செவ்வாய், 28 ஜூலை, 2020

பேராசிரியர் ப. குமார்

பேராசிரியர் ப. குமார்..... திருவாரூரில் அமைந்துள்ள நடுவண் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர். என்னுடைய சிறந்த மாணவர்களில் ஒருவர். உழைப்பால் உயர்ந்த ஒருவர். தமிழ், மொழியியல் இரண்டிலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருபவர். சமூக உணர்வு உடையவர். பழகுவதற்கு இனிமையானவர்... எளிமையானவர். அவர் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.

முனைவர் ப. குமார் (1976) … தமிழாய்வுலகில் இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர். செயலாற்றல் மிகுந்த ஒரு ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் தமிழில் முதுகலைப் பட்டம் (2000), ஆய்வியல் நிறைஞர் பட்டம் (2001) முனைவர் பட்டம் (2008) ஆகியவற்றைப் பெற்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். நூலகவியல், வங்கமொழி ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகளையும் மேற்கொண்டுள்ளார். சில மாதங்கள் மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் பணியாற்றியபிறகு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் 2008 முதல் 2012 வரை சிறப்புநிலை விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் திருவாரூர் தமிழ்நாடு நடுவண் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக இணைந்து, பணியாற்றிவருகிறார். ஆய்வியல் நிறைஞர் படிப்பிற்காக ‘மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் ஒரு மிகச் சிறப்பான ஆய்வை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, முனைவர் பட்ட ஆய்விற்காக ‘ இயந்திர மொழிபெயர்ப்பு’ என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டார். இயந்திர மொழிபெயர்ப்பிற்குத் தேவையான அகராதி எவ்வாறு அமையவேண்டும் என்பதே அவரது ஆய்வு. கணினிமொழியியல் நோக்கில் இந்த ஆய்வை அவர் மேற்கொண்டுள்ளார். தற்போது மனித மூளைக்காக உருவாக்கப்பட்டுள்ள அகராதிகள் இயந்திர மொழிபெயர்ப்பிற்குப் போதுமானது இல்லை என்பதை நிறுவி, ஜேம்ஸ் புஸ்ட்ஜோவ்ஸ்கி ( James Pustejovsky) என்ற கணினிமொழியியலாளர் முன்வைத்துள்ள ‘உருவாக்க அகராதி’ (Generative Lexicon) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அகராதி அமைக்கப்படவேண்டும் என்று நிறுவியுள்ளார். மிகக் கடுமையான ஒரு தலைப்பை எடுத்து, வெற்றி கண்டுள்ளார் இவர். இன்றைக்கு மிகத் தேவையான ஒரு ஆய்வாக இது அமைந்துள்ளது. ‘மொழிபெயர்ப்பில் சிக்கல்கள்’ என்ற ஒரு நூலின் ஆசிரியராகவும், ‘பிங்கல நிகண்டு ‘ என்ற நூலின் தொகுப்பாளராகவும், ‘ஆய்வுக்கதிர்’ என்ற ஒரு தொகுப்பிற்குப் பதிப்பாளராகவும் இருந்துள்ளார். தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகளில் பங்கேற்று, பல ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். மொழிபெயர்ப்பியல், அகராதியியல், தரவுமொழியியல் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்திவருகிறார். ஆய்வுக் கட்டுரைக்கான போட்டிகள் பலவற்றில் பங்கேற்று, பல பரிசுகளைப் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் பல பணிமனைகளையும் கருத்தரங்குகளையும் என்னுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்த உதவியுள்ளார். முதுகலை மாணவர்களுக்கும் இளம் ஆய்வாளர்களுக்கும் அன்றும் இன்றும் துணையாக இருந்து செயல்படும் ஒரு பேராசிரியர் இவர் என்றால் அது மிகையாது. அவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்! மின்னஞ்சல் : kumarchomsky@gmail.com செல்பேசி : 94890 54286, 91595 14818


ஞாயிறு, 26 ஜூலை, 2020

மார்க்சியப் புரிதலின் முக்கியக் கூறுகள் ......

மார்க்சியப் புரிதலின் முக்கியக் கூறுகள் ......
-------------------------------------------------------------------------
1) இயற்கையும் சமுதாயமும், இவற்றைப்பற்றிய நமது கருத்துகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே... வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். இந்த மாற்றமானது வெறும் மாற்றமாக இல்லாமல்.... அடுத்த கட்ட வளர்ச்சியாக ... பண்புரீதியான மாற்றமாக .... வெறும் வட்டமாகச் சுற்றாமல் (cyclic) , பல்வேறு உயர்நிலை வட்டங்களைக்கொண்ட சுருள் வட்டமாக (spiral) அமையும்.
2) ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வளர்ச்சிக்கு (குறிப்பாகப் பொருளாதார வளர்ச்சிக்கு) அடிப்படையாக இருந்த அதே சமுதாயப் பொருளாதார உறவுகள் அல்லது கட்டமைப்புகள் , பின்னர் ஒரு கட்டத்தில் அச்சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் தடையாக மாறும். அந்நேரத்தில் அதற்கு அடுத்த கட்ட மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடைகளாக அமைகிற அந்தச் சமுதாய உறவுகள் மாறவேண்டும். மாற்றப்படவேண்டும். அப்போது அந்த மாற்றங்களைத் தடுக்க முயலும் வர்க்கங்களுக்கும் மாற்றங்களுக்காகப் போராடும் வர்க்கங்களுக்கும் இடையிலே முரண்பாடு முற்றி, தீவிர வர்க்கப் போராட்டமாக மாறும். இந்த வர்க்கப் போராட்டத்தின் இயக்கமும் வெற்றியுமே தேவையான அடுத்த கட்ட சமுதாய உறவுகளைக் கொண்டுவரும். இந்த வர்க்கப் போராட்டமே சமுதாய மாற்றத்திற்குத் தீர்மானமான சக்தி.
3) மேற்கூறிய வர்க்கப் போராட்டங்களின் அடிப்படைப் பிரச்சினை : எந்த வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கவேண்டும் என்பதே ஆகும். எனவே அரசியல் அதிகாரம் என்பது ஆளும் வர்க்கம் ஆளப்படுகின்ற வர்க்கத்தை அடக்கியாளப் பயன்படுத்தும் ஒரு பலாத்கார கருவியே ஆகும். பழைய சமுதாயக் கட்டமைப்பினால் பயன் பெறும் வர்க்கங்கள் ... தங்கள் கைகளில் இருக்கிற அரசியல் அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும். புதிய மாற்றத்திற்காப் போராடும் வர்க்கங்கள் அதைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளப் போராடும். எனவே வர்க்கப் பிரிவினைகள் சமுதாயத்தில் இருக்கும்வரை , வர்க்கப் போராட்டங்களின் இறுதி நோக்கமாக... அரசியல் அதிகாரப் பிரச்சினையே நீடிக்கும்.
4) சமுதாயத்தின் தொடக்கக் கட்டத்தில் வர்க்கமற்ற ஒரு புராதானச் சமுதாயமாக இருந்த மனித சமுதாயம், வர்க்கங்கள் உடைய ஒரு சமுதாயமாக மாறியதும் தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புகளால் இல்லை. மேற்கூறிய சமுதாய வளர்ச்சி விதிகளே அடிப்படை அதற்கு . அதுபோன்று ஒரு கட்டத்தில் வர்க்கம் அற்ற பொதுவுடமைச் சமுதாயமாக வளர்ச்சியடைவதும் சமுதாய வளர்ச்சி விதியின் அடிப்படையே. இது தனிமனித விருப்பு வெறுப்புகளைச் சார்ந்த ஒன்று இல்லை. இவ்வாறு, மனித சமுதாயமானது வர்க்கமற்ற சமுதாயம், பின்னர் வர்க்கங்களுடைய சமுதாயம், இறுதியில் வர்க்கம் அற்ற சமுதாயம் என்று வளர்ச்சி அடைவதற்குப் புறவயமான சமுதாய வளர்ச்சி விதிகளே அடிப்படை. இந்தப் புறவயமான வளர்ச்சி விதிகளே வர்க்கங்களின் போராட்டங்களுக்கு அடிப்படை. எனவேதான் பொதுவுடமை அல்லது சோசலிசம், கம்யூனிசம் என்ற சமுதாயம் மனிதகுல வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதைத் தனிமனிதர்களின் விருப்பு வெறுப்பு தடுக்கமுடியாது.
5) எனவே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் புதிய சமுதாய அமைப்புக்காகப் போராடும் வர்க்கங்கள் புரட்சிகர... முற்போக்கு வர்க்கங்களாக நீடிக்கும். ஆனால் அதே வர்க்கங்கள் அடுத்த கட்டத்தில் .... தோன்றிய சமுதாய அமைப்பு அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்வதை எதிர்த்துப் போராடும்போது, பிற்போக்கு வர்க்கங்களாக மாறிவிடுகின்றன.
6) இவ்வாறு , (அ) சமுதாய அமைப்பு தொடர்ந்து மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டவை என்பதையும் (ஆ) அது சமுதாயத்தின் புறவய விதிகளை அடிப்படையாகக்கொண்டது, தனிமனிதர்களின் விருப்புவெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டது இல்லை என்பதையும் (இ) வர்க்கப் போரட்டமே சமுதாய வளர்ச்சியைத் இயக்குகிறது அல்லது தீர்மானிக்கிறது என்பதையும் (ஈ) வர்க்கப் போராட்டங்களின் உச்சகட்ட நோக்கம் அல்லது வளர்ச்சி என்பது அரசியல் அதிகாரம் தொடர்புடையதே; எந்த வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரம் இருப்பது என்பதே ஆகும்.
7) சோசலிச சமுதாயத்திற்கான போராட்டத்தில் வெற்றிபெறுகிற பாட்டாளிவர்க்கம்... அரசியல் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுக்கிற பாட்டாளிவர்க்கம் ... அதன்பின்னரும் தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும். ஏனென்றால் அரசியல் அதிகாரத்தை இழந்த பழைய பிற்போக்கு வர்க்கங்கள் நீடிக்கின்றன. அவற்றின் நீடிப்புக்குக் காரணம்... நீடிக்கிற பழைய சமுதாய அமைப்பின் கூறுகே ஆகும். அவை அனைத்தும் அழிந்தபின்னர்தான், வர்க்கப் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும்.
எனவே,
(1) சமுதாய மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் அடிப்படை உந்துசக்தி வர்க்கப் போராட்டங்களே என்பதையும்
(2) அவை இறுதியில் அரசியல் அதிகாரப் பிரச்சினையே என்பதையும்
(3) வர்க்கங்கள் சமுதாயத்தில் நீடிக்கும்வரை வர்க்கப் போராட்டங்களும் நீடிக்கும் என்பதையும் ,
(4) வர்க்கமற்ற பொதுவுடமைச் சமுதாயத்தை நிறுவ, பாட்டாளிவர்க்கத் தலைமையில் அரசியல் அதிகாரம் ... அரசு இருக்கவேண்டும் என்பதும்
(5) ஒரு கட்டத்தில் இந்த அரசியல் அதிகாரத்தின் பலாத்காரக் கூறுகள் மறைந்துவிடும் என்பதையும் புரிந்துகொளவதே மார்க்சியப் புரிதலின் முக்கியக் கூறுகள் ஆகும் என்பது என்னுடைய அறிவுக்கு எட்டிய புரிதல்!

சனி, 25 ஜூலை, 2020

மார்க்சியம் பொய்த்துவிட்டதா? பொதுவுடமை தோற்றுவிட்டதா?

மார்க்சியம் பொய்த்துவிட்டதா? பொதுவுடமை தோற்றுவிட்டதா?
--------------------------------------------------------------------------..................................................................
'' ரசியாவில் கம்யூனிசம் தோல்வி'' , ''சீனாவில் கம்யூனிசம் தோல்வி'' ''இன்று உலகில் எங்குமே கம்யூனிச நாடுகள் கிடையாது'' ..... காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் முன்வைத்த சோசலிச, கம்யூனிச சமுதாயம் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று '' என்ற குரல் பல முனைகளில் ''ஒலிக்கப்பட்டு வருகிறது''! இந்தக் குரலை எழுப்புவர்கள் யார்? அதற்கான பின்னணி என்ன?
இலட்சக்கணக்கான உயிர்த்தியாகங்களால் உருவாக்கப்பட்ட சோசலிச சமுதாயங்கள் பாதிப்புக்கு உட்பட்டு இருக்கிறதே என்று வருத்தப்படுபவர்களா? அல்லது ''அப்பாடி , இனி நமக்கு ஆபத்து இல்லை என்று பெருமூச்சு விடும் '' சக்திகளா?
ஒரு நாடு தன்னுடைய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பின்னடைவைச் சந்தித்தால் ... அது ஏவிய ஒரு விண்கலம் செயல்படாவிட்டால் ... யார் மகிழ்வடைவார்கள்? அந்த நாட்டு மக்களா அல்லது அந்த நாட்டின் எதிரி நாடுகளா? நிச்சயமாக எதிரி நாடுகள்தான்! பின்னடைவுக்கு உட்பட்ட நாட்டின் மக்கள் என்ன சொல்வார்கள் ? '' இது ஒரு தற்காலிகப் பின்னடைவுதான். ஏதோ சில தொழில்நுட்பப் பிரச்சனைகளால் ஏற்பட்ட ஒரு பின்னடைவு. தோல்வி இல்லை. மீண்டும் தவறுகளைக் களைந்து வெற்றிபெறுவோம். அறிவியல் , தொழில்நுட்பம் பொய் ஆகாது'' ! ஆனால் எதிரி நாடுகளோ, '' பின்னடைவு இல்லை. தோல்வி'' என்று கூறும்!
இலட்சக்கணக்கான மக்களின் உயிர்த்தியாகங்களால் கட்டப்பட்ட சோவியத் ரஷியா .. இரண்டாம் உலகப் போரிலே இட்லர், முசோலினி பாசிசக் கூட்டணியை முறியடித்து... தன்னைமட்டும் மட்டுமல்ல , அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளையும் காப்பாற்றிய சோவியத் ரஷியா ... ஸ்டாலின் மறைவுக்குப்பின்னர் ... 1956-இல் குருசேவ் தொடங்கிவைத்த ''சோசலிசத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சி தொடர்ந்து , '' 1990 வாக்கில் கோர்பச்சோவால் ''சோசலிசத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சியின் வெற்றிக்கொடி நாட்டப்பட்டது''. இதை நாம் மறுக்கவில்லை. 100 விழுக்காடு உண்மைதான். சோசலிசத் தளம் பின்னடைவுக்கு உட்பட்டுவிட்டது !
1917 -இல் தோற்றுவிக்கப்பட்ட ரஷிய சோவியத் தற்காலிகமாக உடைக்கப்பட்டுவிட்டது. சரி. இது சோசலிசத்திற்கு நிரந்தரத் தோல்வியா? அல்லது ஒரு தற்காலிகப் பின்னடைவா? பின்னடைவு என்றால் அதற்குக் காரணங்கள் என்ன? நிச்சயமாக இதற்கு விடை காண்பது முற்போக்குச் சக்திகளின் பாட்டாளிவர்க்கக் கடமை!
உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்.... நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கு எதிரான முதலாளித்துவப் புரட்சி .... ஒரு சில ஆண்டுகளில் வெற்றிபெற்றுவிடவில்லை. முதலாளித்துவ சமுதாயம் தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்க ஒரு சில நூற்றாண்டுகள் ஆகியது. பழைய சமுதாயத்தின் அனைத்து வேர்களையும் அறுத்தெறிந்து .. முதலாளித்துவ சமுதாயம் முன்னேற ... சில நூற்றாண்டுகள் ஆகியது. இது சமூக வரலாற்று வளர்ச்சியில் தெளிவாகத் தெரிகின்ற ஒரு உண்மை. அடிமைச் சமுதாயத்தை எதிர்த்து வெற்றிபெற்ற நிலப்புரபுத்துவ சமுதாயத்திற்கும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பல நூற்றாண்டுகள் ஆகியது வரலாற்று உண்மை. இடைப்பட்ட காலங்களில் பின்னடைவுகள் !
சோவியத் ரஷியாவில் பாட்டாளிவர்க்கமானது லெனின் தலைமையில் 1917-இன் இறுதியில்தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்தக் காலகட்டத்தில் ரசியாவின் வளர்ச்சியானது சோசலிசத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட உற்பத்தி வளர்ச்சி நிலையில்தான் சோசலிசக் கட்டுமானத்தை நிர்மாணிக்கமுடியும். அப்போது ஜெர்மனியின் தொழில் வளர்ச்சி அத்தகைய ஒரு வளர்ச்சியைப் பெற்றிருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்தி, சோசலிசக் கட்டுமானத்தை நிர்மாணிக்கும் பணிக்குத் தேவையான அளவுக்கு .... பாட்டாளிவர்க்க இயக்கம் வளர்ச்சியடைவில்லை. ஆனால் ரசியாவிலோ... பாட்டாளிவர்க்கம் தயாராக இருந்தது. ஆனால் தொழில் வளர்ச்சி அதற்குத் தயார் இல்லாத ஒரு நிலை.
இந்த ஒரு இக்கட்டான சூழலில் ... லெனின் தலைமையிலான பாட்டாளிவர்க்கக் கட்சி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்ததால்... லெனின் தளராமல் ஒரு தெளிவான பொருளாதாரத் திட்டத்தை வகுத்தார். உடனடியாகச் சோசலிசப் பொருளாதாரத்தை முன்வைக்கமுடியாததால்... ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை (New Economic Policy - NEP) வகுத்தார். அங்கு நீடித்த ... வளர்ந்திருந்த முதலாளித்துவ சக்திகளுக்குப் பல சலுகைகளை அறிவித்தார். அதுவே ரசியாவின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்ற முடிவுக்கு வந்தார். பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரம் இருந்ததால், முதலாளித்துவச் சக்திகளின் ''எதிர்ப்புரட்சியை'' முறியடிக்கமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அன்றைய நிலையில், ரசியாவின் பாட்டாளிவர்க்க அரசியல் அதிகாரத்தை உள்ளிருந்தே உடைக்க முயற்சிக்கும் முதலாளித்துவ சக்திகள் ஒருபுறம்... மறுபுறம் உலகிலேயே முதன்முதலாக நிறுவப்பட்ட பாட்டாளிவர்க்க அரசைச் சீர்குலைக்கப் பகீரத முயற்சிகள் எடுத்துவந்த ஏகாதிபத்திய நாடுகள்.... அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ! ஏகாதிபத்திய பெருங்கடலின் நடுவே ஒரு சிறு தீவுபோல்தான் சோவியத் ரசியா... ஆனால் உலக அளவிலான சோசலிசப் புரட்சிக்கான ஒரு போர்த்தளமாக அது நீடித்தது. உலகப் பாட்டாளிவர்க்கத்திற்கு வழிகாட்டும் கலங்கரைவிளக்கமாக நீடித்தது.
இங்கு மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு உண்மை.. பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான தொடர்ந்த வர்க்கப் போராட்டத்தின்மூலம் 1917 - அக்டோபர் புரட்சியை வெற்றி அடையச்செய்தவுடன் ... பாட்டாளிவர்க்கமானது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன்.... ரசியாவில் வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற முடிவுக்கு வரமுடியாது என்பதில் லெனின் மிகத் தெளிவாக இருந்தார். அக்டோபர் புரட்சிக்குப் பிறகும் வர்க்கப்போராட்டம் .... பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ சக்திகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் நீடிக்கும்... நீடித்துத்தான் தீரும் . ஏனென்றால், புரட்சிக்கு முன்பு ஆளும் வர்க்கமாக நீடித்த பிற்போக்கு வர்க்கங்கள் ,அழிந்துவிடவில்லை. புரட்சிக்குப் பின்பு ஆளப்படும் வர்க்கமாக மாறியுள்ளது. அவ்வளவுதான். அது தொடர்ந்து நீடிக்கிறது அதனுடைய அத்தனை வேர்களும் அழிக்கப்படும்வரை வர்க்கப் போராட்டம் நீடிக்கும். நீடிக்கவேண்டும் .
அக்டோபர் புரட்சிக்கு முந்தைய வர்க்கப் போராட்டத்திற்கும் அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய வர்க்கப் போராட்டத்திற்கும் ஒரு அடிப்படை வேறுபாடு... முன்னர் அரசியல் அதிகாரம் பிற்போக்குச் சக்திகளின் கைகளில் இருந்தது.. இப்போது பாட்டாளிவர்க்கத்தின் கைகளில் இருக்கிறது. அவ்வளவுதான். இந்த அரசியல் அதிகாரத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு.... பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான அரசு, தொடர்ந்து வர்க்கப் போராட்டதைக் கொண்டுசெல்லவேண்டும் என்ற தெளிவு லெனினுக்கு இருந்தது. அவருக்குத் துணையாக ஸ்டாலினும் செயல்பட்டார். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே - 1924 ஜனவரியிலேயே - லெனின் மறைந்துவிட்டார். அவருடைய திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளிவர்க்கத் தலைமை ... கம்யூனிஸ்ட் கட்சி .... மிக உறுதியாக இருந்தது. அப்போதைய மத்தியக் குழுவின் முழுமையான ஒப்புதடலுடன்தான் ஸ்டாலின் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்தார். ஆனால் லெனின் முன்வைத்த புதிய பொருளாதாத் திட்டத்தால் பயனடைந்த முதலாளித்துவ வர்க்கம், ஸ்டாலினுக்கும் பாட்டாளிவர்க்க அரசுக்கும் பல நெருக்கடிகளை ..... வெளியில் இருந்த அமெரிக்கா உட்பட பல ஏகாதிபத்திய நாடுகளின் மறைமுக உதவிகளுடன்... கொடுத்தது.
பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான வர்க்கப் போராட்டம் தொடர்ந்தது. தோல்வியடைந்த பிற்போக்கு வர்க்கச் சக்திகள் , நேரடியாகவும், மறைமுகமாகக் பொதுவுடமைக் கட்சிக்கு உள்ளும் , அரசுக்கு உள்ளும் இருந்துகொண்டு, பாட்டாளிவர்க்க அரசைச் சீர்குலைக்கப் பலவழிகளில் போராடின. இதற்கிடையில் இரண்டாவது உலகப் போர். உலக வரலாற்றிலேயே பாசிச சக்திகளை ஒழித்துக்கட்டுவதில் லட்சக்கணக்கான மக்களைத் தியாகம் செய்த ரசியப் பாட்டாளிவர்க்கத்திற்குத் தலைமைதாங்கிய ஸ்டாலின் 1953 ஆண்டு மறைந்தார். அதுவரை மறைந்திருந்த பிற்போக்குச் சக்திகள் குருசேவ் தலைமையில் ஒன்று திரண்டு, பாட்டாளிவர்க்க அரசைப் பலவீனப்படுத்தின. இது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே. பாட்டாளி வர்க்கக் கட்சியானது திருத்தல்வாதிகளின் கைகளில் சிக்கியது. அதன் விளைவு.... பாட்டாளி வர்க்க அரசு பலவீனம் அடைந்தது. அதன் உச்சக் கட்டம்... 1990 வாக்கில் கார்போச்சோவின் பெரஸ்ட்ரோக்கியா ( Perestrokia) ''தத்துவம்'' ரசியாவில் பாட்டாளி வர்க்க அரசுக்கு முடிவு கட்டியது. ''அதற்காக '' அவருக்கு 1990-இல் நோபல் பரிசே கொடுக்கப்பட்டது. அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய வர்க்கப் போராட்டம் ... அடுத்த நிலைக்கு ..வேதனைக்குரிய நிலைக்கு ... வந்தது. அது நீடிக்கிறது. தற்காலிகமான ஒரு பின்னடைவு பாட்டாளி வர்க்கத்திற்கு. ஆனால் வரலாற்றுச் சக்கரத்தை ... முன்நோக்கிச் செல்லும் சோசலிசத்திற்கான வர்க்கப் போராட்டத்தை.... பிற்போக்கு சக்திகளால் தொடர்ந்து தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக மீண்டும் பாட்டாளி வர்க்க அரசு அமையும். சோசலிச நிர்மாணப் பணி நிறைவேறும்.
இந்தத் தற்காலிகப் பின்னடைவைக் கண்டு மகிழ்வடைகிற '' சக்திகள்'' தான் ... இப்போது '' கம்யூனிசம் தோற்றுவிட்டது, மார்க்சியம் பொய்த்துவிட்டது'' என்று ''ஆனந்தக் குரல் '' எழுப்புகிறது. அவர்களது ''ஆனந்தம் '' நீடிக்காது. ஏனென்றால் மார்க்சின் சோசலிசம் ஒரு கற்பனாவாத சோசலிசம் இல்லை. அறிவியல்பூர்வமான சோசலிசம். புறவயமான ஒரு உண்மை. இந்த உண்மைபற்றி அடுத்த தொடரில் மேலும் விளக்குகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
ரசியாவில் ஏற்பட்ட பின்னடைவுக்குக் காரணம் .... அங்கு நிலவிய பொருளாதாரக் கட்டமைப்பு.... வர்க்கப் போராட்டத்தின் தொடர்ச்சி ஆகியவையே என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தனிநபர்களின் செயல்களே அடிப்படை என்று நான் கூறவரவில்லை. வெற்றிக்கோ பின்னடைவுக்கோ.... ரசியாவில் அக்டோபர் புரட்சிக்குப்பின்னர் தொடர்ந்த வர்க்கப் போராட்டமே காரணம் என்பதில் ஐயம் இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------
நான் முகநூலில் எழுதுவது.... பொதுவான மக்களிடையே கம்யூனிச எதிர்ப்பாளர்கள் உருவாக்குகிற பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்காகவே. மார்க்சியத் தத்துவத்தில் குறிப்பான, தெளிவான ஆய்வுகளை மேற்கொள்கிற தோழர்களுக்கு இல்லை. மிக நுண்ணியமான கருத்துகளையெல்லாம் வேறு தளங்களில் பகிர்ந்துகொள்ளலாம். இங்கு நான் வலியறுத்த விரும்புவது (1) சோவியத் அக்கோடபர் புரட்சி வெற்றிபெற்ற சூழலில் ரசியாவில் உடனடியாகச் சோசலிசக் கட்டுமானத்தைக் கொண்டுசெல்லமுடியாத பொருளாதாரக் கட்டமைப்பு நிலவியது.. ( 2) அக்டோபர் புரட்சியின் வெற்றியுடன் வர்க்கப்போராட்டம் நின்றுவிடவில்லை. அது தொடர்ந்தது. கட்சிக்குள்ளும அரசுக்குள்ளும் அது பலவகைகளில் தொடர்ந்தது. அதன் தொடர்ச்சியே இறுதியில் பாட்டாளிவர்க்க அரசு பலவீனமடைந்து, இறுதியில் எதிர் வர்க்கங்களின் அரசாக அது மாறியது. (3) மேலும் உலகில் முதன்முதலாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ரசிய பாட்டாளிவர்க்க அரசை வீழ்த்த ரசியாவுக்கு வெளியேயும் ஏகாதிபத்திய அரசுகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டன. (4) ரசியாவில் நிகழ்ந்துள்ளது பாட்டாளிவர்க்கத்திற்கு ஒரு பின்னடைவே. தோல்வி அல்ல. ஒரு புதிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு தனது வழியில் தொடர்ந்து, நிலைப்படுத்தப்பட நீண்ட காலம் ஆகும். அதற்கிடையில் இதுபோன்ற பல பின்னடைவுகள் ஏற்படும். ஆனால் இறுதி வெற்றி பாட்டாளிவர்க்கத்திற்கே ( 5) மேலும் சோசலிசக் கட்டுமானம் என்பது... அதன் வெற்றி என்பது நிச்சயம் நிறைவேறும். அதற்குக் காரணம்... சோசலிசம் என்பது நமது விருப்பம் என்பதைக் காட்டிலும் மனித குல வரலாற்றில் ஒரு புறவயமான சமூகப் பொருளாதார இயக்கத்தின் ஒரு தவிர்க்கமுடியாத கட்டமைப்பு. இதற்குமேல் மிகத் துல்லியமான ஆய்வுகளையும் கருத்துகளையும் வேறு தளங்களில் வைத்துக்கொள்ளலாம் என்பதே எனது கருத்து. அதுபோன்ற விவாதங்களில் நாம் ஈடுபட்டால்.... பொது மக்களிடையே நாம் வலியுறுத்த விரும்புகிற கருத்துகள் போய்ச் சேராது. இதுபற்றிய விரிவான கருத்துகளை முன்வைக்க விரும்பும் தோழர்கள் அதை வேறு தளங்களில் தொடரலாம் என்பதே எனது கருத்து. அதற்காகக் கருத்துகள் கூறவேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை. எந்தத் தளத்தில்... எதைப்பற்றி... எவ்வளவு விளக்கமாக எழுதலாம் என்பதுபற்றி நாம் தெளிவாக இருக்கவேண்டும். 
------------------------------------------------------------------------------------------------------
போராட்டமே நிரந்தரமானது!
--------------------------------------------------------------------------
எதை எடுத்துக்கொண்டாலும் அதற்குள் ஒன்றுக்கு ஒன்று எதிரான இரண்டு கூறுகள் இருக்கும். அணுவில் நேர்மின் துகள்- எதிர்மின்துகள்; உயிர் இயக்கத்தில் திசுக்களின் புதுப்பித்தல்- திசுக்களின் அழிவு; வாழ்க்கையில் வரவு-செலவு. சமூக வர்க்கப் போராட்டத்தில் ஒடுக்கப்படும் வர்க்கம்- ஒடுக்குகின்ற வர்க்கம்.
ஒன்றுக்குள் இருக்கிற இரண்டு எதிர்மறைகளுக்கு இடையே எப்போதும் போராட்டம் நீடிக்கும். ஒன்றை ஒன்று ஆதிக்கம் செலுத்த அவை போராடும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றுக்குள் எந்த எதிர்மறை சக்தி ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதுவே அப்பொருளின் தன்மையை எடுத்துக்காட்டும். திசுக்களின் அழிவைவிட, அவற்றின் புதுப்பித்தல் ஆதிக்கம் செலுத்தினால், நாம் உயிருடன் இருக்கிறோம் என்று சொல்கிறோம். அழிவு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் இறப்பை எதிர் நோக்குகிறோம். வரவு அதிகமாக இருந்தால், ஒருவர் பணக்காரர். செலவு அதிகமாக இருந்தால், அவர் கடன்காரர். கடன்காரர் செலவைக் கட்டுப்படுத்த ... வரவின் ஆதிக்கத்தைக் கொண்டுவர போராடுகிறார். ஒரு எதிர்மறை இல்லாமல், மற்றொரு எதிர்மறை கிடையாது எதிலும்! இதுவே தத்துவத்தில் '' முரண்பாடு '' என்று அழைக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒன்றுக்குள் நடைபெறுகிற எதிர்மறைப் போராட்டங்களைச் சரியாகக் கணித்து.... போராட்டத்தை வழிநடத்துவதிலேயே ஒருவரின் திறமை இருக்கிறது. இது தனிநபருக்கும் பொருந்தும். ஒரு அரசியல் கட்சிக்கும் பொருந்தும். ஒரு அரசுக்கும் பொருந்தும். ஆனால் தில் முதலில் கவனிக்கவேண்டியது... தொடக்கத்தில் வளரும் இளம் பண்பு... போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற ஒன்றாக இருக்கும்.
ஆனால் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும் வளரும் சக்தியாக இருக்கும் எதிர்மறையே வெற்றி பெறும். இது இயற்கையின் இயற்கை விதி.
-----------------------------------------------------------------------------------------------------
முகநூலில் ஒன்றைப்பற்றி எழுதுவதுகூட போராட்டத்தின் ஊடேதான். மனதிற்குள் ஒரு போராட்டம் நிகழும். எதை எப்போது எழுதுவது, யாருக்கு எழுதுவது, எப்படி எழுதுவது, எந்த அளவு எழுதுவது, .... அனைத்திலும் போராட்டங்கள் மனதில் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இந்தப் போராட்டத்தின் இறுதியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கலாம். சிலவேளைகளில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காது. அப்போது எங்கே நாம் போராட்டத்தில் தவறினோம் என்பதைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு, அடுத்த பதிவில் வெற்றி அடையவேண்டும்.

வெள்ளி, 24 ஜூலை, 2020

''மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' - தேன் தடவிய ஒரு தோட்டா!

''மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' - தேன் தடவிய ஒரு தோட்டா!
--------------------------------------------------------------------------
''மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' என்ற ஒரு தொடர் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் தங்களை '' மார்க்சியவாதிகள்'' என்று கூறிக்கொண்டேதான் இந்த முழக்கத்தை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் முன்வைக்கிற வாதங்களில் மிக முக்கியமான இரண்டு கருத்துகள் - (1) உலகில் அனைத்தும் மாறக்கூடியதே. அனைத்தும் மாற்றத்திற்கும் உட்பட்டது என்று கூறுகிற விதியைத் தவிர, பிற விதிகள் அனைத்தும் மாறக்கூடியதே. இதுவே மார்க்சியத்தின் அடிப்படைக்கொள்கை. எனவே மார்க்சியமும் மாற்றத்திற்கு உட்பட்டதே. (2) மார்க்சியத்தின் அடிப்படையே சமுதாயம் மாற மாற, வேறுபட வேறுபட, அச்சமுதாயங்களைபற்றிய மார்க்சிய முடிவுகளும் மாறுகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய முதலாளித்துவச் சமுதாயத்தின் பண்புகள்பற்றிய மார்க்சின் '' மூலதனம் '' என்ற ஆய்வில் கூறப்பட்டுள்ள கருத்துகள், 20 ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்துள்ள ஏகாதிபத்தியச் சமூகத்திற்குப் பொருந்தாது. எனவேதான் லெனின் ஏகாதிபத்தியம்பற்றிய தனது புதிய கருத்துகளை முன்வைத்தார். அதுபோன்றே, சீன சமுதாயத்தில் மாவோ தலைமையில் புரட்சி வெற்றிபெற்றதற்குக் காரணமே , சீனாவுக்கேற்ற '' மார்க்சியத்தை'' மாவோ முன்வைத்ததே காரணம்.
மேற்கூறியதோடு, மார்க்சியத்தை எதிர்ப்பவர்கள் முன்வைக்கிற மற்றொரு கருத்து.... '' ரசியா உட்பட பல சோசலிச நாடுகளில் கம்யூனிசம் தோற்றுவிட்டது. எனவே சமுதாயம்பற்றிய மார்க்சியக் கோட்பாடுகள் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது''
முதலில் மார்க்சியம் என்றால் என்ன என்பதுபற்றிய வினாவுக்கான விடை காணவேண்டும். இயற்கை, சமுதாயம் ஆகியவற்றின் இயக்கங்களுக்கு அடிப்படையான அறிவியல் விதிகளே அவை. அந்த விதிகளைக்கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகிற சமுதாயப் பண்புகளை ஆராயவேண்டும். ஒரு நாட்டின் சமுதாய அமைப்பு மற்றொரு நாட்டின் சமுதாய அமைப்பிலிருந்து, பல பண்புகளில் வேறுபடலாம். ஆனால் அவற்றைக் கண்டறிய அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிற பொது விதிகளே.... ஆய்வுமுறைகளே மார்க்சியம். முதலாளித்துவச் சமுதாயம்பற்றிய மார்க்சின் ஆய்வுக்கும், ஏகாதிபத்தியம்பற்றிய லெனின் ஆய்வுக்கும், சீனச் சமுதாயத்தின் அரைக் காலனித்துவ அரை நிலப்புரபுத்துவ நாட்டைப்பற்றிய மாவோவின் ஆய்வுக்கும் ... இவை அனைத்துக்கும் பின்பற்றப்பட்ட அடிப்படை ஆய்வு விதிகள் .... ஒன்றே. இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அணுகுமுறையே ... அனைத்திலும் பின்பற்றப்பட்டன. மேற்கூறிய சமுதாயங்கள்பற்றிய முடிவுகள் மாறுபட்டவை. ஆனால் ஆய்வுமுறைகள்.... விதிகள்.... ஒன்றே. இந்த ஆய்வுமுறைகள்தான் மார்க்சியம்.
பிரபஞ்சத்தின் (Universe) இயக்கம்பற்றிய அறிவியல் விதிகளில் மிக முக்கியமானவை ஈர்ப்பு (gravitation) , ஈர்ப்புவிசை (gravity) பற்றியவை ஆகும். இது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களுக்கும் (stars) கிரகங்களுக்கும் (planets) பொருந்தும். இதற்கு உட்படாத எந்த ஒன்றும் பிரபஞ்சத்தில் கிடையாது. பிரபஞ்சம் என்பது ஒரு மிகப்பெரிய படுக்கை விரிப்பு என்று கொள்வோம். அதில்தான் அனைத்து நட்சத்திரங்களும் கிரகங்களும் தங்களுக்கே உரிய இடத்தைப் பெற்றுள்ளன. குறிப்பிட்ட நட்சத்திரம் அல்லது கிரகத்தின் பொருள்திணிவு (mass) , அளவு ஆகியவற்றைப் பொறுத்து.... அவை பிரபஞ்சத்தில் பெற்றுள்ள இடவெளியும் (space) குழி அல்லது பள்ளமும் அமைகின்றன.
அவ்வாறு அமைகிற நட்சத்திரம் அல்லது கிரகம், தனது குறிப்பிட்ட பொருள்திணிவால் பிரபஞ்ச இடவெளியில் உருவாக்கியுள்ள குழிகளின் ஆழ அகலத்தைப் பொறுத்து.... அது தன்னருகே வரும் பிற பொருள்களை ( பிற நட்சத்திரம், கிரகம் உட்பட) ஈர்க்கிறது. இதுவே ஈர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. எந்த விகிதத்தில் அது பிறவற்றை தன்னைநோக்கி இழுத்துக்கொள்கிறது (attracting or pulling) . , அதுவே ஈர்ப்புவிசை என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஈர்ப்பு, ஈர்ப்புவிசை என்ற அறிவியல் கோட்பாடுகள் பிரபஞ்சத்தில் நிலவும் அனைத்துக்கும் பொருந்தும். ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரம் அல்லது கிரகத்தின் ஈர்ப்பு விசையின் அளவு மாறும். அவ்வளவுதான். பிரபஞ்சத்தில் நிலவுகிற கருந்துளைகள் (Black holes) என்ற அமைப்புகள் மிகப்பெரிய அளவில் ஈர்ப்புவிசை கொண்டவை. அவற்றால் உள்ளே இழுக்கப்பட்ட எதுவும் மீண்டு வரமுடியாது. இங்கு நாம் மிகக் கவனமாகக் கவனிக்கவேண்டியது.... ஈர்ப்பும் ஈர்ப்பு விசையும் பொதுவான அறிவியல் கோட்பாடுகள் (Universal laws) . ஆனால் அவற்றை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு நட்சத்திரங்களின் அல்லது கிரகங்களின் ஈர்ப்பு விசைகளை அளக்கும்போது ... அவற்றின் அளவுகள் மாறுபட்டு இருக்கும். மாறுபட்டுத்தான் இருக்கிறது.
இதுபோன்றதுதான் மார்க்சியத்தின் அடிப்படை ஆய்வுக்கோட்பாடுகளான இயங்கியல் பொருள்முதல்வாதமும் ( Dialectical Materialism) வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் ( Historical Materialism) ஆகும். அவற்றைக்கொண்டு குறிப்பிட்ட சமுதாயங்களின் அமைப்புகளை ஆராயும்போது, அச்சமுதாயங்களின் பண்புகள்பற்றிய முடிவுகள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் ஆய்வுமுறை ஒன்றுதான். எவ்வாறு ஈர்ப்பு, ஈர்ப்புவிசைபற்றிய கோட்பாடு நட்சத்திரத்திற்கு நட்சத்திரம், கிரகத்திற்குக் கிரகம் மாறாதோ, அதுபோல்தான் மேற்குறிப்பிட்ட மார்க்சின் ஆய்வியல் கோட்பாடுகள் அல்லது நெறிகள் அல்லது, விதிகள் சமுதாயத்திற்குச் சமுதாயம் மாறாது.
இந்த மார்க்சிய விதிகளைக்கொண்டு, வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த மார்க்சிய ஆய்வாளர்கள் தங்கள்தங்கள் நாட்டின் சமுதாய அமைப்பை ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும் என்பதே மார்க்சியம். குறிப்பிட்ட சமுதாயத்தின் பண்புகளைப்பற்றிய முடிவுகள் வேறாக இருக்கும். ஆனால் ஆய்வுமுறை - மார்க்சிய அறிவியல் - ஒன்றே.
பிரபஞ்சத்தில் கிரகத்திற்குக் கிரகம் தனித்தனி ஈர்ப்பு, ஈர்ப்புவிசை விதிகள் கிடையாது. அவற்றை அடிப்படையாகக்கொண்டு ஆராயும்போது, குறிப்பிட்ட கிரகத்தின் ஈர்ப்புவிசை எவ்வளவு என்பதுதான் வேறுபடும்.
குறிப்பிட்ட கிரகத்தின் ஈர்ப்புவிசைபற்றிய அறிவியலாரின் முடிவுகள் சரியாக இருந்தால்தான், அக்கிரகத்திற்கு அனுப்பிவைக்கும் விண்கலங்களும் சரியாகச் சென்று அடையமுடியும். முடிவுகள் தவறாக இருந்தால் ... தோல்வியே. விண்கலத்தின் அமைப்பும் செயல்பாடும் குறிப்பிட்ட கிரகத்தின் ஈர்ப்பு, ஈர்ப்புவிசையை எதிர்நோக்குகிற அளவுக்கு வடிவமைக்கப்பட்டு இருக்கவேண்டும். இல்லையென்றால் தோல்விதான். ஆனால் தோல்வி தற்காலிகமானதுதான். ஈர்ப்புவிசைபற்றிய முடிவுகள் தவறாக இருந்தாலும், அல்லது விண்கலத்தின் அமைப்பில் கோளாறுகள் இருந்தாலும்.... மீண்டும் அவற்றைச் சரிப்படுத்தி... வெற்றிபெறுகிறோம். இங்கு நாம் கவனிக்கவேண்டியது ஈர்ப்புபற்றிய அறிவியல் விதி ஒன்றுதான்!
அதுபோன்றதுதான் மார்க்சிய அறிவியலைக்கொண்டு குறிப்பிட்ட சமுதாயத்தின் பண்புகளைப் புரிந்துகொள்வதும் அல்லது குறிப்பிட்ட புரட்சிகர உத்திகளை முடிவுசெய்வதும் ஆகும். இதில் தவறுகள் ஏற்படலாம். ஆனால் தவறுகள் சீர்படுத்தப்படலாம். சீர்படுத்தப்படவேண்டும்.
எனவே ''மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' என்று கூறுவது ''கிரகத்திற்குக் கிரகம் ஈர்ப்பு, ஈர்ப்புவிசைபற்றிய விதிகள் வேறு'' என்று கூறுவதற்கு ஒப்பாகும். அதுபோல. குறிப்பிட்ட ஒரு சோதனையில் விண்கலத்தைச் செலுத்துவதில் தோல்வி ஏற்பட்டால், ஈர்ப்புபற்றிய அறிவியல் விதியே தவறானது என்று கூறுவது எவ்வாறு தவறானதோ .. அதுபோல ஒரு குறிப்பிட்ட புரட்சி தோல்வி அடைவதால், மார்க்சிய அறிவியலே தவறானது, மார்க்சியம் பொய்த்துவிட்டது என்று கூறுவது திட்டமிட்ட சதியே.
'' தேன் தடவிய தோட்டாவே!''
''ஏகாதிபத்திய ஒற்றர்களின் ஏமாற்று வித்தையே'!''
---------------------------------------------------------------------------------------------------------
பிரபஞ்சத்தில் அனைத்துமே ஒன்றுக்கொன்று சார்புடையவை ( everything is relative) . ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கிறது (everything changes) . இந்த இரண்டுமே இயங்கியலின் அடிப்படை கோட்பாடுகள்.
------------------------------------------------------------------------------------------------------------

கொரோனா தீநுண்மி போன்றவைதான் இந்தத் ''தத்துவமேதைகள்'' . ஏதாவது ஒரு துளை கிடைத்தால் போதும்... அதில் நுழைந்து... புரட்சியாளர்களின் இயக்கங்களுக்குள் ''நண்பராகப் '' புகுந்து.... பின்னர் அவர்களை ஏமாற்றி ... தன்னைப் ''பெருக்கிக்கொள்ளும்''. அதனால் புரட்சிகர இயக்கங்களுக்குச் சிலவேளைகளில் ''மூச்சுத்திணறல்'' ஏற்படும். அப்படியே அந்தத் தீநுண்மியை விட்டுவிட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே இந்தத் தீநுண்மிகளை நுழையவிடாமல் பார்த்துக்கொள்ள ... புரட்சிகர இயக்கங்களின் ''எதிர்ப்பு அல்லது தடுப்புத்திறன்'' வளர்க்கப்படவேண்டும. கவனமாக இருக்கவேண்டும். புரட்சிகர இயக்கங்களின் தத்துவார்த்தப் போராட்டங்கள் எல்லாம் ''தடுப்பூசிகளே''.
------------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியரே, தாங்கள் கூறுவது உண்மை. மார்க்சியம் என்றால் என்ன என்பதைப்பற்றிய புரிதல் இன்மையே இதற்குக் காரணம். மார்க்சியத்தை - மார்க்சு, எங்கல்சு, லெனின், ஸ்டாலின், மாசேதுங் ஆகியோரின் மூலநூல்களைப் படிக்காமல் - அவற்றிற்கான ''வழிகாட்டி நூல்களாக '' ("Guide books") மார்க்சிய விரோதிகள் எழுதியவற்றைப் படிப்பதால் ஏற்படும் ஒரு பிரச்சினை இது. நேரடியாக மார்க்சியத்தை எதிர்க்கமுடியாதவர்கள் ..... மார்க்சியத்தால் ''பாதிக்கப்படுபவர்கள்'' - மேற்கொள்கிற இந்தச் சதிவேலைகளை இன்றைய இளைஞர்கள் முறியடிக்கவேண்டும். சமுதாயத்தை மாற்ற பாடுபடுகிறவர்கள் மார்க்சியத்தைப் புரிந்துகொள்வது வேறு. மாற்றத்தைத் தடுக்க முயலுபவர்கள் ''புரிந்துகொள்வது '' வேறு. அவர்கள் திட்டமிட்டு, தங்கள் ''புரிதலை'' பரப்புகிறார்கள். மற்றொரு பிரச்சினை.... மார்க்சியத்தைப் படிக்கிற முறையும் முக்கியம். சமுதாய இயக்கங்களில் பங்கேற்று.... அவற்றில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக மார்க்சியம் படித்தால்தான், மார்க்சியத்தைப் புரிந்துகொள்ளமுடியும். நடைமுறை இயக்கத்தையும் மார்க்சியத்தைக் கற்றுக்கொள்வதையும் இணைத்துச் செயல்பட்டால்தான் மார்க்சியத்தின் அடிப்படைகளை விளங்கிக்கொள்ளமுடியும். நாவல்களைப் படிப்பதுபோன்று மார்க்சியத்தைப் படிக்கமுடியாது. அவ்வாறு படித்தால் மார்க்சியம் புரியாது. குறிப்பான பிரச்சனைகளிலிருந்து ... அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவும்... அவற்றைத் தீர்ப்பதற்காகவும் .... மார்க்சியத்தைப் படிக்கவேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------

தயவுசெய்து எந்த ஒரு தனிநபரையும் முன்னிலைப்படுத்தி, விவாதங்களைத் தொடரவேண்டாம். இங்கு நமக்கு முக்கியமானது.... மார்க்சிய அறிவியலைப் புரிந்துகொள்வதும், அவற்றைத் ''திட்டமிட்டுத் திருத்தி எழுதப்படும் '' கருத்துகளைப் புரிந்துகொள்வதுமே ஆகும். யாருக்கும் எந்த ஒரு ''முத்திரையும்'' இடுவது நமது பணி இல்லை. அது தேவையற்ற ஒரு வேலை. அதை வரலாறு முடிவு செய்யும். வரலாறு பார்த்துக் கொள்ளும். கவலை வேண்டாம்.
---------------------------------------------------------------------------------------------------------
சமுதாய மாற்றங்களுக்காக ... இயக்கங்களுக்காக ... மார்க்சிய ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் .... தங்கள் பெயரில் நூல்களை வெளியிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட..... தாங்கள் சார்ந்த இயக்கத்தின் செயல்வீரர்களுக்கு உதவும்வகையில் தங்கள் ஆய்வுகளை இயக்கத்தின்வழியே கொண்டுசெல்வதற்கே முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பது எனது கருத்து. தான் சார்ந்திருக்கும் இயக்கம் வளர்வதற்காக .. அதில் செயல்படும் முன்னணி வீரர்களுக்காக ... மார்க்சியத்தைப் படிக்கவும் அதுபற்றி எழுதவும் வேண்டும. மார்க்சியம் உலகத்தை விளக்குவதோடு, உலகத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு அறிவியல் என்பதை நாம் உணரவேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------
தனிநபர்கள்பற்றிய பிரச்சனையே இங்கு இல்லை. நான் எழுதியது மார்க்சிய இயக்கங்களுக்கும் ''மார்க்சியப் போர்வையில் '' மறைந்துநின்று, மார்க்சியத்தைக் குழப்புவர்களுக்கும் இடையிலான பிரச்சினைபற்றியே. நானோ, பேரா. மதிவாணன் பாலசுந்தரமோ, அமரர் ஞானி அவர்களோ இங்குப் பிரச்சினை இல்லை. அதுபோன்று எந்த ஒரு தனிநபர்களுக்கு எதிராகவும் நான் எழுதவேண்டிய தேவையும் இல்லை. நான் கூறியுள்ளது... 170 ஆண்டுகளுக்குமேலாக ... மார்க்சியத்தை வெல்லமுடியாத பிற்போக்கு சக்திகளின் உலக அளவிலான தொடர்ந்த ''சதிவேலைகளைப்பற்றியே''. இதில் எந்த ஒரு தனிநபரும் பிரச்சினையே இல்லை. தனிநபர்களை அடிப்படையாகக்கொண்ட ''எரிந்த கட்சி'' ''எரியாத கட்சி'' லாவணிகளில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. அது தத்துவ விவாதங்களைத் திசைதிருப்பிவிடும். இதைத்தான் மார்க்சிய எதிரிகள் விரும்புவார்கள; விரும்புகிறார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------
''மண்ணுக்கேற்ற மார்க்சியம் '' - தேன் தடவிய ஒரு தோட்டா என்ற எனது முகநூல் கருத்தாடலில் பங்கேற்ற தோழர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
மார்க்சியத்திற்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்வைக்கப்படுகின்ற எந்த ஒரு கருத்தும் இறுதியில் தோல்வியையே தழுவும். அதற்குக் காரணம்.... மார்க்சியம் பாட்டாளி வர்க்கத்திற்காக... பாட்டாளிவர்க்கத் தலைமை ஆய்ந்து முன்வைத்த ஒரு அறிவியல். சமுதாய வரலாற்றின் புறவயமான வளர்ச்சி விதிகள்.
எனவே ''மார்க்சியம் தவறானது'' அல்லது ''மார்க்சியம் பொய்ப்பித்துவிட்டது'' அல்லது ''மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' என்று எந்த ஒரு வடிவில் மார்க்சியம்மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், இறுதி வெற்றி மார்க்சியத்திற்கே என்பதில் ஐயம் இல்லை. வரலாற்றை தீர்மானிப்பது மக்களே.... மக்களுக்கான உண்மையான அறிவியலே!
------------------------------------------------------------------------------------------------------------
எல்லாம் மாற்றத்திற்கு உரியதே. அதில் ஐயம் இல்லை. முதலாளித்துவ அமைப்புக்கு முற்பட்ட ''மூலதனத்தின் '' பண்பு. முதலாளித்துவ அமைப்பில் நீடித்த '' மூலதனத்தின்'' பண்பு, ஏகாதிபத்திய வளர்ச்சியில் மாறிய ''நிதிமூலதனம்'' ஆகியவற்றில் பண்புரீதியான வேறுபாடுகள் உண்டு என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இந்த மூன்றைப்பற்றியும் ஆய்வுசெய்த மார்க்சியத் தலைமை மேற்கொண்ட தத்துவப் பார்வையும் ஆய்வியல் நெறிகளும் ஒன்றா வேறா என்பதுதான் இங்கு முன்வைக்கப்படுகிற கேள்வி.
------------------------------------------------------------------------------------------------------------தயவுசெய்து முதலில் ''மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' என்று சொல்பவர்கள் அளிக்கும் ''விளக்கத்தைத் '' தெரிந்துகொண்டு, அதை ''ஆதரியுங்கள்'. மார்க்சிய அறிவியலா அல்லது அந்த அறிவியலைக்கொண்டு, ஒவ்வொரு நாட்டின் சமூக அமைப்புபற்றி ஆராய்ந்து, அதுபற்றி முன்வைக்கப்படுகிற ஆய்வு முடிவுகளா? இதில் தெளிவு வேண்டும். இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப்பொருள்முதல்வாத அறிவியலின் அடிப்படைகளா? அவை நாட்டுக்கு நாட்டுக்கு வேறுபடுமா? ''மதிப்பீடு '' வேறு. அந்த ''மதிப்பீட்டை'' உருவாக்கப் பயன்படும் ''அறிவியல் நெறிமுறைகள் வேறு''. இரண்டையும் போட்டுக் ''குழப்பி'' சமூகமாற்றங்களுக்கான இயக்கங்களில் ஈடுபடும் மக்களைக் குழப்பக்கூடாது அல்லவா?
----------------------------------------------------------------------------------------------------------


செவ்வாய், 21 ஜூலை, 2020

புதிய தமிழ் இலக்கணமும் பேராசிரியர் பொற்கோவும்.....

புதிய தமிழ் இலக்கணம்பற்றிப் பேராசிரியர் பொற்கோ அவர்களின் கருத்து
-------------------------------------------------------------------------------------------------------

// இக்காலத் தமிழுக்கு ஒரு நல்ல இலக்கணம் வேண்டும். இந்தக் கருத்து இப்போது பரவலாகச் சரியாக உணரப்பட்டிருக்கிறது. நாடு விடுதலை பெற்றபிறகு நம்மிடம் வளர்ந்த மொழி உணர்ச்சியும் கல்வி உலகில் ஏற்பட்ட ஆராய்ச்சி வளர்ச்சியும் புதிய சிந்தனைகளைத் தூண்டி மொழியின் பயன்பாட்டு எல்லையை விரிவாக்கிப் புதிய இலக்கணத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது. இத்தகைய சூழலில் புதிய இலக்கணங்கள் தோன்றவேண்டும். அப்போதுதான் மொழியில் தோன்றயுள்ள புதிய இலக்கணக் கூறுகளுக்கு நிலைபேறு ஏற்படும். மொழியியலும் அப்போதுதான் புதிய வளர்ச்சி தோன்றும்.//
//இன்றைய உலகச் சூழலில் ஏராளமான புதுமைகளை நாம் வேகமாகச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய செயல்பாட்டிலும் வேகம் தேவைப்படுகிறது. பணிகளில் ஏற்படுகிற புதிய வேகம் பணிகளின் தரத்தைக் குறைத்துவிடக்கூடாது. வேகமும் குறையாமல் தரமும் குறையாமல் பணிகள் தொடரவேண்டுமானால் பணிகளில் நாம் பயன்படுத்தும் கருவிகள் மேம்படுத்தப்படவேண்டும். மனித சமுதாயம் ஒட்டுமொத்தமாக முதன்முதலில் பயன்படுத்துத் தொடங்கிய மாபெரும் கருவி என்று ஒன்றைக் குறிப்பிட வேண்டுமானால் அது மொழிதான்.
தமிழ்ச் சமுதாயம் முழுமைக்கும் ஒட்டுமொத்தமாக இதுவரை பயன்பட்ட கருவி தமிழ் - இன்று பயன்படுகிற கருவி தமிழ் - இனியும் பயன்படவேண்டிய கருவி தமிழ். இது மற்ற கருவிகளைப்போல வெறும் கருவி மட்டும் அல்ல. உயிரோடிருக்கும் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. மொழி என்பது அறிவைமட்டும் வெளிப்படுத்துகிற ஒன்று அல்ல, உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதும் அதுதான். இந்த மொழி இன்றைய தேவைக்கேற்ப மேம்படுத்தப்பட்டால்தான் நம்முடைய வாழ்வு சிறக்கும். செயல் சிறக்கும். மொழியை மேம்படுத்த நாம் மேற்கொள்ளவேண்டிய முயற்சிகளில் இத்தகைய இலக்கணங்களுக்கு மிக இன்றியமையாத இடம் உண்டு. //
( இக்காலத் தமிழ் இலக்கணம் - டாக்டர் பொற்கோ - முகவுரை)

பேராசிரியர் மு. இளங்கோவன்

பேராசிரியர் மு. இளங்கோவன்.... இளம் தமிழ் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். தமிழ் இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்தவர். நாட்டுப்புறப் பாடல்களை அதற்கே உரிய இசையுடன் மேடைகளில் முழங்கிக்கொண்டிருப்பவர். தொல்காப்பியத்தை உலக அளவில் எடுத்துச் செலவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றிவருபவர். தனது வலைப்பூ மூலம் தமிழாய்வாளர்களை அறிமுகப்படுத்திவருபவர். தற்போது தமிழறிஞர்களைப்பற்றிக் குறும்படங்களையும் தயாரித்து வெளியிட்டு வருபவர். இவரைப்பற்றிய எனது 5 ஆண்டுகளுக்கு முன்பான முகநூல்பதிவை மீள்பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்,.

முனைவர் மு. இளங்கோவன் … தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி என்று கணினித்தமிழ் உலகில் அனைவராலும் பாராட்டப்படுகிற ஒரு இளம் தமிழாய்வாளர். மாணவப் பருவத்திலேயே மாணவராற்றுப்படை என்ற இலக்கியத்தைப் படைத்தவர். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். திருப்பனந்தாள் காசி மடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் தமிழில் பி.லிட்.,(1987-90) முதுகலை (1990-92) பட்டங்களையும் பாண்டிச்சேரி நடுவண் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் (1992-93) , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் (1993-96) பெற்றார். ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ என்ற தலைப்பிலும், முனைவர் பட்டத்திற்கும் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பிலும் ஆய்வை மேற்கொண்டார். பின்னர் ஓராண்டு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தமிழியல் ஆவணம்’ என்னும் ஆய்வுத்திட்டத்தில் பணியாற்றினார். 1998-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் ‘தமிழிசைக் கலைக்களஞ்சியம்’ என்னும் திட்டத்தில் இணைந்து செயல்பட்டார். பின்னர் கலவை ஆதிபராசக்தி கலைக்கல்லூரியில் 1999 முதல் 2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 2005-இல் நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுவை அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட தமிழாய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். ‘அயலகத் தமிழறிஞர்கள் ‘ ‘ இணையம் கற்போம்’, ‘ நாட்டுப்புறவியல்’ ‘செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்’ போன்ற பல சிறப்பான நூல்கள் இவற்றில் அடங்கும். நாட்டுப்புறவியல் ஆய்வுத்துறையில் சிறப்பாகப் பங்களித்துள்ள இவர், நாட்டுப்புறக் கலைஞராகவும் செயல்பட்டுவருகிறார். கேரள, ஈழத்து நாட்டுப்புறப் பாடல்கள்பற்றியும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழாய்வு நிறுவன ‘ இளம் தமிழ் அறிஞர்’ விருதை (2006-2007 ஆண்டுக்குரியது) 2010 ஆம் ஆண்டு பெற்றார். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும்போதே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். ‘தமிழ்த் தகவல் கருவூலம்’ என்ற ஒரு இணையதளத்தையும், வேர்ட்பிரஸ்.காம் என்ற இணையதளத்தையும், மு. இளங்கோவன் என்ற பெயரிலான வலைப்பூ ஒன்றையும் உருவாக்கித் தொடர்ந்து, தமிழ், தமிழர் பற்றிய அரிய பல செய்திகளைத் தமிழுலகத்திற்கு அளித்துவருகிறார். உலக, தேசிய, தமிழக அளவிலான தமிழ் அறிஞர்கள் பலர்பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் அளித்துவருகிறார். திருச்சி வானொலிநிலையத்தின் வழியே தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்பற்றிய இவரது சிறப்பு இலக்கியப் பேருரைகள் பல ஒலிபரப்பப்பட்டுள்ளன. தனது பிறந்த ஊரில் வயல்வெளிப் பதிப்பகம் , பாரதிதாசன் உயராய்வு மையம், புலவர் ந. சுந்தரேசனார் நூலகம் ஆகியவற்றை நிறுவி நடத்திவருகிறார். சிங்கப்பூர், மலேசியா, இலண்டன் போன்ற பல அயல்நாடுகளுக்குக் கல்விப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கணினியில் வலைப்பூ உருவாக்கம்பற்றிப் பயிலரங்குகள் பலவற்றைத் தொடர்ந்து நடத்திவருகிறார். மேலதிக விவரங்களுக்கு - http://muelangovan.blogspot.in/
https://ta.wikipedia.org/s/662 http://www.muelangovan.com/ https://muelangovan.wordpress.com/ . மின்னஞ்சல் முகவரி muelangovan@gmail.com
தொலைபேசி - 9442029053


முனைவர் ஆ. மணவழகன்

முனைவர் ஆ. மணவழகன் …. இளந்தலைமுறை தமிழாய்வாளர். சமூக உணர்வாளர். தமிழர் வாழ்வு, தமிழ் இலக்கியம், கணினித்தமிழ் ஆகிய துறைகளில் சிறந்த ஆய்வுகளோடு, படைப்பிலக்கியத்திலும் திறன் படைத்தவர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் ( எம் ஃபில் ) பட்டமும் பெற்றார் . உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னையில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். கணினித்தமிழிலும் ஆர்வம் உள்ள இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ் ஆய்வாளராகவும் பணியாற்றினார். தற்போது சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டு மையத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அங்குள்ள கலை, பண்பாட்டுக்காட்சிக்கூடத்தின் பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார். ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை (2005)’, ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை (2007)’ , ‘தொலைநோக்கு (2008)’, ‘பழந்தமிழர் தொழில்நுட்பம் (2010)’, போன்ற தமிழ்ச் சமுதாயம்பற்றி ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார். ‘கூடாகும் சுள்ளிகள் (2010)’ என்ற ஒரு மிகச் சிறந்த கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகள் பலவற்றில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். ‘உயிரோவியம் (சங்க இலக்கியக் காட்சிகள்)’, ‘காந்தள் (தமிழ் மொழிக் கையேடு)’, ‘ சொல்லோவியம் (படவிளக்க அகராதி)’ போன்ற கணினித்தமிழ்த் தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார். சங்க கால இலக்கியங்கள்பற்றி ஆய்வுகளில் இவரது சிறப்பான பங்களிப்பிற்காக 2007-2008 ஆம் ஆண்டிற்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘ இளம் அறிஞர் விருது ‘ ( செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன விருது ) இவருக்கு வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ‘ இளம் படைப்பாளி’ விருது வழங்கப்பட்டது. மேலதிக விவரங்களுக்கு - https://ta.wikipedia.org/s/13a2 , http://manavazhahankavithaikal.blogspot.com/ இவரது மின்னஞ்சல் முகவரி - tamilmano77@yahoo.com


முனைவர் மோ.கோ.கோவைமணி (1963)

முனைவர் மோ.கோ.கோவைமணி (1963) …. தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை, எம் ஃபில் பட்டங்களையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும், சுவடியியல், கணிப்பொறி பயன்பாடு, சைவ சித்தாந்தம் போன்ற பட்டயங்களையும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் 1989 முதல் கல்விப்பணியில் ஈடுபட்டுள்ள இவர் தற்போது அத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சுவடியியல், இந்திய காலக்கணிதம், தமிழும் விசைப்பலகையும், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, புலைமாடத்தி வரத்து, கதைப்பாடல்கள் மூன்று, புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை, தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் அட்டவணை, தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணைகள், ஐக்கூ ஐநூறு, பதிப்புலகத் தூண்கள், நாடி மருத்துவம், செம்புலப்பெயல் நீர், எண்ணும் எழுத்தும், ஓலைச்சுவடியியல் ஆகிய நூல்கள்; வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆய்வுமாலை, குமரகுருபரர் ஆய்வுமாலை, முருகன் இலக்கிய ஆய்வுமாலை, திருக்குறள் ஆய்வுமாலை, செவ்வியல் தமிழ்ச்சுவடிகள் போன்ற தொகுப்பு நூல்கள் என 30க்கும் மேற்பட்ட நூல்களுக்குச் சொந்தக்காரர். இவரின் ஓலைச்சுவடியியல் என்னும் நூலுக்குத் தமிழ்நாடு அரசு 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு வழங்கியுள்ளது. சுவடியியல், இலக்கியம், நாட்டுப்புறவியல், கணினியியல் உள்ளிட்ட பல துறைகளில் 250க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். பல கருத்தரங்கங்களையும் மாநாடுகளையும் நடத்தியவர். பல்கலைக்கழக மானியக்குழு, தமிழக அரசு, தமிழ்ப் பல்கலைக்கழக நிதியில் பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டவர். சுவடியியல் தொடர்பாக மலேசிய வானொலியிலும், சென்னை தொலைக்காட்சியிலும் உரையாற்றியவர். மலேசியா சென்று மலேசியா பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சுவடிப்பயிற்சி அளித்தவர். தமிழகமெங்கும் களப்பணி மேற்கொண்டு ஓலைச்சுவடிகளைத் திரட்டி மின்பதிவாக்கம் செய்து பாதுகாத்து வருபவர். தமிழகமெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுவடி எழுதும் பயிற்சியை மூன்று மணி நேரத்திற்குள் எளிய முறையில் அளிக்கும் வல்லமை பெற்றவர். இவர் சிறந்த ஐக்கூக் கவிஞரும் ஆவார். இவருடைய மின்னஞ்சல் முகவரி - paamozhi@gmail.com இவருடைய இணையதளம் - http://kovaimani-tamilmanuscriptology.blogspot.in/


பேராசிரியர் ப. பாண்டியராஜா ( 1943

பேராசிரியர் ப. பாண்டியராஜா ( 1943) … மிகவும் வியப்புக்குரிய ஒரு தமிழறிஞர். பட்டங்கள் பெற்றது கணிதத்துறையில் … பணியாற்றியது கணிதத்துறையிலும் கணினித்துறையிலும் …. ஆனால் தமிழறிஞர்கள் பலரும் இணைந்து செய்யவேண்டிய பணிகளை – ஒரு மிகப்பெரிய தமிழாய்வு நிறுவனம் செய்யவேண்டிய பணிகளை - தனி ஒரு ஆய்வாளராக இருந்து சாதித்துள்ளார். கணிதத்தில் இளங்கலைப் பட்டம் (1962), முதுகலைப் பட்டம் (1964), எம் ஃபில் பட்டம் ( 1972) பெற்றுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் (1980), மொழியியலில் சான்றிதழும் பெற்றுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, 2001-ஆம் ஆண்டு பட்டம் பெற்றுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வானது தொல்காப்பியத்திலிருந்து இன்றுவரை எழுத்துத்தமிழின் பண்புக்கூறுகளைப்பற்றிய ஒரு புள்ளியல்துறை நோக்கிலான ஆய்வாகும் ( A Statistical Analysis of Linguistic Features in Written Tamil – a Diachronic and Synchronic Study of linguistic features starting from Tolkappiyam and upto modern times). மொழியியல், புள்ளியல், கணினியியல் ஆகிய மூன்று துறைகளையும் இணைத்து 20-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். தேசிய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவருடைய அரும்பெரும் சாதனையானது, பண்டைத் தமிழ் இலக்கியங்களுக்கும் தொல்காப்பிய இலக்கணத்திற்கும் இலக்கணக் குறிப்புகளோடும் ( Word class category) புள்ளியியல் விவரங்களோடும் தொடரடைவுகளைத் தருகிற மென்பொருள் உருவாக்கியுள்ளதாகும். இவ்விதத் தொடரடைவுகள் உதவிகொண்டு, தமிழ் இலக்கியங்களின் மொழிநடையைப் பல்வேறு கோணங்களில் ஆராயலாம். பல்வேறு மொழிவழிக் கருவிகளை – ஒலியனியல், உருபனியல் ஆகியவற்றை ஆராய்வதற்கான மொழிக்கருவிகளை – உருவாக்கலாம். தமிழ் லெக்சிகன் போன்ற பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். தமிழுக்கான வரலாற்று இலக்கணத்தை எழுதலாம். இவர் அளித்துள்ள தமிழ் இலக்கியப் பனுவல்களைக்கொண்டு, தமிழுக்கான தரவுத்தளங்களை உருவாக்கலாம். தமிழ் இலக்கியங்களைச் சொல்பிரித்து இவர் அளித்துள்ளது கணினித்தமிழ் ஆய்விற்கு மிகவும் பயன்படும். ஒவ்வொரு இலக்கியத்திலும் பயின்றுவந்துள்ள அடிச்சொல்கள் எவ்வளவு, இலக்கண விகுதிகள் எவ்வளவு, , விகுதி ஏற்ற சொல்கள் எவ்வளவு போன்ற விவரங்களையெல்லாம் இவர் அளித்துள்ளார். தமிழ் இலக்கியங்களின் யாப்பு கட்டமைப்பு, தொல்காப்பியத்தின் அமைப்பு ஆகியவைபற்றியும் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். தமிழ்மொழி ஆய்வாளர் என்ற முறையிலும் கணினித்தமிழுக்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிற ஆய்வாளர் முறையிலும் எனக்கு அவரது இப்பணிகள் மிகுந்த உதவியாகயிருக்கிறது என்று கூறுவதில் மிகவும் மகிழ்வடைகிறேன். ஒரு கணிதத்துறை , கணினித்துறை சார்ந்த ஒரு பேராசிரியர் தமிழ்மொழிக்குச் செய்துள்ள இந்த அரிய பணிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவரது இணையதளத்தின் முகவரி - http://sangamconcordance.in/


பேரா. இரா. முரளிதரன் (1959)

பேரா. இரா. முரளிதரண் அவர்களைப்பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு முகநூலில் இட்ட பதிவு இது. தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வுபெற்றாலும் மொழியியலின் முக்கியத்துவத்தை ஆய்வாளர்களிடம் கொண்டு செல்வதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். இனிய நண்பர். பழகுவதற்கு எளிமையானவர். அவரைப்பற்றிய இப்பதிவை இன்று மீள்பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள்.

பேரா. இரா. முரளிதரன் (1959) … மொழியியல் தளத்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் ஒரு ஆய்வாளர். தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறையில் பணியாற்றிவருகிறார். தாவரவியலில் இளங்கலைப் பட்டமும் (1979), மொழியியலில் முதுகலைப் பட்டமும் (1983), முனைவர் பட்டமும் (1989) பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் உருவாக்கம் இவர். இவரது முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சோலநாயக்கன் என்ற பழங்குடி மக்கள் மொழியைப்பற்றி ஆய்வு மேற்கொண்டார். பழங்குடி மக்களின் குரும்பா மொழிபற்றியும் ஆய்வு செய்துள்ளார். பழங்குடி மக்களின் மொழிகள்பற்றியும் பண்பாடுபற்றியும் மிகச் சிறப்பான ஆய்வுகளை அளித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த வால்ஸ்வேகன் அமைப்புடன் ( German-India-French Project, Volkswagen Foundation Fund, Germany) இணைந்து, குரும்பா, சோலநாயக்கன் போன்ற அபாயத்திற்கு உட்பட்டுள்ள அல்லது அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிற ( Endangerd languages) பழங்குடி மக்களின் மொழிகள்பற்றிப் பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டுவருகிறார். இதற்காக அவர் பாரிஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று (2009) சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார். மீண்டும் 2013 –இல் இதுதொடர்பாக ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரை அளித்துள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பழங்குடி மக்கள் ஆய்வுமையத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர், அங்கேயே இந்தியமொழிகள் துறையின் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். தமிழ், ஆங்கில மொழிகளோடு தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் தேர்ச்சிபெற்றுள்ளார். தற்போது கணினிமொழியியல் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார். கடந்த பல ஆண்டுகளாக இந்திய நடுவண் அரசின் ஆட்சித்துறை, காவல்துறை பணி தகுதிகாண் பருவ அதிகாரிகளுக்கு ( IAS, IPS Probationers) தமிழ்மொழிப் பயிற்சி அளித்துவருகிறார். தென்னாப்பிரிக்கா, செக்கோஸ்லேவிகியா, போலந்து, மொரிஷியஸ், சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்றுக்கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு நிருவாகச் சீர்திருத்தத்துறை சிறுபான்மையின அலுவலர்களுக்குத் தமிழ்ப் பயிற்சியைப் பல ஆண்டுகளாக அளித்துவருகிறார். 20 நூல்களுக்குமேல் தனியாகவும் பிற பேராசிரியர்களுடனும் இணைந்து வெளியிட்டுள்ளார். தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குத் தமிழ்ப்பாடங்கள் தயாரிப்பதில் தொடர்ந்து உதவியளித்துள்ளார். தமிழகத்தில் பழங்குடி மக்களின் மொழிகள், பண்பாடுகள் பற்றிய ஆய்விலும், தமிழ்மொழியை அயல்நாட்டு மாணவர்களுக்கும், தமிழ் தெரியாத அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்மொழியைக் கற்றுக்கொடுப்பதிலும், கணினிமொழியியல் துறையிலும் மிகச் சிறப்பாகப் பணியாற்றிவருகிற பேரா. இரா. முரளிதரன் அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

வியாழன், 9 ஜூலை, 2020

பேராசிரியர் சிங்கப்பூர் சித்தார்த்தன்

பேராசிரியர் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்கள்.... எனக்கு நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காத ஒரு தமிழ் அறிஞர். ஆனால் அவரது '' இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்'' என்ற நூலைப் புரட்டிப்பார்க்காத நாளே கிடையாது. இன்றைய தமிழின் தரவுகளின் அடிப்படையில் மிகத் தெளிவாக தமிழ்மொழியின் இலக்கணத்தைக் கூறும் அவரது நூல் இது. எப்போதும் அவரது அந்த நூல் எனது மேசையில் இருக்கும். எந்த ஒரு ஐயத்திற்கும் இந்த நூலில் விடை இருக்கும். மிக்க மகிழ்ச்சியுடன் அவரைப்பற்றிய 5 ஆண்டுகளுக்குமுன் நான் முகநூலில் இட்ட பதிவை இன்று மீள்பதிவு செய்கிறேன்.

தமிழறிஞர் சிங்கப்பூர் சித்தார்த்தன் (1936) … இயற்பெயர் பா. கேசவன். எனக்கு மிகவும் பயன்படுகிற ‘ இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்’ என்ற தமிழிலக்கண நூலின் ஆசிரியர். தினந்தோறும் ஏதாவது ஒரு ஐயத்தைப் போக்க இவர் நூலை நான் வாசிப்பேன். குறிப்பாக, தமிழ்ப் புணர்ச்சி இலக்கணத்தில் ஏதும் ஐயம் ஏற்பட்டால், இவருடைய இந்த நூலைப் பார்ப்பேன். மிக அருமையான எடுத்துக்காட்டுகளுடன் தமிழ்ப் புணர்ச்சிவிதிகளை இவர் விளக்குவார். சிங்கப்பூரில் தமிழாசிரியாகப் பணியாற்றியவர். முதலில் தமிழ்ப்பள்ளி ஆசிரியராகவும், பின்னர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி , தொடக்கக் கல்லூரி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையும், தேசியக் கல்விக் கழகம் ஆகியவற்றிலும் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் தமிழ்மொழிப் பிரிவில் பாடநூல் எழுத்தாளராகவும் பணி மேற்கொண்டுள்ளார். கல்வி மேம்பாட்டு அதிகாரியாகவும், பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினராகவும், கல்வித் தொழில்நுட்பப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். இளமைதொட்டே பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவரும் இவர், ஒரு நாடக ஆசிரியருமாவார். இவருக்குச் சிங்கப்பூர் ‘கடற்கரைச்சாலை கவிமாலை அமைப்பு’ என்ற இலக்கிய அமைப்பு ‘ கவிமாலை இலக்கியக் கணையாழி விருது 2006’ என்ற ஒரு சிறப்பான விருதை அளித்துச் சிறப்பு செய்துள்ளது. 1981 ஆம் ஆண்டுமுதல் 1996 ஆம் ஆண்டுவரை தமிழிலக்கணத்தை அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாகவும் சுவையாகவும் சிங்கை வானொலியில் ‘எளிய இலக்கணம் ‘ என்ற தலைப்பில் அளித்த உரைகளே, பின்னர் ‘ இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்’ என்ற பெயரில் நூலாக (2003) வெளிவந்துள்ளது. இந்நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த இலக்கண நூலுக்கான பரிசும் அளிக்கப்பட்டுள்ளது. ‘ எந்த மொழியிலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. தமிழ்மொழியும் இதற்கு விலக்கன்று. எனினும் , தமிழ்மொழியில் நேர்ந்துள்ள அத்தகைய மாற்றங்கள் மொழியின் அடிப்படைக் கூறுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல. மேலும் அவை சிறுபான்மையே. ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியர் வகுத்த தமிழ் இலக்கணம் இன்றைய வழக்கிலுள்ள தமிழ் மொழிக்கும் பயன்படும் தன்மையதாய் இருப்பதே இதற்குத் தக்க சான்றாகும் …. இத்தகைய சிறு மாற்றங்களுக்கு ஏற்பத் தேவையாயின் புது விதிகளை வகுத்துக்கொள்ளவும் நாம் தயங்கவேண்டியதில்லை. பழையன கழிதலும் , புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்னும் முதுமொழியைக் கருத்தில் இருத்தித் தமிழ்ப் பேரறிஞர்கள் இத்துறையில் கவனம் செலுத்துவார்களாயின் பெரும்பலன் கிட்டும்’ என்று இவர் மொழியின் இயல்பைத் தெளிவாகக் கூறுவது ஒரு மொழியியல் ஆய்வாளருக்கே உரிய ஒரு சிறப்புப் பண்பாகும். மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி கூறுவதுபோல, இவரும் ‘ இலக்கணம் என்பது ஓர் ஒழுங்குமுறை. அது நம்முள் இருக்கிறது. நமக்குத் தெரியாமலேயே அது நமக்கு உதவிக் கொண்டிருக்கிறது’ என்ற கருத்தை முன்வைப்பது மிகச் சிறப்பானது. 1965 – ஆம் ஆண்டு தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் ‘ போராட்டம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தேசியக் கலைக்கழகத்தின் உறுப்பினராகவும், தமிழர் பேரவையின் தலைவராகவும் (1997-2000) பணியாற்றியுள்ளார். மேற்குறிப்பிட்ட இலக்கணநூல்தவிர, ‘தமிழ் வாழும்’, ‘நமது இலக்கு என்ன? அதை அடைவது எப்படி’, ‘தமிழ்நலம் தமிழர்க்கு ஆக்கம்’, ‘மெய்ப்பொருள் காண்போம், மேன்மை அடைவோம்’ என்ற தலைப்புகளில் நூல்கள் வெளியிட்டுள்ளார். மேலதிக விவரங்களுக்கு - http://muelangovan.blogspot.in/2015/06/blog-post_12.html.


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India