செவ்வாய், 15 நவம்பர், 2016

சந்தி - உடம்படுமெய்

5) நாம் முன்பு பார்த்துள்ள ஆறு கட்டாயச் சந்தி 
விதிகளுடன் இன்று மேலும் ஒன்றைச் 
சேர்த்துக்கொள்ளலாம்.
தமிழில் ஒரு சொல்லுக்குள் ஒரு உயிர் எழுத்தை 
அடுத்து இன்னொரு உயிர் எழுத்து வராது. அவ்வாறு வருமிடத்தில் அந்த இரண்டு உயிர்களுக்குமிடையில் ஒரு இடையின மெய் - ''ய்'' அல்லது ''வ்'' - தோன்றும். இந்த இரண்டு மெய்களின் தோற்றத்தையே உடம்படுமெய் தோற்றம் என்று இலக்கணத்தில் அழைக்கின்றனர்.
''கிளி'' என்ற சொல்லோடு ''ஆ'' என்ற வினா விகுதி இணையும்போது, ''கிளியா? '' என்று அமைகிறது.
கிளி +ய்+ஆ = கிளியா?
''பூ'' என்ற சொல்லோடு '''ஆ '' என் வினா விகுதி இணையும்போது, ''பூவா?'' என்று அமைகிறது.
பூ + வ்+ ஆ - பூவா?

இ , ஈ , ஐ, ஏ (4 உயிர்கள்) - நிலைமொழி இறுதி:
---------------------------------------------------
தமிழில் நிலைமொழிகளின் இறுதியில் இ, ஈ, ஐ, ஏ ஆகிய உயிர்களில் ஏதாவது ஒன்று வந்து, வருமொழியில் ஏதாவது ஒரு உயிரைக்கொண்டு தொடங்கும் விகுதி வந்து ஒரு சொல்லாக அமையும்போது, இடையில் ''ய்'' உடம்படுமெய் தோன்றும்.
கிளி + ஆ = கிளியா? (''இ'' இறுதி)
தீ + ஆ = தீயா? (''ஈ'' இறுதி) 
வளை + ஓசை = வளையோசை (''ஐ'' இறுதி)
பொருளே + இல்லை = பொருளேயில்லை (''ஏ'' இறுதி)

அ, ஆ, ஊ, ஓ ( 4 உயிர்கள்) - நிலைமொழி இறுதி:
-------------------------------------------------------------------------------
தமிழில் நிலைமொழிகளின் இறுதியில் அ,ஆ, ஊ, ஓ ஆகிய உயிர்களில் ஏதாவது ஒன்று வந்து, வருமொழியில் ஏதாவது உயிரைக்கொண்டு தொடங்கும் விகுதி வந்து ஒரு சொல்லாக அமையும்போது, பெரும்பாலும் இடையில் ''வ்'' உடம்படுமெய் தோன்றும். சில இடங்களில் யகரமும் வரலாம்.
வர + இல்லை = வரவில்லை (''அ'' இறுதி)
மா + இல் = மாவில் (''ஆ'' இறுதி)
பூ + இதழ் = பூவிதழ் (''ஊ'' இறுதி)
கோ + இல் = கோவில் / கோவில் (''ஓ'' இறுதி)
எ, ஒ , ஔ என்ற மூன்று உயிர்களும் நிலைமொழியின் இறுதியில் வருவது இல்லை. (ஔ என்பதும் கௌ, வௌ என்பதும் ஓரெழுத்து ஒருமொழிகளில் தவிர, வேறு எந்த இடத்திலும் சொல்லின் இறுதியில் வருவது கிடையாது - சிங்கப்பூர் சித்தார்த்தன்)

முற்றியலுகரம் நிலைமொழி இறுதியாக வரும்போது...
--------------------------------------------------------------------------------------
அது + அல்ல = அதுவல்ல
அது + உம் = அதுவும்
சில இடங்களில் இறுதிக் குற்றியலுகரம்போன்று உடம்படுமெய்யும் வரும்.
அது + ஏ = அதுவே ....... அது + ஏ = அதே
அது + அல்ல = அதுவல்ல --- அது+ அல்ல = அதல்ல
ஆனால் நடு, மடு,வடு போன்ற சொற்களில் உடம்படு மெய் தவறாமல் வருகிறது. ( சிங்கப்பூர் சித்தார்த்தன்)
மடு + ஆ = மடுவா 
வடு + ஆ = வடுவா 
பசு + எங்கே = பசுவெங்கே ;
கொசு + எங்கே = கொசுவெங்கே
இவ்வாறு உயிரை அடுத்து உயிர் வரும்போது, இடையில் உடம்படுமெய்கள் - ய்,வ் ஏன் வருகின்றன என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன். தமிழின் ஒரு மிகச் சிறப்பான பண்பு அது!
இன்று சிலர் ''குடிஅரசு'' ''வாழைஇலை'' என்றெல்லாம் எழுதுகிறார்கள். இது தவறு. ''குடியரசு'' ''வாழையிலை'' என்றுதான் எழுதவேண்டும்.
'குற்றியலுகரப் புணர்ச்சிபற்றியும் தனியே எழுதவேண்டும்!
மொத்தம் உயிர் 12 (+ஆய்தம்)! இவற்றில் .....
இ, ஈ, ஐ, ஏ, ----- அ, ஆ, ஊ, ஓ ----- முற்றியலுகரம்
-------- குற்றியலுகரம் என்று நான்கு பிரிவுகளாகப் பார்க்கலாம். ஏனைய எ,ஒ, இரண்டும் நிலைமொழியின் இறுதியில் வருவதில்லை! ஔ என்பது ஓரெழுத்து ஒருமொழியில் மட்டுமே வரும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India