வியாழன், 14 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... (2)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (2)
----------------------------------------------------------------
நேற்று நான் கூறிய மொழிபயிற்றல் வழிமுறைகளில் '' நேரடி முறை'' Direct Method என்பதையும் இணைத்துக்கொள்ளவும். இந்த வழிமுறையில் மாணவர்களின் சூழலை முழுமையாகப் பயிலுகிற குறிப்பிட்டமொழிச் சூழலாகவே மாற்றி அமைப்பது ஆகும். அதாவது மாணவர்கள் தங்கள் நடைமுறைச் சூழலில் அந்த மொழியை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அவ்வாறு பயன்படுத்துவதால், அவர்களுக்கு அந்த மொழியின் இலக்கணமும் சொற்களும் பற்றிய அறிவு வந்துவிடும் கூறப்படுகிறது. 

மொழி பயிற்றல் கோட்பாடுகளைப்பற்றி உரையாடுவதற்குமுன்னர் சிலவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்.
மொழி பயிற்றல்பற்றிய கலந்துரையாடலில் ஒரு சிலவற்றைத் தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும். முதல்மொழி, இரண்டாம்மொழி, மூன்றாம் அல்லது அந்நியமொழி என்ற வேறுபாடு... தமிழகத்தில் தமிழ் முதல்மொழி .... ஆங்கிலம் இரண்டாவது மொழி. ஆங்கிலத்தை இங்கு வகுப்புக்கு வெளியேயும் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. வகுப்பறையில் பெற்ற ஆங்கில மொழி அறிவைக் கொண்டு மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியேயும் கருத்துப்புலப்படுத்தச் செயல்களுக்குப் பயன்படுத்தலாம்.
தமிழகத்தில் பல பள்ளிகளில் பிரெஞ்சும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால் வகுப்பறையில் பெறுகிற பிரெஞ்சுமொழி அறிவைப் பயன்படுத்திப் பார்க்க வகுப்பறைக்கு வெளியே வாய்ப்புகள் கிடையாது. எனவே பிரெஞ்சுமொழிக் கல்வியை மூன்றாம் மொழி அல்லது அந்நியமொழி என்று கூறலாம். மேலும் பிரெஞ்சுமொழியைத் தாய்மொழியான தமிழ்மூலம் கற்காமல், இரண்டாம்மொழியான ஆங்கிலம்மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மொழி பயிலுகின்றவர்களின் வயது மிக முக்கியம்.... மூன்றிலிருந்து எட்டுவயதுவரை உள்ள மாணவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். அடுத்து ஒன்பதிலிருந்து பதின்மூன்று... அடுத்து, பதினான்கிலிருந்து பதினெட்டு... இவ்வாறு வயது கூடக்கூட ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும் வேகம் குறைகிறது என்பது உளவியல்மொழியியில் ஆய்வாளர்களின் கருத்து... இதற்கு அடிப்படை.... மூளையின் இளகுதன்மை ... Plasticity.
குழந்தைகளைப் பொறுத்தமட்டில்.... ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை ஒரேநேரத்தில் குழப்பமின்றி கற்றுக்கொள்ளமுடியும் (Simultaneous Acquisition ) என்று இத்துறை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்! அதற்குக் காரணம்... குழந்தை ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, அதை தனக்குத் தெரிந்த தாய்மொழியோடு ஒப்பிட்டுக் கற்றுக்கொளவதில்லை... ஒவ்வொரு மொழியையும் அந்தந்த மொழியாகவே கற்றுக்கொள்கிறது. ஆனால் பெரியவர்கள் ஒரு அந்நிய மொழியைக் கற்றுக்கொள்ளும்போது, தங்களது தாய்மொழி அல்லது தமக்குத் தெரிந்த மற்றொரு மொழியோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இது மொழி கற்றலின் வேகத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
அடுத்து, தமிழ்மொழியில் நிலவும் இரட்டைவழக்குச் சூழல்.... குழந்தை பிறந்து வளரும்போது , இயற்கையாகப் பெற்றுக்கொள்கிற மொழி வழக்கு... பேச்சுத்தமிழ் வழக்கே ஆகும். குழந்தை பள்ளிக்குச் செல்லும்போது... பேச்சுத்தமிழில் முழுமையான திறனோடு செல்கிறது. அங்கு அதற்கு எழுத்துவழக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பேச்சுத் தமிழுக்கும் எழுத்துத்தமிழுக்கும் அடிப்படையான இலக்கணம் பெரும்பாலும் ஒன்றாக இருப்பதால், ஆங்கிலம் போல் அல்லாமல், எழுத்துத்தமிழைக் குழந்தை விரைவாகக் கற்றுக்கொள்கிறது. பேச்சுவழக்கைக் குழந்தை பேச்சுவாயிலாகவே பெற்றுக்கொள்கிறது. ஆனால் எழுத்துத்தமிழைப் பிரதானமாக எழுத்துவழியாகக் கற்றுக்கொள்கிறது. வாசிப்புவழியாகவும் கற்றுக்கொள்கிறது. பாடல்கள், கதைகள் போன்றவற்றைப் பேச்சொலி வழியாகவும் கற்றுக்கொள்கிறது. இருப்பினும் பேச்சுவழக்கின் செல்வாக்கானது குழந்தையானது எழுத்து வழக்கைக் கற்றுக்கொள்வதில் வெளிப்படுகிறது. சற்றுப் பாதிக்கவும் செய்கிறது.
மேற்கண்டவற்றின் அடிப்படையில் (1) முதல்மொழி, இரண்டாம்மொழி, மூன்றாம்மொழி பயிற்றல்களில் வேறுபட்ட அணுகுமுறை தேவை. (2) இளம் வயதினருக்கா அல்லது முதியவர்களுக்கா என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India