செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

பேராசிரியர் என். குமாரசாமி ராஜா

பேராசிரியர் என். குமாரசாமி ராஜா (1933 - ) ….. தமிழ் மொழியியல் உலகத்தில் யாராலும் மறக்கமுடியாத ஒரு பெரும் பேராசிரியர். திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணத்தில் அவர் பெயரிலேயே ஒரு மொழி விதி ( Post Nasal Voiceless Plosive) வழங்கிவருகிறது. 1969 ஆம் ஆண்டு வெளிவந்த அவரது இந்த ஆய்வுநூலுக்குத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தின் தலைசிறந்த பேரறிஞர் எம் பி எமனோ அவர்கள் முன்னுரை அளித்துள்ளார். ராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்த பேராசிரியர் ராஜா அவர்கள், தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்று, பின்னர் பூனா டெக்கான் கல்லூரியில் மொழியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். உலகறிந்த பேச்சொலியியல் பேராசிரியர் Peter Ladefoged அவர்களின் மாணவர். சில ஆண்டுகள் மதுரையில் தமிழ்நாடு இதழிலும் பணியாற்றியுள்ளார். டேராடூன், பூனா, விசாகப்பட்டிணம், கல்கத்தா ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ள இவர், பின்னர் தனது ஆசிரியப் பணியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் மேற்கொண்டார். இடையில் இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றச் சென்றுள்ளார். 1981-83 ஆம் ஆண்டுகளில் அல்ஜீரியாவிலும் மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1970 ஆம் ஆண்டு அமெரிக்கா பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது, உரையாடல் தமிழ் ( Conversational Tamil) என்ற ஒரு நூலை உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கி, பின்னர் அதை முழுமையாக முடித்து வெளியிட்டார். இந்திய உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்சு இவரிடம் தமிழ் பயின்றுள்ளார். கிரியாவின் தமிழ் – தமிழ் – ஆங்கில அகராதியின் உருவாக்கத்தில் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 1968 ஆம் ஆண்டு திருமணம் ஆகிய இவருக்கு மோகன் குமாரசாமி என்ற ஒரு மகன் உள்ளார். தற்போது திரு. மோகன் அவர்களும் அவரது துணைவியரான லலிதா ராஜா ( மொழியியல் பேராசிரியை) அவர்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகின்றனர். நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் படித்தபோது, எனக்கும் பேரா. குமாரசாமி ராஜா அவர்கள் பேராசிரியராக இருந்தார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். திராவிட மொழிகள்பற்றிய ஆராய்ச்சியில் தலைசிறந்த பேராசிரியர் அவர்கள் சில ஆண்டுகளுக்குமுன்னர் மாலை நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தபோது, காணாமல்போய்விட்டார் என்ற செய்தியை மிக்க வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றுவரை அவரைப்பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை.


சனி, 15 ஆகஸ்ட், 2020

தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு .... (3) மொழி வளர்ச்சியில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள்...

 தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு .... (3)

மொழி வளர்ச்சியில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள்...
----------------------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவில் ''சொல்மயமாக்கம்'' பற்றிய சில கருத்துகளை முன்வைத்திருந்தேன். அதற்கு எதிர்மாறான ஒரு நிகழ்வு மொழிகளில் நடைபெறுகிறது. அது ''இலக்கணமயமாக்கம்'' என்று அழைக்கப்படுகிறது. தமிழ்மொழியில் இந்த நிகழ்வு வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.
மொழி வளர்ச்சியில் சொற்களஞ்சியத்தின் பெருக்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அந்த அளவுக்கு இலக்கணப் பொருண்மையின்... இலக்கணச்சொற்கள் அல்லது விகுதிகளின் ... வளர்ச்சியும் முக்கியத்துவம் உடையது ஆகும்.
''நான் அவரைக் கடையில் பார்த்தேன்'' என்ற தொடரில், நான்கு அகராதிச்சொற்கள் ( நான், அவர், கடை, பார் ) இடம்பெற்றிருக்கின்றன. இந்த நான்கு சொற்களும் தங்களுக்கே உரிய அகராதிப் பொருண்மைகளைக் கொண்டிருக்கின்றன. அகராதியில் இதற்கான பொருண்மையைக் காணலாம்.
மேற்கண்ட மூன்று பெயர்ச்சொற்களில் ஒவ்வொன்றும் ''பார்'' என்ற வினைச்சொல்லோடு வேறுபட்ட உறவுகளைக் கொண்டுள்ளன. இதைத்தான் ''வேற்றுமை'' என்று அழைக்கிறோம்.
(1) 'நான்' - பார்த்தவன்; முதல் வேற்றுமை; ஆனால் வெளிப்படையான வேற்றுமை உருபு கிடையாது.
(2) 'அவர்' - என்னால் பார்க்கப்பட்டவர்; இந்த உறவைக் காட்ட ''ஐ'' என்ற வேற்றுமை உருபு பயன்படுகிறது.
(3) 'கடை' - பார்க்கப்பட்ட இடம். இதை வெளிக்காட்ட ''இல்'' என்ற வேற்றுமை உருபு பயன்படுகிறது.
(4) ''பார்'' என்ற வினைச்சொல்லானது 'பார்த்தல்' என்ற செயல் நடைபெற்ற காலத்தை வெளிப்படுத்த ''த்த்'' என்ற கால இடைநிலையைக் கொண்டுள்ளது; ''ஏன்'' என்பது எழுவாயான 'நான்' என்பது உயர்திணை- தன்மை- ஒருமை என்பதைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், ''பார்த்தான் '' என்பது ஒரு வினைமுற்று என்பதையும் காட்டிநிற்கிறது.
ஆகவே, 'நான்' 'அவர்' 'கடை' 'பார்' என்ற நான்கும் அகராதிச்சொற்கள்;
'ஐ' 'இல்' 'த்த்' 'ஏன்' என்ற நான்கும் இலக்கணச்சொற்கள். எழுவாய்க்கான வெளிப்படையான வேற்றுமை உருபு கிடையாது. இலக்கணச் சொற்கள் தாங்கள் இணைகின்ற அகராதிச்சொற்களின் அடிப்படை அகராதிப் பொருண்மையை மாற்றாது. மாறாக, அகராதிச்சொற்களுக்குத் திணை, எண், பால், இடம், வேற்றுமை, காலம் போன்ற பல்வேறு இலக்கணப் பண்புகளைக் கூட்டும். இந்த இலக்கண உருபுகள்தான் ஒரு தொடரில் அமைகிற அகராதிச் சொற்களுக்கு இடையே பலவகைப்பட்ட உறவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே ஒரு தொடரில் அகராதிச்சொற்கள் இடம்பெறும்போது, ஒவ்வொரு அகராதிச்சொல்லும் தங்களுக்குரிய இலக்கணக்கூறுகளை அல்லது பண்புகளைப் பெற்றுக்கொண்டுதான் , தொடரை முழுமையடையச் செய்கின்றன. அதாவது ஒரு தொடரில் உள்ள அகராதிச்சொற்களை முறையாகப் பிணைத்து, ஒரு முழுமையான தொடர்ப்பொருளை வெளிப்படுத்த உதவும் சொற்களே இலக்கணச் சொற்கள் ஆகும். இவை குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கும். அகராதிச்சொற்கள் பல ஆயிரங்கள் இருக்கலாம். ஆனால் இலக்கணச் சொற்கள் குறைவாகவே இருக்கும்.
சமுதாயம் மாற மாற... சிந்தனை வளர்ச்சி ஏற்பட ஏற்பட .. நடைமுறையில் மொழிச் செயல்பாடுகள் வளர வளர... அகராதிச்சொற்கள் புதிது புதிதாகத் தோன்றுவதுபோல, இலக்கணச்சொற்களும் மாறுகின்றன; விரிவு அடைகின்றன. சில இலக்கணச் செயல்பாடுகள் மறையலாம். அப்போது அவற்றிற்குரிய இலக்கண உருபுகள் மறையலாம். அதுபோலப் புதிய இலக்கண உருபுகள் தோன்றலாம். தோன்றும். அகராதிச்சொற்கள், இலக்கணச்சொற்கள் இரண்டுமே தொடர்ந்து மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கும்.
புதிய இலக்கணக்கூறுகள் அல்லது உறவுகள் தோன்றும்போது, அவற்றிற்குரிய இலக்கண உருபுகள் புதிய வடிவங்களில் தோன்றலாம். மேலும் ஏற்கனவே நீடிக்கிற அகராதிச்சொற்களும் தங்களுக்குரிய அகராதிப்பொருண்மையைத் தக்கவைப்பதோடு, புதிய இலக்கணக் கூறுகளுக்கான இலக்கணச் சொற்களாகவும் பயன்படலாம். சில வேளைகளில் சில அகராதிச்சொற்கள் தங்கள் அகராதிப் பொருண்மையையே முழுமையாக விட்டுவிட்டு, முழுக்க முழுக்க இலக்கணச் சொற்களாகவே பயன்படத் தொடங்கலாம்.
எடுத்துக்காட்டாக, ' நான் அவரைப் பார்த்தேன்'(' I saw him") - ' நான் அவரைப்பற்றிப் பேசினேன்' ("I talked about him") என்ற இரண்டு தொடர்களிலும் இடம்பெறுகிற 'அவரை' என்பதற்கும் 'அவரைப்பற்றி' என்பதற்கும் இடையில் பொருண்மை வேறுபாடு இருக்கிறது. முதல் சொல்லில் 'ஐ' என்ற வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ளது; இரண்டாவதில் 'ஐப்பற்றி' என்ற இலக்கண உருபு இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது தொடரில் ''ஐ'' என்பதோடு இணைந்து வருகிற ''பற்றி'' என்பது தமிழுக்குப் புதியது இல்லை; ஏற்கனவே நீடிக்கிற 'பற்று' ("hold") என்ற வினைச்சொல்லின் செய்துவாய்பாட்டு வினையெச்ச வடிவம்தான் இது. ஆனால் இந்தத் தொடரில் அது தனது முந்தைய வினைச்சொல் பொருண்மையைக் காட்டவில்லை; மாறாக, ''ஐ'' -யோடு இணைந்து வேறொரு வேற்றுமை உறவை - "about" - என்ற இலக்கணப் பொருண்மையை வெளிப்படுத்துகிறது. அதாவது ''பற்று'' என்ற வினைச்சொல்லின் அகராதிப் பொருண்மையை இத்தொடரில் வெளிப்படுத்தாமல், வேறொரு இலக்கணப் பொருண்மையை வெளிப்படுத்தும் இலக்கண உருபாகப் பயன்படுகிறது. இதையே மொழியியலார் '' இலக்கணமயமாக்கம் '' (grammaticalization") என்று அழைக்கிறார்கள். இதுபோன்று இன்றைய தமிழில் 50-க்கும் மேற்பட்ட அகராதிச்சொற்கள் வேற்றுமை உறவுகளை வெளிக்காட்டக்கூடிய இலக்கணச்சொற்களாகவும் மாறி அமைந்து பயன்படுகின்றன. 'ஐவிட' 'ஐப்போல' 'ஐநோக்கி' 'ஐக்குறித்து' ஐமுன்னிட்டு' 'க்காக' 'க்கென்று' 'க்குவெளியே' 'அன்பொருட்டு' 'உடன்' என்று பல இலக்கண உருபுகள் அகராதிச்சொற்களிலிருந்து இலக்கணச் சொற்களாகவும் மாறிப் பயன்படுகின்றன.
பெயர்ச்சொற்களுடன் இணைந்து வேற்றுமை உறவுகளைக் காட்டப் புதிய இலக்கணச் சொற்கள் உருவாகியிருப்பதுபோல, வினைச்சொற்களோடு இணைந்து புதிய இலக்கணப் பண்புகளைக்காட்டவும் புதிய இலக்கண உருபுகள் உருவாகியுள்ளன.
'அவர் இங்கு இருக்கிறார்'
'அவர் இங்கு வந்திருக்கிறார்'
மேற்கண்ட இரண்டு தொடர்களிலும் இடம்பெறுகிற ''இரு'' என்ற சொல், இரண்டிலும் வேறுபட்ட பொருண்மையை வெளிப்படுத்துகிறது. முதல் தொடரில் 'இரு' என்பது 'இருத்தல்' என்ற செயலைக் குறித்து நிற்கிறது. இரண்டாவது தொடரில் 'இரு' என்பது தனது அகராதிப் பொருண்மையை இழந்து, 'வருதல்' என்ற செயல் அண்மையில் முடிவுற்று, அதன் தாக்கம் நீடித்துவருகிறது என்ற ஒரு இலக்கணப் பொருண்மையைக் காட்டிநிற்கிறது. ஆங்கிலத்தில் இதை "perfect aspectual" என்று அழைக்கிறார்கள். அதாவது இந்தச்சொல் தனது முதன்மைப் பொருண்மையை இங்குக் கைவிட்டுவிட்டு, 'வருதல்' என்ற வினையின் அகராதிப் பொருண்மையை மாற்றாமல், அதற்கு மேலும் சற்று இலக்கணப் பொருண்மையைக் கூட்டுகிறது. இதை வினைக்கூறு என்று அழைக்கிறார்கள். இன்றைய தமிழில் இதுபோன்று 20-க்கும் மேற்பட்ட வினைக்கூறுகளை வெளிப்படுத்தும் இலக்கண உருபுகள் ஏற்கனவே நீடிக்கிற வினைச்சொற்களிலிருந்து உருவாகி நீடிக்கின்றன. ( கொண்டிரு, விடு, பார், காட்டு, தொலை, வை ...) . இவையெல்லாம் முதன்மை வினைகளுக்குத் துணையாக வருகிற துணைவினைகளாக அமைந்துள்ளன.
மேற்கண்டதுபோல, சில முதன்மை வினைச்சொற்கள் வினைகளை மேற்கொள்பவரின் நோக்கை வெளிப்படுத்தும் துணைவினைகளாகப் பயன்படுகின்றன. 'வரவேண்டும்' 'வரமுடியும்' 'வரக்கூடாது' 'வரலாம்' 'வரக்கூடும்' 'வரமாட்டேன்' ஆகியவற்றில் வருகிற 'வேண்டும், முடியும், கூடாது, லாம், கூடும் , மாட்டேன்' ஆகியவை எல்லாம் வினைநோக்கு என்று அழைக்கப்படுகிற துணைவினைகளாக இன்று பயன்படுகின்றன.
இவ்வாறு, தமிழில் புதிய புதிய இலக்கணக் கூறுகள் தோன்றி வளர வளர, அவற்றை வெளிப்படுத்துவதற்கான இலக்கணச் சொற்களாக ஏற்கனவே நீடிக்கிற அகராதிச்சொற்கள் மாறி அமைகின்றன. இங்கு நாம் பார்க்கவேண்டியது, இவ்வாறு மாறி அமைகிற அகராதிச்சொற்கள், பிற இடங்களில் அகராதிச்சொற்களாகவும் தொடர்ந்து பயன்படுகின்றன. 'எனக்குப் புத்தகம் வேண்டும்' என்பதில் முதன்மை வினையாக வருகிற 'வேண்டும்' என்பது 'நான் வரவேண்டும்' என்ற தொடரில் துணைவினையாகப் பயன்படுகிறது.
ஆகவே, தமிழ்மொழி வளர்ச்சியில் புதிய புதிய அகராதிச்சொற்கள் முந்தைய பதிவில் பார்த்த ''சொல்மயமாக்கம்'' என்ற செயல்பாட்டின்வழியே தோன்றி நீடிப்பதுபோல .... புதிய புதிய இலக்கண உறவுகளை வெளிப்படுத்த ஏற்கனவே நீடிக்கிற அகராதிச்சொற்கள் இலக்கணச்சொற்களாகவும் மாறி அமைகின்றன. இதையே இங்கு நாம் 'இலக்கணமயமாக்கம் ' என்று அழைக்கிறோம்.
உயிருள்ள ஒரு மொழியில் தொடர்ந்து இந்த இரண்டு செயல்பாடுகளும் - சொல்மயமாக்கம், இலக்கணமயமாக்கம் என்ற இரண்டும் - நீடிக்கும். இந்தச் செயல்பாடுகள் அம்மொழியைச் சமுதாயத்தின் மொழிச்செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுகிற மொழியாக வாழவைப்பதில் முக்கியப் பங்கு ஆற்றுகின்றன.
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு .... (2) மொழி வளர்ச்சியில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள்...

 தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு .... (2)

மொழி வளர்ச்சியில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள்...
-------------------------------------------------------------------------
உலகில் நிலவும் அனைத்தும் மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டவையே. இயற்கை, சமுதாயம், மனித மனம் அல்லது அறிவு ஆகிய அனைத்தும் மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டவையே. சமுதாய விளைபொருளான மொழியும் இதற்கு விதிவிலக்கு இல்லை. ஒரு குறிப்பிட்ட மொழி, தான் பயன்படுத்தப்படும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கேற்ப... தேவைகளுக்கேற்ப.... தொடர்ந்து மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கும்.
தமிழ்மொழியும் மேற்குறிப்பிட்ட மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டதே. இதில் குறிப்பிடத்தக்க இரண்டு நிகழ்வுகளைப்பற்றி இங்குக் குறிப்பிடுகிறேன். அவை 'சொல்மயமாக்கம் (Lexicalization) ' ' இலக்கணமயமாக்கம் (Grammaticalization) ' என்பதாகும்.
தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கேற்ப தமிழ் தனது சொல்வளத்தைப் பெருக்கிக்கொண்டே வந்துள்ளது. சொல்வளத்தைப் பெருக்குவதில் மூன்று முக்கியப் போக்குகளைப் பார்க்கலாம். (1) ஒன்று, புதிய கருத்துகளுக்கும் பொருள்களுக்கும் புதிய சொல்களை உருவாக்குவது ('கல்லூரி'), ... (2) இரண்டாவது, நீடிக்கிற சொல்களின் பொருண்மையைச் சற்று மாற்றிப் பயன்படுத்திக்கொள்வது ('பனுவல்' 'அணு'). ஏற்கனவே இச்சொல்களுக்கு இருக்கிற பொருண்மைகள் மாற்றப்பட்டு, புதிய பொருண்மை அளிக்கப்படுகிறது. (3) மூன்றாவது, ஏற்கனவே நீடிக்கிற இரண்டு சொல்களைத் தொகையாக மாற்றிப் பயன்படுத்திக்கொள்வது ('பல்கலைக்கழகம்', 'பள்ளிக்கூடம்') ஆகும்.
மேற்குறிப்பிட்டதில் மூன்றாவதாக அமைகிற தொகைகளின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க பண்பைக் காணலாம். தொகை என்றாலே ஒன்றுக்குமேற்பட்ட சொல்கள் இணைந்து ஒரு குறிப்பிட்ட பொருண்மையை வெளிப்படுத்தப் பயன்படுவது ஆகும். 'கற்சிலை' என்பது 'கல்' 'சிலை' என்ற இரண்டு சொல்களைக்கொண்டு அமைந்துள்ளது. இந்தத் தொகையின் பொருண்மையைத் தெரிந்து கொள்ள, இந்த இரண்டு சொல்களின் பொருண்மையைக் கூட்டினாலே போதும். இதுவே தொகை என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை compound என்று அழைக்கிறார்கள். தமிழில் ஏராளமான தொகைச்சொல்களைக் காணலாம். அவற்றைப் பெயர்த்தொகை, வினைத்தொகை, உம்மைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என்று தமிழில் வேறுபடுத்துகிறோம்.
அவ்வப்போது தேவைக்கேற்ப புதிய புதிய தொகைச்சொல்களை உருவாக்கிக் கொள்கிறோம். இதன் பொருண்மையைப் புரிந்துகொள்வது அனைவருக்கும் எளிது. ஏனென்றால், தொகைகளில் இடம்பெறுகிற சொல்களின் பொருண்மை மாறாமல் இருக்கிறது. அந்தப் பொருண்மைகளைக் கூட்டினால், அந்தத் தொகைச்சொல்லின் பொருண்மை கிடைத்துவிடும் (அன்மொழித்தொகை இதற்குச் சற்று விதிவிலக்கு.)
ஆனால் ஒரு புதிய பொருண்மையை வெளிப்படுத்தும் தேவை ஏற்படும்போது, இரண்டு சொல்களை இணைத்துத் தொகையை உருவாக்கும்போது, ஒரு புதியவகை மாற்றத்தைப் பார்க்கலாம். ''வானொலி'' என்ற சொல்லானது, இரண்டு சொல்களை - 'வான்' , 'ஒலி' என்று இரண்டு சொல்களை- கொண்டது. ஆனால் இதன் பொருண்மை 'radio' என்பதாகும். இங்குத் தொகையில் இடம்பெற்றுள்ள 'வான்' ' ஒலி' என்ற இரண்டு சொல்களின் பொருண்மையைக் கூட்டினால் , நாம் எதிர்பார்க்கிற பொருண்மை கிடைக்காது. மாறாக, ஒரு புதிய பொருண்மை அளிக்கப்படுகிறது. 'வானொலி' என்பது ஒருசொல் நீர்மையாக அமைகிறது. 'பச்சிலை' 'செங்கல்' போன்ற பல சொல்கள் இதுபோன்று உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையான மாற்றங்களை '' சொல்மயமாக்கம்'' ( Lexicalization ) என்று மொழியியலாளர்கள் அழைக்கின்றனர்.
'பச்சை' 'இலை' என்ற இரண்டு சொல்களை இணைத்து, சித்தவைத்தியத்தில் பயன்படுத்தும் மருந்துவகையைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். இந்தப் 'பச்சிலை' மருந்தில் இடம்பெறுகிற இலைகள் பச்சை நிறத்தில் இருக்கவேண்டும் என்று தேவையில்லை. அதாவது இங்கு 'பச்சை' என்பது நிறத்தைக் குறிக்கவில்லை. அதுபோல, 'செங்கல்' என்பதிலும் 'சிவப்புக்கல்' என்ற பொருண்மை இல்லை. வேறு நிறங்களிலும் 'செங்கல்கள்' இருக்கலாம். பள்ளிகளில் பயன்படுகிற 'கரும்பலகை' என்ற சொல்லும் இன்று வெள்ளைநிறத்தில் இருக்கிற பலகைகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
எனவே தொகைகளைப் பற்றி ஆராயும்போது , மேற்கூறிய வகையிலான மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். தொகையில் இடம்பெறுகிற
சொல்களின் தனிப்பொருண்மையைக் கூட்டி வரும் பொருண்மையே அத்தொகைகளின் பொருண்மை என்றால், அத்தொகை 'தொகையாகவே' நீடிக்கிறது.
ஆனால் அவ்வாறு இல்லாமல், இரண்டு சொல்களும் இணைந்து அமையும்போது, புதிய பொருண்மை ஒன்று அத்தொகைக்கு அளிக்கப்பட்டால், அது தொகை என்ற நிலையிலிருந்து, ஒருசொல்நீர்மைத் தன்மை உள்ள ஒரு புதிய அகராதிச்சொல்லாக ( Lexicon) அமைகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட சொல்கள் இணைந்து, தங்களுக்குரிய பொருண்மையிலிருந்து மாறி, வேறு ஒரு புதிய பொருண்மையை வெளிப்படுத்தும் இந்த மொழிச்செயல்பாடே 'சொல்மயமாக்கம்'!. இதற்கு மாறுபட்டு, அகராதிச்சொல்லாக நீடிக்கிற ஒன்று, தன் அகராதிப்பொருண்மையை இழந்து, இலக்கணப் பொருண்மையைக் காட்டும் இலக்கணச் சொல்லாக மாற்றமடைவதை 'இலக்கணமயமாக்கம்' (Grammaticalization) என்று அழைக்கிறார்கள். அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

'' உயர்ந்த மனிதன் '' ''பழுத்த பழம்'' - ஒரு விளக்கம்!

 ''உயர்ந்த மனிதன்'' ''பழுத்த பழம்'' ''சிறந்த மனிதர் '' ஆகியவற்றில் '' உயர்ந்த, பழுத்த, சிறந்த '' என்பவை இறந்தகாலப் பெயரெச்சங்களா அல்லது பெயரடைகளா?'' - பேரா. ச. அகத்தியலிங்கம், பேரா. பொற்கோ ஆகியோரின் விளக்கம்! தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் கவனத்திற்கு!

-----------------------------------------------------------------------------------------------------

'' கெட்ட, உயர்ந்த, சிறந்த முதலான கிளவிகள் இறந்தகாலப் பெயரெச்ச வடிவத்தைப் பெற்றுத் திகழுகின்றன. ஆனால் இவை உள்ளபடியே இறந்தகாலப்பெயரெச்சங்களாகச் செயல்படவில்லை. உயர்ந்த குணம் என்பதிலுள்ள உயர்ந்த என்பது இறந்தகாலப் பெயரெச்சமாக இருந்தால், அதற்குரிய எதிர்மறை உயராத குணம் என்று அமையவேண்டும். ஆனால் அப்படியில்லாமல் உயர்ந்த குணம் என்பதற்கு எதிர்மறையாக நாம் தாழ்ந்த குணம் அல்லது இழிந்த குணம் என்ற தொடரையே காண்கிறோம். இங்கே உயர்ந்த என்பதற்குரிய எதிர்மறை தாழ்ந்த அல்லது இழிந்த என்பதே . ஆகவே உயர்ந்த என்பதை நாம் இறந்தகாலப் பெயரெச்சமாகக் கொள்ளாமல் பெயரடையாகக் கொண்டிருக்கிறோம். இதே முறையில் சிறந்த, இழிந்த, தாழ்ந்த, கெட்ட முதலானவற்றையும் விளங்கிக்கொள்ளவேண்டும். இங்கே குறிப்பிட்ட இந்தப் பெயரடைகளெல்லாம் வினைப்பண்பு உடையனவாக விளங்குகின்றன. '' அவன் என்னைவிட உயர்ந்த குணம் உள்ளவன்; அவன் உங்களைப்போல உயர்ந்த குணம் உள்ளவன்'' முதலான தொடர்களில் 'என்னைவிட' 'உங்களைப்போல' முதலான கிளவிகள் வினைகொண்டு முடிவன. இங்கே ''என்னைவிட'' ''உங்களைப்போல'' முதாலன கிளவிகள் உயர்ந்த என்ற சொல்லோடு சென்று சேர்வது கவனிக்கத்தக்கது''. ( பேராசிரியர் பொற்கோ;இக்காலத் தமிழ் இலக்கணம்; பக்கம் 101-102).

'' வினைப்பெயரடைகள் - பெயரடைகள் பண்புப் பெயர்களிலிருந்தும் பெயரடைகளிலிருந்தும் உருவாவது போன்று வினையடிகளிலிருந்தும் உருவாக்கம் பெறுகின்றன. படித்த பையன், இருண்ட வீடு , வெளுத்த பையன் போன்றவை வினைகளிலிருந்து உருவாக்கம் பெறுகின்றன. இவை ''வினையடி + கால இடைநிலை + பெயரடை விகுதி'' என்ற அமைப்பைக் கொண்டு வரும். இங்குக் கால இடைநிலை காலம் காட்டுவதில்லை. பழுத்த பழம், நீண்ட கயிறு, உயர்ந்த உள்ளம், விரிந்த மார்பு, சிறந்த வாழ்க்கை ஆகியவை இதற்கு உதாரணங்கள். இவை பழுத்திருக்கின்ற பழம், நீண்டிருக்கின்ற கயிறு, உயர்ந்துள்ள உள்ளம், விரிந்திருக்கின்ற மார்பு, சிறப்பான வாழ்க்கை என்று பொருள்படும் நிலையில் அவை கொண்டுமுடியும் பெயர்களின் பண்பைக் காட்டுவது காணத்தக்கது. இவற்றை நீளமான கயிறு, உயர்வான உள்ளம், விரிவான மார்பு என்றெல்லாம் மாற்றிக்கூறமுடியும். இந்நிலையில் இவை பெயரடைகளாகவே உள்ளன. ஒரு பழுத்த பழம், ஒரு நீண்ட கயிறு போன்று ஒரு பெயர்த்தொடராகவே இவை உள்ளன. வினைத்தன்மையை இழந்து வினைப்பண்பைக்கொண்ட பெயரடைகளாக உள்ளன.இவை. எனவேதான் இதில் வரும் - அ என்ற விகுதி பெயரடை விகுதியாகக் கருதப்படுகின்றது. ''( பேரா. அகத்தியலிங்கம்; தமிழ்மொழி அமைப்பியல் ; பக்கம் 158-159) . நீண்ட விளக்கத்திற்கு மன்னிக்கவும்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

தாய்மொழிக்கொள்கையின் அடிப்படைகள்...

தாய்மொழிக்கொள்கையின் அடிப்படைகள்...
--------------------------------------------------------------------------
முதலாவதாக, தமிழ்நாட்டில் கல்வித்துறையில் அனைத்து நிலைகளிலும் பயிற்றுமொழியாகவும் , வணிகம் உட்பட அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தமொழியாகவும் , தமிழ்நாடு அரசின் அலுலகங்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் பயன்படுத்துகிற மொழியாகவும் தமிழே இருக்கவேண்டும்.
இரண்டாவதாக, நடுவண் அரசின் ஆட்சி அல்லது அலுவலகமொழியாக இந்தி மட்டுமல்லாமல், தமிழ் உட்பட அரசியல் சட்டத்தில் 8-ஆவது பின்னிணைப்பில் உள்ள 22 மொழிகளும் நீடிக்கவேண்டும். இந்த இரண்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டால், பிறமொழிகள்பற்றிய அச்சம் யாருக்கும் உருவாகாது.
மூன்றாவதாக, நமது கல்விமுறை, பாடத்திட்டம் அனைத்தும் பன்னாட்டு நிறுவங்களுக்கான பணியாளர்களை உருவாக்கும் வழிமுறையாகவே நீடிக்கிறது. எனவேதான் ஆங்கிலம் இல்லையென்றால், நமக்கு வேலையே இல்லை, வாழ்க்கையே இல்லை என்ற ஒரு மாயை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கம் இருந்தால்தான், உள்நாட்டு மொழிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும்; தேவையற்ற ஆங்கிலமோகம் நீடிக்காது.
எனவே, மொழிக்கொள்கையை வெறும் பயிற்றுமொழி, கல்விமொழிக் கொள்கையாக மட்டும் பார்க்கக்கூடாது. நாட்டின் அரசியல் பொருளாதாரத்தோடு இணைந்த ஒன்றாகத்தான் பார்க்கவேண்டும். இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்தினால், தமிழகத்தில் தேவைப்பட்டால் ஆங்கிலம் உட்பட எந்த ஒரு பிறமொழியையும் படிப்பதில் யாருக்கும் அச்சம் ஏற்படாது.

தேசிய இனங்களின் உரிமையும் மொழி ஜனநாயகமும். (2) .

தேசிய இனங்களின் உரிமையும் மொழி ஜனநாயகமும். (2) ..
-------------------------------------------------------------------------
மொழித்திணிப்பு... மொழி ஆதிக்கம் ... என்பவற்றைத் தற்போதைய சூழலில் இரண்டாக வேறுபடுத்திப் பார்க்கவேண்டியுள்ளது. நடுவண் அரசு நம்மீது இந்தியைத் திணிப்பது வேறு ! நாமே நம்மீது ஆங்கிலத்தைத் ''திணித்துக்கொள்வது '' வேறு!
தாய்மொழி உணர்வுடைய- மொழி ஜனநாயக உணர்வுடைய - ஒருவருக்கு இந்த இரண்டுமே தவறுதான். தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தாய்மொழியாகிய தமிழில் கையொப்பம் இடுவதற்குக்கூட அரசு ஆணையும், தண்டனையும் தேவைப்படுகிற ஒரு சூழல்.
பள்ளிகளில் ஆங்கிலப்பயிற்றுமொழியை நாமே விரும்பி ஏற்றுக்கொள்கிறோம். தமிழ்வழிக் கல்வி நீடிக்கிற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதால், பள்ளிகளை மூட வேண்டியுள்ளது அல்லது ''ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளியாக '' மாற்றவேண்டியுள்ளது. நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதைப் பெற்றோர்களே ''விரும்புகிறார்கள்''. தமிழில் பேசுவதையே ''படிக்காத குடும்பங்களின் செயலாகப் '' பார்க்கிறோம். ஏதேதோ காரணங்கள் சொல்லி, நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.
இதற்குக் காரணம்.... மொழிகள்பற்றிய அறிவியல் பார்வை குறைவாக இருப்பதும், அரசியல்-பொருளாதாரக் காரணங்களுமே ஆகும். வழக்கிழந்த ஹீப்ரோ மொழியையே இன்று அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பயன்படுகிற ஒரு மொழியாக மாற்றியுள்ள இன்றைய சூழலில்.... தாய்மொழித் தமிழை இன்னும் எத்தனை ஆண்டுகள் .... அரசு அலுவலகங்களில்.... பள்ளிகளில்.. கல்லூரிகளில்.... கோயில்களில்... வீடுகளில்கூட ''படி ஏறமுடியாத'' ஒரு மொழியாக வைத்திருக்கப் போகிறோம்? அதேநேரத்தில் 'வடமொழித் திணிப்பு .. இந்தித்திணிப்பு'' என்று கூறிக்கொண்டு... எவ்வளவு காலத்திற்கு ஆங்கிலத்தை நாமே நமது தலையில் சுமந்துகொண்டிருக்கப் போகிறோம்?
எந்த ஒரு மொழியும் நமக்கு பகை இல்லை. அவற்றின் ''மேலிருந்து திணிப்பையும்'' ''நம்மீது நாமே திணித்துக்கொள்கின்ற திணிப்பையும்'' எதிர்க்கவேண்டும். இரண்டு ''திணிப்புகளுமே '' கூடாது! எந்த மொழியையும், எத்தனை மொழிகளையும் ஒருவர் கற்றுக்கொள்ளட்டும் அவரவர் தேவைகளுக்கேற்ப. அது நல்லதே .ஆனால் தாய்மொழித் தமிழை... தமிழகத்தில் அனைத்துத்துறைகளிலும் உயர்த்திப்பிடிப்போம் என்பதே நமது குரலாக ஒலிக்கவேண்டும்!

தேசிய இனங்களின் உரிமையும் மொழி ஜனநாயகமும் .(1)

தேசிய இனங்களின் உரிமையும் மொழி ஜனநாயகமும் .(1)
---------------------------------------------------------------------- ------------------------------------
தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சி உள்ள நமது தாய்மொழி தமிழ்மொழியின் சிறப்புபற்றி மகிழ்வடைவோம். அதனை இன்றைய தேவைக்கேற்பவும் அறிவியல் உலகிற்கு ஏற்பவும் அடுத்த உயர்கட்ட நிலைக்குக் கொண்டுசெல்வோம். அதுவே நமது இலக்காக இருக்கவேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்வோம்.
உலகில் உள்ள மொழிகள் அனைத்தும் மனித மூளையின் படைப்புகளே. ஒவ்வொரு மொழியும் அது பேசப்படுகிற மக்களுக்குச் சிறப்பானதே. ஆனால் அரசியல், பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மொழி பிறமொழிகளின்மீது ஆதிக்கம் செலுத்தலாம். பிற இனங்களின்மீது ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் அதற்குக் காரணம் அந்த மொழி இல்லை. அதைப் பிறமொழியினரின்மீது திணிக்க... ஆதிக்கம் செலுத்த முயலும் அரசியல் சக்திகளே . அந்த மொழியோ அந்த மொழி பேசும் மக்களோ இல்லை.
நமது நோக்கம்... அந்த மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதாக அமையவேண்டும்... அதற்குப் பின்னணியாக உள்ள அரசியல் சக்திகளை எதிர்த்துப் போராடுவதாக இருக்கவேண்டும். அதற்கு மாறாக, அந்த மொழிக்கு எதிராகவோ, அந்த மொழி பேசும் மக்களுக்கு எதிராகவோ செயல்படுவதாக அமையக்கூடாது. எந்த ஒரு பிறமொழியும் அதைப் பேசுகிற மக்களும் நமக்குப் பகைவர்கள் இல்லை. அதைத் திணிக்கும் முயலும் சக்திகளே நமக்குப் பகை. இதுதான் மொழி ஜனநாயகம்.
ஆங்கிலமோ, இந்தியோ, வடமொழியோ நமக்கு பகை இல்லை. அந்த மொழிகளைப் பேசும் மக்களும் பகை இல்லை. அவற்றைப் பிறமொழியினரின் மீது திணிக்கும் சக்திகளே நமக்குப் பகை! நமது மொழியின் சிறப்பை உலக அளவிற்கு எடுத்துச்செல்வோம். பிற மொழிகளின் சிறப்புகளை அந்தந்த மொழி பேசும் மக்கள் எடுத்துச் செல்லட்டும். நமது மொழி ஜனநாயக உரிமைகளை உயர்த்திப்பிடிப்போம். அதே வேளையில் பிறமொழியினரின் மொழி ஜனநாயகத்தையும் மதிப்போம்.
நமது இனத்தின்மீதோ, தாய்மொழிமீதோ பிற எந்தவொரு இனமும் அல்லது மொழியும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கமுடியாது. அதுபோன்று பிற இனங்களின்... மொழிகளின் ஜனநாயக உரிமைகளையும் மதிப்போம். இந்தவகையான ஒற்றுமையே... பாதிக்கப்படுகிற இனங்கள் ஒன்றுபட்டு... ஆதிக்கம் செலுத்துகிற இனங்களுக்கும் ஆதிக்கம் செலுத்துகிற மொழிகளின் திணிப்புக்கும் ... எதிராகப் போராடுவதை வலியுறுத்துவதே இன உணர்வுடன் இன உரிமைக்காகப் போராடுகிற ... ஜனநாயக உணர்வுடைய ... ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

முதுபெரும் பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்களின் முக்கிய நூல்கள்.

முதுபெரும் பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்களின் தமிழ் மொழி ஆய்வாளர்களுக்கான ஐந்து முக்கிய நூல்கள் ...
---------------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையிலும் மொழியியல் துறையிலும் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். அங்கேயே மூன்று ஆண்டுகள் மாணவராகவும் இருந்தவர். எங்களுடைய மொழியியல் பேராசிரியர். மறைந்த பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் அவர்களின் உற்ற நண்பர்.
பேராசிரியர் தமிழ் இலக்கணங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 80 வயதைக் கடந்தும் இன்றும் தன்னுடைய ஒவ்வொரு நொடியையும் மொழி ஆய்வுக்காகவே செலவழித்துவருபவர். ஒரு புதிய செய்தியை அவர் பெற்றவுடனேயே என்னை அலைபேசியில் அழைத்து, அதைப்பற்றி விளக்குவார். என்னுடைய பல ஐயங்களுக்கும் அவரைத்தான் தொந்தரவு செய்துவருகிறேன் இந்த நிமிடம்வரை.
தனது ஆய்வில் எந்தவொரு சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். சரி என்றால் சரி... தவறு என்றால் தவறுதான்!
அவர் தொல்காப்பியம்பற்றியும் அதற்கான உரையாசிரியர்களான நச்சினாக்கினியர், இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோரின் உரைகள்பற்றியும் மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு .. அதனடிப்படையில் தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாடுகள்பற்றி ஐந்து ஆய்வுநூல்களை அளித்துள்ளார். எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக்கோட்பாடு - மூன்று தொகுதிகள், தொல்காப்பியத் தொடரியல் என்ற நூல்களே அவை.
தொல்காப்பியரின் சிறப்பு என்ன... அவர் நூலில் உள்ள இடைவெளிகள் எவை... உரையாசிரியர்கள் எவ்வாறு தொல்காப்பியத்திற்கு விளக்கம் அளித்துள்ளனர்... எங்கெங்கெல்லாம் தேவையற்ற ''வழுவமைதி'' காண முற்படுகின்றனர்.... இன்றைய மொழியியல் நோக்கில் தொல்காப்பியிரின் கருத்துகள் எவ்வாறு சிறந்து நிற்கின்றன .. தொல்காப்பியர் காலத்துச் சமூக அமைப்பு (உயர்வு -தாழ்வு) எவ்வாறு அவர் இலக்கணத்தில் வெளிப்படுகின்றது - இவைபற்றியெல்லாம் மிக ஆழமான, தெளிவான கருத்துகளை இந்நூல்களில் முன்வைக்கிறார்.
மேற்குறிப்பிட்ட ஐந்து நூல்களையும் ஒருவர் படித்தாலே தொல்காப்பியரின் சிறப்பையும் உரையாசிரியர்களின் சிறப்புகளையும் நன்றாகவே தெரிந்துகொள்ளமுடியும்.
தமிழகத்தில் மொழியியல் பேராசிரியர்கள் தமிழ் இலக்கண ஆய்வுக்கு ஆற்றியுள்ள மிகச் சிறப்பான பணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகப் பேராசிரியரின் இந்த நூல்கள் அமைந்துள்ளன.
''மொழியின் அமைப்பு முழுமையும் பழைய இலக்கண ஆசிரியர்கள் சொல்லி முடித்துவிட்டார்கள், அப்படிச் சொல்லாதது ஏதாவது நமக்குத் தோன்றினால், அது சிறப்பில்லாததாகவோ, சிறுபான்மை வழக்காகவோ இருக்கவேண்டும் என்பது இடைக்கால உரையாசிரியர்களின் மனப்பான்மையாக இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, ஒரு ஆசிரியரே மொழி அமைப்பில் எல்லாக் கூறுகளையும் கண்டு சொல்வது என்பது இயலாத காரியம். எனவே நமக்குத் தோன்றுகின்ற அமைப்புபற்றிய உண்மை, மூல ஆசிரியர் கூறிய அமைப்புபற்றிய உண்மையைப்போல ஒத்த சிறப்புடையதுதான்; ஏனெனில் இலக்கண ஆராய்ச்சி ஆனாலும் பிற துறை ஆராய்ச்சியானாலும் ஒவ்வொரு காலத்து அறிஞர்களும் புதிய புதிய உண்மைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பது உலக இயல்பு. நாம் ஒரு புது அமைப்போ, உண்மையோ கண்டுபிடிப்பதால் முன்னோர்க்கு இழுக்கு வந்துவிடாது . எனவே இடைக்கால உரைகளைப் படிக்கும்போது உரையாசிரியர்கள் கொடுக்கும் குறிப்புகளின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவர்கள் கூறும் சிறப்பில்லாதது, சிறுபான்மை போன்றவற்றை உண்மையாகக் கொள்ளவேண்டியதில்லை; உண்மையாகவும் கொள்ளக்கூடாது. ''

தொல்காப்பியம் வடமொழி இலக்கணங்களின் தழுவலா ? இல்லை!

தொல்காப்பியம் வடமொழி இலக்கணங்களின் தழுவலா ? இல்லை என்பதைத் தனது ஒன்பது கட்டுரைகள் வாயிலாகப் பேராசிரியர் க. பாலசுப்பிரமணியன் அவர்கள் நிறுவியுள்ளார்.
--------------------------------------------------------------------------
'' மேனாட்டு இலக்கண மரபு, மேனாட்டினரால் மிகச் சிறந்ததாக மதிக்கப்படும் வடமொழி இலக்கண மரபு, இன்று அறிவியல் அடிப்படையில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மொழியியல் கொள்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் தமிழ் இலக்கண மரபை மதிப்பிடும்போது அதன் பெருமையும் சிறப்பும் நுண்மையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தமிழ் மரபு, மேனாட்டு வடமொழி இலக்கண மரபுகளுடன் மேலெழுந்த வாரியாக நோக்கினால் சிற்சில ஒற்றுமைகளைக் கொண்டிருப்பினும் அடிப்படையில் அவற்றினின்றும் வேறுபட்டுத் தனித்துயர்ந்து நிற்கின்றது. தொல்காப்பியம் மிக நெடிய அம்மரபினைப் போற்றிப் பொதிந்து வைத்திருக்கும் கருவூலமாக இன்றளவும் நின்று நிலவுகின்றது. ''
தமிழ் இலக்கண நூல்களுள் தொல்காப்பியம் மட்டுமே தமிழ் இலக்கண மரபின் மிகப்பழைய வடிவை முழுதும் தன்னகத்தே கொண்டிருப்பதாக அமைந்து விளங்குகிறது. பின்வந்த இலக்கண நூல்களில் வீரசோழியமும் பிரயோகவிவேகமும் வடமொழி இலக்கண மரபைப் பெரிதும் பின்பற்றியுள்ளன.''
தமிழ் இலக்கண மரபின் தனித்தன்மையையும் குறிப்பாகத் தொல்காப்பியம் அம்மரபினை முற்றும் வெளிப்படுத்துவதையும் அம்மரபு மேனாட்டு, வடமொழி இலக்கண மரபுகளின்றும் பெரிதும் வேறுபட்டதும் சிறப்புடையதும் ஆகும் என்பதையும் (மேலே கண்டோம்). ''
''ஆனால் , இன்று பெரும்பாலோரிடையே நிலவிவரும்கருத்து இவ்வுண்மைக்கு மாறானதாகும். வடமொழி இலக்கணக் கொள்கைகளிலிருந்தே தமிழ் இலக்கண மரபு வளர்ச்சி யடைந்தது; அம்மொழி இலக்கணங்களின் தழுவல்கள் அல்லது தமிழாக்கங்களே தமிழ் இலக்கண நூல்கள் என்ற கருத்து நம் நாட்டு ஆய்வாளரிடையேயும் மேனாட்டு ஆய்வாளரிடையேயும் பரப்பப்பட்டுள்ளது.''
'' தமிழ் இலக்கண மரபு வடமொழி மரபினின்றும் பெரிதும் வேறுபட்டது; தனித்தன்மை உடையது; ஒற்றுமைகள் அல்லது தழுவல்களாகக் காட்டப்படுவனவற்றுள் பெரும்பாலானவை வேறுபாடுகளே; சிறுபான்மை மொழிப்பொதுமைகளின் அடிப்படையில் அமைந்த ஒற்றுமைகளே. மேம்போக்கான ஆய்வினாலேயே அவை ஒற்றுமைகளாகவோ தழுவல்களாகவோ காட்டப்பட்டன.''
''கிரேக்க, ரோம, வடமொழி , தமிழ் மரபுகள் பழமையான இலக்கண மரபுகள் ... இவற்றுள் தமிழ் மரபு மேனாட்டு , வடமொழி இலக்கண மரபுகளினின்றும் பெரிதும் வேறுபட்டு நிற்கின்றது... தமிழ் இலக்கண மரபு அம் மரபுகளினின்றும் கொள்கை அடிப்படையில் வேறுபட்டு நிற்பதுடன் இன்றைய மொழியியல் கண்ணோட்டத்தில் அம்மரபுகளிலும் சிறப்புடையதாகத் தோன்றுகின்றது. தமிழ் இலக்கண மரபின் கோட்பாட்டு அடிப்படையை முழுமையாக ஆய்ந்து வெளிப்படுத்தல் இன்றைய தமிழறிஞர் கடனாகும். ''
'' தொல்காப்பியும் பாணினியின் அஷ்டாத்தியாயீயும் முற்றிலும் வேறுபட்ட இரு இலக்கண மரபுகளுக்குரியவை... இம்முடிவு தொல்காப்பியத்தில் வடமொழி இலக்கண மரபின் தாக்கமே இல்லை என்று கூறுவதாகாது. தொல்காப்பியர் வடமொழி இலக்கண மரபை அறிந்தவர் என்பதற்கு தொல்காப்பியத்திலேயே சான்றுகள் உள்ளன. ''
''எனவே தொல்காப்பியத்தில் வடமொழி மரபின் தாக்கம் மேம்போக்கான புறக்கூறுகள் சிலவற்றில் காணப்படினும் அடிப்படை இலக்கணக்கொள்கை, இலக்கணக் கூறுகளுக்குத் தரப்பட்டுள்ள சிறப்பிடம், விளக்குமுறை உத்திகள் ஆகிய அனைத்திலும் தொல்காப்பிய மரபு தனித்து நிற்கின்றது என்பதில் ஐயமில்லை.''
----------------------------------------------------------------------------------------------------------
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எங்களுடைய மொழியியல் பேராசிரியரான க. பாலசுப்பிரமணியன் அவர்களின் '' தொல்காப்பிய இலக்கண மரபு '' என்ற நூல் தமிழ் ஆய்வாளர்களும் தமிழ் மாணவர்களும் தவறாமல் படிக்கவேண்டிய ஒரு ஆய்வுநூல். தமிழ் இலக்கணம், இலக்கியம், இக்கால மொழியியல், அகராதியியல் ஆகியவற்றில் மிகச் சிறந்த அறிவுடைய பேராசிரியரின் நூல் இது.

தமிழ்மொழி ஆய்வில் ஒரு முக்கியமான ஆய்வியல் கோட்பாடு...

தமிழ்மொழியின் வரலாற்று வளர்ச்சி ஆய்வில் மனதில் கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான ஆய்வியல் கோட்பாடு......
-------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் கணிதத்தில் நிலவுகிற Variable என்ற சொல்லுக்கு ( constant என்பதற்கு எதிரான ஒரு சொல்) நிகரான சொல்லாக ''மாறி '' என்பதற்குப் பதிலாக ''வேறி'' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கலாம் என்ற இராமகி ஐயா அவர்களின் கருத்தையொட்டிய ஒரு கருத்தாடல்....
// இதுபோல் வேறு-தல், வேற்று-தல் என்ற வினைச்சொற்கள் ஏன் இருக்கக் கூடாது? நமக்குக் கிடைத்த ஆவணங்களையும், பேச்சுவழக்கையும் வைத்து அகரமுதலிகள் ஏற்பட்டன. ”அவற்றில் எல்லாமே இருக்கும், அவற்றில் இல்லாதன தமிழில் இல்லை” என்பது சரியான வாதமா? தமிழின் சொற்சேகரம் இந்த அகரமுதலிகளா? ஏன் அவை ஒவ்வொரு எடுவிப்பிற்கும் (edition) பெரிதாகின்றன? விட்டுப்போனவற்றையும், புதிதானவற்றையும் சேர்க்கிறாரே? வேறு-தல், வேற்று-தல் என்பது விட்டுபோனது ஆகக்கூடாதா? சங்க இலக்கியம் எல்லாவற்றையும் பதிவு செய்து விட்டது என்று எண்ணுகிறோமா? நம்முர் அகரமுதலிகளில் தமிழின் எல்லாச் சொல்லும் இருக்கிறதா? எங்கூரில் புழங்கும் பல சொற்கள் பதிவாகவில்லை. அதுபோல் உங்க்ளூர்ச் சொல்லும் பதிவாகாமல் இருக்கலாமே?//
இராமகி ஐயா அவர்கள் தனது 'வளவு' வலைப்பூவில் இட்டுள்ள ஒரு கருத்து . ஐயா அவர்களின் கருத்து 100 விழுக்காடு உண்மை. ஒரு சொல் நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களில் இடம்பெற்றிருந்தால்தான், அல்லது அகராதிகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தால்தான், அது தமிழ் வரலாற்றில் நீடித்ததற்குச் சாட்சி என்று கூறுவது அறிவியல் ஆய்வுநெறிக்கு அப்பாற்பட்டது.
பண்டை இலக்கியங்கள், இலக்கணங்கள், இன்றைய தமிழ் ஆகியவற்றில் இடம்பெறாத பல சொற்கள் தமிழ் வரலாற்றில் நீடித்திருக்கலாம். அதுபற்றிய உண்மை... நாம் தமிழ்மொழி வரலாற்றை முறையான மொழி ஆய்வுக் கோட்பாடுகளைக் கொண்டு ஆய்வு செய்யும்போது , தெரியவரும். சில இடைவெளிகள் தெரியவரும். இதுபற்றி நண்பர்கள் மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள ... பேராசிரியர் இரா. கோதண்டராமன் (பாண்டிச்சேரி) அவர்களின் '' தமிழெனப்படுவது '' என்ற ஆய்வு நூலைநிச்சயமாகப் படிக்கவேண்டும். தொல்காப்பியர் உட்பட இலக்கண ஆசிரியர்கள் எவ்வாறு ''அமைதி'' கண்டார்கள், அது சரிதானா என்ற விவாதத்தை அந்நூலில் காணலாம்.
எனக்கும் கணினிக்கான தமிழ்மொழி விதிகளை உருவாக்கி அளிக்கும்போது இதுபோன்ற பல சிக்கல்கள் தோன்றின. பொதுவாக, தன்வினைகள் பிறவினைகளாக மாறி, பின்னர் அம் என்ற விகுதி எடுத்து பெயர்ச்சொற்களாக மாறுவது ஒரு பொது உண்மை. கலங்கு-கலக்கு-கலக்கம், இயங்கு-இயங்கு-இயக்கம்., மயங்கு-மயக்கு-மயக்கம், விளங்கு-விளக்கு-விளக்கம் என்று பார்க்கிறோம். ஆனால் தயங்கு என்பதற்குத் ''தயக்கு'' என்பதோ வணங்கு என்பதற்கு ''வணக்கு'' என்பதோ தற்போது தமிழ் நூல்களில் பிறவினைகளாகக் காணப்படவில்லை. ஆனால் தயக்கம், வணக்கம் என்ற பெயர்ச்சொற்கள் இருக்கின்றன. எனவே தயக்கு , வணக்கு என்பவற்றைக் கணக்கில்கொண்டால்தான், தமிழ் சொல்லாக்க விதிகள் முறையாக இருக்கும். இந்த இரண்டு சொற்களும் தற்போது இல்லை என்பதற்காக , இவை போன்ற சொற்கள் தமிழ் வரலாற்றிலேயே இல்லை என்று கூறமுடியாது. சொல் ஆய்வில் ஈடுபடும்போது, இதுபோன்ற எத்தனையோ உண்மைகள் தெரியவருகின்றன.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India