புதன், 27 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை..(11)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (11)
------------------------------------------------------------------------------
முந்தைய உரையில் எழுத்துக் கருத்தாடல்பற்றிச் சில கருத்துகளை முன்வைத்திருந்தேன். எழுத்துக்கருத்தாடலுக்கும் சொற்பொழிவுக் கருத்தாடலுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. சொற்பொழிவுக் கருத்தாடலில் பேசுபவர்முன் கேட்பவர்கள் இருந்தாலும்... பொதுவாக அங்கே வினா- விடைக்கு இடம் இருக்காது. எனவே சொற்பொழிவாளர் ... தனக்குமுன் இருக்கிற கேட்பவர்களுடன் உரையாடுவதுபோன்று... கற்பனைசெய்துகொண்டு... அவர்களுக்கு என்ன என்ன ஐயங்கள் ஏற்படலாம் என்று நினைக்கிறாரோ... அவற்றிற்கெல்லாம் விடைதரும் வகையில் அவர் சொற்பொழிவு அமையவேண்டும். அப்போதுதான் கேட்பவர்கள் ஆர்வத்துடன்... அமைதியாகச் சொற்பொழிவாளர் முன்வைக்கும் கருத்துகளைப் புரிந்துகொள்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்துவார்கள். இது மிக முக்கியமானது!

அடுத்து.... ஒரு கட்டுரையை அல்லது நூலை ஒருவர் எழுதும்போது... வாசகர்களுடன் ஒரு கருத்தாடலைத் தன் மனதிற்குள் நடத்துகிறார் என்று பார்த்தோம். அந்தக் கருத்தாடலில்... அவர் வாசகர்கள் இன்னன்ன ஐயங்களை... வினாக்களை... கேட்கலாம் என்று நினைத்து, அவற்றிற்கான விடைகளை அளிக்கிறார். ஆனால் எழுத்தில் அவர் வடிப்பது... வாசகர்களின் வினாக்களை அல்ல.. மாறாக, அவற்றிற்கான விடைகளை மட்டுமே! அதாவது.. தன் மனதில் தானும் வாசகர்களும் நடத்துகிற ஒரு கருத்தாடலில் ஒரு பகுதியை மட்டுமே... வாசகர்களுக்கான விடைகளை மட்டுமே! வினாக்களை எழுத்தில் பதியாமல் விட்டுவிடுவார்! அவற்றை எழுதமாட்டார்! அதாவது... தான் மனதில் நிகழ்த்திய கருத்தாடலின் ஒருபகுதியை ... பனுவலாகத் தருகிறார். அந்தப் பனுவலை... நூலை... படிக்கிற வாசகர் அந்த ஆசிரியர் தன்முன் இருந்து, கருத்தாடல் நிகழ்த்துகிறமாதிரி நினைத்துக்கொண்டு... அதாவது பனுவலை மீண்டும் கருத்தாடலாக விரிவாக்கம் செய்து.. ஆசிரியர் கூறவந்த கருத்துகளைப் புரிந்துகொள்ள முயல்கிறார்!
நூலாசிரியர் கருத்தாடலைப் பனுவலாகக் குறைக்கிறார் (Reduction process)! வாசகர் அந்தப் பனுவலை மீண்டும் கருத்தாடலாக விரிக்கிறார் ( Expansion process)! எந்த அளவுக்கு அவர் ஆசிரியர் தன் மனதில் நிகழ்த்திய கருத்தாடலுக்கு நெருங்கிய கருத்தாடலை மீட்டுருவாக்கம்( Reconstruction) செய்யமுடிகிறதோ... அந்த அளவுக்கு அவரால் நூலாசிரியர் தனது நூலில் கூறவந்த கருத்துகளைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்! இங்கு ஒரு முக்கியமான செய்தி.... நூலாசிரியர் தனது வாசகர்களுக்கு ஒரு நூலை எழுதும்போது.... எழுதுகிற செய்திகளைப் புரிந்துகொள்ள... ஒரு குறைந்தபட்சப் பின்புல அறிவை எதிர்பார்த்துத்தான் எழுதுகிறார். அந்தப் பின்புல அறிவு வாசகர்களுக்கு இல்லையென்றால்... அந்த நூலை அவர்களால் புரிந்துகொள்ளமுடியாது! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் நூல் எழுதும்போது... அந்த மாணவர்களுக்கு ... அந்த வயதில் .. முந்தைய வகுப்புகளின் படிப்புகளின் அடிப்படையில்... என்ன பின்புல அறிவு இருக்கும் என்பதை மனதில் இருத்திக்கொண்டுதான் நூல் எழுதவேண்டும்! அதுபோல் பத்தாம் வகுப்புமாணவர்களுக்கான நூல்கள் அவர்களின் பின்புல அறிவை அடிப்படையாகக்கொண்டுதான் அமையவேண்டும.
இங்கு மற்றொரு செய்தியையும் ... ஆசிரியப் பணியில் இருந்தவன் என்ற முறையில்... முன்வைக்க விரும்புகிறேன். பாடப்புத்தகங்களை.... அவை எந்தத் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும்... வகுப்பில் அதன் அடிப்படையில் பாடம் நடத்தும்போது... அந்தப் புத்தகங்களை அப்படியே வாசித்துக்கொண்டு சென்றால்... எவ்விதப் பயனும் இல்லை. மாணவர்களுக்கு வாசிக்கத் தெரியாதா என்ன? அங்கே ஆசிரியரின் பணி.... அந்நூலில் கூறப்பட்டுள்ளவற்றைப் புரிந்துகொள்ள... மாணவர்களுக்கு இருக்கவேண்டிய பின்புல அறிவை வெளிக்கொண்டுவந்து , ஒருவேளை மாணவர்களிடம் அந்தப் பின்புல அறிவில் ஏதாவது இடைவெளி இருந்தால் ('' சில பின்புல அறிவை மாணவர்கள் மறந்திருந்தாலோ அல்லது முன்கொண்டுவர முடியவில்லையென்றாலோ'') ஆசிரியர் இடையிட்டு உதவிசெய்யவேண்டும. இதுதான் கற்பித்தல்! இதை வெறும் ''வாசித்தலாக'' ஆசிரியர் நினைத்துவிடக்கூடாது. நூலாசிரியரின் பனுவலை... அவர் தன் மனதில் நடத்தியிருந்த கருத்தாடலாக மாற்றி... மாணவர்களுக்குக் கொடுப்பதுதான் ஆசிரியரின் பணி!
மூன்றாவது அல்லது நான்காவது வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பஞ்சதந்திரக் கதையை ஆசிரியர் நடத்துவதற்கும் ... ஒரு நாவலை முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கு ஆசிரியர் நடத்துவதற்கும்... வேறுபாடு உண்டு. அதுபோன்று... திருக்குறளை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்துவதற்கும்... முதுகலை மாணவர்களுக்கு நடத்துவதற்கும் வேறுபாடு உண்டு! இருக்கவேண்டும்!
பழந்தமிழ் இலக்கணங்களுக்கும் இலக்கியங்களுக்கும் உரையாசிரியர்கள் செய்துள்ள பணிகள் எல்லாம் இதுதான்! மூல ஆசிரியர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள... மூல ஆசிரியர்களின் பனுவலை நாம் கருத்தாடலாக மாற்றிப் புரிந்துகொள்ள... தேவையான உதவிகளை அளிக்கும் மகத்தான பணிகளையே உரையாசிரியர்கள் செய்துள்ளார்கள்!
கட்டுரை இன்றும் நீண்டுவிட்டது. மன்னிக்கவும்! நாளை மீண்டும் தொடர்கிறேன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India