திங்கள், 6 மார்ச், 2023

சேட்ஜிபிடி (ChatGPT ) - எச்சரிக்கை தேவை!

 

சேட்ஜிபிடி (ChatGPT ) - எச்சரிக்கை தேவை!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சேட்ஜிபிடி - செயற்கை அறிவுத்திறன் கொண்ட இந்த மென்பொருள் உண்மையில் தொழில்நுட்ப உலகில் (Technology world) ஒரு பெரும் புரட்சி அல்லது வளர்ச்சி என்பதை யாராலும் மறுக்கமுடியாது! மனிதனால் இதுபோன்ற மென்பொருளையும் உருவாக்கமுடியும் என்பதற்கு இது ஒரு பெரிய சாட்சி! ஐயமே கிடையாது!

ஆனால் . . . இந்த மென்பொருளே தன்னைப்பற்றி ஒரு சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளது.---------------------------------------------------------------------------------------------------------------------

[ ''கற்றலுக்கும் ஆராய்ச்சிக்கும் இதுபோன்ற மென்பொருள்கள் உதவினாலும், கல்வித்துறையில் இதை முழுமையாக சார்ந்து இருக்கக்கூடாது.

இதுபோன்ற மென்பொருள்கள் மிக மிகப் பெரிய தரவுத் தளங்களின்மீது பயிற்றுவிக்கப்பட்டுள்ளது; அதனிடம் முன்வைக்கப்படுகிற வினா அல்லது ஐயத் தொடர்களின் பொருளை அல்லது பொருண்மையைத் தெரிந்துகொண்டு அல்லது புரிந்துகொண்டு தனது பதில்களைத் தருவது இல்லை;

மாறாக, முன்வைக்கப்படுகிற வினா அல்லது ஐயத் தொடரின் முறைசார் அமைப்புவகைப்பாட்டை (Structural patterns) அடிப்படையாகக்கொண்டு, குறிப்பிட்ட அமைப்பு வகைப்பாட்டுக்கு இணையான தொடர்களைத் தேடிக் கண்டறிந்து, அதனடிப்படையில் அந்தத் தொடர்களின் அருகில் இருக்கிற தொடர்களைக் கொண்டு பதில் அளிக்கிறது. எனவே. அதனால் தரப்படுகிற பதில்கள் மிகச் சரியானதாகவோ அல்லது முன்வைக்கப்பட்ட தொடர்களின் பொருண்மைச் சூழலுக்குப் பொருத்தமானதாகவோ இருக்காது".]

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எனவே,மனிதர்களைப்போல இந்த மென்பொருள் செயல்படவில்லை. 

1) மனித மூளைச் செயல்பாடு : நம்மிடம் கேட்கப்படுகிற வினா அல்லது ஐயத்தைப் புரிந்துகொள்ள, நாம் கேட்கிற அல்லது வாசிக்கிற மொழித்தொடர்களை நமது மொழி அறிவின் துணைகொண்டு புரிந்துகொள்கிறோம் ( meaning understanding) - Decoding process.

மென்பொருள் செயல்பாடு : இந்த மென்பொருள் அவ்வாறு மொழித்தொடர்களின் பொருண்மை அல்லது பொருளைப் புரிந்துகொள்வதில்லை; மாறாக, குறிப்பிட்ட மொழித்தொடரின் முறைசார் அமைப்பை ( formal sentence structure or pattern) , தன்னிடம் திரட்டி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மொழித்தொடர் தரவுகளில் ( huge corpus ) தேடிக் கண்டறிந்து, கண்டறியப்பட்ட தொடர்களே அதனிடம் முன்வைக்கப்பட்ட தொடர் - அனுமானப் புள்ளியியல் (Probabilistic Statistics) என்று முடிவுக்கு வருகிறது.

2) மனிதமூளைச் செயல்பாடு: நம்மிடம் கேட்கப்பட்ட ஐயத்தைப் புரிந்துகொண்டு, அதற்கான விளக்கங்கள் அல்லது விடைகளை நமது மூளையின் அறிவுத்திறன் புலத்தில் (cognition / knowledge domain) சேகரித்து வைத்துள்ள அறிவுத் தரவில் இருந்து பெறுகிறோம்.

மென்பொருள் செயல்பாடு: இந்த மென்பொருள் அவ்வாறு செயல்படுவதில்லை; அதற்கான திறன் அதற்குக் கிடையாது. மாறாக, தனக்கு முன்வைக்கப்பட்ட மொழித்தொடர் அமைப்புக்கு இணையான தொடர்கள் (similar or parallel patterns) காணப்படுகிற தொடர்களையே பதிலாகக் கொள்கிறது.

3) மனிதமூளைச் செயல்பாடு: நாம் நமது பதிலைத் தயார்செய்தபிறகு, அதை வெளிப்படுத்துவதற்கான மொழித்தொடர்களை நமது மொழியறிவு (Linguistic knowledge) கொண்டு உருவாக்குகிறோம். அதாவது பதிலை மொழியில் உள்ளீடு செய்கிறோம் (encoding).

 மென்பொருள் செயல்பாடு: மாறாக, அதற்குக் கொடுக்கப்பட்ட வினாத் தொடர்களுக்கு அருகில் உள்ள மொழித்தொடர்களைப் பதிலாகக்கொண்டு, அத்தொடர்களை நமக்குத் தெரிவிக்கிறது. நமது மூளைசெய்கிற பணிபோல - பதிலுக்கான கருத்தை உருவாக்கி, அதை மொழித்தொடர்களில் உள்ளீடு செய்வது போல - மென்பொருள் செய்வதில்லை.

ஆனால் அது திரட்டிவைத்துள்ள கோடியே கோடி மொழித்தொடர்களிலிருந்து , அமைப்பு ஒப்புமை (pattern similarity) அடிப்படையில், அருகாமைத் தொடர்களைத் தேர்ந்தடுத்து நமக்கு அளிக்கிறது. அதாவது கருத்து -> மொழித்தொடர் என்று அது செயல்படுவதில்லை.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது - இந்த மென்பொருளானது மொழித்தொடர்களிலிருந்து அவற்றில் பொதிந்துள்ள பொருளை அல்லது பொருண்மையை அல்லது கருத்தைப் புரிந்துகொள்வதில்லை. அதுபோல பதில்களையும் கருத்தாக முதலில் உருவாக்கி, பின்னர் அதை மொழித்தொடர்களில் உள்ளீடு செய்து நமக்குத் தருவதில்லை.

 ஆனாலும் இந்த மென்பொருளின் திறமை வியக்கத்தக்கது. இயற்கைமொழி ஆய்வு என்பதை அகரமுதலி, இலக்கணம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளாமல், ஒப்புமை அமைப்பைப் புள்ளியியல் அடிப்படையில் (probability statistics) மேற்கொள்கிறது கோடியே கோடி தரவுகளும் கணினியின் செயல்திறனும் இதற்கு உதவுகிறது.

ஆகவே, மனிதமூளையின் அறிவுத்திறன், மொழித்திறன் ஆகியவற்றைக் கணினிக்கு அளித்துவிட்டோம் என்று கூறுவதைவிட . . . தரவுகள், புள்ளியியல் அடிப்படையில் கணினியை நாம் மேற்கொள்கிற கருத்துப்புலப்படுத்தச் செயல்பாடுகளைச் செய்யவைக்கமுடியும் என்று கூறலாம்.

எனவே இதைத் தொழில்நுட்ப வளர்ச்சி (Technology) என்று கூறலாம்; அறிவியல் வளர்ச்சி (Science) என்று கூறமுடியாது எனக் கருதுகிறேன்.

ஆனால் வியக்கத்தக்க தொழில்நுட்ப வளர்ச்சி. இதில் ஐயமே இல்லை.

ஒரு சிக்கல் இதில். மனிதர்கள் மூளையின் துணைகொண்டு அறிவியலை வளர்ப்பதற்குப் பதிலாக, இந்தத் தொழில்நுட்பத்தைமட்டும் சார்ந்து செயல்படலாம் அல்லது வாழலாம் என்ற ஒரு தவறான கருத்துக்குச் சென்றுவிடக்கூடாது.

கணினியின் வளர்ச்சியும் அனுமானப் புள்ளியியலும் மிகப் பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்! அது வேறு.

ஆனால் உலக அறிவு, மொழி அறிவு ஆகியவற்றைக் கொண்டுள்ள மனித மூளையின் திறனை இந்தக் கணினி பெற்றுவிட்டது என்று கூறமுடியுமா?

 அதுபோல, மருத்துவத்தில் ஸ்டீராய்டு மருந்துகள் (steroids) நமது நோய்களுக்கு உடனடித் தீர்வு தந்தாலும், நீண்டகால அடிப்படையில் அது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புத்திறனை மழுங்கடித்துவிடும்; எதிர்விளைவுகளைத் தரும் என்று கூறப்படுகிறது. எனவே மருத்துவர்கள் இதை மிக எச்சரிக்கையாகக் கையாளுவார்கள். அதுபோலத் தான் இந்தச் செயற்கை அறிவுத்திறன் மென்பொருளையும் கையாளுவதில் கவனம் . . . எச்சரிக்கை வேண்டும் என நான் கருதுகிறேன். இதைத்தான் மொழியியல் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி கூறுகிறார். ஒருபடி மேலே சென்று (high-tech plagiarism) ''உயர்தொழில்நுட்பக் கருத்துத் திருட்டு'' என்றே கூறுகிறார்.

மேலும் மனித மொழிகளின் அறிவைக் கணினிக்குக் கொடுக்க முயல்கிற கணினிமொழியியல் (Computational Linguistics) அடிப்படை வேறு. கணினிமொழியியலுக்குள் சில செயல்பாடுகளுக்குப் புள்ளியியலைக் கொண்டுவருவது வேறு; மாறாக, கணினிமொழியியலே தேவையில்லை - கணினியின் செயல்திறன், கோடிக்கணக்கான தரவுகள் , அனுமானப் புள்ளியல் என்ற மூன்றுமே போதும் என்று கூறுவது அறிவியல் ஆகாது.

நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------

தன்னைப்பற்றி சேட்ஜிபிடி கூறியதைக் கீழே அப்படியே தருகிறேன். பார்க்கவும்.
"As an AI language model, I don't have personal opinions or beliefs, but I can provide some insights on the topic.
ChatGPT and other AI chatbots can be helpful tools for learning and research, but they shouldn't be relied upon solely for academic work. They are trained on large datasets and can generate responses based on statistical patterns rather than understanding the meaning of the content. Therefore, their outputs may not always be accurate or relevant to the specific context.
Regarding Chomsky's comment, it's true that the education system needs to adapt to the changing needs of students and provide engaging and challenging learning experiences. However, the popularity of ChatGPT does not necessarily indicate the failure of the education system. It could also be attributed to the advancement of technology and the convenience it provides.
In summary, while AI chatbots like ChatGPT can be useful tools for academic work, they should not be used as a substitute for critical thinking and independent learning. The education system also needs to evolve to meet the needs of students and foster a love of learning."

எனது நோக்கம் இந்த மென்பொருளைச் சிறுமைப்படுத்துவது இல்லை. இந்த மென்பொருளை மிகவும் வியப்புடன் பார்க்கிறேன் ... பயனுள்ள மென்பொருள். மிகப் பெரிய தொழில்நுட்பப் புரட்சி மனிதகுல வரலாற்றில்! இதில் ஐயமே இல்லை! அதேநேரத்தில் இந்தத் தொழில்நுட்பத்தினால் இயற்கைமொழி ஆய்வில் - இயற்கை மொழி அறிவியலில் - மாற்றங்கள், வளர்ச்சிகள் உண்டா என்பதை ஆய்ந்து பார்க்கிறேன். அதுபோன்று, மனிதமூளைபோன்று அறிவை எவ்வாறு இந்த மென்பொருள் தேக்கிவைக்கிறது, பயன்படுத்துகிறது என்பதையும் பார்க்கிறேன். அவ்வளவுதான்! Turing Test, Eliza program போன்றவையா இது என்று ஆய்ந்து பார்க்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------
இதில் ஐயம் இல்லை நண்பரே. ஆனால் கணினியின் பங்கு உறுதியாக உண்டு. உலகெங்கும் உள்ள தரவுகளை - அத்தனை மொழிகளிலும் உள்ள தரவுகளை - தேடித் தொகுக்கிறது; அவற்றை முறைப்படுத்தித் தரவுதளமாக மாற்றி அமைக்கிறது; அவற்றையெல்லாம் அனுமானப் புள்ளியியல்கொண்டு ஆய்ந்து, மிகவும் நெருங்கிய விடைகளைக் கண்டறிகிறது. இவையெல்லாம் கணினியின் திறமைதான்! ஆனால் இந்தத் திறமைகளையெல்லாம் கணினிக்குக் கொடுத்தது மனிதன்தானே! தற்போதை கணினியியலின் வளர்ச்சிக் ( வன்பொருள், மென்பொருள் இரண்டும்) காலகட்டத்தில்தான் இதை இப்போது நாம் செய்யமுடிகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India