானே! குடும்பம் அழியாது! அது அடுத்த கட்ட வளர்ச்சிக்குத்தான் செல்லும்! கவலை வேண்டாம் நண்பரே.

என்னுடைய கேள்வி . . . ''சனாதனம்'' பற்றிய போதிய விளக்கங்கள் தேவை! எது சனாதனம் என்று அழைக்கப்படுகிறது? வெறும் பார்ப்பனிய எதிர்ப்பா? அல்லது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அனைத்து ''மூட நம்பிக்கைககளும் அவற்றையொட்டிய சடங்குகளுமா?''. அல்லது ''புரோகிதமும் புரோகிதர்களுமா?''.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India