திங்கள், 1 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை (12)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (12)
------------------------------------------------------------------------------------------
சென்ற கட்டுரையில் கருத்தாடலை எழுதும்போது அது பனுவலாக மாற்றப்படுவதும், பின்னர் அந்தப் பனுவலானது படிப்பவர்களால் அல்லது பாடம் நடத்தும் ஆசிரியர்களால் கருத்தாடலாக மாற்றப்படுவதுபற்றியும் பார்த்தோம்.

பனுவலைக் கருத்தாடலாக மாற்றி... அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கு... ஒருவருக்கு மிகவும் தேவைப்படுவது.... அதற்குத் தேவையான பின்புல அறிவு ( Background knowledge) ! ஒரு உயர்நிலைப்பள்ளி அல்லது கல்லூரி மாணவருக்கு .... ஆகாயவிமானம்பற்றியோ அல்லது ஏவுகணைபற்றியோ விளக்க விரும்பும் நூலாசிரியர்... புவிஈர்ப்புவிசை என்றால் என்ன என்பதைக் கூறவேண்டியதில்லை. ஏனென்றால்... முந்தைய வகுப்புகளில் அதுபற்றி மாணவர்கள் கற்றிருப்பார்கள். ஆனால் ஐந்தாம் வகுப்புப் பள்ளி மாணவர்களுக்கு மரத்திலிருந்து ஏன் பழம் கீழே விழுகிறது என்பதைக் கற்றுக்கொடுக்கும்போது.... புவிஈர்ப்புவிசை என்றால் என்ன வெளிப்படையாக நூலாசிரியர் விளக்கவேண்டும். ஏனென்றால் அந்த நிலை மாணவர்களுக்கு முதன்முதலாக அப்போதுதான் அதுபற்றிய அறிவே கொடுக்கப்படுகிறது. இங்கு நாம் கவனமாகப் பார்க்கவேண்டியது.... ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகிற அந்த அறிவை... மீண்டும் உயர்நிலை மாணவர்களுக்கு நூலாசிரியர் நூலில் எழுதமாட்டார்... எழுதக்கூடாது. அவ்வாறு எழுதினால்... ''இதுகூடத் தெரியாமலா நாங்கள் உயர்நிலை வகுப்புக்கு வந்திருக்கிறோம் '' என்று மாணவர்கள் கூறுவார்கள். அதேவேளையில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த அறிவு இருக்கும் என்று நினைத்துக்கொண்டு... நூலாசிரியர் எழுதாமல் விட்டுவிட்டால்.... அந்த நிலை மாணவர்களுக்கு ஒன்றும் புரியாது. எனவே கருத்தாடலை மேற்கொள்ளும்போது.. எதிரில் இருப்பவர்களுக்கு என்ன தெரியும் , என்ன தெரியாது என்பதுபற்றிய ஒரு தெளிவு நமக்கு இருக்கவேண்டும்.
இந்த இடத்தில் .... நான் முன்னரே குறிப்பிட்டிருந்த கிரைஸ் என்ற சமூகமொழியியல் அறிஞர் கூறியுள்ள ''கூட்டுறவுக் கொள்கைகள்'' ( Principles of Co-operation) பற்றி விளக்கமாகக் கூறவேண்டியுள்ளது. நாம் ஒருவரிடம் கருத்தாடல் புரியும்போது.... ஒன்றை விளக்கும்போது நான்கு மிக முக்கியமான கொள்கைகளை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் அந்தக் கருத்தாடல் வெற்றிபெறும்.
முதலாவது.... பேச்சுரை அல்லது எழுத்துரையின் அளவு ( Quantity) ஆகும். நம் உரையைக் கேட்பவருக்கு அல்லது படிப்பவருக்கு... நன்கு தெரிந்திருக்கும் சில செய்திகளைக் கூறவேண்டிய தேவையில்லை. ஒரு தமிழாசிரியரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது....'' தமிழில் 12 உயிர் எழுத்துகள் உண்டு... 18 மெய் எழுத்துகள் உண்டு'' என்று கூறத் தொடங்கினால், அவர் என்ன கூறுவார்? ''இது தெரியாமலா நான் தமிழாசிரியராக இருக்கிறேன்? நீங்கள் சொல்ல வருகிற புதிய செய்திகளைச் சொல்லுங்கள்'' என்று கூறுவார். மீண்டும் நாம் அதே மாதிரிப் பேசிக்கொண்டிருந்தால்... அவர் நம்முடன் கருத்தாடலை விரும்பமாட்டார். கருத்தாடல் தடைபட்டுவிடும்.
இரண்டாவது ... நமது உரையின் நம்பகத்தன்மை ( Reliability) . '' இவர் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும். சரியாகத்தான் இருக்கும் '' என்று நம் பேச்சைக் கூறுபவர் நம்பவேண்டும். அப்போதுதான் அவர் நம்மிடம் உரையைத் தொடருவார். இல்லையென்றால் .. '' இவர் சொல்வதில் உண்மை பொதுவாக இருக்காது'' என்று மனதில் கருதி. நம்முடன் கருத்தாடலைத் தொடர விரும்பமாட்டார்.
மூன்றாவது... கூறுகிற செய்திகளுக்கான இடையிலான தொடர்புகள் ( Relevancy) .. எதைப் பற்றிப் பேசுகிறோமோ... அந்தப் பொருளுக்குத் தொடர்பில்லாத செய்திகளைக் கூறிக்கொண்டிருக்கக்கூடாது. 'அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் ?'' என்று கேட்பவர் நினைத்துவிடக்கூடாது! அவ்வாறு நினைத்துவிட்டால்... கருத்தாடல் தடைபட்டுவிடும்!
நான்காவது.... மிக மிக முக்கியமான ஒன்று! நம்முடைய கருத்தாடலைக் கேட்டுக்கொண்டிருப்பவர் அல்லது வாசித்துக்கொண்டிருப்பவர்பற்றிய நமது கண்ணோட்டம்... அவருடன் பேசுகிற முறை ( Manner) . ''எதிரில் இருப்பவருக்கு ஒன்றும் தெரியாது... சூனியம்... முட்டாள்.. நமக்குத்தான் எல்லாம் தெரியும் '' என்று நினைத்துக்கொண்டு, நாம் பேச்சைத் தொடர்ந்தால்.... ஆணவத்தோடு ( arrogance) பேச்சைத் தொடர்ந்தால்.... அவருக்கு நாம் பேசுகிற பொருள்பற்றிய போதிய அறிவு இல்லாமல் இருந்தாலும்.... நம்மிடம் அதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டுமென்று ஆவல் இருந்தாலும்... நமது ஆணவப் பேச்சினால்... அவர் நம்முடன் கருத்தாடலைத் தொடரவிரும்பமாட்டார். மாறாக, '' நான் முட்டாளாக இருந்துவிட்டுப் போகிறேன். அதற்காக நீங்கள் என்னை முட்டாளாக நினைத்துக்கொண்டு பேசுவதை நான் கேட்கத் தயாரில்லை '' என்று கருத்தாடலை முறித்துக்கொள்வார். பல இடங்களில் இதுபோன்ற சூழல்களை அனைவரும் பார்த்திருக்கலாம்.
எனவே, இருவரிடையே பேச்சுரையோ அல்லது எழுத்துரையோ ... எந்த ஒரு கருத்தாடலாக இருந்தாலும், மேற்குறிப்பிட்ட ... அளவு, நம்பக அல்லது உண்மைத் தன்மை, கருத்துத்தொடர்பு, கருத்தாடல்புரியும் முறை என்ற நான்கு பண்புகளையும் நமது கவனத்தில் கொள்ளவேண்டியது மிக மிக இன்றியமையாதது!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India