திங்கள், 28 ஆகஸ்ட், 2023

அறிவியலாளர்கள் அனைவரும் பகுத்தறிவாதிகளா?

அறிவியலாளர்கள் அனைவரும் பகுத்தறிவாதிகளா?

-----------------------------------------------------------------------------------------------------------------------

அறிவியலாளர்கள் அனைவரும் பகுத்தறிவாதிகள் இல்லை. அவர்களது குறிப்பிட்ட முறைசார் துறையில் அவர்கள் வல்லுநர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களது ஒட்டுமொத்த உலகப் பார்வை அல்லது தத்துவக்கோட்பாடு அறிவியல் சாராத, நம்பிக்கை சார்ந்த ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் இப்படிப்பட்டவர்கள் ஒன்றில் தெளிவாக இருப்பார்கள். தங்களுடைய துறையின் ஆராய்ச்சியில் . . . அறிவியல் கண்டுபிடிப்புக்களில் அறிவியல் முறைகளைப் பின்பற்றுவதில் தெளிவாக இருப்பார்கள். ஆய்வுக்கூடத்திற்குள் நுழைவதற்குப்பின்னும் அதை விட்டு வெளிவந்தபின்னரும் தங்களது உலகப் பார்வைபடி செயல்படுவார்கள். அவர்களது சமுதாயப்பார்வையும்கூட அவர்களது வர்க்கம்சார்ந்த ஒன்றாகவே இருக்கும்.
அவர்கள் அவர்களுடைய குறிப்பிட்ட துறைகளில் வல்லுநர்களாக இருக்கலாம்! அதில் அவர்கள் கருத்துக்கள் தெரிவிக்கலாம்! ஆனால் மொழிதொடர்பான கருத்துக்களில் அவர் கருத்துக்கள் தெரிவிக்கவேண்டுமென்றால், மொழியியல் என்ற அறிவியல்துறைபற்றித் தெரிந்திருக்கவேண்டும்.
அடுத்து, தங்கள் அறிவியல் சாதனைகளைத் தங்களது நம்பிக்கையைபெற்ற கடவுள்களுக்கும் மடாதிபதிகளுக்கும் ''அர்ப்பணிப்பது !''.
பகுத்தறிவாதிகள் இந்த அறிவியலாளர்களின் அறிவியல் சாதனைகளைப் பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். அதைத்தாண்டி அவர்களை ஒட்டுமொத்தமாக ஆஹா ஓஹோ என்று பாராட்டுவதுகூடாது.
மக்களது வரிப்பணத்தால்தான் அவர்கள் தங்களது அறிவியல்துறையில் கண்டுபிடிப்புக்களை மேற்கொள்கிறார்கள். ஆனால் அதில் வெற்றி கண்டவுடன் அந்த வெற்றியை அவர்கள் ஏற்றுக்கொண்ட கடவுள்களுக்கும் மட அதிபர்களுக்கும் ''காணிக்கையாக்குவார்கள்''. அதன்மூலம் மக்களிடம் நிலவும் அறிவியல் அற்ற பார்வையை மேலும் மேலும் ''வலுப்படுத்துகிறார்கள்''!
இதைப்பற்றி யாராவது பேசினால் உடனே ''இது தனிநபர் உரிமை'' என்று கூறுவார்கள். அவர்களது ''சொந்த வாழ்க்கை'' ''குடும்பத்தினர் நலம்'' ஆகியவற்றில் ஏதும் அவர்கள் ''எதிர்பார்த்த ஒன்று'' நிகழ்ந்தால், அதை அவர்கள் அவர்கள் ''ஏற்றுக்கொண்ட'' கடவுள்களுக்கும் மடாதிபதிகளுக்கும் ''அர்ப்பணிக்கலாம்!''. ஆனால் இதுபோன்ற நாட்டின் அறிவியல் வெற்றிகளுக்கு அவர்கள் செய்வது எந்தவகையிலும் சரியில்லைதான்!
இது அரசியலுக்கும் பொருந்தும். அமெரிக்காவில் ''வம்சாவளி இந்தியர்'' ஒருவர் அமெரிக்க அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டால் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களை நாம்'' இந்திய வம்சாவளி'' என்ற அடிப்படையில் ''பாராட்டுவது'' நமது வழக்கமாக உள்ளது. இன்றைய இங்கிலாந்து முதன்மை அமைச்சரையும் (''பிரதம மந்திரி'') அவ்வாறே கொண்டாடுகிறோம். ஆனால் அவர்கள் எல்லோரும் உலக மக்களை ஒடுக்குகிற ஏகாதிபத்தியவாதிகளின் பிரதிநிதிகளே! ஒடுக்கப்பட்ட காலனிநாடுகளுக்காகவோ உழைக்கும் வர்க்கங்களின் நலன்களுக்காகவோ நிற்பவர்கள் இல்லை. மாறாக, அவர்களை ஒடுக்குகிற வர்க்கங்களின் பிரநிதிகளே!
இதில் ஒன்றைத் தெளிவாக நாம் பார்க்கலாம் . . . அவர்கள் நம்மை ஏமாற்றவில்லை! மாறாக, நாம்தான் ஏமாந்துநிற்கிறோம்!
---------------------------------------------------------------------
புறவயமான உண்மைகளே அறிவியலில் அடங்கும். அவ்வாறு இல்லாமல், நமது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிற கருத்துக்கள் அறிவியல் ஆகாது. அது ஒருவரின் ''தனிப்பட்ட நம்பிக்கை''! ஆனால் இந்த ''தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும்'' அவை தோன்றிய சமுதாயச் சூழலே அடிப்படையாக இருக்கும். ஏதோ ஒரு சமுதாயத் தேவையையொட்டி . . . . ''யாருடைய'' நலன்களேயோ ''நியாயப்படுத்துவதற்காகவோ'' அல்லது ''பாதுகாக்கவோ'' இதுபோன்ற ''அகவயக் கருத்துக்கள்'' ''உருவாக்கப்பட்டு'' நடமாட விடப்படுகின்றன. அவ்வளவுதான்! அவை ''அறிவியல்'' அல்லது ''தத்துவம்'' என்ற அடைமொழியோடு இணைத்துத் திணிக்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India