சனி, 19 ஆகஸ்ட், 2023

தமிழ் எழுத்துக்களோடு கிரந்த எழுத்துக்களையும் இணைத்துக்கொள்ளலாமா ?

 தமிழ் எழுத்துக்களோடு கிரந்த எழுத்துக்களையும் இணைத்துக்கொள்ளலாமா என்பது பற்றிய ஒரு கருத்தாடலில் நண்பர் திரு. செல்லப்பா அவர்களின் கருத்தும் அதையொட்டி எனது கருத்துக்களும் !

-------------------------------------------------------------------------------------------------------------

ந. தெய்வ சுந்தரம்

-------------------------------------

தமிழ் எழுத்துக்களின் அடிப்படைபற்றி முகநூலில் நான் பலதடவை எழுதியுள்ளேன். தெளிவான அறிவியல் அடிப்படை தமிழ் எழுத்துக்களுக்கு இருக்கிறது. பேச்சொலி, மாற்றொலி, ஒலியன், எழுத்து போன்ற மொழியியல் அடிப்படையிலான கருத்துக்களின் அடிப்படையில் தமிழ் எழுத்து அமைப்பை ஆராய்ந்தால் இது தெளிவாகும்.

https://nadeivasundaram.blogspot.com/.../blog-post_8612.html

நண்பர் திரு. செல்லப்பா யக்ஞசுவாமி

-----------------------------------------

ஐயா, தங்கள் வலைப்பதிவில் படித்தேன். சிறப்பாக உள்ளது. ஆனால் அதன் அடிநாதம், "தமிழில் எல்லாம் இருக்கிறது" என்ற பிடிவாதமே அன்றி வேறில்லை. தமிழில் என்ன இல்லை, ஏன் இல்லை என்ற சிந்தனையில் தாங்கள் இறங்கவில்லை என்பதைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன். Bhagat singh என்பதை ஒலிக்கேற்றவாறு எழுதுவதற்கு பிற திராவிட மொழிகளில் உள்ள எழுத்து அமைப்பு தமிழில் எப்போது வரும்? இதற்குத் தேவையான புதிய எழுத்துக்களை உருவாக்கும் அறிவியல் சிந்தனை

ஏன் இல்லை? இதனால்தானே நமது தமிழ் மீடியம் மாணவர்கள் பல நேர்காணல்களில் அறிவியல் சொற்கள், மற்றும் பிற மாநில, பிற நாட்டு பெயர்ச்சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியாமல் கேலிக்கு ஆளாகிறார்கள்? இது கணினி யுகம். ஒரு புதிய எழுத்தை உருவாக்குவதும் அதை ஒருங்கு குறிக்குள் அடக்குவதும் அல்லது இணைப்பதும் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்ய முடியும். இதை முன்னெடுக்க வேண்டிய பணியைச் செய்யாமல் 'நமக்குள்ளே பழங்கதைகள் ' பேசுவது நம் சந்ததியினருக்கு நாம் செய்யும் அநீதி அல்லவா?

ந. தெய்வ சுந்தரம்

------------------------------------------

நன்றி ஐயா. ஒரு மொழியில் இல்லாததை இருப்பதாகக் கருதிக்கொண்டு, மேற்கொண்டு வளர்ச்சியே தேவை இல்லை என்று நான் எப்போதும் கூறமாட்டேன். 

அதேவேளையில் ''இருக்கின்ற ஒன்று '' சரியாக இருந்தால், அதை ''வளர்ச்சி'' என்ற பெயரில் புறக்கணிப்பதையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். 

சமுதாயத் தேவைகள் மாற மாற உறுதியாக அதன் மொழியும் மாறத்தான் செய்யும்; மாறவும் வேண்டும். தமிழ்மொழியும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அவ்வாறு மாறி வந்ததால்தான் தமிழ்மொழியின் தொடர்ச்சி நீடிக்கிறது.

பிறமொழிச் சொற்களை உச்சரிக்கவேண்டும் என்பதற்காகத் தமிழில் நிலவுகிற எழுத்துக்களைக் ''குறைக்கவேண்டும்'' அல்லது ''கூட்டவேண்டும்'' என்று கூறுவது சரி இல்லை! 

புவிஈர்ப்பு விசை இருப்பதால், விமானங்களையும் ஏவுகணைகளையும் விண்ணில் செலுத்தக் கடும் முயற்சி எடுக்கவேண்டியது உள்ளது என்று கூறி, புவீயீர்ப்பு விசை தேவை இல்லை என்று கூறமுடியமா? அல்லது இல்லாமல் ஆக்கமுடியுமா? அதேநேரத்தில் புவியீர்ப்பு விசையையும் மீறி, நம்மால் ஒரு பொருளை எவ்வாறு விண்ணில் செலுத்தலாம் என்றுதான் யோசிக்கவேண்டும் என்பது எனது கருத்து. (இந்த எடுத்துக்காட்டு இங்குப் பொருந்துமா என்பது எனக்குத் தெரியவில்லை! சுட்டிக்காட்டி, வேறு எடுத்துக்காட்டுக்கள் இருந்தால் நண்பர்கள் அவற்றைப் பதிவிடலாம்! )

அதுபோன்றதுதான் ஒரு மொழியின் இலக்கணம் . . . எழுத்துக்கள் உட்பட! தமிழ்மொழியின் இன்றைய அமைப்பு . . . இன்றைய தமிழ்ச் சமுதாயத் தேவைகளுக்குப் பயன்படாத வகையில் இருந்தால் . . . அல்லது போதுமானதாக இல்லாமல் இருந்தால் . . . அதை மாற்றலாம். 

ஆனால் பிற மொழிகளின் சொற்களைத் தமிழில் உச்சரிப்பதற்காக  அல்லது எழுதுவதற்காகத் தமிழ் எழுத்துக்களில் பிறமொழி எழுத்துக்களை இணைத்துக்கொள்ளலாம் என்பதையே நான் எதிர்க்கிறேன்.

ஒரு மொழி தனது சமுதாயத்தின் தேவைக்கேற்ப வரலாற்றில் மாறும்! மாறிக்கொண்டும் இருக்கிறது. அத்தோடு தேவைக்கேற்ப நாமும் திட்டமிட்டு மொழியை மாற்றலாம் . . . வளர்க்கலாம்! வளர்க்கவேண்டும்! ஆனால் மொழியின் போதாமை, அதற்கான மாற்றம் ஆகியவைபற்றித் தெளிவான ஆய்வுகளை மேற்கொண்டுதான் அந்த முயற்சியில் ஈடுபடவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் . . . பிற மொழிகளுக்காக, தமிழின் எழுத்துக்களைக் கூட்டவோ குறைக்கவோ இன்று தேவை இல்லை! கிரந்த எழுத்துக்களைத் தமிழில் இணைக்கக்கூடாது என்பதே எனது கருத்து.

---------------------------------------------------------------------------

ஆங்கிலத்தில் /k/ /g/ இரண்டும் தனித் தனி ஒலியன்கள் (Phonemes) . ஆனால் தமிழில் அவை ஒரு ஒலியனின் மாற்றொலிகளே ( Allophones) . எனவே cold, gold என்பவற்றை அப்படியே தமிழில் எழுதமுடியாது (எழுதத் தேவையும் இல்லை!) ''கோல்ட்'' என்றுதான் எழுதுவோம். ஆனால் மொழிச் சூழலின் அடிப்படையில் தமிழ் மக்கள் இரண்டையும் வேறுபடுத்தி உச்சரிக்கிறார்கள். அதேவேளையில் கடல், கப்பல் என்ற சொல்லில் வருகிற 'க' வை "g" என்று தமிழர்கள் உச்சரிக்கமாட்டார்கள். ஏனென்றால் தமிழ்ச் சொற்களில் இந்த g என்பது சொல் நடுவில் மெல்லினத்திற்கு அடுத்துமட்டுமே வரும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, ஒரு சொல் தமிழா, ஆங்கிலமா என்ற அறிவே இங்கு முக்கியம்.

அப்படியில்லாமல் அந்த ஆங்கில உச்சரிப்பு மாறாமல் எழுதவேண்டுமென்றால் , g, d என்ற இரண்டு பேச்சொலிகள் அல்லது மாற்றொலிகளைத் தமிழில் அப்படியே எழுதவேண்டும். அது இயலாது. . தமிழில் ல், ள், ழ் என்றும் ந். ன், ண் என்றும் ர், ற் என்றும் இருக்கிற ஒலியன்களை ஆங்கில எழுத்தில் எவ்வாறு எழுதுகிறார்கள்? தனி எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறார்களா? இல்லையே! மாறாக , l , L , zh என்று ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தியே எழுதுகிறார்கள். புது எழுத்துக்களை உருவாக்கவில்லையே!

எனவே ஆங்கிலத்தையோ அல்லது பிறமொழிகளையோ கலந்து பேசும்போதோ அல்லது எழுதும்போதோ குறிப்பிட்ட சொற்கள் தமிழ்ச்சொற்களா அல்லது பிறமொழிச்சொற்களா என்பதை அறிந்து இருக்கவேண்டும். அதனடிப்படையில் தமிழ் மக்கள் உச்சரிக்கவேண்டும்.

ஆங்கிலத்தில் c என்ற எழுத்துக்கு இரண்டு உச்சரிப்புக்கள் உள்ளன. city என்பதில் 'ச்' என்றும் cat என்பதில் 'க்' என்றும் உச்சரிக்கிறார்கள். அதற்குக் காரணம் ஆங்கிலத்தில் i என்ற முன்னுயிருக்குமுன்னால் c வரும்போது முன் மெய்யாக மாறுகிறது; a என்ற பின்னுயிருக்கு முன்னால் வரும்போது c என்பது 'க்' என்று பின் மெய்யாக மாறுகிறது. இந்த அறிவை ஆங்கிலேயர்கள் மனதில் உள்ளார்ந்த விதிகளாக இருப்பதால், அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. மாறாக, அவர்கள் எல்லா இடத்திலும் c என்பதை ச் என்று மட்டுமோ அல்லது க் என்றுமட்டுமோ உச்சரிக்கவில்லையே. எனவே எழுத்துக்கள், உச்சரிப்புக்கள் என்பவை குறிப்பிட்ட மொழிசார்ந்த மரபு. பிற மொழிகளின் மரபை ஒருவர் தன் தாய்மொழியியலும் - தாய்மொழி மரபுக்கு எதிராக - பயன்படுத்தவேண்டும், அதற்காகப் புது எழுத்துக்களை உருவாக்கவேண்டும் என்று கூறுவது சரி இல்லை.

-------------------------------------------------------------------------

 ஒரு மொழிக்குள்ளேயே இதுபோன்ற சிக்கல் இருக்கிறதே. ஆங்கில மொழியில் city , cylinder - , cat, cot என்பவற்றில் c எழுத்து அனைத்திலும் ஒன்றுபோல் இருந்தபோதிலும் உச்சரிப்பு மாறுகிறது! ஆனால் அதற்கு ஒரு சூழல் விதி இருக்கிறது. அது ஆங்கிலேயர்களின் உள்ளார்ந்த மொழி அறிவாக இருப்பதால் சிக்கல் இல்லை. அவர்கள் உச்சரிப்பு வேறுபாட்டிற்காகத் தனித் தனி எழுத்துக்களை இவ்விடத்தில் பயன்படுத்தவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

--------------------------------------------------------------------------------

இந்தியில் ''தெய்வ சுந்தரம்'' என்ற பெயரை இந்தி எழுத்துக்கள்கொண்டு அப்படியே எழுதமுடியாது. ''தைவ சுந்தரம் '' என்றுதான் எழுதமுடியும். ஏன் இந்தியில் எகரத்திற்கான எழுத்தைச் சேர்க்கவில்லை என்று கேட்கமுடியுமா? கேட்டால் ''இது இந்தி மரபு'' என்றுதான் கூறுவார்கள்.

------------------------------------------------------------------------------

பேச்சொலி (Phones) , மாற்றொலி (Allophone) , ஒலியன் (Phoneme) , கட்டிலாப் பேச்சொலி (Free Variation) , வரிவடிவம் - எழுத்து (Grapheme), மொழியசை ( Linguistic Syllable) ஆகியவற்றைப்பற்றி ஒரு மொழி பேசுவோர் அனைவருக்கும் படித்துத்தான் தெரியவேண்டும் என்பது தேவை இல்லை. அது உள்ளார்ந்த அறிவு. ஆனால் இதுபற்றி ஆய்வு செய்பவர்களுக்கு உறுதியாக இதுபற்றிய தெளிவு தேவை. இலக்கணம், மொழியியல் ஆகியவற்றின் உதவியோடு இவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

--------------------------------------------------------------------------


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India