ஞாயிறு, 17 ஜூலை, 2016

இளம் மாணவர்களை வாழவிடுங்கள்!

இளம் மாணவர்களை வாழவிடுங்கள்!
-------------------------------------------------------
50 ஆண்டுகளுக்கு முன்னர் எல்கேஜி, யுகேஜி கிடையாது! ஒன்றாம் வகுப்புதான் உண்டு! விரல்விட்டு எண்ணக்கூடிய நகரங்களில்தான் ஆங்கிலவழிப் பள்ளிகள் ( ''கான்வெண்ட்') உண்டு! தனியார் பள்ளிகள் மிகக் குறைவு! அரசாங்கப் பள்ளிகள்தான்! 5 ஆம்வகுப்புவரை உள்ள பள்ளிகள்! 8 ஆம் வகுப்புவரை உள்ள பள்ளிகள்! 11 ஆம் வகுப்புவரை உள்ள பள்ளிகள்! கையில் சிலேட்டு! குச்சி! ஒரு சில புத்தகங்கள், நோட்டுகள்! 5 ஆம் வகுப்பில்தான் A, B, C, D.... !

இன்றோ.... எல்கேஜி, யுகேஜி மட்டுமல்ல! பிரி-எல்கேஜி கூட இருக்கிறது! ஆங்கில வழிப் பள்ளிகள் இல்லாத ஊர்களே இல்லை! பெயர்கள்கூட ... ஆக்ஸ்போர்டு ஸ்கூல், கேம்பிரிட்ஜ் ஸ்கூல், அமெரிக்கன் ஸ்கூல் ! குழந்தை பிறக்கும்போதே ஆங்கிலத்தோடு பிறக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு! தமிழ் ... தெரியாது என்று குழந்தை சொன்னால்தான் பெற்றோர்களுக்குப் பெருமை!
முன்னர் வாரத்திற்கு ஏதாவது ஒருநாள், இரண்டுநாள் சீருடை உண்டு! இப்போது தினந்தோறும் சீருடை மட்டுமல்ல... கழுத்தில் ''டை'' ! காலில் விலையுயர்ந்த ஷூ! முதுகில் ஒரு பெரிய ''கோணிச்சாக்கு'' மூட்டை! அதை மாணவர்களின் அம்மா, அப்பா அல்லது வேலையாள் தூக்கிக்கொண்டு வரவேண்டும்! கடன் வாங்கியாவது இதைச் செய்யவேண்டும்! பள்ளிக் கட்டணம் .... 50 ஆயிரம் ... 80 ஆயிரம்! நான் படிக்கும்போது, உயர்நிலைப் பள்ளி வரும்போதுதான் 10 அல்லது 20 ரூபாய் கட்டணம்! கல்லூரியில்கூட 500 அல்லது 1000 தான் கட்டணம்!
மாலையில் அன்று மாணவர்கள் .... நண்பர்களுடன் ''தொட்டுப்பிடித்து விளையாடுதல்'' , ''கோலி, பம்பரம் விளையாடுதல்'' , ''பாண்டி விளையாடுதல்'' .... இப்போது விளையாடுவதற்கே மாணவர்களுக்கு நேரம் கிடையாது! ''டியூஷன்''.... அப்படி ஏதாவது சனி, ஞாயிறு நேரம் கிடைத்தால்.... கிரிக்கெட், டென்னிஸ்... பெற்றோரின் வசதிகளைப் பொறுத்து!
6 ஆம் வகுப்பு படிக்கும்போதே (11 வயதில்) .... ஐஐடி-க்குப் பயிற்சி! சனி, ஞாயிறுகளில் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை! அதாவது 7 ஆண்டுகளுக்கு முன்னரே ''ஸ்பெஷல்'' படிப்பு! அப்படியென்றால்.. பள்ளியில் படிக்கிற படிப்பு? அது ''பெயரளவுக்கு'' ! அந்தச் சான்றிதழ் தேவைப்படுகிறது! அவ்வளவுதான்!
இதெல்லாம் சரி! மாணவர்கள் சமூகவாழ்க்கைக்கு எப்போது தங்களைத் தயார்படுத்தப்போகிறார்கள்? இதுதான் எனது ஐயம்! இதனால்தான் பல பண்பாட்டுப் பிரச்சினைகள்! ரோபோட்டுகளை மனிதர்களாக ஆக்க முயற்சி மேற்கொள்கிற தற்போதைய காலகட்டத்தில் .... மாணவர்களை உணர்வற்ற .... சுதந்திரம் அற்ற... ரோபோட்டுகளாக மாற்றுகிறார்கள்! உண்மையான அறிவு எது? ... மதிப்பெண்களுக்காக நெட்டுரு போடுகிற படிப்பு எது? வேறுபாட்டைப் பார்க்கத் தயாராக இல்லை! இப்போது! 1200 -க்கு 1200.... 1999, 1998.... வாங்கமுடியுமா?
உண்மையில் தெரிந்தோ, தெரியாமலோ ... இளம் மாணவர்கள் .... சர்க்கஸில் விலங்குளைப் பழக்குவதுபோல... பயிற்சிக்கு உட்படுகிறார்கள்! மக்கள் தலையில் ... அறிவுபற்றி ... அறிவுவளர்ச்சிபற்றி... குழந்தைகள் வளர்ப்புபற்றி .... மிகத் தவறான கருத்துகள் திணிக்கப்பட்டுள்ளன. இதனால் உண்மையில் சமுதாயத்திற்கோ... அல்லது தனிநபர்களுக்கோ... எவ்விதப் பயனுமில்லை! மாயைகள் ... போலிப் பண்பாடுகள் திணிக்கப்படுகின்றன! சமூக உணர்வு இல்லாமல்... இயந்திரமாக மாற்றப்படுகிறார்கள்! தாய்மொழி உணர்வோ.... பிறந்த மண்ணின் சமுதாய மாற்றம்பற்றியோ ... சிந்தனை இல்லாமல் வளர்க்கப்படுகிறார்கள்! 50 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? சிந்திக்கவேண்டும்! மிகத் தீவிரமாகச் சிந்திக்கவேண்டும்! பிறப்பில் குழந்தைகள் மனிதக் குழந்தைகளாகப் பிறந்துமட்டும் பயனில்லை..... மனிதர்களாக வளர்க்கப்படவேண்டும்! ரோபோட்டுகளாக.... இயந்திரங்களாக - வளர்க்கக்கூடாது!
குழந்தைகளின் மூளைவளர்ச்சிபற்றி அறிவியல் அடிப்படையில் சிந்தித்து .... புரிந்து... மூளையின் இயற்கையான வளர்ச்சியைத் தடைபடுத்தாமல்..... அதற்கேற்றவகையில் குழந்தைகளை வளர்ப்பது மிக அவசியமானது!

-------------------------------------------------------------------------------------------------------------------------
நான் எழுதியுள்ளது பள்ளிப் படிப்பைப் பற்றிமட்டும்தான்! கல்லூரிப் படிப்புபற்றி ..... அதைத் தனியாக எழுதவேண்டும்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்வழிக் கல்வி ... ஆங்கிலமொழிக் கல்வி ... ஆங்கிலமொழியைக் குறைந்த காலத்தில் நிறைவாகக் கற்றுக்கொடுக்கமுடியும். இரண்டாம்மொழியாக ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுப்பது தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் மிகத் தெளிவான வழிகாட்டுதலைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதைப் பின்பற்றினாலே போதும்! ஆனால் அதுபற்றியெல்லாம் கவைலைப்படாமல் ... மொழிக்கல்வியை வறட்சியாக..... வெறும் இலக்கணக் கல்வியாக ..... மதிப்பெண் பெறுவதற்கான கல்வியாக ... இங்கு மாற்றியுள்ளார்கள்! ஒரு மொழியைக் கற்றுக்கொடுப்பது வேறு.... அந்த மொழியைப்பற்றி ( இலக்கணம் போன்றவை) கற்றுக்கொடுப்பது வேறு... இந்த வேறுபாடு இன்னும் சரியாக... முழுமையாக இங்கு உணரப்படவில்லை. மொழிக்கல்விபற்றிக் கடந்த சிலநாள்களாக முகநூலில் மூன்று உரைகள் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதயுள்ளேன். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கிலமொழிப்பாடத்திட்டம் இன்றைய மொழிபயிற்றல் வளர்ச்சியின் அடிப்படையில் இங்கு உருவாக்கப்படுவதில்லை. மொழித்திறன்களைவிட மதிப்பெண்களே இங்கு முக்கியம்! அதுபோன்று ,, முறையாகத் தயாரிக்கப்பட்ட ஆங்கிலமொழிப் பாடங்களை அதனடிப்படையைத் தெரிந்துகொண்டு, முறையாகக் கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். நிச்சயமாக, ஒரு சில ஆண்டுகளில் ஆங்கிலத்தை ..... இரண்டாம்மொழியாக - கற்றுக்கொடுக்கமுடியும். பின்னர் தமிழ்வழி பாடங்களைக் கற்ற மாணவர்கள் அவற்றை ஆங்கிலத்திலும் வெளிப்படுத்தமுடியும். English for Specific Purpose (ESP) , English for Science and Technology ( EST) என்ற அடிப்படையில் அதற்கான பாடநூல்களும் சந்தையில் கிடைக்கின்றன. இது மாயஜாலம் இல்லை. அறிவியல் அடிப்படை.... மொழிபயிற்றல் துறையின் வளர்ச்சி!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்றுபோல இன்றும் .. சிலேட்டு, குச்சிகளைக்கொண்டு கற்றுக்கொடுங்கள் என்று நான் கூறவரவில்லை.... புளியங்கொட்டைகளை அடுக்கி, எழுத்துகளைக் கற்றுக்கொடுங்கள் என்று நான் கூறவரவில்லை.... கணினியையே பயன்படுத்துங்கள்!. வேண்டாமென்று நான் கூறவரவில்லை! ஆனால் கைவிரல்கள்கொண்டு எழுதும்போது ,, மூளையில் எழுத்துகள் பதிவதோடு மட்டுமல்லாமல்..... விரல்களின் நுண்ணிய திறனும் வளர்கிறது. வாய்பாடுகளை இடைவேளைகளில் அன்று கற்றுக்கொள்ளும்போது ..... மனக்கணக்குத் திறன் நன்றாக இருந்தது...... இன்று இளம் மாணவர்கள் எதற்கெடுத்தாலும் கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். இதையெல்லாம் சிந்த்தித்துப் பார்க்கவேண்டும். ஒரு கட்டுரையை எழுதும்போது .... ஆங்கிலத்தில்.... சொற்பிழைகள், இலக்கணப்பிழைகள் இருந்தால்... மென்பொருளே திருத்திக்கொடுத்துவிடும், எனவே நாம் பயப்படவேண்டாம் என்று மாணவர்கள் நினைக்கக்கூடாது. வீட்டுப்பாடங்களை ... இணையதளங்களில் '' cut and paste" செய்து எழுதலாம் என்று மாணவர்கள் நினைக்கக்கூடாது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாகப் பயன்படுத்தவேண்டும். உடம்புக்குப் புரோட்டீன், குளுகோஸ் தானே தேவை ... ஏன் நாம் கஷ்டப்பட்டுச் சாப்பிடவேண்டும் என்று நினைத்து யாராவது மாத்திரைகள்.. டானிக்கை விழுங்கிவிட்டு , சாப்பிடாமல் இருப்பார்களா? .
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India