வெள்ளி, 24 மார்ச், 2023


இறைமறுப்புக்கொள்கையும் போலி நாத்திகவாதமும்!

---------------------------------------------------------------------------------------------------------------------------------

அறிவியல் அடிப்படையில் சிந்தித்துப் பார்த்து ஒருவர் இறைமறுப்பாளராக நீடிப்பது வேறு. வெறும் பிராமணிய எதிர்ப்பு, புராண விமர்சனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் தன் இளம்வயதில் நாத்திகராக நீடிப்பது வேறு.

முதல் வகையினர் தனது உயிரின் இறுதிவரை இறைமறுப்பாளராகவே நீடிப்பார்கள்.இரண்டாவது வகையினர் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத இன்னல்களை எதிர்நோக்கும்போது, தங்களது நாத்திகத்தை விட்டுவிடுவதை நாம் பலரின் வாழ்க்கையில் பார்த்துவருகிறோம். எம் ஆர் இராதா உட்பட பலரைப் பார்த்துள்ளோம். எனவே நாஞ்சில் சம்பத் இவ்வாறு மாறியிருந்தால் அது வியப்பு இல்லை!
மார்க்சியத் தத்துவத்தை அறிந்து , தங்கள் இளம்வயதில் இறைமறுப்பாளராக இருந்து, பின்னர் ஏது ஏதோ காரணங்களைக் கற்பித்து, இறை நம்பிக்கை உடையவர்களாக மாறுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.
ஏதோ நம்மைமிறீய ஒரு ''சக்தி'' இருக்கிறது என்று பொத்தம்பொதுவாகக் கூறிக்கொண்டு, தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டு, இறை நம்பிக்கையாளராக இவர்கள் எல்லாம் மாறிவிடுவார்கள். இந்தியாவில் உழைக்கும் மக்களில் பெரும்பாலானோர் இன்று இறை நம்பிக்கையாளர்களாகவே நீடிக்கின்றனர். ஆனால் அவர்கள் முட்டாள்கள் இல்லை! அவர்களுடைய இன்னல்களுக்கு - சோதனைகளுக்கு- அவர்களுக்கு ஒரு ''கற்பனை மயக்க மருந்தாக'' அது நீடிக்கிறது. அவர்களுடைய வாழ்க்கைச் சூழல் மாறும்போதுதான், நாம் கூறும் இறை மறுப்புக்கொள்கையை ஏற்றுக்கொள்ளும் நிலை வரும். ஆனால் நாஞ்சில் சம்பத் போன்றவர்களை இந்தப் பிரிவில் சேர்க்கக்கூடாது. வெறும் வாய்ச்சவாடல் பேர்வழிகள் இவர்கள்! இவர்கள் ''முட்டாள்கள்'' இல்லை! பிழைக்கத் தெரிந்தவர்கள்!
இவர்களுடைய ''நாத்திகம்'' வெறும் பிராமணிய எதிர்ப்பிலிருந்து தோன்றிய ஒன்றே! பிராமணச் சமூகத்தாரின் அன்றைய ''நிலவுடைமை'', ''பண்பாட்டு ஆதிக்கம்'' ஆகியவற்றை எதிர்த்து, பிராமணர் அல்லாத பிற உயர்சாதியினர் ( இவர்கள் தங்களைப் பிராமண சமூகத்தினர் ''தீண்டத்தகாத '' சாதியினர் என்று கூறுவதை எதிர்ப்பார்கள்; ஆனால் இவர்களே தங்களுக்காக உழைப்பில் ஈடுபடுகிற தாழ்த்தப்பட்ட சாதியினரைத் ''தீண்டமாட்டார்கள்''; தெருவில் மிதியடி அணிந்துகொண்டு வருவதைக்கூட விரும்பமாட்டார்கள்!) முன்வைத்த போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட ''நாத்தீகம்'' அறிவியல் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட நாத்திகம் இல்லை! எனவேதான் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினர் இந்த 'நாத்திகத்தில்' வராமல் , இன்றும் தொடர்ந்து இறை நம்பிக்கையாளர்களாகவே நீடிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India