திங்கள், 21 ஆகஸ்ட், 2023

தமிழில் இலக்கணச் சொற்கள் தனித்து வரலாமா? கூடாது!

தமிழில் இலக்கணச் சொற்கள் தனித்து வரலாமா? கூடாது!

---------------------------------------------------------------------------------------------------------------------- 

தமிழில் (1) விகுதிகள் (suffixes) , (2) பின்னொட்டுக்கள் (post-positions) , (3) வினையொட்டுக்கள் (Verbal Particles) , (4) மிதவை ஒட்டுக்கள் (Clitics) , (5) சாரியை போன்ற நிரப்பிகள் ( Fillers) என்று ஐந்துவகையான இலக்கணச் சொற்கள் இருப்பது தங்களுக்கத் தெரிந்ததே. இவற்றில் பின்னொட்டுக்களும் வினையொட்டுக்களும் வரலாற்றில் தனித்து இயங்கிய அகராதிச் சொற்களே (Free morphemes) . பின்னர் அவை அகராதிப்பொருள்காட்டும் சொற்களாக மட்டுமல்லாமல். இலக்கணக்கூறுகளை வெளிப்படுத்தும் இலக்கணச் சொற்களாகவும் பயன்படத்தொடங்கின. ஆனால் அவ்வாறு புதிய பயன்பாட்டை அவை பெறும்போது,( தமிழில் இலக்கணச் சொற்கள் தனித்து நிற்காமல், தாங்கள் தங்களது இலக்கணப் பொருண்மையை ஏற்றுகிற அகராதிச் சொற்களோடு இணைந்துதான் வரும் என்பதால்) தங்களது இலக்கணப் பொருண்மையை ஏற்கிற அகராதிச்சொற்களோடு இணைந்துதான் வரவேண்டும் ( Bound morphemes) . ஆனால் அவை தனித்து இயங்கும் அகராதிச் சொற்களாகவும் தொடர்ந்து நிற்பதால், சிலர் இந்த இலக்கணச் சொற்களைப் பிரித்தே எழுதுகிறார்கள். இது தவறு. ஆங்கிலத்தில் இலக்கணச் சொற்கள் விகுதிகளாகவும் நீடிக்கின்றன ( பன்மை விகுதி - s, காலவிகுதிகள் -ed, -en ) ; தனிச் சொற்களாகவும் நீடிக்கின்றன ( do, does, did, can , could, will, would .... ) .இது ஆங்கில மொழி இலக்கண மரபு. ஆனால் தமிழ் இலக்கணமரபுப்படி, இலக்கணப்பொருள் தனித்து நிற்கும் சொற்கள் வடிவில் இருந்தாலும் தனித்து நிற்காது.

அடுத்து, தமிழைப்பொறுத்தவரையில் , அது இலக்கண விகுதிகளோ அல்லது இலக்கணச் சொற்களோ, முதன்மைச் சொற்களுக்குப்பின்னால்தான் வரும். அதனால் தாங்கள் கூறுகிறபடி, தமிழ் ஒரு விகுதி (suffix, ) மற்றும் பின்னொட்டு (postposition, Verbal Particles) மொழி. மொழியியலில் விகுதி என்பது முழுச்சொல் வடிவத்தில் இல்லாமல், கட்டுண்ட உருபன்களாக இருப்பவை; முன்குறிப்பிட்ட (1), (4) (5) மூன்றுமே விகுதிகளாக நீடிக்கின்றன; அதாவது தனிச்சொல் வடிவமாக வரும் திறன் கிடையாது. (2) (3) இரண்டும் தனிச்சொல் வடிவத்தில் இருப்பதால் - கட்டிலா உருபன்களாக இருப்பதால் பின்னொட்டு, வினையொட்டு என்று பொற்கோ போன்ற தமிழறிஞர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
ஒட்டு விகுதி என்பதற்கு ஆங்கிலத்தில் affix என்று கூறுகிறார்கள். இதில் சொல்லுக்குமுன்னால் வருவது prefix, பின்னால் வருவது suffix, சொல்லுக்கு இடையில் வருவது infix, ஒரே இலக்கணவிகுதி இரண்டாகப் பிளவுபட்டு, அவற்றில் ஒரு பகுதி சொல்லுக்குமுன்னும் மற்றொரு பகுதி சொல்லுக்குப்பின்னும் வருவது circumfix என்றும் அழைக்கிறார்கள். தமிழைப்பொறுத்தவரையில் suffix மட்டுமே இருக்கிறது. இதைப் பின்னொட்டு விகுதி என்றும் postpositions, verbal Particles என்பவற்றைப் பின்னொட்டுச் சொல் என்றும் அழைக்கலாம் என்று நான் கருதுகிறேன். இந்த இரண்டுவகைகளும் இலக்கணப் பொருண்மை தருகிற உருபன்களே. (உருபன் - Morpheme - என்பது அகராதிப் பொருண்மையையோ அல்லது இலக்கணப் பொருண்மையையோ கொடுக்கிற, மேலும் பிரிக்கமுடியாத, அவ்வாறு பிரித்தால் பொருள்தாராத ஒரு அலகு).

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India