வியாழன், 8 ஜூலை, 2021

ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவியலா?

 ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவியலா?

---------------------------------------------------------------------------------------------------------
இன்று ( ஜூலை 7, 2016) தமிழ் 'தி இந்துவில்' ஒரு செய்தி! தமிழ்வழி பொறியியல் படிப்பில் 1257 இடங்கள் காலி! 121 பேர்மட்டுமே இதுவரை சேர்ந்துள்ளனர். அதற்குக் கூறப்பட்டுள்ள காரணம் ..... '' தனியார் துறையில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால், தமிழ்வழிப்பிரிவில் சேர மாணவர் தயக்கம் காட்டுகின்றனர்.. தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ வேலைவாய்ப்புகள் குறைவு. வேலைக்குத் தேர்வுசெய்யப்பட்டாலும் குறைந்த சம்பளமே கிடைக்கிறது. படித்து முடிக்கும் அனைவர்க்கும் எப்படி அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்? அரசு வேலைவாய்ப்பை மட்டுமே நம்பி, தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேரமுடியுமா என்று மாணவர்கள் கேட்கின்றனர்''
எனக்குள்ள ஐயங்கள்.....
1) தமிழில் படித்தாலும், ஆங்கிலத்திலும் படித்தாலும், பொறியியல் அறிவு ஒன்றுதானே? ஆங்கிலத்தில் அமைந்துள்ள பொறியியல் பாடங்கள் வேறு... தமிழில் அமைந்துள்ள பொறியியல் பாடங்கள் வேறா? எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை ...
2) சரி. அயல்நாட்டு நிறுவனங்களில் வேலைபார்க்க ஆங்கில அறிவு தேவை என்று வைத்துக்கொள்வோம். ஆங்கிலத்தை - ஒரு மொழியாக - சிறப்பாக மாணவர்கள் கற்றுக்கொள்ளலாமே! அறிவு வேறு.... அறிவைப் பெறுகின்ற மொழி வேறு. ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவா? அறிவைத் தாய்மொழியில் பெற்றுவிட்டு, அந்த அறிவை ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தத் தேவையான English for Technology என்று சிறப்பு ஆங்கிலத்தை நன்றாகக் கற்றுக்கொள்ளலாமே!
3) ஆங்கிலத்தில் படித்துவிட்டு, ஜெர்மனியில் அல்லது பிரான்ஸில் வேலைபார்க்கவேண்டிய ஒரு சூழலில், ஒருவர் என்ன செய்கிறார்? அங்கெல்லாம் அவர்கள் நாட்டு மொழியில்தானே வேலை நடைபெறுகிறது. அங்கு சென்றபின்னர், அந்த மொழியைக் கற்றுக்கொள்ளவில்லையா?
4) மொழிக்கல்விக்கும் பாடங்களைக் கற்றுக்கொளவதற்கும் உள்ள வேறுபாட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளாத காரணத்தால்தானே இதுபோன்ற மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன? தாய்மொழி அல்லாத தேவைப்படுகிற பிற மொழிகளை மொழிக்கல்வியில் பெறுமுடியாதா?
5) சாம்ஸ்கி கூறியுள்ளதுபோல ( Manufcturing consent) , ஆங்கிலம்பற்றிய ஒரு தவறான எண்ணத்தை - ஆங்கிலம் இருந்தால்தான் வேலை அல்லது அறிவு என்ற மூடநம்பிக்கையை - மக்களிடம் உருவாக்கி வைத்துவிட்டு, அதனடிப்படையில் மக்கள் அப்படி விரும்புகிறார்கள் என்று கூறுவது சரியா?
6) ஆங்கிலத்தையோ அல்லது வேறு எந்த மொழியையோ மொழியியல் பின்னணியில் மிகக் குறைந்த காலத்தில் கற்றுக்கொள்ளலாம். அதற்கான பல வழிமுறைகள் மொழிபயிற்றல் என்ற செயற்படுத்த மொழியியலில் உருவாக்கப்பட்டுள்ளன.' ஆடத் தெரியாதவளுக்குத் தெரு கோணல்' என்ற பழமொழிபோல, பயிற்றுமொழிக்கும் மொழிக்கல்விக்கும் உடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் ... ஆங்கிலத்தில் பாட அறிவைப் பெறவில்லையென்றால், அறிவே இருக்காது... வேலை வாய்ப்பே இருக்காது என்று நினைப்பது சரியா'
இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அகற்றாமல், தமிழகத்தில் தமிழ் வளர்ச்சியை - தமிழ்ப் பரவலை - ஏற்படுத்துவது மிகக் கடினம்.
மூன்று மாதங்களில் அடிப்படை ஆங்கிலத்தையும் அடுத்துச் சில காலங்களில் உயர்நிலை ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுக்கமுடியும் ... தேவைப்பட்டால்! எனவே மாயைகளில் ... மூடநம்பிக்கைகளில் நாம் வாழக்கூடாது! மொழி ஏகாதிபத்தியத்தை அடியோடு ஒழிக்கவேண்டும்.

மொழியியல் தமிழாய்வுக்கு எதிரானதா?

 வினா : மொழியியல் தமிழ்மொழிக்கு எதிரானது, அது உண்மையான தமிழ்மொழி ஆய்வுக்கு எதிரானது என்று கூறப்படும் கருத்து சரியா?

விடை: இல்லை. பிற அறிவியல்கள்போன்று சமூக வளர்ச்சியில் தேவையையொட்டித் தோன்றி வளர்ந்துள்ள ஒரு அறிவியல்தான் மொழியியல். குறிப்பிட்ட மொழிபற்றிய ஆய்வாக இல்லாமல், பொதுவாக ‘மனித மொழி’ என்பதை ஆய்வு செய்வதற்கான வழிமுறைகளை முன்வைக்கின்ற ஒரு அறிவியலே இது. ஆய்வுகளுக்குக் கருதுகோள்களை முன்வைப்பது, அவற்றின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வது, அந்த ஆய்வுகளின் அடிப்படையில் மொழிபற்றிய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் முன்வைப்பது போன்றவற்றை உள்ளடக்கியதுதான் மொழியியல். மொழியின் அமைப்பைப்பற்றி மட்டுமல்லாமல், மொழிக்கும் மனித மூளைக்கும் உள்ள தொடர்பு, மொழிக்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு, மொழிக்கும் மனித மனத்திற்கும் உள்ள தொடர்பு என்று பல முனைகளில் வளர்ந்துள்ளது மொழியியல். இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டில்தான் இத்துறை அறிமுகமாகியது. பூனே டெக்காண் கல்லூரியில்தான் இந்த அறிவியலைப் பயிற்றுவிக்கும் கோடைகாலச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. அதில் பயின்ற அல்லது பயிற்சியாளராகப் பணியாற்றிய பேராசிரியர்கள் தெ.பொ.மீ., வ.அய். சுப்பிரமணியம், முத்துச்சண்முகம்பிள்ளை, பி ஹைச் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்தான் தென்னகத்தில் இந்தத் துறையைப் பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தினார்கள். தமிழகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கேரளப் பல்கலைக்கழகத்திலும் ஆந்திராவில் உஸ்மானியா பல்கலைக்கழகத்திலும் மொழியியல் துறைகள் நிறுவப்பட்டன. அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்ப் பேராசிரியர்களாக உருவாகியிருந்த அகத்தியலிங்கம், இ. அண்ணாமலை, கு. பரமசிவம், இராம. சுந்தரம், குமாரசாமி ராஜா, தாமோதரன், செ.வை. சண்முகம், காமாட்சிநாதன், க. முருகையன், பா.ரா. சுப்பிரமணியன், இஸ்ரேல், விஜயவேணுகோபால் போன்றோர் தமிழ்மொழியை மொழியியல் அடிப்படையில் ஆராயத் தொடங்கினர். பேரா. வ. அய். சுப்பிரமணியம, அகத்தியலிங்கம், கு. பரமசிவம் போன்றோர் அமெரிக்காவிற்குச் சென்று சிறப்புப் பயிற்சிபெற்றார்கள். பின்னர் அவர்களின் மாணவர்களாகப் பேராசிரியர்கள் எம் எஸ் திருமலை, நீதிவாணன், கருணாகரன், சீனிவாசவர்மா, பொற்கோ, ஆர். கோதண்டராமன், ஞானசுந்தரம், கி. ரங்கன், ராஜாராம் போன்றார் மொழியியல் பயிற்சிபெற்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் தமிழ்ப்புலவர் படிப்பு பெற்றவர்கள். திராவிடமொழி ஒப்பிலக்கணம், தமிழ்மொழி வரலாறு, இன்றைய தமிழ் இலக்கணம், சங்கத்தமிழ் வரலாறு, பிற காலகட்டத் தமிழிலக்கியங்களின் மொழி ஆய்வு என்று பல்வேறு தலைப்புகளில் தமிழின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளனர். உலகமொழிகள், திராவிடமொழிகள், சங்கத்தமிழ், இன்றைய தமிழ் என்ற பல தலைப்புகளில் பேரா. அகத்தியலிங்கம் தமிழை ஆராய்ந்து, நூல்கள் வெளியிட்டுள்ளார். பொற்கோ இன்றைய தமிழுக்கான இலக்கணம், தமிழை அயல்நாட்டவர்க்குக் கற்பித்தல் , தமிழுக்கும் ஜப்பானியமொழிக்கும் இடையில் உள்ள உறவு போன்ற தலைப்புகளில் மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டார். தமிழகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றிய பேரா. வ.அய். சுப்பிரமணியம் தமிழாய்வை எவ்வாறு வளர்த்தெடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்கள் அரசுகளின் உதவிகொண்டு, குப்பத்தில் திராவிடப் பல்கலைக்கழகத்தையே உருவாக்குவதில் அவர் பெரும்பங்காற்றினார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வரலாற்றைப் பேரா. தெ.பொ.மீ. முன்வைத்தார். இன்றும் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், ஜெர்மனி , அமெரிக்கா, கனடா, போலந்து போன்ற பல நாடுகளில் தமிழ்மொழியைப் பயிற்றுவித்து வருபவர்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டில் மொழியியல் பயின்ற பேராசிரியர்கள்தான். இன்றைய தமிழுக்கான ஒரு சிறந்த அகராதியை அளித்த கிரியா அமைப்பில் அதற்காக உழைத்தவர்கள் பெரும்பாலும் மொழியியல் பின்னணி உள்ளவர்கள்தான். கணினித்தமிழிலும் மொழியியல் கல்வி பெற்றவர்கள் இன்று அளித்துவருகிற பங்கு தெரிந்ததே. இவ்வாறு தமிழ்மொழி ஆய்வுக்கும், தமிழ்க்கல்விக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பெரும்பங்கு அளித்துவருகிற பேராசிரியர்கள் பலர் மொழியியல் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, மொழியியல் தமிழுக்கு எதிரானது என்று எவ்வாறு கூறமுடியும்? மேற்குறிப்பிட்ட மொழியியலார்கள் எல்லோரும் தமிழ் மொழியுணர்விலோ, மொழிக்காப்பிலோ குறைந்தவர்கள் அல்லர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India