திங்கள், 26 டிசம்பர், 2022

கம்ப இராமாயணம் கற்பனைப் படைப்பா அல்லது வரலாறா?

 

கம்ப இராமாயணம் கற்பனைப் படைப்பா அல்லது வரலாறா?

---------------------------------------------------------------------------------------------------------------------------------

''நரகாசுரன்'' பற்றிய எனது கருத்தின்மேல் எனது இனிய நண்பர் திரு. மணிவாசகன் அவர்கள் ஒரு ஐயம் எழுப்பியுள்ளார்! அதுபற்றிக் கீழே பார்க்கலாம்!

நண்பர் திரு. மணிவாசகன்

-----------------------------------------------------------------------------------------------------------------------

// இராமாயணமே கற்பனை ௭ன்று சொல்வது போல் உள்ளது ஐயா....௮ப்போ கம்பன் தமிழ் ௮றிஞர் இல்லையா?//

ந. தெய்வ சுந்தரம் விடை

-----------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பரே, கம்பன் தமிழ்ப் புலவர் என்பதில் ஐயம் இல்லை! அவர் தனக்குப் பிடித்த வால்மீகி எழுதிய புராணக் காப்பியத்தின் கதையைக்கொண்டு, ''கம்பராமாயணம்'' எழுதி, தமிழ்ப்படைப்புலகத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்தார். இதை நான் மறுக்கவில்லை! அவரது படைப்பு ஒரு மிகச் சிறந்த ''தமிழ்ப் படைப்பு . . . படைப்பிலக்கியம்''!

வால்மீகியின் ''புராண இலக்கியப் படைப்பில்'' வருகிற நிகழ்ச்சிகள், நபர்கள் எல்லாம் கற்பனைதான்! இன்று ரஜினிபோன்ற நடிகர்கள் நடித்துவெளிவருகிற திரைப்படங்கள் எல்லாவற்றையும் . . . அவற்றில் வருகிற நாயகர்கள், வில்லன்கள், நிகழ்வுகள் எல்லாவற்றையும் நமக்குப் பிந்தைய சமுதாயம் அப்படியே ''உண்மை'' . . . ''உண்மையான வரலாறு'' என்று கொள்வதை நாம் ஏற்றுக்கொள்வோமா?

ஒரு படைப்பாளி தான் வாழ்கிற சமுதாயத்தின் நிகழ்வுகள், நபர்கள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து, அவற்றிலிருந்து தனது ''கதையை'' ''நபர்களைப்'' படைத்து (தனது உலகக் கண்ணோட்டத்திலிருந்து) , தனது படைப்பை வெளிவிடுகிறான்! அவ்வளவுதான்! தனது உலகக் கண்ணோட்டங்களுக்குத் தகுந்தவாறு தனது கதைகளையும் நபர்களையும் முன்வைக்கிறான். அவ்வளவுதான்!

அவ்வாறு இல்லாமல், தான் வாழ்ந்த சமுதாயத்தைப் ''படைப்பிலக்கியமாக '' மாற்றாமல் , அப்படியே எழுதினால் அது உண்மை வரலாறு ஆகிவிடும்! படைப்பிலக்கியங்கள் வரலாறு இல்லை! ஆனால், வரலாற்றில் உள்ள சில நிகழ்ச்சிகளின், நபர்களின் செல்வாக்கு அவற்றில் பதிந்திருக்கும்!

இராமாயணம், மகாபாரதம், ஏன் சிலப்பதிகாரம், மணிமேகலை கூட படைப்பாளிகளின் உருவாக்கங்களே! அவையே வரலாறு இல்லை! ஆனால் அவற்றில் படைப்பாளிகளின் சமுதாய நிகழ்வுகளின் பாதிப்புக்கள் இருக்கும்! அதை அப்படியே உண்மை வரலாறாக கொள்ளக்கூடாது!

இனக்குழுக்களை அழித்து, அரசுகள் தோன்றிய காலத்து நிகழ்வுகளை இராமாயணம் நினைவூட்டுகிறது!

இரத்த உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சமுதாயமானது ''மண்ணை'' அடிப்படையாகக்கொண்ட சமுதாயமாக மாறியதைப் ''பாரதம்'' நினைவூட்டுகிறது!

''இரத்த உறவுகளைக் கொல்வது தவறு, கொல்லமாட்டேன்'' என்று அர்ச்சுணன் முந்தைய சமுதாய நிலைப்பாட்டிலிருந்து பார்த்துத் தயங்கியபோது, ''பழைய சமுதாயம்தான் இரத்த உறவை அடிப்படையாகக்கொண்டது; அதில்தான் இரத்த உறவுகளைக் கொல்வது பாவம்; இனிவரும் சமுதாயம் மண்ணை அடிப்படையாகக்கொண்டது; எனவே மண்ணுக்காக இரத்த உறவுகளைக் கொல்லலாம்; அதுவே ஷத்திரியனின் கடமை; கடைமையைத்தான் நீ செய்யவேண்டும்'' என்று ''கிருஷ்ணபகவான்'' அர்ச்சுணனுக்குப் ''போதிக்கிறார்''!

இவ்வாறு சமுதாய மாற்றங்களின் சில நிகழ்வுகள், மரபுகள், கண்ணோட்டங்கள் படைப்பிலக்கியங்களில் எதிரொளிக்கலாம். ஆனால் அதற்காக இந்த இலக்கியங்களையே உண்மையான வரலாறாக கொள்ளக்கூடாது!

எனவே இராமாயணம் ஒரு சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பு என்ற அடிப்படையில் கம்பர் ஒரு மிகச் சிறந்த தமிழ் அறிஞர்தான்! அதில் ஐயமே இல்லை! ஆனால் அவரது இலக்கியப் படைப்பானது ஒரு படைப்புத்தான் என்பதில் ஐயம் இல்லை! அவர் தமிழ் அறிஞர் என்பதால், அவருடைய இலக்கியப் படைப்பானது உண்மையான வரலாறாக ஆகிவிடமுடியாது!

வால்மீகியின் படைப்பை அப்படியே மொழிபெயர்க்காமல் . . . அந்தக் கதையை தனக்கே உரிய வகையில் உள்வாங்கி. . . தமிழ் மரபுக்கேற்ப . . . ஒரு புதிய படைப்பைக் கம்பர் உருவாக்கியுள்ளது அவரது ''இலக்கியப் படைப்புத் திறனை'' வெளிக்காட்டி நிற்கிறது! மேலும் தனது படைப்பில் அவர் தமிழ்மொழியை ஒரு மிகச் சிறந்த இலக்கிய நடையில் வெளிப்படுத்துவது அவரது மொழிப் புலமையைக் காட்டிநிற்கிறது! இதுவே அவரது சிறப்புக்கள்! இந்தச் சிறப்புக்களால் அவரது படைப்பிலக்கியம் வரலாறாக மாறிவிடமுடியாது!

 

''ஆரியர்'' ''திராவிடர்'' என்ற பாகுபாடு மொழிக்குடும்ப ஆய்வு அடிப்படையில் தோன்றிய கருத்துக்களே என்பது கருதுகோள்! முடிந்த முடிவு இல்லை! மேலும் இந்தக் கருத்துக்கள் ஆங்கிலேயர்கள் இங்குள்ள தேசிய இனங்களை உண்மையான இன உணர்வின் (தமிழர், தெலுங்கர், கன்னடர்மலையாளி... ) அடிப்படையில் திரளாமல் இருக்க மேற்கொண்ட ஒரு திட்டமிட்ட செயலாகவே பார்க்கிறேன்! இதுபற்றி நான் முகநூலில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

மேலும் தேசிய இனம் (Nationalities) என்று நான் கருதுவது வேறு; நிற அடிப்படையிலான அல்லது பிற உடலியல் அடிப்படையிலான இனம் (Races) என்று கூறப்படுவது வேறு. இந்த இரண்டாவது வகையானது உண்மையானதா என்பது ஆய்வுக்கு உரியது என்று நான் கருதுகிறேன்.

கிமு 6 -ஆம் நூற்றாண்டுக்குமுன் வடபகுதியில் வாழ்ந்துவந்த இனக்குழுக்களை கங்கை நதிப் பள்ளத்தாக்கில் சிறிய அளவிலான வேளாண்மையை அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்த இனக்குழுக்கள் தங்களது தனியுடைமை அடிப்படையிலான ''அரசுகளை'' நிறுவிய காலகட்டத்தில் ... அந்த வளர்ச்சியை எட்டாத இனக்குழுக்களை . . . பழங்குடிகளை . . . வென்று அவற்றின்மீது தங்களது ''அரசியல் மேலாண்மையை'' நிலைநாட்டி. . . அவற்றைத் தங்களது அடிமைகளாக ஆக்கிக்கொண்ட வேளையில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவுபடுத்துகிற புராணமாகவே இராமாயணம் எனக்குத் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்திற்கு ''ஆரியர் - திராவிடர் போர்'' என்று பெயர் சூட்டுவது சரியா என்பதே எனது ஐயம்! மேலும் எனக்கு இச்சிக்கலில் பல விடைகளைத் தேடவேண்டியுள்ளது. முடிந்த முடிவாக எதையும் என்னால் கூற இயலவில்லை!

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India