வெள்ளி, 31 மார்ச், 2023

சேட்ஜிபிடி - தேவையா?

 நண்பர் மாலன் அவர்கள் சேட்ஜிபிடி பற்றிய எனது பதிவுக்குத் தனது கருத்தை அளித்துள்ளார்கள். அதுபற்றிய எனது கருத்தை மேலும் இங்குப் பதிவிடுகிறேன்.

நண்பர் மாலன் அவர்கள்
--------------------------------------------------------------------------
//Chat GPT மிக மிக ஆரம்ப நிலையில் இருக்கிறது. தொழில்நுடபத்தின் -குறிப்பாக மின்னணு தொழில்நுட்பத்தின் - சிறப்பே அது விரைவில் மேம்படுத்திக் கொள்ளும் என்பதுதான். மனிற்ற்களை விடச் சிறப்பாகவும் விரைவாகவும் மேம்படுத்திக் கொள்ளும் என்பதுதான். தீர்ப்பெழுத இன்னும் காலமிருக்கிறது. பி.கு: இள்நிலைத் தமிழிலக்கியம் முதலாமாண்டு மாணவரிடம் பேரா.பொற்கோ பற்றிச் சிறு குறிப்பு வரைக என்றால் பெரும்பாலானோரது விடைகள் எவ்விதம் அமையும்?//
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------------
நன்றி நண்பரே. எந்தவொரு அறிவியல் வளர்ச்சியையும் ஆதரிப்பவன்தான் நான். இந்த வளர்ச்சியையெல்லாம் மனிதன்தான் செய்கிறான். எனவே இது மனிதனின் திறமை என்பதில் நாம் மகிழ்ச்சி அடையவேண்டும். அதில் ஐயமே இல்லை. மேலும் மேலும் இந்தச் செயற்கை அறிவுத்திறன் வளரவேண்டும்; வளரும்.
நான் கூற வருவது . . .
(1) ஒரு ஐயத்திற்குத் தேவையான விவரங்கள் தன்னிடம் இல்லையென்றால் அல்லது அதுபற்றி எதுவும் தெரியவில்லையென்றால், அதை வெளிப்படையாகக் கூறலாம். அதில் தவறு இல்லை. எல்லா அறிவும் ஒரு மனிதரிடம் இருக்கிறது என்று கருதுவது தவறு. எனவே ஒருவர் நம்மிடம் அதுபோன்ற ஒரு வினாவை யாரும் எழுப்பினால், ''இப்போது தெரியவில்லை; அதுபற்றிப் படித்துவிட்டு அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டுக் கூறுகிறேன்'' என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அவ்வாறு இல்லாமல், தப்புந்தவறுமாக பதில் அளித்தால், அந்த மனிதர்மீது நமக்குத் நம்பகத்தன்மை இல்லாமல்போய்விடும்.
எனவே சேட்ஜிபிடி-க்கு முதலில் கற்றுக்கொடுக்க வேண்டியது - தன்னிடம் கேட்கப்படும் வினா அல்லது ஐயத்திற்குத் தன்னிடம் போதுமான, தேவையான விவரங்கள். தரவுகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளும் திறன் ஆகும்.
(2) தன்னிடம் சேகரிக்கப்படும் விவரங்களை ( எழுத்துவழியோ பேச்சுவழியோ அல்லது பிற வழிகளிலோ கிடைப்பதை) புரிந்துகொண்டு - அதாவது அவற்றின் பொருண்மையைப் புரிந்துகொண்டு - தனது அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில் பதில் அளிக்கவேண்டும்.
இங்கு ஒரு சிக்கல் என்னவென்றால், இணையத்தில் சிலர் தவறான செய்திகளை எழுதியிருப்பார்கள். அவற்றைத் தவறு என்று எவ்வாறு புரிந்துகொள்வது? மேலும் சிலவற்றைச் சிலர் உண்மை என்று கூறுவார்கள்; சிலர் தவறு என்று கூறுவார்கள். இதில் எவ்வாறு சரியான முடிவு எடுப்பது? மனிதமூளைக்கே இது ஒரு மிகப் பெரிய சிக்கல். அவ்வாறு இருக்கும்போது, கணினிக்கு அந்தத் திறமையை எவ்வாறு அளிப்பது? இதுபற்றிய ஆராய்ச்சிகள் வளரவேண்டும்.
(3) இணையத்திலோ அல்லது அச்சிலோ ஒருவரது ஆய்வுமுடிவுகள் இருந்தால் , அவற்றிக்குக் காப்புரிமை உண்டா? என்ற வினா. ஒரு குறிப்பிட்ட அச்சிடப்பட்ட நாளிதழில் வெளிவந்த ஒரு கட்டுரையை அல்லது செய்தியை , அந்த நாளிதழிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தமுடியாது.
நான் சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்திற்காக ஒரு கணினி மென்பொருள் தயாரிக்கும் பணியைப் பெற்றேன். அதற்கு அங்கு வெளிவரும் ''தமிழ்முரசு'' நாளிதழில் வெளிவந்த கட்டுரை. செய்திகளையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. அதற்கு நான் அந்த நாளிதழ் உரிமையாளரிடமிருந்து அனுமதிபெற இரண்டு வேலைகள் செய்யவேண்டியிருந்தது - ஒன்று, ஒவ்வொரு நாள் இதழுக்கும் நான் பணம் கட்டவேண்டும்; இரண்டு, எந்த நிறுவனத்தின் பணிக்கு உரிமைபெற்றுப் பயன்படுத்துகிறேனோ , அதைத் தவிர வேறுபணிக்குப் பயன்படுத்தக்கூடாது. எனவே அதற்குரிய பணத்தைக் கட்டியதோடு, சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் ஒப்புதலையும் அந்த நாளிதழுக்கு அளித்து அனுமதி பெற்றேன்.
ஆனால் தற்போதைய சேட்ஜிபிடி மென்பொருள் தயாரிப்பாளர்கள் அவ்வாறு செய்துள்ளார்களா? அவ்வாறு தெரியவில்லை. இணையத்தில் ஏற்றப்பட்ட எல்லா விவரங்களையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் எடுத்துப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இது சரியா தவறா?
(4) மேலும் தொழில்நுட்பத்திலும் ஒரு சிக்கல். தனக்குக் கிடைக்கிற செய்திகளை, நம்மைப்போன்று படித்துப் புரிந்துகொள்ளாமல், கோடியே கோடி தரவுகளை நிகழ்தகவு புள்ளியியல் (Probabilistic Statics) , கணினியின் தானியங்குக் கற்றல் (Machine Learning) நரம்புவலைப் பின்னல் (neural network) , ஆழ்நிலைக்கற்றல் (Deep Learning) கொண்டு, முடிவுக்கு வருகிறது. அதாவது மனிதமூளையின் கற்றல்திறன், புரிதல் திறன் ஆகியவற்றைப்பற்றிய ஆராய்ச்சியின் அடிப்படையில் பெற்ற அறிவைக் கணினிக்குக் கொடுக்காமல், கோடியே கோடி தரவுகளை ஒரு சில விநாடிகளில் சேகரித்து, புள்ளியியலைப் பயன்படுத்தி, இந்தச் சொல் வடிவத்திற்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வருகிற ஒரு ''திறனை'' அளிப்பது மேஜிக் போன்ற ஒன்றாக ஆகாதா? எப்படிக் கொடுத்தால் என்ன? முடிவுதானே வேண்டும் என்று கூறுவது அறிவியல் ஆகுமா? இது மனிதரின் அறிவுத்தேடல் முயற்சிக்குத் தடையாக அமையாதா? எப்படி பணம் சம்பாதித்தால் என்ன? பணம் பணம்தானே என்று கூறலாமா?இதற்கு தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதை இங்குப் பயன்படுத்துவது கணினியை அறிவியலைக் கொச்சைப்படுத்துவதாக அமையும் எனக் கருதி, அதைக் கூறுவதைத் தவிர்க்கிறேன்.
அறிவியல் வளர்ச்சியை முற்றிலும் ஏற்றுக்கொள்பவன் நான்! அறிவியல் வளர்ச்சியால் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படும், ஆகவே அறிவியல் வளர்ச்சி கூடாது என்ற கருத்தை நான் ஏற்கமாட்டேன். ஏனென்றால் இயற்கையைத் தனக்காகச் சரியான முறையில் - இயற்கைக்குப் பாதிப்பில்லாமல் - பயன்படுத்துவதுதான் மனித உழைப்பின் நோக்கம்.
டிராக்டர் போன்ற நவீனக் கருவிகளைப் பயன்படுத்துவதால், ஆயிரக்கணக்கான கூலி விவசாயிகளுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற கருத்து தவறானது; மாறாக, அவ்வாறு விவசாயத்தில் அறிவியல் வளரும்போது, அதில் அதுவரை வேலைசெய்துகொண்டிருக்கிற விவசாயிகளுக்கு மாற்றுவேலை அளிக்கும் கடமை சமுதாயத்திற்கு உண்டு. அளிக்கவும் முடியும். வெறும் லாபநோக்கில் செயல்படும் முதலாளிகள் போன்று இல்லாமல், மக்களுக்கான ஒன்றாக சமுதாய அமைப்பு இருப்பதுதான் அதற்குத் தேவை.
இவ்வாறுதான் மேலைநாடுகளில் விவசாயத்தில் அறிவியல் தொழில்நுட்பங்கள் வளரும்போது, நகர்ப்புறங்களில் தொழில்கள் பெருகின. வேலையிழந்த கிராமப்புற விவசாயிகளுக்கு வேலையும் கிடைத்தது. நகர்ப்புறத் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தியில் ஈடுபட உழைப்பாளிகளும் கிடைத்தனர். இதுபோன்ற சிக்கல்களை ஒரு சோசலிச சமுதாயம் சரியான வழிகளில் தீர்க்கும்.
அறிவியல் வளர்ச்சிக்கும் சமுதாய அமைப்புக்கும் இடையில் தொடர்புகள் உண்டு!
எனவே சேட்ஜிபிடி, பார்ட் போன்ற கணினித்தொழில் நுட்ப வளர்ச்சியை முரட்டுத்தனமாக எதிர்க்காமல், அதை அறிவியல், சமுதாயப் பார்வையில் அணுகவேண்டும் என்பதே எனது கருத்து.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India