சனி, 4 பிப்ரவரி, 2023

''தாழ்த்தப்பட்ட சாதியினர்மீதான தீண்டாமை என்ற சமூக ஒடுக்குமுறைக்குப் பார்ப்பனியம்மட்டுமல்ல. . . பிற இடைத்தட்டுச் சாதியினர்களும் காரணம் ! (2)

 ''தாழ்த்தப்பட்ட சாதியினர்மீதான தீண்டாமை என்ற சமூக ஒடுக்குமுறைக்குப் பார்ப்பனியம்மட்டுமல்ல. . . பிற இடைத்தட்டுச் சாதியினர்களும் காரணம் ! (2)

------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்குச் சில ஐயங்கள்!
(1) இந்துமதம் சார்ந்த பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளில் - திருமணம், இறப்பு போன்ற சடங்குகளில் - பிராமணர் அல்லாத பிள்ளை, ரெட்டி, செட்டி, நாயுடு போன்ற பல இடைத்தட்டுச் சாதிகளைச் சேர்ந்தவர்களின் சடங்குகளில் - பிராமண ஐயர்கள் பங்கேற்று வடமொழி மந்திரங்களை ஓதுகிறார்கள். (இவற்றில் சில இடைத்தட்டுச் சாதிகளில் அந்தந்த சாதிக்குள்ளேயே ''குருக்கள்'' இருப்பார்கள்!)
ஆனால் ''தாழ்த்தப்பட்ட (என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பெயருக்குப்பதிலாக ''ஒடுக்கப்பட்ட'' என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும்!) '' சாதிகள் என்று கருதப்படுகிற சாதியினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் பிராமண ஐயர்கள் ''பங்கேற்று'' ''மந்திரம்'' ஓதுகிறார்களா?
(2) தமிழ்நாட்டில் ''கௌரவக்கொலை/ ஆணவக்கொலை '' என்று கூறப்படுகிற ''காதல் திருமணக்'' கொலைகளில் மணமகனோ அல்லது மணமகளோ யாரோ ஒருவர் இந்தத் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் எனக் கருதுகிறேன். இது உண்மையா?
(3) இடைத்தட்டுச் சாதியினர்களுக்குள் ''காதல் திருமணங்கள்'' நடைபெறும்போது ''கௌரவக்கொலைகள்/ ஆணவக்கொலைகள்'' நடைபெறுகின்றனவா? இவை பெரும்பாலும் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒரு பிள்ளை, ஒரு பிராமணரைத் திருமணம் செய்துகொள்ளும்போதோ, ஒரு நாயுடு ஒரு ரெட்டியாரைத் திருமணம் செய்துகொள்ளும்போதோ - இதுபோன்ற பிராமணர் - இடைத்தட்டுச் சாதிகளுக்கு இடையிலான , அல்லது இடைத்தட்டுச் சாதிகளுக்கு இடையிலான திருமணங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதுபோலத் தோன்றுகிறது. (முதலில் எதிர்ப்பு இருந்தாலும்கூட!) . இக்கருத்து சரியா?
(4) இடைத்தட்டுச் சாதிகளுக்கிடையே கலப்புத் திருமணம் நடைபெறும்போது, சாதியைவிட வர்க்கம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கருதலாமா? ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியைப் பொறுத்தவரையில், வர்க்கத்தைவிட சாதியம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறலாமா?
மேற்கூறிய எனது கருதுகோள்கள் எல்லாம் சரி என்றால் . . . உண்மை என்றால் . . . கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக நடைபெற்ற ''பிராமணிய எதிர்ப்புப் போராட்டங்கள்'' எல்லாம் பிராமணர்களை எதிர்த்த இடைத்தட்டுச் சாதியினரின் போராட்டங்களே என்று கூறலாமா? அதுவும் இடைத்தட்டுச் சாதிகளைச் சேர்ந்த உயர் வர்க்கத்தினரின் போராட்டங்களே என்ற முடிவுக்கு வரலாமா? அதாவது ''சாதி எதிர்ப்புப் போராட்டம்'' இல்லை . . . மாறாக, ''பிராமணர் எதிர்ப்புப் போராட்டமே'' என்று கூறலாமா? ஆகவே, ''ஆரியர் - திராவிடர்'' போராட்டம் என்பது ''பிரமாணர் - இடைத்தட்டுச்சாதியினர்'' போராட்டம் என்று கூறலாமா? ''ஆதி திராவிடர்களுக்கு'' இதில் பங்கு கிடையாதா? நீதிக்கட்சியினர் பிராமணர்களுக்கு எதிராகப் போராட வேண்டுமென்று கூறியபோது, எம் சி இராஜா போன்றவர்கள் ஏன் அதில் இணைந்து போராடாமல், தனியாகவே இயக்கங்களை மேற்கொண்டார்கள்?
(5) ஆகவே, தமிழ்நாட்டில் ''தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட'' சாதியினரைப்பொறுத்தவரையில், வரலாற்றில் தொடர்ந்து பிராமணர்கள், இடைத்தட்டுச் சாதியினர் ஆகிய இரண்டு பிரிவினர்களாலும் பண்பாட்டுரீதியில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வருகிறார்கள் என்று கூறலாமா?
மேற்கூறியவை எல்லாம் எனது ஐயங்கள்! நண்பர்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்!

தமிழ்நாட்டில் அய்யர், அய்யங்கார் என்ற பிராமணர்களுக்கு சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் என்று மடத் தலைவர்கள் இருக்கிறார்கள். அதுபோன்று பிள்ளை, செட்டியார், முதலியார் என்று எல்லா இடைத்தட்டுச் சாதியினர்களுக்கும் மடாதிபதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்குக் கோடி கோடியாகச் சொத்துக்கள் இருக்கின்றன. அதனால் பலநேரங்களில் இவர்களுடைய ''கோட்டைகளில்'' குத்துவெட்டு நடைபெறுகிறது. ஆனால் இதுபோன்று தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ''மடாதிபதிகள்'' உண்டா? அவர்களுக்கு இதுபோன்று கோடியே கோடி சொத்துக்கள் உண்டா? விவரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும்.
எல்லா உணர்ச்சிகளும்:
வேல்முருகன் சுப்பிரமணியன், Sidhambaram Voc மற்றும் 11 பேர்
3 கருத்துகள்
1 பகிர்வு
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

''தாழ்த்தப்பட்ட சாதியினர்மீதான தீண்டாமை என்ற சமூக ஒடுக்குமுறைக்குப் பார்ப்பனியம்மட்டுமல்ல. . . பிற இடைத்தட்டுச் சாதியினர்களும் காரணம் ! (1)

 ''தாழ்த்தப்பட்ட சாதியினர்மீதான தீண்டாமை என்ற சமூக ஒடுக்குமுறைக்குப் பார்ப்பனியம்மட்டுமல்ல. . . பிற இடைத்தட்டுச் சாதியினர்களும் காரணம் ! (1)

-------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் இன்றைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ''பார்ப்பனர்கள்தான்'' காரணம் என்று கூறுவது அறிவியல் அடிப்படையிலான அரசியல் விளக்கமாக அமையுமா? ''பார்ப்பனிய எதிர்ப்பே'' என்ற ஒன்றே இந்திய மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்பது சரியா? மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலை அளிப்பதற்குப்பதில், தவறான திசையைக் காட்டுவதாக இது அமையாதா?
அடிப்படை விவசாயிகளான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின்மீது பண்பாட்டு ஆதிக்கம் செலுத்துவது பார்ப்பனியம்மட்டும் அல்ல ... பார்ப்பனர்கள் அல்லாத இடைத்தட்டு சாதிகள் . . . பிள்ளை, ரெட்டி, செட்டி, நாயுடு, கவுண்டர் போன்ற பல இடைத்தட்டு சாதிகளின் ஆதிக்கமும் ஆகும்!
உண்மையில் இன்று தாழ்த்தப்பட்ட மக்களின்மீது வன்முறைகளை ஏவிவிடுபவர்கள் யார்? இந்த இடைத்தட்டுச் சாதிகளைச் சேர்ந்த பணக்காரர்களே ஆகும்! இவர்கள் தங்கள் சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்குத் தவறான வழிகாட்டுதலை அளித்து, அவர்களையும் இணைத்துக்கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வன்முறைகளை ஏவிவிடுகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை!
ஒடுக்கப்பட்ட . . . தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த உழைக்கும் மக்களுடன், பார்ப்பனர், பிள்ளை, கவுண்டர், நாயுடு, செட்டி, ரெட்டி போன்ற சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் . . . வர்க்க அடிப்படையில் ஒன்றிணைந்து . . . சமுதாய மாற்றத்திற்கான சரியான போராட்டப்பாதையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுவதுதான் இன்றைக்குத் தேவையானது.
இவ்வாறு நான் கூறுவதால், இன்று பார்ப்பனியப் பண்பாட்டு ஆதிக்கம் . . . கொடுமை நீடிக்கிறது என்பதை நான் மறுப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது! ஆனால் இதை . . . பார்ப்பனியத்தை . . . எதிர்க்கிற மேற்குறிப்பிட்ட இடைத்தட்டுச் சாதிகளின் பணக்கார வர்க்க மக்களும் இன்று ஒடுக்கப்பட்ட . . . தாழ்த்தப்பட்ட சாதியினர்மீது பண்பாட்டு ஒடுக்குமுறையை . . . தீண்டாமையை . . . மேற்கொள்கின்றன என்பதை மறுக்கமுடியாது!
இந்த இடைத்தட்டுச் சாதிகளின் மேல் வர்க்கங்கள் தங்கள்மீதான பார்ப்பனியப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்க்கிற அதேவேளையில் . . . தாழ்த்தப்பட்ட சாதிமக்களின் மீது சாதிய ஒடுக்குமுறைகளை ஏவி விடுவதை மறுக்கமுடியாது! இந்த ஒடுக்குமுறையில் பார்ப்பனியமும் ஒன்றுதான் . . . இந்த இடைத்தட்டு சாதிகளும் ஒன்றுதான்! இதுதான் புறவய உண்மை!

சேட்ஜிபிடி (ChatGPT) - செயற்கை அறிவுத்திறன் மென்பொருளைத் தமிழ்மொழிக்குச் சிறப்பாகப் பயன்படுத்த நாம் செய்யவேண்டியது என்ன?

 சேட்ஜிபிடி (ChatGPT) - செயற்கை அறிவுத்திறன் மென்பொருளைத் தமிழ்மொழிக்குச் சிறப்பாகப் பயன்படுத்த நாம் செய்யவேண்டியது என்ன?

---------------------------------------------------------------------------------------------------------
கணினிக்கு அதற்குரிய முறையில் தமிழ்மொழியைக் கற்றுக்கொடுத்தால்தான் (விதிகள் அடிப்படையிலோ -rule based அல்லது இயந்திரவழிக் கற்றல்வழியோ - machine learning), நாம் அதற்குக் கொடுக்கிற தமிழ்த்தொடர்களைப் புரிந்துகொள்ளமுடியும்.
பிறந்த குழந்தைக்கு எந்தவொரு இயற்கை மொழியையும் கற்றுக்கொள்ளும் ( உண்மையில் பெற்றுக்கொள்ளும்- acquire ) திறன் உள்ளது; அனைத்து இயற்கைமொழிகளுக்கும் உரிய பொதுமை இலக்கணம் Universal Grammar) பிறக்கும்போதே மனிதமூளைக்குள் (innate in the human brain) உள்ளது. அதைப் பயன்படுத்தித்தான் , குழந்தை தான் வாழுகிற சூழலில் உள்ள மொழியின் தரவுகளின் (linguistic data) உதவிகொண்டு, அந்த மொழியைப் பெற்றுக் கொள்கிறது.
அதுபோன்றே கணினியின் மூளைக்கு ( சில்லுவில் உள்ள மின்துகளியச்சுற்று - electronic circuits in the computer chip / processor) + மென்பொருள் ) இயற்கைமொழியைக் கற்றுக்கொள்ளும் திறன் அளிக்கப்படுகிறது; அந்தத் திறனைப் பயன்படுத்தி, அதற்கு அளிக்கப்படும் மொழித்தொடர்களின் உதவியுடன், கணினியானது இயற்கைமொழியைக் கற்றுக்கொள்ளும்.
இதை நாம்தான் - மனிதர்கள்தான்- செய்யவேண்டும்.
மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. ChatGPT - ஆனது கணினிக்கு இயற்கைமொழியைக் கற்றுக்கொள்ளும் திறனை ( Competence) அளிக்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்தி, கணினி ஒரு குறிப்பிட்ட இயற்கை மொழியின் தொடர்களைப் புரிந்துகொள்ளவோ அல்லது உருவாக்கவோ வேண்டும் (Performance) என்றால், அதற்குத் தேவையான அளவுக்குக் குறிப்பிட்ட மொழியின் தரவுகளை அளிக்கவேண்டும்.
ஆங்கிலத்திற்கு அதைக் கொடுத்துள்ளார்கள். எனவே இந்தச் செயற்கை அறிவுத்திறன் மென்பொருள் ஆங்கிலத்தொடர்களைப் புரிந்துகொள்கிறது; உருவாக்குகிறது. அதனால் கணினியானது தனக்குக் கொடுக்கப்படுகிற பணிகளைச் ( வினாவுக்கு விடை அளிப்பதோ, மொழிபெயர்ப்பதோ) செய்யமுடிகிறது.
ஆகவே தமிழ்த் தரவுகளை - கோடியே கோடி அளவிலான தரவுகளை - முறையாக இந்த மென்பொருளுக்கு அளித்தால், அதனுடைய தமிழ்மொழித்திறன் வளரும். அதன் உதவிகொண்டு, நாம் தமிழ்வழியே அதற்குக் கொடுக்கிற பணிகளை மேற்கொள்ளும்.
நாம் ஒருவருக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கும்போது, அவருக்கு நமது மொழி தெரிந்திருக்கவேண்டும் அல்லவா? இல்லையென்றால், நமது கட்டளையை எவ்வாறு புரிந்துகொள்ளமுடியும்? விடை தரமுடியும்?
எனவே, கணினியின் இன்றைய செயற்கை அறிவுத்திறனைத் தமிழர்களும் பயன்படுத்த வேண்டுமென்றால், தமிழ்மொழியின் அமைப்பு ஆழத்தைக் கணினிக்குப் புரியவைக்கவேண்டும்.
அதுவரை தமிழில் அது தவறுதான் செய்யும். படித்தான் என்பதைப் பிரிக்கச் சொன்னால், படித்து + தான் என்று பிரித்து, படித்து வினையடி, தான் இறந்தகாலவிகுதி என்று தவறாகத்தான் இன்று அது கூறுகிறது. இது அதனுடைய தவறு இல்லை. கணினிமொழியியல் அடிப்படையில் தமிழ் அமைப்பைப்பற்றிய ஆய்வு இங்கு வளரவில்லை! அவ்வளவுதான்!

''நாம் அசைக்காமல் மணி ஒலிக்காது'' '' நாம் பெருக்காமல் தூசி விலகாது''; எனவே , ''காற்று அடிக்கும் . . . மணி ஒலிக்கும் . . . தூசி விலகும்'' என்று எதிர்பார்ப்பது எவ்வளவு தவறானதோ, அதுபோன்றே நாம் ''எப்படியாவது மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் தமிழுக்கும் இதைச் செய்துவிடும் என்று எதிர்பார்த்து இருப்பது தவறு! (Bell won't ring unless we swing it! Dust never vanishes itself without sweeping !)

சேட்ஜிபிடி (ChatGPT) - செயற்கை அறிவுத்திறன் மென்பொருள்

 சேட்ஜிபிடி (ChatGPT) - செயற்கை அறிவுத்திறன் மென்பொருள்

--------------------------------------------------------------------------------------------------
நானும் இந்தச் செயற்கை அறிவுத்திறன் மென்பொருளை எனது கணினிப்பொறியியல் நண்பர் திரு. சரவணன் என்பவருடன் இணைந்து செயல்படுத்திப் பார்த்தேன். உண்மையில் வியக்கத்தக்க அளவில் இது அமைந்துள்ளது என்பதில் ஐயமே இல்லை. சில பொது அறிவு வினாக்களைக் கேட்டோம். சரியாகவே விடைகள் அமைந்தன.
அடுத்து, ஜாவா மொழியில் சில பணிகளுக்கான நிரல்களைக் கேட்டோம். உண்மையில் வியக்கத்தக்கவகையில் நிரல்கள் வந்தன.
அடுத்து, சில தமிழ்த் தொடர்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஆங்கிலத் தொடர்களுக்குத் தமிழ் மொழிபெயர்ப்பையும் கேட்டோம். ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் விடைகள் நன்றாகவே இருந்தன. பொருள் மயக்கங்களைத் தீர்த்து விடைகள் அளிப்பதில் சில சிக்கல்கள் நீடிக்கின்றன.
ஆனால் இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கணினிமொழியியலும் வளரவேண்டும். அப்போதுதான் மொழிபெயர்ப்பு விடைகள் சரியாக அமையும்.
அடுத்து, தமிழ்ச்சொற்களின் இலக்கண அமைப்பு, பகுபதப் பிரிப்பாய்வு தொடர்பான வினாக்களை முன்வைத்தோம். ஓரளவுக்குப் பரவாயில்லை.
ஆனால் இங்குள்ள சிக்கல் . . . தமிழ்ச் சொல்லியில்பற்றிய நமது ஆய்வு ... நமது பகுப்பாய்வின் அடிப்படைகள், புணர்ச்சி இலக்கணங்கள் ஆகியவற்றைப்பற்றி தமிழ் ஆய்வுலகம் அளிப்பதைப்பொறுத்துத்தான் இந்தச் செயற்கை
அறிவுத்திறனைத் தமிழுக்கும் வளர்க்கமுடியும்.
இந்த மென்பொருள் தமிழுக்குச் சிறப்பாகச் செயல்படுவதற்கு நாமும் சில பணிகளைச் செய்யவேண்டும். ஆங்கிலத்தொடர்களின் அமைப்பை அது புரிந்துகொண்டு செயல்படுவதற்குக் காரணம் . . . ஆங்கில வினாத்தொடர்கள், விடைத்தொடர்களைக் கோடிக்கணக்கில் ஆய்வுக்கு உட்படுத்தி, ஆங்கிலத் தொடர்களை (Language models) அது புரிந்துகொண்டுள்ளது.
அதுபோல, தமிழ்க்கும் அது செய்யவேண்டுமென்றால் நாமும் நமது வினாக்களைத் தமிழில் அதற்கு அளிக்கவேண்டும். அப்போதுதான் தமிழ்தொடர் அமைப்புக்களை இந்தச் செயற்கை அறிவுத்திறன் கற்றுக்கொள்ளமுடியும். அதற்கான மாதிரியை (language models) அது உருவாக்கிக்கொள்ளமுடியும்.
மொத்தத்தில் அறிவியல் உலகில் . . . குறிப்பாகக் கணினியியல் உலகில் . . . கணினிமொழியியல், மொழித்தொழில் நுட்ப உலகில் . . . இந்த மென்பொருள் ஒரு வியக்கத்தக்க சாதனை என்பதில் ஐயம் இல்லை.
நண்பர் மாலன் அவர்கள் கூறியுள்ளதுபோல . . . சில வேளைகளில் அதன் விடைகள் குறைபாடுகளுடன் இருந்தாலும் . . . அதைக் கேலி செய்யாமல் . . . அதைக் குறைசொல்லாமல் . . . என்ன சிக்கல் அதற்கு என்று ஆராய்ந்து, நாமும் அதற்குத் தமிழிலேயே உதவிகள் அளிக்கலாம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India