வியாழன், 21 ஜூலை, 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை.(7)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (7)
--------------------------------------------------------------------------
முந்தைய உரையில் நாம் பார்த்தமாதிரி... வெறும் பொருண்மை முக்கியத்துவம் உடைய வாக்கியங்கள்
( Sentences) வேறு... நடைமுறையில் கருத்துப்புலப்படுத்த மதிப்பு உடைய உரைக்கூற்று (Utterances) வேறு! இவ்வாறு கூறும்போது, வாக்கிய இலக்கண அறிவு ( knowledge of Grammar)தேவையில்லையா என்ற ஐயம் ஏற்படலாம். நிச்சயமாக தேவை! அரிசி இல்லாமல் சோறா? அதற்காக அரிசியை அப்படியே சாப்பிடமுடியுமா? சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் அரிசியை நாம் சாப்பிடுவதற்கு.... வயிற்றுக்கு ஏற்றவகையில் பக்குவப்படுத்தி.... சமைத்துத்தானே .... சாப்பிடுகிறோம். அம்மாவுக்குத் தெரியும் அந்த ரகசியம்!

அதுபோல... மொழிபயிற்றல் ஆசிரியருக்குத் தெரிந்திருக்கவேண்டும் எவ்வாறு பொருண்மை முக்கியத்துவம் உடைய வாக்கியங்களை .... நடைமுறையில் கருத்துப்புலப்படுத்தத்திற்கு ஏற்ற ... கருத்துப்புலப்படுத்த மதிப்புடைய ... உரைக்கூற்றுகளாக அமைத்து.... மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு! இது ஒரு சிக்கலான பிரச்சினைதான்! எந்த அளவிற்கு (அளவு மீறாமல்!) .. எந்த இலக்கணத்தை ... எப்படிக் கற்றுக்கொடுத்து... அதேவேளையில் அதை எவ்வாறு உரைக்கூற்றாக உருவாக்கி மாணவர்கள் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொடுக்கும் திறனுடையவரே மொழிபயிற்றல் ஆசிரியர் ஆவார். இலக்கணத்தைப் புறக்கணிக்கக்கூடாது! புறக்கணிக்கமுடியாது! ஆனால் மொழிபயிற்றலில் இலக்கணக்கல்வி இறுதி நோக்கமல்ல! அதன்மூலம் கருத்துப்புலப்படுத்த மதிப்புடைய உரைக்கூற்றுகளை உருவாக்கப் பயிற்றுவிப்பதே மொழிபயிற்றலின் (Teaching the language) நோக்கம் ! வெறும் இலக்கணத்தைக் கற்றுக்கொடுப்பது மொழியைப்பற்றிக் ( Teaching about the language) கற்றுக்கொடுப்பதாகவே அமையும்!
சரி! உரைக்கூற்றை உருவாக்க மாணவருக்குப் பயிற்றுவித்துவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம்! ஆனால் இது போதுமா நடைமுறையில் மாணவர் முழுமையான கருத்தை வெளிப்படுத்தும் ஒரு உரையைப் பேசுவதற்கு அல்லது எழுதுவதற்கு? இல்லை. போதாது! ஒரு முழுமையான கருத்தாடலுக்கு ... தனித்தனி உரைக்கூற்றுகளை அமைக்கத் தெரிந்தால் போதாது! கருத்தாடலில் பயன்படும் பல்வேறு உரைக்கூற்றுகளை ... ஒன்றுக்கு மேற்பட்ட உரைக்கூற்றுகளை .... சரியாக முன்பின் வரிசைப்படுத்தி... தொடர்புபடுத்தி... ஒரு முழுமையான கருத்தாடலை உருவாக்கத் தெரியவேண்டும். அப்படியென்றால் என்ன? '' நேற்று நான் வந்தேன். அமெரிக்காவின் ஜனாதிபதி ஓபாமா. என் பாட்டி நேற்று ஊரிலிருந்து வந்தார்கள். எனக்கு ஆங்கிலம் தெரியும்.'' இதில் நான்கு உரைக்கூற்றுகள் அமைந்துள்ளன. ஆனால் இதை யாராவது ஒரு கருத்திணைவான கருத்தாடல் ( Coherent Discourse) என்று கூறமுடியுமா? '' ''என்னடா, சம்பந்தம் சம்பந்தமில்லாமல் ஒவ்வொன்றும் இருக்கிறதே'' என்று கூறுவோம்! ஒரு உரைக்கூற்றுக்கும் பிற உரைக்கூற்றுகளுக்கும் எந்தவிதத் பொருள்தொடர்பும் கிடையாது! எனவே இதைக் கருத்தாடலாக ஏற்றுக்கொள்ளமுடியாது!
'' நான்கு இட்லி சாப்பிட்டேன். பிருந்தா ஓட்டல் பக்கத்தில் இருக்கிறது. இட்லிக்குச் சட்னி நன்றாகயிருந்தது. காலையில் பசியாக இருந்தது.சைக்கிளில் ஓட்டலுக்குச் சென்றேன் அம்மா வீட்டில் இல்லை. நேற்று இரவு சீக்கிரம் சாப்பிட்டுவிட்டேன்'' .....
மேற்கூறியதில் ஏழு உரைக்கூற்றுகள் உள்ளன. அமைந்துள்ள உரைக்கூற்றுகள் எல்லாம் தொடர்புடைய உரைக்கூற்றுகள்தான்! ஆனாலும் நாம் இதை ஒரு கருத்திணைவுள்ள ... உரைக்கூற்றுகள் தாங்கள் அமையவேண்டிய வரிசையில் அமைந்துள்ள ஒரு கருத்தாடல் என்று ஏற்றுக்கொள்வோமா? மாட்டோம். ஏன்? எந்த உரைக்கூற்றுக்கு அடுத்து எந்த உரைக்கூற்று அமைந்தால்... கருத்துப்புலப்படுத்தம் முறையாக நடக்கும் என்பதுபற்றிய அறிவு நமக்கு உள்ளது! கீழ்க்கண்டவாறு அவற்றை மாற்றி அமைத்துப் பார்ப்போம்!
'' நேற்று இரவு சீக்கிரம் சாப்பிட்டுவிட்டேன். காலையில் பசியாக இருந்தது. அம்மா வீட்டில் இல்லை.பிருந்தா ஓட்டல் பக்கத்தில் இருக்கிறது. சைக்கிளில் ஓட்டலுக்குச் சென்றேன். நான்கு இட்லி சாப்பிட்டேன். இட்லிக்குச் சட்னி நன்றாகயிருந்தது''.
மேற்கூறியதில் ஏழு உரைக்கூற்றுகளும் தாங்கள் அமையவேண்டிய வரிசைகளில் அமைந்துள்ளன. எனவே இது ஒரு சரியான... முழுமையான ... கருத்திணைவான கருத்தாடல் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியும். எனவே மாணவர்களுக்குத் தனித்தனி உரைக்கூற்றுகளை உருவாக்கத் தெரிந்தால்மட்டும் போதாது. பல்வேறு உரைக்கூற்றுகளை ... கருத்துத் தொடர்புகள் அடிப்படையில்... முன்பின் ஒழுங்காக வைத்துப் பேசவேண்டும். இதைக் கருத்தாடலில் '' கருத்திணைவு '' (Coherence") என்று அழைப்பார்கள். சில வேளைகளில் ஒரு உரைக்கூற்றுக்கும் அடுத்த உரைக்கூற்றுக்கும் தொடர்பு இல்லாததுமாதிரி தோன்றும். ஆனால் நாம் நமது பொது அறிவில் அடிப்படையில் கருத்திணைவு உள்ள கருத்தாடலாக ஏற்றுக்கொள்வோம் . கடைக்காரரிடம் '' லைப்பாய் சோப்பு ஒன்று கொடுங்கள்' என்று கேட்கும்போது , அவர் '' ஹமாம் வாங்கிக்கொள்ளுங்கள்'' என்று கூறினால்... என்ன பொருள்? கடையில் 'லைப்பாய் சோப்பு'' இல்லை... மாற்றாக, 'ஹமாம் இருக்கிறது'' என்று கடைக்காரர் கூறுகிறார். சரிதானே? தொல்காப்பியத்திலும் இதுபற்றித் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்பது நமக்குப் பெருமை!
சில கருத்தாடல்களில், முந்தைய உரைக்கூற்றுக்கும் பிந்தைய உரைக்கூற்றுக்கும் இடையில் தொடர்பைக் காட்ட .... கருத்திணைவைக்காட்ட .. சில சொற்கள் பயன்படுத்தப்படலாம். அச்சொற்களைக் கருத்திணைவைக் காட்டப் பயன்படும் '' தொடர் இணைவு '' ( Cohesive devices) என்று கருத்தாடல் ஆய்வில் கூறுவார்கள்.
'' நேற்று நீ வரவில்லையா?'' - ஆசிரியர்
''வயிற்றுவலி சார். (அதனால் வரவில்லை)'' - மாணவர்

இங்கு '' அதனால்'' என்பது மாணவரின் இரண்டு உரைக்கூற்றுகளையும் கருத்திணைவுக் கூற்றுகளாக மாற்ற உதவும் ''தொடரிணைவுச் சொற்கள்'' ஆகும். ஆனால் இங்குகூட மாணவர் இரண்டு கூற்றுகளின் வரிசைமுறையை மாற்றினால், கருத்தாடல் சரியாக அமையாது.( மேலும் '' வயிற்றுவலி சார்'' என்று மாணவர் கூறினாலே போதும், ஆசிரியர் அதுதான் காரணம் என்று தெரிந்துகொள்வார். வினாவுக்கும் விடைக்கும் இடையில் உள்ள கருத்துத்தொடர்புதான் இங்குப் பயன்படுகிறது.)
அப்படி மாற்ற விரும்பினால், ''தொடரிணைவுச் சொல் '' மாறும். '' அதனால்'' என்பதற்குப் பதிலாக '' ஏனென்றால்'' என்ற தொடரிணைவுச் சொல் வரும்.
'' நேற்று நீ வரவில்லையா?' - ஆசிரியர்
'' வரவில்லை சார். ஏனென்றால் வயிற்றுவலி'' - மாணவர்.

எனவே உரைக்கூற்றுகளை உருவாக்கத் தெரிந்தால் மட்டும் போதாது. அவற்றைக் கருத்திணைவு உள்ள கருத்தாடலாக அமைக்கத் தெரியவேண்டும், கருத்துத் தொடர்பு அடிப்படையிலும் அமைக்கலாம். அல்லது அதற்குத் தொடரிணைவுச் சொற்களையும் பயன்படுத்தலாம்! நாளை மீண்டும் தொடருகிறேன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India