செவ்வாய், 26 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (10)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (10)
-----------------------------------------------------------------------------
முந்தைய உரையில் ... பேச்சுக் கருத்தடால்பற்றிப் பார்த்தோம். எழுத்துக் கருத்தாடல்பற்றிய சில கருத்துகளை இங்கு முன்வைக்கிறேன். பேச்சுக் கருத்தாடலைவிட ... எழுத்துக் கருத்தாடலில் ஒருவர் வெற்றிபெறுவது உண்மையில் மிகக் கடினமான ஒரு செயல்! அதற்கு ஒரு மிக முக்கியமான காரணம்... பேச்சுக் கருத்தாடலில் பேசுபவர்முன்.... கண்முன்... கேட்பவர் நிற்கிறார்! அதனால் பேசுபவர் முன்வைக்கிற கருத்துகளில் கேட்பவருக்கு ஐயங்கள் இருந்தால்... பேசுபவரிடம் உடனடியாகக் கேட்டுவிடலாம்! பேசுபவரும் அந்த ஐயங்களை அந்த இடத்திலேயே ... அப்போதே... தீர்க்க முயலலாம்!

ஆனால் ... எழுத்துக்கருத்தாடலில் அதை முன்வைத்தவர் முன்னால் ... அதாவது நூலாசிரியரின் முன்னால்.... அந்த உரையைப் படிப்பவர் இல்லை. நூலாசிரியர் எங்கேயோ... படிப்பவர் எங்கேயோ! காலத்தாலும் இடத்தாலும் இருவரும் பிரிக்கப்பட்டுள்ளனர்! அப்படியென்றால்... படிப்பவரின் ஐயங்களை எவ்வாறு நூலாசிரியர் தீர்க்கமுடியும்? இங்குத்தான் நூலாசிரியரின் திறமை உள்ளது!
எழுத்துக் கருத்தாடலை முன்வைப்பவருக்கு... அதை எழுதும்போது ... தனது எழுத்தைப் படிக்கப் போகிறவர்கள் யார் ... எங்கே இருக்கிறார்கள் ? ... எப்போது படிக்கப் போகிறார்கள் ? என்பதெல்லாம் தெரியாது! ஆனாலும் கண்ணுக்குத் தெரியாத படிப்பவர்களுக்காக அவர் எழுதுகிறார். அவர்கள் தன்முன் இருப்பதாகக் கற்பனைசெய்துகொண்டு... எழுதுகிறார். ஒரு கருத்தை முன்வைக்கும்போது... படிப்பவர் முன்னால் இருந்தால் என்னென்ன ஐயங்கள் ஏற்படலாம் என்பதை எழுதுபவரே உணர்ந்துகொண்டு... அவற்றிற்கான விடைகளை முன்வைக்கிறார்!
இங்கு ஒரு மிக முக்கியமான செய்தி ... படிப்பவர் கேட்கக்கூடிய கேள்விகளை தனது எழுத்தில் பொதுவாகப் பதியமாட்டார். அதற்கு மாறாக, அவற்றிற்கான விடைகளைமட்டும் எழுத்தில் வடிப்பார்! அதற்காக அவர்... சில சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக, ''(1) மாணவர்களுக்குத் அன்று தொலைக்காட்சிச் செய்தியைக் கேட்டதும் மிக்க மகிழ்ச்சி! (2)ஏனென்றால், பலத்த மழைபெய்யலாம் என்ற வானிலை அறிவிப்பால், அன்று பள்ளி விடுமுறை என்று அச்செய்தி கூறியது'! .... இங்கு, முதல் வாக்கியத்தைக் கட்டுரையாளர் முன்வைத்தவுடன், அதைப் படிப்பவர்கள் அவர் முன்னால் இருந்தால்.... '' ஏன் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்?'' என்று கேட்கலாம். அதை எதிர்பார்த்த கட்டுரையாளர்... அந்தக் கேள்விக்கு விடையளிக்கிறார். ஆனால் படிப்பவர்கள் கேட்கலாம் என்று கட்டுரையாளர் எதிர்பார்த்த கேள்வியை .. '' ஏன் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்? ''... என்ற கேள்வியை .... எழுத்தில் எழுதவில்லை. அதற்கு மாறாக, அதற்கான விடையைமட்டும் ...'' ஏனென்றால்'' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தி, விடையை மட்டும் பதிவு செய்கிறார். இங்கு அவர் '' ஏனென்றால்'' என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்கு அடிப்படையே... அந்த இடத்தில் படிப்பவர்கள் அந்தக் கேள்வியை எழுப்புவார்கள் என்று எதிர்பார்த்துத்தான்! அதுபோன்று .. '' பலத்த மழை பெய்தது. ஆகவே அன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது'' என்ற தொடர்களில் .. படிப்பவர் ஒருவேளை ''ஏன் அன்று விடுமுறை விடப்பட்டது ?'' என்று கேட்கலாம் என்று எதிர்பார்த்து, கட்டுரையாளர் அதற்கான காரணத்தைக்கூறி, அதற்கு '' ஆகவே '' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இங்கு விடையைமட்டும் அளிக்கிறார்.... படிப்பவர் எழுப்பலாம் என்று அவர் எதிர்பார்த்த கேள்வியை எழுத்தில் பதிவு செய்யவில்லை.
முதல் விடையில் '' ஏனென்றால்'' என்ற சொல் பயன்படுத்தப்படதற்குக் காரணம்.... நடைபெற்ற காரியத்தை... ''மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்'' என்ற காரியத்தைக்கூறி... பின்னர் அதற்கான காரணம் சொல்லப்படுகிறது.
இரண்டாவது விடையில் '' ஆகவே'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதற்குக் காரணம்... காரணத்தை ... '' பலத்த மழை பெய்தது'' என்ற காரணத்தை முதலில் சொல்லி, பின்னர் அதன்காரணமாக நடைபெற்ற செயல் ... '' பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது '' என்ற செயல் கூறப்படுகிறது.
இங்கு நாம் கவனிக்கவேண்டியது.... எழுதுபவர் ஒவ்வொரு வாக்கியத்தை எழுதும்போதும்... தனக்குள் ஒரு உரையாடலை நடத்திக்கொள்கிறார். தனக்கு எதிரே ஒருவரோ பலரோ இருந்து.... தனது கருத்துகளைக் கேட்கிறார்கள் , ஐயங்களைக் கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டுதான் .... எழுதுகிறார். அவ்வாறு எழுதினால்தான் , அவரது எழுத்துகளைப் படிப்பவர்களுக்கு அவரது கருத்தாடலைப் புரிந்துகொள்ளமுடியும்! அவ்வாறு ஒரு உரையாடலை தனது மனதிற்குள் நிகழ்த்தாமல், ஒருவர் தனக்குத் தெரிந்த கருத்துகளைமட்டும் எழுதிக்கொண்டே சென்றால்... அந்த எழுத்துரை...அது கடிதமோ, கட்டுரையோ, நூலோ .... படிப்பவர்களுக்குத் தேவையான தெளிவைக் கொடுக்க இயலாது! இங்குதான்... எழுத்துரை படைப்பவர்களின் திறமை இருக்கிறது.
இங்கு ஒரு செய்தி முக்கியமானது. எழுதப்படுகிற எழுத்துரையானது ... பொதுமக்களுக்கானதா, மாணவர்களுக்கானதா அல்லது அத்துறையில் துறைபோகியவர்களுக்கானதா என்பதை எழுதுபவர் விளங்கிக்கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, புவிஈர்ப்புசக்தி அடிப்படையிலான ஒரு செயலை , உயர்நிலை அறிவியலாளர்களுக்கு எழுதும்போது, புவிஈர்ப்புவிசை என்றால் என்ன என்பதை விளக்கவேண்டியது இல்லை! விளக்கவும்கூடாது! அதேவேளையில், மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் அதற்கான விளக்கங்களை நேரடியாக அளித்து, எழுதுபவர் விளக்கவேண்டும். இதை கருத்தைப் பொதுமக்களுக்கான ஒரு நாளிதழில் எழுதும்போது, மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் தெரிந்த சில எடுத்துக்காட்டுகளைக்கூறி,அதனடிப்படையில் .. அவற்றோடு தொடர்படுத்தி... புவிஈர்ப்புவிசையை விளக்கி... பின்னர் அதனால் ஏற்படுகிற அந்தக் குறிப்பிட்ட செய்தியை அல்லது நிகழ்வை விளக்கினால், மக்களுக்கு நன்கு புரியும். எழுதுபவர் யாருக்காக எழுதுகிறார் என்பதை முடிவு செய்துகொண்டு... அந்தக் குறிப்பிட்ட வாசகரைத் தன் மனதில் நிறுத்தி.... உரை எழுதினால்தான் அவர் தனது எழுத்துக் கருத்தாடலில் வெற்றிபெறமுடியும்.
இந்தக் கட்டுரை மிக நீண்டுவிட்டது. இத்தோடு நிறுத்திக்கொண்டு... நாளை தொடர்கிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India