வெள்ளி, 24 மார்ச், 2023

தமிழ்மொழியானது தமிழ் இனத்தின் மொழிதான்! இன அடையாளம் உண்டு!

தமிழ்மொழியானது தமிழ் இனத்தின் மொழிதான்! இன அடையாளம் உண்டு!

-------------------------------------------------------------------------------------------------------------------------- 

எந்தவொரு மொழிக்கும் வர்க்க அடிப்படையோ அல்லது சாதி, மத அடிப்படையோ கிடையாது.

ஆனால் இன அடையாளம் உண்டு. ஒரு இனத்தின் உரிமையாக அந்த இனத்தின் மொழியைப் பார்ப்பதில் தவறு இல்லை! அதுதான் புறவய உண்மையும் கூட!
ஆனால் அந்த இனத்திற்குள் நிலவும் சாதிகளுக்கும் வர்க்கங்களுக்கும் அந்த மொழிமீது எந்தவொரு தனிப்பட்ட உரிமையும் கிடையாது. தமிழ் இனத்திற்கே முழு உரிமை !
ஆனால் தமிழ்மொழியைத் தமிழினமானது தன் இன அடையாளமாகமட்டும் பார்த்து, ''அருங்காட்சியகத்தில் வைத்து வணங்கக்கூடாது''. இதில் எனக்கு 100 விழுக்காடு உடன்பாடு!
மாறாக, தமிழினமானது தன் தேசத்தின் உற்பத்திமொழியாக - பொருள் உற்பத்திமொழியாக - வணிக மொழியாக - பயிற்றுமொழியாக - அறிவியலுக்கான மொழியாக வளர்த்தெடுக்க வேண்டும். இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது.
ஆனால் தமிழ்மொழியைத் தமிழினத்திலிருந்து பிரித்துப்பார்ப்பது சரியல்ல என்பது எனது கருத்து. தமிழ்மொழி பல்துறை மொழியாக - வணிகமொழியாக மாறவேண்டும் .

எந்தவொரு மனித மொழியும் பிற எந்தவொரு மொழிகளையும்விடச் சிறந்ததோ அல்லது தாழ்ந்ததோ இல்லை. ஒரு மொழிச்சமுதாயத்தின் கருத்துப்புலப்படுத்தத் தேவைகளை அந்தச் சமுதாயத்தின் மொழி நிறைவேற்றினால், அந்த மொழியே அந்த இனத்திற்குச் சிறந்த, போதுமான மொழி.
அதுபோன்று மொழித்தோற்றம்பற்றிய சில கருத்தாடல்களில் ஒரு குறிப்பிட்ட மொழியே முதல்மொழி, மற்ற எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி என்று கூறுவதும் இன்றளவும் மொழி அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்ட ஒரு கருத்து இல்லை.
ஆனால் சில குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களில் ஒரு இனம் தன்மீது பிற இனங்களின் மொழிகளைத் திணிக்க முயலும்போது, அந்தத் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தம் மொழியின் சிறப்பை அந்த இனத்தின் மக்கள் உயர்த்திப் பிடிப்பார்கள். இது தவறு இல்லை!
ஆனால் சில வேளைகளில் ''தேர்தல் அரசியலுக்காகவும்'' இதைச் சிலர் 'தொடரலாம்'! அது அவர்களது தன்னலச் செயல்பாடு என்பதில் ஐயம் இல்லை! அவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்!
தமிழ்மொழியானது தொன்மையானது, வேறு சில மொழிகள்போல் வரலாற்றில் வழக்கிழந்துபோகாமல் தொடர்கிற ஒரு மொழி, இன்றும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தத் தேவையான வளர்ச்சிகளைக் கொண்ட மொழி என்று கூறுவதில் தவறு இல்லை.
வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் தமிழ்மொழியானது பிறமொழி ஆட்சியாளர்களாலும் பிறமொழிகளாலும் பாதிப்புக்கு உட்பட்ட காரணத்தால், அவ்வப்போது தமிழனமானது தன் மொழியை உயர்த்திப்பிடிக்கத் தேவை ஏற்பட்டுவருகிறது. இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல், வரலாற்றுக்கட்டாயம் என்று கொள்வதே சரி. அதேவேளையில் தமிழ்மொழி தொடர்ந்த வளர்ச்சிக்கான செயல்களை மேற்கொள்ளாமல் , உதட்டளவில் தமிழ்மொழிபற்றிப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருப்பது தவறு இல்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India