வெள்ளி, 15 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (3)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (3)
---------------------------------------------------------------------
மொழியியலில் 50-களில் ( சாம்ஸ்கிக்கு முன்னர்) குறிப்பாக இரண்டு மாறுபட்ட கோட்பாடுகள் - ஆய்வுமுறைகள் - நிலவின. (1) மொழி ஆய்வில் கள ஆய்வில் கிடைக்கிற மொழித்தரவுகளிலிருந்து தொடர்களையும் சொற்களையும் அவற்றின் பயன்படுத்தத்திலிருந்து (Use) பிரித்து, அவற்றின் அமைப்பைமட்டுமே ஆய்வு செய்யவேண்டும் என்ற அமைப்புமொழியியல் கோட்பாடு ( Structural Linguistics) . அமெரிக்காவில் புளூம்ஃபீல்டு, பிரான்சில் சசூர் போன்றவர்கள் இக்கோட்பாட்டில் உறுதியாக இருந்தனர் (2) தொடர்களையும் சொற்களையும் அவற்றின் பயன்படுத்தத்தின் மத்தியில் வைத்துத்தான் செய்யவேண்டும். அப்போதுதான் மொழியின் இயல்பை முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும் என்ற கோட்பாடு. இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபிர்த் ( மானிடவியலாளர் மாலினோஸ்கியின் மாணவர்) , அவருடைய மாணவர் ஹாலிடே போன்றவர்கள் இக்கோட்பாட்டில் ( Systemic/ Functional Linguistics) உறுதியாக இருந்தனர்.

மேற்குறிப்பிட்ட முதல் கோட்பாடே - அமைப்புமொழியியலே- மொழிபயிற்றலில் இலக்கணம், சொற்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பதே மொழிபயிற்றல் என்ற கருதுகோளுக்கு அடிப்படையாக அமைந்தது. அவற்றைக் கற்றுக்கொடுப்பதில் வேறுபட்ட வழிமுறைகள் தோன்றின. உளவியல் அறிஞர் ஸ்கின்னரின் ( Skinner) கோட்பாடுகளும் இதில் தனது பாதிப்பைச் செலுத்தின.
அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டாவது கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் சூழல் சார்ந்த மொழிப்பாடத்திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு மொழிபயிற்றலை மேற்கொண்டனர். வெறும் இலக்கணமும் சொற்களும் அல்ல.... அவற்றின் பயன்படுத்தச் சூழலைக் கருத்தில் கொண்டு மொழிபயிற்றலுக்கான பாடத்திட்டம் அமையவேண்டுமென வற்புறுத்தினர். இதன் பயனாகவே சூழல்சார் மொழிப்பாடத்திட்டம் ( Situational Syllabus).... பயன்படுத்தத்தை அடிப்படையாகக்கொண்டு மொழிப்பாடத்திட்டம் ( Notional Syllabus, Functional Syllabus, Notional-Functional Syllabus) போன்றவை முன்வைக்கப்பட்டன. இதற்கிடையில் சமூகமொழியியல் (Sociolinguistics), இனவரைவுமொழியியல் ( Ethnography of Communication) போன்ற மொழிக்கும் சமூகத்திற்கும் ... இனத்திற்கும்... பண்பாட்டிற்கும் இடையில் உள்ள உறவுகளைப் பற்றிய ஆய்வுகள் மொழியியலில் முக்கியத்துவம் பெற்றன.
மற்றொரு முக்கியமான ஒரு கருத்து தத்துவ அறிஞர் ஜே.எல். ஆஸ்டின் ( J L . Austin) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ' சொற்களைக் கொண்டு செயல்களை எவ்வாறு செய்வது ? ( "How to do things with words?) 1955-62 ஆண்டுகளில் ஆற்றிய உரைகள் மொழியியலில் ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்தன. அவருடைய முக்கியமான கருத்து, ஒருவர் மொழித்தொடர்களை வெளிப்படுத்தும்போது, ஒரு பொருண்மையைமட்டும்( menaing) வெளிப்படுத்தவில்லை.... ஒரு செயலையும் (act) மேற்கொள்கிறார் என்பதே ஆகும். எந்தச் செயலைப் பேசுபவர் செய்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளாமல், அத்தொடரின் பொருண்மையைப் புரிந்துகொள்ளமுடியாது என்பது அவரது கருத்து. '' நாளைக்கு வருகிறேன்'' என்று ஒருவர் மற்றொருவரிடம் கூறும்போது , (1) உறுதியளிக்கிறாரா (2) தனது வருகையைச் செய்தியாகத் தெரிவிக்கிறாரா (3) நாளைக்கு வந்து உன்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்று எச்சரிக்கிறாரா (4) இன்று வரமுடியாது என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கிறாரா ... இப்படி ஒரே தொடர் பல செயல்களைச் செய்யலாம். எனவே தொடருக்குப் பின்னால் உள்ள செய்கையைக் கேட்பவர் புரிந்துகொண்டால்தான், அத்தொடரை அவர் புரிந்துகொண்டார் என்று கொள்ளமுடியும். ஒருவர் '' தாகமாக இருக்கிறது'' என்று வீட்டில் சொன்னால், அவருக்குத் தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பார்களா அல்லது '' அப்படியா ?' என்று ஒரு செய்தியாக எடுத்துக்கொண்டு, செயல்படுவார்களா?
ஆஸ்டினின் கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு, ஜான் சியர்ல் ( John Searle) போன்றவர்கள் '' பேச்சுச்செயல்'' ( Speech Act) என்ற ஒரு முழுமையான கோட்பாட்டையே முன்வைத்தார்கள். இது மொழிபயிற்றல் துறையின் மீது மிகுந்த செல்வாக்கு செலுத்தத்தொடங்கியது. ஐரோப்பிய கவுன்சில் ( Council of Europe) பரிந்துரைத்த மொழிபயிற்றல் பாடத்திட்டத்தில் இது நன்றாகவே வெளிப்பட்டது.
இவ்வாறு மொழியியல் கோட்பாடுகள் மாற மாற, வளர வளர வளர, 1950 வாக்கில் நிலவிய மொழிபயிற்றலுக்கான பாடத்திட்டங்களானது அடிப்படையிலேயே மாறத்தொடங்கின. குறிப்பாக, ஒரு மொழியின் இலக்கணத்தையும் சொற்களையும் அவற்றின் பயன்படுத்தத்திலிருந்து புறமாக வைத்துக் கற்றுக்கொடுக்கக்கூடாது என்ற கருத்து மேலோங்கத் தொடங்கியது. அடுத்து, 1980,90 வாக்கில் விடோவ்சன் ( Widdowson), சிங்க்லயிர் ( Sinclair) போன்றோர் முன்வைத்த ''கருத்தாடல் ஆய்வு'' (Discourse Analysis) .. என்ற மொழியியல் ஆய்வுமுறையானது, மொழிபயிற்றல் கோட்பாடுகளை மேலும் ஒரு அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டுசென்றது. இதைப்பற்றி அடுத்து எழுதுகிறேன்.
இந்த இடத்தில் ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன். மொழியியல் அறிவியல் பல்வேறு தளங்களில் புதுப்புதுக் கோட்பாடுகளை முன்வைத்து தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது. அதையொட்டி, மொழிபயிற்றல் துறையும் மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கிறது. இவற்றையெல்லாம், தமிழகத்தில் மொழிபயிற்றலுக்குப் பயன்படுத்தவேண்டும். கிணற்றுத் தவளையாக நாம் இருந்துவிடக்கூடாது. இவ்வாறு நான் கூறுவதைத் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நல்ல எண்ணத்தில்தான் கூறுகிறேன். '' சென்றிடுவீர் எட்டுத்திக்கும் ... கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'' ... மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை.. திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்'.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India