திங்கள், 26 டிசம்பர், 2022

 

மொழிக் குடும்ப ஆய்வும் ஏகாதிபத்திய வஞ்சனை அரசியலும் . . .

---------------------------------------------------------------------------------------------------------------------------

மொழியியலில் ''உலகப் பொதுமை இலக்கணம் (Universal Grammar) '' என்ற ஒரு ஆய்வுப்பிரிவு நன்கு வளர்ந்துவருகிறது. மனிதனின் மூளையில் அவன் பிறக்கும்போதே இருக்கிற (உள்ளார்ந்த - internalized) உலகப் பொதுமை இலக்கணம்பற்றிய ஆய்வை நோம் சாம்ஸ்கி முன்னெடுத்தார். அதேவேளையில் உலகில் உள்ள இயற்கைமொழிகளில் புற அமைப்புகளில் (externalized) காணப்படும் பொதுமைக் கூறுகளைப்பற்றிய ( Universal properties) ஆய்வை கிரீன்பெர்க் முன்னெடுத்தார். மொழிகளின் புறக்கூறுகளை வகைப்படுத்தி, அவற்றைக் கொண்ட மொழிகளை அந்தப் புறக்கூறுகளின் அடிப்படையில் மேற்கொள்கிற ஆய்வு இந்த இரண்டாவது வகைப்பட்ட ஆய்வு.

எடுத்துக்காட்டாக, இராமகி ஐயா அவர்கள் கூறிய தொடர் அமைப்பு ( எழுவாய் செயப்படுபொருள் வினைமுற்று என்ற அமைப்பு) தமிழிலும் இந்தியிலும் காணப்படுப்படுகிறது. இந்த மொழிக்கூறு ("Types) வகையில் தமிழுக்கும் இந்திக்கும் ஒற்றுமை உள்ளது. ஆனால் வேறு பல கூறுகளில் தமிழுக்கும் இந்திக்கும் வேறுபாடு உண்டு. இவ்வாறு மொழியமைப்பு வகை அல்லது பண்பு அடிப்படையாகக்கொண்டு மொழிகளை ஆய்வுசெய்கிற Language Typology என்ற துறை தற்போது ''மொழிக்குடும்ப அடிப்படையிலான '' ஆய்வுகளைவிட முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

''மொழிக் குடும்ப அடிப்படையிலான'' ஒப்பீட்டு மொழியியலானது'' (comparative Linguistics) திட்டமிட்டு, மக்களைப் பிளவுபடுத்துவதற்காக முதலாளித்துவ, ஏகாதிபத்திய , இன ஆதிக்க அரசியலாளர்களால் பயன்படுத்தப்பட்டது.

மொழிக்குடும்ப ஆய்வின் அடிப்படையை ''வரலாற்றில் இல்லாத'' இன அரசியலுக்கு திட்டமிட்டு உருவாக்கி, உண்மையான இன அடிப்படையிலான மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைத்தது.

முதலாளித்துவ, ஏகாதிபத்திய அரசியலுக்கு இந்தவகை ''மொழிக்குடும்ப ஆய்வு'' மிகவும் உதவியுள்ளது. வரலாற்றில் நீடிக்கிற உண்மையான இனங்களை மறைத்து, அவற்றின்மீது ''கற்பனையான இனங்களை'' அந்த அரசியல் திணித்தது.

இதனால் உண்மையான இனங்கள் தங்கள் இனங்களை அடையாளம்கண்டு, அவற்றிற்கான உரிமைகளைப் பெறுகிற போராட்டங்களை ஏகாதிபத்திய வஞ்சனை அரசியல் பின்தள்ளியது. தேசிய இனங்களின் உண்மையான போராட்டங்களை இது பாதித்தது.

இப்போதும் பாதித்துக்கொண்டிருக்கிறது !

 

தங்களுடைய சரியான புரிதலுக்குப் பாராட்டு. ஆனால் மனித இனம் என்பதற்குப் பதிலாகத் தேசிய இனம் (nationality) என்று அழைப்பது சரியாகயிருக்கும். இந்தத் தேசிய இனங்கள் ஏகாதிபத்திய அரசியலை முறியடித்து, தங்கள் தேசங்களை (nations) உருவாக்கிக்கொள்ளவேண்டும். அல்லது பிரிந்துசெல்லும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் கொண்ட ஒரு தேசிய இனமாக, பிற தேசிய இனங்களோடு இணைந்து ஒன்றியத்தை (Union, Federation ) உருவாக்கிக்கொள்ளலாம்.

மேலும் ''இனம்'' என்பதை ''race" என்று மொழிபெயர்க்காமல், "nationality" என்றே கொள்ளவேண்டும். Race என்பது கிடையாது. வரலாற்றில் மனிதர்கள் (humans)- இனக்குழுக்கள் (tribal communities) - தேசிய இனங்கள் (nationalities) - தேசம் (nation) - ஒன்றியம் (Union / Federation) என்ற வரிசையில் இதைப் பார்க்கலாம். Race என்பது மேலிருந்து திணிக்கப்பட்ட (superimposed) ஒரு இல்லாத, கற்பனையான வகைப்பாடு!

பல்வேறு இனக்குழுக்கள் (tribal communities) வேறுபட்ட பல மொழிகளைப் பேசினார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அந்த வேறுபட்ட இனக்குழுக்களை races என்று அழைப்பது தவறு என்பதே என் கருத்து. அருகருகே இருந்த இனக்குழுக்களின் மொழிகளில் ஒற்றுமைகளும் இருக்கும். அவ்வாறு இருந்த சில இனக்குழுக்கள் பின்னர் வெவ்வேறு நிலப் பரப்புகளுக்குச் சென்றிருக்கலாம். இந்த இனக்குழுக்களின் மொழிகளில் ஒற்றுமை காணப்படுவதால் அவற்றை ஆராயலாம். அதற்கு ஒப்பீட்டு மொழியியல் துறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தவறு இல்லை. மொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்ந்து, ஒற்றுமைகள் மிகுதியாகக் காணப்பட்டால், அவற்றை ஆய்வுநோக்கில் ஒரு மொழிக்குடும்பம் என்று அழைக்கலாம். ''குடும்பம்'' என்ற சொல்லாட்சி இங்குச் சரியில்லை. இருப்பினும் ஒரு கலைச்சொல்லாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் இதை ''விரிவுபடுத்தி'' இந்த மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவர்களை ஒரே ''இனமாக'' (Race) கருதுவதுதான் பிழை என்று நான் கருதுகிறேன். Race என்பதே நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ, ஆதிக்கக் கூட்டங்கள் உருவாக்கிய ஒரு ''கற்பனை'' ! சமுதாயத்தின் வரலாற்றில் இந்த இனக்குழுக்கள் (இரத்த உறவுகளின் அடிப்படையில் நிலவியவை) பின்னர் நிலப்பரப்பை அடிப்படையாகக்கொண்ட சமுதாயங்களாக மாறின. நிலப்பரப்பு, வாழ்க்கைமுறைகள், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இனக்குழுக்கள் வெவ்வேறு ''இனங்களாக'' (nationalities) அமைந்தன. அவ்வாறு மாறியமைந்த இனங்கள் உற்பத்தித்துறையின் வளர்ச்சியையொட்டி, நிலப்பரப்பை அடிப்படையாகக்கொண்ட ''தேசங்களாக (nations)'' மாறியமைந்தன.

இந்தக் கட்டத்தில்தான் ''வளர்ச்சியடைந்த இனங்கள் அல்லது தேசங்கள்'' பிற இனங்களை அல்லது ''தேசங்களை'' அடிமைப்படுத்தத் தொடங்கின. இதற்குப் பொருளாதாரக் காரணிகளே அடிப்படை! ''வலிமைவாய்ந்த'' இனங்கள் அல்லது தேசங்கள் பிற இனங்களை அல்லது தேசங்களைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்து, நிலப்பரப்பை அடிப்படையாகக்கொண்ட ''நாடு'' என்ற பெயரில் நீடிக்கின்றன. ஆதிக்க இனம், தன்னால் அடிமைப்படுத்தப்பட்ட இனங்கள் இன அடிப்படையில் தங்கள் ''தேசிய'' உரிமைகளைப் பெறவிடாமல் தடுப்பதற்காகவே மொழிக்குடும்ப ஆய்வுகளைப் பயன்படுத்திக்கொண்டு, உண்மையான இனங்களின் நீடிப்பை மறுக்கிறது; வரலாற்றில் இல்லாத Race என்ற கருத்தைத் திணிக்கிறது.

இதுவே சமுதாய வரலாற்றின் அடிப்படையிலான எனது கருத்து. இதனால் ஆளும் வர்க்கங்களுக்கு என்ன பயன்? பாதிக்கப்படுகிற இனங்களுக்கு என்ன நட்டம் என்ற ஐயா எழலாம். அடக்கப்படும், ஒடுக்கப்படும் இனங்கள் தங்கள் இனங்களைப்பற்றிய உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல், இல்லாத அல்லது கற்பனையான ''இன அடிப்படையை'' தங்களது மூளையில் இருத்திக்கொண்டு, போகாத ஊருக்கு வழியைத் தேடுகிற இனங்களாக ஆக்கப்படுகிறது. இது ஆளும் வர்க்கத்திற்கு நல்லதுதானே!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India