திங்கள், 26 டிசம்பர், 2022

''பெரும்பான்மை'' என்ற ''ஜனநாயகத் தீர்வு நடைமுறையை'' எந்தச் சிக்கலுக்குப் பின்பற்றமுடியும்?

 

''பெரும்பான்மை'' என்ற ''ஜனநாயகத் தீர்வு நடைமுறையை'' எந்தச் சிக்கலுக்குப் பின்பற்றமுடியும்? - நண்பர் திரு. மாலன் அவர்களுக்கு எனது விடை!

----------------------------------------------------------------------------------------------------------------------

மொழி ஒப்பீட்டு ஆய்வுபற்றிய எனது முகநூல் பதிவு பற்றி நண்பர் திரு. மாலன் அவர்கள் தனது கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளார். அவருக்கு நன்றி. அவற்றில் நான் வேறுபடுகிற கருத்துபற்றி இங்கு கூறுகிறேன்.

திரு. மாலன் அவர்கள் :

----------------------------------------------------------------------

//தெளிவான கருத்துக்கள். இவற்றை நான் இவ்விதம் தொகுத்துக் கொள்கிறேன்: 1. ஒப்பீட்டு ஆய்வுகளின் அடிப்படையில் எந்த மொழியும் இன்னொரு மொழியைவிட உயர்ந்ததும் இல்லை; தாழ்ந்ததும் இல்லை. 2. ஒரு மொழியின் புறச்சூழலே அது அதிகாரம் பெறுவதைத் தீர்மானிக்கிறது. (சரியாக விளங்கிக் கொண்டிருக்கிறேனா?) இவற்றோடு இன்னும் சில யதார்தங்களையும் சிந்திக்கலாமா? 1.புறச்சூழலின் பொருட்டே (வெளிப்பாட்டிற்காகவும் தொடர்புக்காகவும்) மொழிகள் தோற்றம் பெறுகின்றன.2. மொழிகளின் அந்தச் செயல்பாடு சூழலிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது. பண்பாட்டு பரிமாற்றம், பண்பாட்டு ஒருமை என்பன அவற்றில் சில. 3.பண்பாட்டுப் பரிமாற்றம் மொழிக்குள் சில மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. 4. மொழியோ பண்பாடோ புறச்சூழலால் பாதிக்கப்படாத ஓர் இறுக்கமான கண்ணாடிக் குடுவைக்குள் இருப்பதில்லை. 5. ஜனநாயகத்தில் பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளை ஆதிக்கம் என்று சொல்லுதல் பொருத்தமல்ல. //

ந. தெய்வ சுந்தரம்

---------------------------------------------------------------------

நண்பர் மாலன் அவர்களுக்கு நன்றி . நண்பர் மாலன் அவர்கள் கூறியுள்ளபடி, மொழி என்பதே சமுதாயத் தேவையையொட்டித்தான் தோன்றி வளர்ந்து நீடிக்கின்றன. அதில் ஐயம் இல்லை.

அதுபோன்று ஒரு சமுதாயத்தின் தேவை, பண்பாடு போன்றவையும் ஒரு மொழியின் அமைப்பில் ( சொற்களஞ்சியம், இலக்கண அமைப்பு ) தமது செல்வாக்கைச் செலுத்தும். இதிலும் ஐயம் இல்லை.

இதுபற்றியெல்லாம் சமூகமொழியியல் (Sociolinguistics) , மானிடவியல் மொழியியல் (Anthropological Linguistics) போன்ற துறைகள் ஆய்வுசெய்கின்றன. இதிலும் ஐயம் இல்லை!

சமுதாயம் மாற மாற, வளர வளர மொழியும் வளர்கிறது. அது பாதிக்கப்படாத கண்ணாடிக் குடுவைக்குள் இருப்பதிலை என்பதும் உண்மைதான். இந்த மொழி வளர்ச்சியில் குறிப்பிட்ட சமுதாயத்தின் திட்டமிட்ட பங்குபற்றி மொழிபற்றிய சமூகவியல் (Sociology of Language) என்ற துறை ஆய்வுசெய்கிறது.

ஆனால். . .

மாலன் அவர்கள் முன்வைத்துள்ள 5-ஆவது கருத்து விவாதத்திற்கு உட்பட்டதாகும். ஒரு ஒன்றியத்தில் பல இனங்கள் நீடிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொழி உரிமை போன்றவற்றில் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்கமுடியாது. அனைத்து இனங்களுக்குமான நலன்களைப்பற்றியதில் பெரும்பான்மை முடிவை - அதுவும் சில குறிப்பிட்ட வேளைகளில் - எடுக்கலாம்.

ஒரு இனத்தைப் பட்டினிபோடவேண்டுமென்று ''ஜனநாயக அடிப்படையில் '' - ''பெரும்பான்மை அடிப்படையில்'' தீர்மானிப்பது சரியாகுமா? ஒரு இனத்தின் மொழிதொடர்பான முடிவும் இதைப்போன்றதுதான்! இதில் ''பெரும்பான்மை'' என்ற - ''ஜனநாயகமுறை'' என்ற - ஒரு ''தேன்தடவிய தோட்டாவை'' ஒரு இனத்தின்மீது திணிக்கக்கூடாது. அவ்வாறு திணிப்பது உண்மையான மக்கள் ஜனநாயகம் இல்லை!

தன் இனத்தின் மொழி உரிமை, தேவைப்பட்டால் தேசிய இனங்கள் தனித்து வாழ்வதற்கான தன்னுரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல்சட்டம்தான் ''ஒன்றிய ஜனநாயகச் சட்டமாக'' இருக்கவேண்டும். இல்லையென்றால் அது ''ஜனநாயகம்'' இல்லை!

மாறாக, ''பெரும்பான்மை'' என்ற ஜனநாயகக் கருவியைக்கொண்டு, பெரும்பான்மைப் பிரிவுகள் சிறுபான்மையை அடக்குவதாகவே, ஒடுக்குவதாகவே அமையும்! இனங்களுக்கு இடையே பகைமைதான் நிலவும்!

எனவே, இந்திய அரசியல் சட்டத்தில் தனது தாய்மொழியான தமிழையும் ஆட்சிமொழியாக இணைக்கவேண்டும் என்று தமிழினம் கோரிக்கை முன்வைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை! மற்றொரு இனத்தின் மொழியைத் தங்கள்மீது திணிப்பதை எதிர்ப்பதில் தவறு இல்லை! இதில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற கருத்துக்கே இடம் இல்லை!

பல இனங்கள் நீடிக்கிற ஒரு ஒன்றிய அரசில் அனைத்து இனங்களின் மொழிகளும் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படுவதே உண்மையான ஜனநாயகமாகும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India