ஞாயிறு, 25 அக்டோபர், 2020

கணினித்தமிழ் ஆய்வாளர் திருமதி அபிராமி முத்து

 கணினித்தமிழ் ஆய்வாளர்

திருமதி அபிராமி முத்து .... எம்சிஏ., எம்பிஏ., ... திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், கடந்த ஆறு ஆண்டுகளாக என்னுடன் இணைந்து , தமிழ்க்கணினிமொழியியல் ஆய்விலும், தமிழ் மென்பொருள் உருவாக்கத்திலும் ஈடுபட்டுவரும் ஒரு மென்பொருள் பொறியாளர். நாகர்கோவில் மகளிர் கிறித்தவக் கல்லூரியில் கணினியியல் இளங்கலை படிப்பும் பச்சையப்பன் கல்லூரியில் எம்சிஏ படிப்பும் பாரதிதாசன் நிர்வாகவியல் கல்விநிறுவனத்தில் ( BIM ) எம்பிஏ படிப்பும் மேற்கொண்டவர்.
எம்சிஏ படிப்பிற்கான இறுதி ஆய்வேட்டிற்குத் துணிந்து, எனது வழிகாட்டுதலில் தமிழ்க் கணினிமொழியியல் தலைப்பைத் தேர்ந்தெடுத்து, வகுப்பிலே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அதன்பின்னர், எனது என் டி எஸ் லிங்க்சாப்ட் சொலூஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். மென்தமிழ் - தமிழ்ச்சொல்லாளர், மென்தமிழ் ஆய்வுத்துணைவன், மென்தமிழ் சந்தித்துணைவன் , கணினிவழியே திருக்குறள் ஆய்வு என்று தமிழுக்கான பல மென்பொருள்களை உருவாக்குவதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளவர். சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சகத்திற்காகச் சிங்கப்பூர் எழுத்துத்தமிழ் தரவகத்தை உருவாக்கி, மொழி ஆய்வு செய்ததில் பெரும்பங்கு ஆற்றியவர். தற்போது கணினியின் தானியங்கு கற்றலில் (Machine Learning, Deep Learning) தனது திறமையை வளர்த்துவருகிறார். பிற மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இருப்பினும், எங்கள் குழுவினருடன் இணைந்து, கணினித்தமிழிலேயே தொடர்ந்து பணிமேற்கொண்டுவருகிறார். ஒரு சிறந்த தமிழ்க்கணினிமொழியியலாளராக இன்று திகழ்கிறார். இவருடைய கணவர் திரு. நவீன் ராஜ் அவர்களும் ஒரு மென்பொருள் பொறியாளரே.



திங்கள், 19 அக்டோபர், 2020

முனைவர் ப. வேல்ருருகன் ...

 இதுவரை ஏறத்தாழ 90 -க்கும் மேற்பட்ட தமிழாய்வாளர்கள்பற்றிய குறிப்புகளை எனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ளேன். அந்த வரிசையில் நண்பர் பேரா. ப. வேல்முருகன் அவர்கள்பற்றி இங்குக் குறிப்பிடுகிறேன்.

46 வயதை எட்டியுள்ள முனைவர் ப. வேல்முருகன் அவர்கள் தற்போது திருவாரூரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றிவருகிறார். தமிழ் இலக்கணத்தில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிற இளம் ஆய்வாளர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவர். குறிப்பாகத் தொல்காப்பியத்தில் மிகச் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். தமிழில் இடைச்சொற்கள்பற்றிய ஒரு விரிவான ஆய்வைத் தனது முனைவர் பட்டத்திற்காக மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தவர். தமிழில் முதுகலை, முனைவர் பட்டங்களோடு மொழியியல், தகவல் தொடர்பியல், வரலாற்றியல் ஆகிய துறைகளிலும் முதுகலைப்பட்டங்களைப் பெற்றுள்ளார். எழுத்திலக்கண மாற்றம், தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள் என்ற இரண்டு ஆய்வு நூல்களுக்காக செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வுநிறுவனத்தின் சார்பான இந்தியக் குடியரசுத்தலைவரின் 'இளமறிஞர் விருதைப்' பெற்ற இளம் ஆய்வாளர். இலக்கண மரபும் இலக்கியப் பதிவும் என்ற ஆய்வு நூலுக்காக தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருதைப் பெற்றுள்ளார். மேலும் `தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நோக்கில் சங்கச்செவ்வியல் குறுந்தொகை – புள்ளியியல் ஆய்வு’, `கவிதையும் கலையும்’ என்ற இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது இயக்கத்தில் 10க்கும் மேலான குறும்படங்களும் ஆவணப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.. ‘கிராமியம்’ என்ற குறும்படம் இந்திய பண்பாடு – நாகரிகம், இயற்கை விழிப்புணர்வு குறித்து 'கிராமியம்' என்ற மிகச் சிறந்த குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் (1999 – 2001) கோவை ஜி. ஆர். டி அறிவியல் கல்லூரியிலும் (2001 – 2006), பின்பு பொள்ளாச்சி நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் இலக்கியத் துறைத்தலைவராகப் (2006 – 2008) பணி ஆற்றியுள்ளார். மதுரை தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறையிலும் உதவிப் பேராசிரியாகப் (அரசுப்பிரிவு: 2008முதல்2013 வரை) பணிபுரிந்துள்ளார்.
இதழ்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகிய ஊடகங்களில் மிகச் சிறந்த உரைகளையும் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார்.
தமிழ் இலக்கண ஆய்வில் சிறந்து விளங்கும் பேரா. ப. வேல்முருகன் அவர்கள் தொடர்ந்து தனது ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழ் ஆய்வுலகத்திற்குப் பல பயனுள்ள படைப்புகளைத் தருவார் என எதிர்பார்க்கலாம். அவருக்கு எனது அன்புகலந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!



முனைவர் அருள் நடராசன் .....

 தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குநர்.... சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ் இளங்கலையும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் முதுகலை, ஆய்வு நிறைஞர் பட்டங்களும் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நன்கு திறன் பெற்றவர். அவருடைய தனிச்சிறப்பே அவரது மலர்ந்த முகமும் புன்னகையும்தான். தனது நட்பு வட்டாரங்களை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பவர். ஆய்வுத்துறையிலும் தனது பணிகளைத் தொடர்ந்து, இரண்டு நூல்களையும் பல ஆய்வுக்கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்குப் பயனுள்ளவகையில் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதில் தணியாத ஆர்வம் கொண்டவர். தமிழ்ப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையான உதவிகளை அளித்துவருபவர். தமிழை ஒரு சிறந்த அறிவியல்மொழியாகவும் கணினித்தொழில்நுட்பத்திற்கு ஏற்ற மொழியாகவும் வளர்க்கவேண்டும் என்பதில் மிக உறுதியானவர். கணினிவழி மொழிபெயர்ப்பு மென்பொருள்களைத் தமிழுக்கு உருவாக்கிவிடவேண்டும் என்பதில் தேவையான வேகத்தைக் காட்டிவருபவர். அவரால் இயன்ற அளவு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருபவர்.

தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராகவும், தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறையின் முன்னாள் செயலராகவும், மொழிபெயர்ப்புத்துறையின் முன்னாள் இயக்குநராகவும் பணியாற்றியுள்ள... தமிழுலகிற்கு அறிமுகம் தேவையில்லாத... தமிழறிஞர் முனைவர் அவ்வை நடராஜன் அவர்களின் புதல்வர்! தமிழ் இலக்கிய உலகில் ஒப்பற்ற அறிஞராக விளங்கிய அவ்வை துரைசாமி அவர்களின் பேரன். நான் பணியாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையின் மாணவர் என்பதிலும் நான் பெருமைகொள்கிறேன்.
நாளை செய்யவேண்டிய தமிழ்ப்பணியை இன்றே செய்துமுடித்துவிடவேண்டும் என்ற துடிப்புடன் செயல்படும் திரு. அருள் நடராஜன் அவர்களுக்கு நாளைதான் பிறந்தநாள் என்றாலும், இன்றே அவரை வாழ்த்துகிறேன். அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!





ஞாயிறு, 18 அக்டோபர், 2020

தமிழ்த் தரவுமொழியியல்: சிக்கலும் தீர்வுகளும் - தமிழ் மொழியியல் சங்கத்தில் இணையவழி உரை

 பேரா. ந. தெய்வசுந்தரம்

தமிழ் மொழியியல் சங்கம் ll சார்பாக 19.09.2020 அன்று ll நடைபெற்ற 18-வது இணையவழி வாராந்திரச் சிறப்புச் சொற்பொழிவில் ll பேரா. ந. தெய்வசுந்தரம் அவர்கள் ll (மேனாள் துறைத் தலைவர், தமிழ்மொழித்துறை (மொழியியல் ஆய்வுப்பிரிவு), சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, & மேலாண்மை இயக்குநர், என் டி எஸ் லிங்க்சாஃப்ட் சொலூஷன்ஸ் நிறுவனம், சென்னை) ll தமிழ்த் தரவுமொழியியல்: சிக்கலும் தீர்வுகளும் ll என்னும் தலைப்பில் ஆற்றுகின்ற உரை.

https://www.youtube.com/watch?v=KBFyxiDOpqE&feature=share&fbclid=IwAR1Iv0xAF_qKyPrgAw_WZSVFLqBIy2MmagIDcT0IEhrhcPTxTtgz0djBvWY

கணினிமொழியியல் பற்றிய மூன்று நாள் உரை ( 2020 அக்கோடபர் 13-15) - ஜே என் யூ பல்கலைக்கழகம்

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவு ஏற்பாடு செய்திருந்த இணையவழி உரைத்தொடரில் 2020 அக்டோபர் 13,14,15 ஆகிய மூன்று நாட்களிலும் நான் கணினிமொழியியல் பற்றி நிகழ்த்திய மூன்று உரைகளின் யூடியூப் பதிவு இது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த உரைகளைக் கேட்கலாம்.

https://www.youtube.com/playlist?list=PLa-OXpeiDemi2qt8GgGnPeQJbjan4jmS9&fbclid=IwAR2INaK8M1KhcZphtYwIu-D7B56D-s8f9Pc5Fysq0pS1xJ-red9sQB8QqA8


வியாழன், 8 அக்டோபர், 2020

தமிழ்மொழி அமைப்பின் வியக்கத்தக்க கணிதப் பண்புகள்!

 தமிழ்மொழி அமைப்பின் வியக்கத்தக்க கணிதப் பண்புகள்! ( தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் கவனத்திற்குமட்டும்!)

---------------------------------------------------------------------------------------------------------
தமிழில் எழுத்துகள் அல்லது ஒலியன்கள் (Phonemes) சொல்லாக அமையும்போது, அசைகளாக (Syllables) அமைந்து, பின்னர்தான் சொல்லாக (Morphemes/ Words) அமைகிறது. அதாவது தனி எழுத்துகளுக்கும் சொல்லுக்கும் இடையில் அசை என்ற ஒரு அமைப்பு நிலவுகிறது. இது யாப்பு அசை (Prosodic syllable) இல்லை. மொழி அசை (Linguistic syllable) ஆகும். ஒரு அசையின் உயிர்நாடி (Peak) , அதில் இடம்பெறுகிற உயிர் ஒலியாகும். அதற்கு முன்னரும் ( Onset) பின்னரும் (Coda) மெய்கள் வரலாம். மெய்கள் இல்லாமல் உயிர்மட்டுமே அசையாக அமைந்து சொல்லாக அமையலாம். ஆனால் மெய்கள் தனித்து வரமுடியாது.
மெய்கள் உயிருக்கு முன்னும் பின்னும் வரும்போதும் அவற்றின் வருகைக்குக் கட்டுப்பாடு உண்டு. ஒரு அசையில் உயிருக்கு முன்னர் தொடக்கத்தில் ஒரு மெய்தான் வரலாம். ஆனால் ஆங்கிலத்தில் இரண்டு , மூன்று மெய்கள் வரலாம் ( plot, sprint ). தமிழில் அசையின் இறுதியில் பொதுவாக ஒரு மெய்தான் வரும். இரண்டு மெய்கள் வந்தால், அவற்றின் முதல் எழுத்து ய், ர், ழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கமுடியும் ( வாய்க்-கால், பார்க்-கிறேன், வாழ்த்-து) .
ஒரு அசையின் இறுதியில் ஒரு குறிப்பிட்ட மெய் வரும்போது, அதற்கு அடுத்த அசையின் தொடக்கமாக எந்த மெய் வரலாம் என்பதற்குத் தமிழில் தெளிவான கட்டுப்பாடு உண்டு. இதைத்தான் இலக்கண ஆசிரியர்கள் மெய்மயக்கம் ( உடன்நிலை மெய்மயக்கம், வேற்றுநிலை மெய்மயக்கம் - Phonotactics) ) என்று அழைக்கிறார்கள்.
அதுபோல, ஒரு தமிழ்ச்சொல்லில் முதல் அசையில் தொடக்கமாக மெய் வராமல் இருக்கலாம் ( இ-லை, ஆ -டு). ஆனால் பிற அசைகளில் கண்டிப்பாக மெய் வரவேண்டும். எடுத்துக்காட்டாக, 'இ - லை ' + 'ஆ' = இ-லை-ஆ) ' என்று வரக்கூடாது. 'இ -லை-யா' என்று மூன்றாவது அசையில் உடம்படுமெய் வரவேண்டும். தமிழ் அசையின் விதிக்கு உட்பட்டு ஒரு சொல் அமையவேண்டும் என்பதற்காகத்தான் உடம்படுமெய்களே வருகின்றன. தனிக்குறிலை அடுத்து ஒற்று இரட்டிப்பதும் இதற்காகத்தான். 'கல் - ஐ' என்பதற்குப் பதிலாக 'கல் -லை' என்றுதான் சொல் அமையவேண்டும். இதுபோன்று மற்றொரு விதி, தமிழில் சொல்லின் முதல் அசையில் உயிருக்கு அடுத்து 'ர்' வரக்கூடாது. எனவேதான் 'அர்த்-தம்' என்பதை நாம் 'அ -ருத் -தம்' என்று மாற்றி அமைக்கிறோம். அதனால்தான் 'ஒரு + ஆயிரம்' என்பது 'ஓராயிரம்' என்று மாறி அமைகிறது. இவைபோன்று தமிழ் அசை அமைப்பிற்குத் தெளிவான விதிகள் உண்டு.
அடுத்து, சந்தி அல்லது புணர்ச்சி விதிகள். ஒரு பெயரும் வல்லினத்தில் தொடங்கும் மற்றொரு பெயரும் இணையும்போது இடையில் நிச்சயமாக ஒரு வல்லின ஒற்று மிகும். 'வகுப்பு + பாடம் = வகுப்புப்பாடம்' ; 'எலி+ பொந்து = எலிப்பொந்து' ; இவற்றில் சொல் இறுதியில் உயிர்கள் வந்துள்ளன.
ஆனால் சொல் இறுதியில் மெய்கள் வந்தால் ? வல்லின ஒற்றுகள் சொல் இறுதியில் தமிழில் வராது. மெல்லின எழுத்துகளான ண், ன், ம் ஆகிய மூன்றும் இடையின எழுத்துகளான ய், ர், ல், ள், ழ் ஆகியவையும் வரலாம்( வ் என்பது வேறு) . இந்த எட்டு மெய்களும் நிலைமொழிகளின் இறுதியாக வந்து, வருமொழியில் வல்லினம் வந்தால், என்ன நடக்கிறது?
மரம் + பலகை = மரப்-பலகை ( 'ம்' மறைந்து 'ப்' மிகுகிறது)
வாய் + பந்தல் = வாய்ப்-பந்தல் ( 'ய்' மறையாமல், 'ப்' மிகுகிறது)
போர் + களம் = போர்க்-களம் ('ர்' மறையாமல், 'க்' மிகுகிறது)
தமிழ் + பாடம் = தமிழ்ப்-பாடம் ( 'ழ்' மறையாமல் , 'ப்' மிகுகிறது).
மேற்கண்ட எல்லா எடுத்துக்காட்டுகளிலும் தமிழ் அசை அமைப்பு விதிகள் மீறப்படவில்லை. 'ய்ப்' 'ர்க்' 'ழ்ப்' என்பவை அசையின் முடிவில் வரலாம்.
ஆனால் ண், ன், ல், ல் ஆகிய மெய்கள் சொல் இறுதியில் வந்தால் ? வல்லினம் மிகுமா? மிகாது.
மண் + குடம் = மண்க்குடம் *
பொன்+ குடம் = பொன்க்குடம்*
கல்+பானை = கல்ப்பானை*
முள் + பாதை = முள்ப்பாதை*
ம்அண் - க்க்உ-ட்அம் என்று அமையும்போது இரண்டாவது அசையின் தொடக்கமாக இரண்டு மெய்கள் வருகின்றன. அசையின் தொடக்கத்தில் தமிழில் இரண்டு மெய்கள் வராது. எனவே அது தவறு.
சரி, இரண்டாவது அசையின் தொடக்கத்தில் உள்ள 'க்க்' என்ற இரண்டு மெய்களில் ஒரு மெய்யை முந்தைய அசையின் இறுதியாக வைத்தால் என்ன? இதுவும் தமிழ் அசை விதிக்கு மாறானது. ஒரு அசையின் இறுதியில் இரண்டு மெய்கள் வந்தால், அவற்றின் முதல் மெய் ய், ர், ழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுதான் வரவேண்டும். 'ண்' 'ன்''ல்' 'ள்' வரக்கூடாது.
அதுபோன்றே ப்ஒன்-க்க்உ-ட்அம் என்றும் க்அல்-ப்ப்ஆ-ன்ஐ என்றும் ம்உள்-ப்ப்ஆ-த்ஐ என்றும் மேற்குறிப்பிட்ட சொற்கள் அமையும்போது, தமிழ் அசையமைப்பு விதிகள் மீறப்படுகின்றன.
அசை அமைப்பு விதியையும் மீறக்கூடாது. புணர்ச்சி விதியையும் மீறக்கூடாது. அதாவது வருமொழியில் வல்லினம் வரும்போது, பெயர்த்தொகையில் நிலைமொழியின் இறுதி மெய் வல்லினத் தன்மை பெறவேண்டும். வல்லின ஒற்று வருவதற்குப்பதிலாக, நிலைமொழியின் இறுதி மெல்லின , இடையின மெய்கள் தாங்களே தங்களுக்கு இனமான வல்லினங்களாக மாறி அமைந்துவிடுகின்றன.
ண், ள் ----> ட் ; ன், ல் ----> ற்
மண் + குடம் = மட்குடம் ; ' பொன் + குடம் = பொற்குடம்;
கல் + பானை + கற்பானை ' முள் + பாதை = முட்பாதை ;
இதை இலக்கண ஆசிரியர்கள் 'திரிதல்' என்று அழைக்கிறார்கள். ஏன் இந்தத் திரிதல் எற்படுகிறது என்பதற்கே மேற்கூறிய விளக்கம்.
இங்குத் தமிழின் அசை அமைப்பு விதியும் காப்பாற்றப்படுகிறது. புணர்ச்சி விதியும் பின்பற்றப்படுகிறது.
தமிழ்மொழி அமைப்பின் கணிதப் பண்புக்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. கணினிமொழியியல் நோக்கில் தொகைகளைப்பற்றிய அறிவைக் கணினிக்குக் கொடுக்க முயற்சித்தபோது, இந்தத் தெளிவு எனக்குக் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஏற்கனவே நமக்குத் தெரிந்த மெய் திரிதல் என்பதற்கு மொழியியல் நோக்கில் - குறிப்பாக Optimality Theory என்ற மொழிக்கோட்பாட்டின் அடிப்படையில் இந்த விளக்கம் சரியாக இருக்கிறது.
நண்பர்கள் தங்கள் கருத்துகளைத் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India