திங்கள், 26 டிசம்பர், 2022

மொழி ஒப்பீட்டு (தமிழ் - வடமொழி, இந்தி, ஆங்கிலம்) ஆய்வுபற்றி எனது கருத்து!

 

மொழி ஒப்பீட்டு (தமிழ் - வடமொழி, இந்தி, ஆங்கிலம்) ஆய்வுபற்றி எனது கருத்து!

----------------------------------------------------------------------------------------------------------------------------

எனது தாய்மொழியாகி தமிழ்மொழி (1)மிகத் தொன்மை வாய்ந்தது! (2) வரலாற்றுத் தொடர்ச்சியுள்ள மொழி! (3) இன்றும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து- கொண்டிருக்கிற மொழி! (4) தொன்மை இலக்கியத்தில் இருந்து செவ்விலக்கியம்முதல் இன்றைய இலக்கியம் -வரை அனைத்திலும் தன்னை நிலைநிறுத்தியுள்ள மொழி! (5) இன்றும் தமிழ் இனத்தின் அனைத்துக் கருத்தாடல் செயல்பாடுகளுக்கும் தகுதிபெற்ற மொழி!

இவ்வாறு ஒவ்வொரு மொழிச் சமுதாயமும் தனது இனத்தின் மொழிபற்றிய சிறப்பை உணர்ந்து மகிழவேண்டும்! தனது மொழியின் தொடர்ந்த வளர்ச்சிக்குத் தேவையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்!

இது ஒருபுறம் இருக்கட்டும்!

மொழி ஒப்பீட்டு ஆய்வு (Comparative Linguistics) என்பது மொழி ஆய்வில் மிக முகமை உடைய ஒரு பிரிவு!

இந்த ஆய்வின் பணி . . . பல்வேறு மொழிக்கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்தி . . . இந்த இந்த மொழிக்கூறுகளில் இந்த மொழிகளுக்கிடையே ஒற்றுமை உள்ளது! இந்த இந்த மொழிக்கூறுகளில் வேற்றுமை உள்ளது! என்பதை எடுத்துக்காட்டுவதே ஆகும்!

எந்தவொரு மொழியும் தனது மொழிச்சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நீடிக்கும்! வளரும்!

மொழிக்கூறுகளில் எந்தவொரு மொழியும் எந்தவொரு மொழியையும் விட தாழ்ந்தது அல்லது உயர்ந்தது என்று கூறுவதற்கு எந்தவொரு மொழிக்கூறு அடிப்படையும் கிடையாது! இதுதான் ஒப்பீட்டு மொழி ஆய்வு!

இந்த மொழி ஒப்பீட்டு ஆய்வை ஒருவர் தனது அரசியல், பொருளாதார, பண்பாட்டு நோக்கின் அடிப்படையில் உயர்வு - தாழ்வுக்கும், பிற மொழிகளின்மீது மேலாண்மைக்கும் பயன்படுத்துவதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது! அவ்வாறு பயன்படுத்துவது அறிவியல் அடிப்படையிலான ஆய்வைக் கொச்சைப்ப்டுத்துவதாகவே அமையும்!

ஆனால் . . . ஒரு மொழியின் ''சமுதாய மேலாண்மையானது (''ஆதிக்கமானது'')'' அந்த மொழியின் உள்ளார்ந்த மொழிக் கூறுகளின் அடிப்படையில் அமையாது! மாறாக, அந்த மொழி பேசும் இனத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு மேலாண்மையே அதைத் தீர்மானிக்கிறது! அதாவது அந்த மொழிக்கும் அதனது புறச் சூழலுக்கும் இடையிலான நிலையைப் பொறுத்தது ஆகும்!

ஆங்கிலம், வடமொழி, இந்தி ஆகியமொழிகளின் ''சிறப்பு'' பற்றிப் பேசுகிறவர்கள் மேற்கூறிய புறச் சூழல் கூறுகளைக்கொண்டுதான் பேசுகிறார்கள்! உள்ளார்ந்த மொழிக்கூறுகளின் அடிப்படையில் பேசவில்லை! அவ்வாறு பேசவும் முடியாது! அதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது!

ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வணிகமொழி என்பவைபற்றிப் பேசும்போது . . . குறிப்பிட்ட மொழிக்கும் அம்மொழிபேசுகிற இனத்திற்கும் இடையில் நீடிக்கிற புறச்சூழல்களை அடிப்படையாகக்கொண்டுதான் பேசுகிறோம்!

ஒரு இனத்தின் மொழியின் செயல்பாடுகளின்மீது மற்றொரு இனத்தின் மொழியான் மேலாண்மை செய்தால், அதற்கு முழுப்பொறுப்பும் அந்தக் குறிப்பிட்ட இனத்தின் ''மேலாண்மையே'' ஆகும்!

''அம்பின் மேல் (அந்த மொழியின்மேல்) எந்தக் குற்றமும் இல்லை! அதை எய்தவர்தான் (மேலாண்மை இனத்தின் செயல்கள்தான்) குற்றம் இழைக்கிறார்''!

பிற இனத்தின் மேலாண்மையால் தன் இனத்தின் மொழியின் செயல்பாடுகள் குறுக்கப்பட்டால் . . . மேலாண்மை இனத்தின் மொழிமீது குற்றம் சாட்டுவதற்கு மொழிக் கூறுகள் அடிப்படை இல்லை! மேலாண்மை இனத்தின் மேலாண்மை அரசியலே அடிப்படை!

அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது! அதை எதிர்த்துப் போராடவேண்டும்! தன் இனத்தின் மொழிக்கு முழு உரிமையும் - ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வணிகமொழி, வழிபாட்டுமொழி ஆகிய அனைத்திலும் முழு உரிமையும் - பெறுவதற்காகப் போராட வேண்டும்! மேலாண்மை செலுத்துகிற இனத்தின் மேலாண்மை அரசியலுக்கு எதிராகப் போராடவேண்டும்!

இந்தப் போராட்டத்தில் மேலாண்மை செலுத்துகிற இனமானது தனது மொழியின் உள்ளார்ந்த மொழிக்கூறுகளை அதற்குப் பயன்படுத்தினால் அது மிகத் தவறு! அறிவியல் அடிப்படை அற்ற ஒன்று அது!

எந்தவொரு மொழியும் உள்ளார்ந்த மொழிக்கூறுகளும் எந்தவொரு மொழியின் உள்ளார்ந்த மொழிக்கூறுகளையும் விட உயர்ந்தது இல்லை! தாழ்ந்ததும் இல்லை!

அதற்கு எந்தவித மொழி அடிப்படையும் இருக்கமுடியாது! புறக் காரணிகளே அடிப்படை!

இதை மறந்துவிட்டு, ஒரு சிலர் தாங்கள் ''விரும்புகிற'' இனத்தின் மொழிக்கூறுகளை ''உயர்த்திப்பிடித்தால்'' அது அவரது மொழி ஆய்வு அறியாமையையே எதிரொலிக்கும்! இதில் ஐயமே இல்லை!

ஆகவே . . . ஆங்கிலம், இந்திமொழிகளின் மேலாண்மையால் இன்று தாக்குதலுக்கு உட்பட்டுள்ள தமிழ்மொழிக்காகப் போராடுவது என்பது . . . மொழி மேலாண்மைக்கு அடிப்படையிலான இன ஒடுக்குமுறைக்கு - அதற்கு அடிப்படையான அரசியல் ,பொருளாதார, பண்பாட்டு மேலாண்மைக் கூறுகளுக்கு - எதிரான போராட்டமாக அமையவேண்டும்!

''அவர்கள் தவறு செய்கிறார்கள்'' என்றால், அதற்குக் காரணம் , மொழி மேலாண்மைக்கு அடிப்படையான இன ஒடுக்குமுறையையும் அதற்குப் பின்புலமாக அமைகிற அரசியல் , பொருளாதார, பண்பாட்டுக் கூறுகளையும் மறைப்பதற்கே ஆகும்! அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்!

இதை தாக்குதலுக்கு உட்படுகிற இனம் தெளிவாக உணரவேண்டும்! இல்லையென்றால் போராட்டம் ''பயனற்றுப் போகும்'' ! ''இல்லாத ஊருக்குப்'' பாதை போடுவதாகவே அமையும்! உண்மையா- , தேவையான போராட்டத்தைத் திட்டமிட்டு திசை திருப்புவதே ஆகும்!

மொழி ஒப்பீட்டு ஆய்வை மொழிகளைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படுத்துவோம்!

அதை யாரும் தவறாகப் பயன்படுத்தினால் அதை அம்பலப்படுத்துவோம்! ஆனால் நாம் அதே தவறைச் செய்யக்கூடாது!

எந்தவொரு அறிவியல் வளர்ச்சியும் மக்களுக்கு எதிரானது இல்லை! ஆனால் அதைப் பயன்படுத்துபவர்களின் தவறான அணுகுமுறை மக்களுக்குஎதிரானதுதான்! மொழி ஒப்பீட்டு ஆய்வும் இதற்கு விதிவிலக்கு இல்லை!

நண்பர் மாலன் அவர்கள் கூறியுள்ளபடி, மொழி என்பதே சமுதாயத் தேவையையொட்டித்தான் தோன்றி வளர்ந்து நீடிக்கின்றன. அதில் ஐயம் இல்லை. அதுபோன்று ஒரு சமுதாயத்தின் தேவை, பண்பாடு போன்றவையும் ஒரு மொழியின் அமைப்பில் ( சொற்களஞ்சியம், இலக்கண அமைப்பு ) தமது செல்வாக்கைச் செலுத்தும். இதிலும் ஐயம் இல்லை. இதுபற்றியெல்லாம் சமூகமொழியியல் (Sociolinguistics) , மானிடவியல் மொழியியல் (Anthropological Linguistics) போன்ற துறைகள் ஆய்வுசெய்கின்றன. இதிலும் ஐயம் இல்லை! சமுதாயம் மாற மாற, வளர வளர மொழியும் வளர்கிறது. அது பாதிக்கப்படாத கண்ணாடிக்குடுவைக்குள் இருப்பதிலை என்பதும் உண்மைதான். இந்த மொழி வளர்ச்சியில் குறிப்பிட்ட சமுதாயத்தின் திட்டமிட்ட பங்குபற்றி மொழிபற்றிய சமூகவியல் (Sociology of Language) என்ற துறை ஆய்வுசெய்கிறது.

மாலன் அவர்கள் முன்வைத்துள்ள 5-ஆவது கருத்துதான் விவாதத்திற்கு உட்பட்டதாகும். ஒரு ஒன்றியத்தில் பல இனங்கள் நீடிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொழி உரிமை போன்றவற்றில் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்கமுடியாது. அனைத்து இனங்களுக்குமான நலன்களைப்பற்றியதில் பெரும்பான்மை முடிவை - அதுவும் சில குறிப்பிட்ட வேளைகளில் - எடுக்கலாம்.

ஒரு இனத்தைப் பட்டினிபோடவேண்டுமென்று ''ஜனநாயக அடிப்படையில் '' - ''பெரும்பான்மை அடிப்படையில்'' தீர்மானிப்பது சரியாகுமா? ஒரு இனத்தின் மொழிதொடர்பான முடிவும் இதைப்போன்றதுதான்! இதில் ''பெரும்பான்மை'' என்ற - ''ஜனநாயகமுறை'' என்ற - ஒரு ''தேன்தடவிய தோட்டாவை'' ஒரு இனத்தின்மீது திணிக்கக்கூடாது. அவ்வாறு திணிப்பது உண்மையான மக்கள் ஜனநாயகம் இல்லை!

தன் இனத்தின் மொழி உரிமை, தேவைப்பட்டால் தேசிய இனங்கள் தனித்து வாழ்வதற்கான தன்னுரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல்சட்டம்தான் ''ஒன்றிய ஜனநாயகச் சட்டமாக'' இருக்கவேண்டும். இல்லையென்றால் அது ''ஜனநாயகம்'' இல்லை! மாறாக, ''பெரும்பான்மை'' என்ற ஜனநாயகக்கருவியைக்கொண்டு, பெரும்பான்மைப் பிரிவுகள் சிறுபான்மையை அடக்குவதாகவே, ஒடுக்கவதாகவே அமையும்!

எனவே, இந்திய அரசியல் சட்டத்தில் தங்கள் மொழிகளையும் ஆட்சிமொழிகளாக இணைக்கவேண்டும் என்று தமிழினம் கோரிக்கை முன்வைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை! மற்றொரு இனத்தின் மொழியைத் தங்கள்மீது திணிப்பதை எதிர்ப்பதில் தவறு இல்லை!

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India