புதன், 20 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (6)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (6)
----------------------------------------------------------------------------
நாம் பிறரிடம் பேச்சுவழியாகவோ அல்லது எழுத்துரை வழியாகவோ .... ஒரு கருத்துப்புலப்படுத்தச் செயலில் Act of communication) ஈடுபடுகிறோம். இது உணர்வுபூர்வமான ஒரு செயல் அல்லது நிகழ்ச்சி ( active process) ஆகும். இந்த உணர்வுபூர்வமான செயலையே இங்குக் கருத்தாடல் (Discourse) என்று அழைக்கிறோம். கருத்தாடலின் நோக்கம்.... நமக்குத் தெரிந்த சொற்களையோ அல்லது தொடர்களையோ அல்லது அவற்றிற்கான இலக்கணத்தையோ மற்றவருக்கு வெளிப்படுத்துவது இல்லை..... மாறாக, நாம் விரும்புகிற கருத்துகள் அல்லது நோக்கங்களை மற்றவருக்கு வெளிப்படுத்துவதும் .... அதற்குத் தேவையான மொழிவழிச் செயல்களை ( Speech Acts.. விளக்குதல், விவரித்தல், வினவுதல், விடையளித்தல், ஐயத்தை முன்வைத்தல், தெளிவுபடுத்தல் போன்ற பலவகை மொழிவழிச் செயல்கள் .... ஏற்கனவே இதுபற்றி ஆஸ்டின், சியர்ல் ஆகியோரின் கருத்துகளை விளக்கியுள்ளேன்) மேற்கொள்வதும் ஆகும்.

வகுப்பில் ஆசிரியர் மாணவரிடம் '' நம்முடைய பள்ளியின் பெயர் என்ன ?' என்று கேட்கிறார் என்று கொள்வோம். மாணவரும் '' நம்முடைய பள்ளியின் பெயர் பாரதியார் பள்ளி '' என்று விடையளிக்கிறார் என்று கொள்வோம். ஆசிரியருக்குப் பள்ளியின் பெயர் தெரியாதா என்ன? மாணவருக்கும் பள்ளியின் பெயர் தெரியும்! அப்படி இருந்தும் இந்த ''அறிவினாவும்'' அதற்கான விடையும் எதற்கு? வினா வாக்கியத்தின் இலக்கண அமைப்பையும் விடை வாக்கியத்திற்கான இலக்கண அமைப்பையும் , அவற்றிற்குரிய சொற்களையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதே ஆசிரியரின் நோக்கம்! மற்றபடி , இந்த வினாவுக்கும் விடைக்கும் வேறு எந்தவித மதிப்பும் கிடையாது. ஆசிரியர், மாணவர் வாக்கியங்களில் பொருண்மை (Meaning Significance) இருக்கிறது. ஆனால் .... கருத்துப்புலப்படுத்த மதிப்பு ( Communicative Value) கிடையாது ! வெறும் பொருண்மையைக் கொண்ட வாக்கியங்களே ( " Sentences ") !
சரி! மாணவர் முந்தைய நாள் பள்ளிக்கு வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆசிரியர் அப்போது அவரிடம் '' நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை? '' என்று கேட்கிறார் ... மாணவரும்'' எனக்கு காய்ச்சல் ஐயா'' என்று கூறுகிறார் என்று கொள்வோம். இங்கே ... ஆசிரியர் உண்மையில் தனக்குத் தெரியாத ஒன்றை ... தெரிய வேண்டிய ஒன்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்.... மாணவரும் அதற்குரிய பதிலைத் தருகிறார். இங்கு ஆசிரியரின் நோக்கம் .... வாக்கிய இலக்கணத்தைக் கற்றுக்கொடுப்பதில்லை... மாறாக, கருத்தைப் பறிமாறிக்கொள்வதே ஆகும்! இங்கு ஆசிரியர் - மாணவர் இருவர்களும் ஒரு உணர்வுபூர்வமான கருத்துப்புலப்படுத்தச் செயலில் ஈடுபடுகிறார்கள்... இதுவே கருத்தாடல் .... குறிப்பிட்ட நோக்கங்களை உடைய கருத்தாடல்!
இந்தக் கருத்தாடலில் மொழி வெளிப்படுத்துகிற வாக்கியங்களோடு.... ஆசிரியர், மாணவர் இருவரும் உடல்மொழிகளையும் ( முகபாவம், கை, உடம்பு அசைவுகள் போன்றவை) பயன்படுத்தலாம். எனவே மொழித்தொடர்கள் + மொழிசாராக் கூறுகள் ( Verbal and non-verbal means) இரண்டும் இந்தக் கருத்தாடலில் பங்கேற்கின்றன.
இங்கு மொழிசார்க் கூறுகளும் மொழிசாராக் கூறுகளும் ஒரு உணர்வுபூர்வமான கருத்துப்புலப்படுத்தத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன. அதன்வழியாக... ஆசிரியர், மாணவர் இருவரின் மொழிசார், மொழிசாரக் கூறுகளும் கருத்துப்புலப்படுத்த மதிப்பைப் பெறுகின்றன. இங்குப் பயன்படுத்தப்பட்ட வாக்கியங்கள் .... வெறும் பொருண்மையைக் கொண்ட (meaning significance) வாக்கியங்கள் இல்லை ... மாறாக, கருத்துப்புலப்படுத்த மதிப்பைப் ( Communicative Value) பெற்றுள்ள உரைக்கூற்று ( " Utterances") !
நடைமுறையில் ஆங்கிலம் படிக்கத் தொடங்கும் குழந்தைகள் நம்மிடம் சில வினாக்களைக் கேட்கச் சொல்லும். அதுவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட வாக்கிய இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு கேட்கச் சொல்லும்! நாமும் " What is your name ?" என்று கேட்போம். குழந்தையானது " My name is Balu" என்று சொல்லும். " How old are you ?" என்று கேட்போம். குழந்தை " I am five yers old" என்று சொல்லும். இவையெல்லாம் வாக்கிய இலக்கணத்தையும் சொற்களையும் தெரிந்துகொள்வதற்காகக் கற்றுக்கொடுக்கப்பட்ட வாக்கியங்களே ! கருத்துப்புலப்படுத்த மதிப்பைப் பெற்ற உரைக்கூற்று இல்லை!
உரைக்கூற்றை மேற்கொள்ளும் திறனைப் பெற்றபிறகு , இதுபோன்ற வாக்கியங்களைக் குழந்தையும் எதிர்பார்க்காது. நாமும் சொல்லமாட்டோம். மாறாக " (Your) name, please? " என்றும் " Balu" என்றும், " How old?" என்றும் " five " என்றும் அமையலாம். இதுவே கருத்துப்புலப்படுத்த மதிப்பு உடைய உரைக்கூற்றுகள்! இலக்கணத்தை வெளிப்படுத்தும் வாக்கியங்கள் இல்லை!
நம்முடைய தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு உள்ள பி்ரச்சினை என்ன? ஆங்கிலத்திற்கான இலக்கண நூல்களை நன்கு படித்து... , Active Vocie - Passive voice, Direct - Indirect Speech, Simple - Compound - Complex Sentence conversion போன்றவற்றையெல்லாம் கற்று, இலக்கணத்தில் 100 விழுக்காடு மதி்ப்பெண் வாங்கி, ஆனால் பின்னரும் இயற்கையாக ஆங்கிலத்தில் உரையாட முடியாமலும்.... கடிதங்கள் எழுதமுடியாமலும்... திணறுகிறார்கள்! காரணம்... அவர்களுக்குக் கருத்துப்புலப்படுத்தத்திற்கான கருத்தாடல் நோக்கில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கவில்லை! இலக்கணத்தைக் கற்று மதிப்பெண்கள் வாங்குவதற்காகச் செயற்கையான வாக்கிய அமைப்புகளும் சொற்களுமே பெரும்பான்மையாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பாடப்புத்தகங்கள்கூட கருத்தாடல் நோக்கில் அமைந்திருக்கலாம்... ஆனால் ? அடுத்துத் தொடர்கிறேன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India