சனி, 12 ஆகஸ்ட், 2023

தமிழ்நாட்டில் சாதியம் ஏன், எவ்வாறு தக்க வைக்கப்படுகிறது?

 தமிழ்நாட்டில் சாதியம் ஏன், எவ்வாறு தக்க வைக்கப்படுகிறது?

-------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் ''வாக்குவங்கி அரசியலில் '' பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளும் (விதிவிலக்கே கிடையாது) தேர்தலில் - பஞ்சாயத்துத் தேர்தல் முதல் பாராளுமன்றத் தொகுதி தேர்தல்வரை - குறிப்பிட்ட இடத்தில் எந்த சாதியினர் பெரும்பான்மை என்பதைப் பார்த்துத்தானே வேட்பாளர்களை நிறுத்துகின்றனர்.
வெற்றிபெற்ற கட்சிகள் அமைச்சரவை அமைக்கும்போதும் . . . ''சாதிய ஜனநாயகத்தைப் '' பின்பற்றுகிறோம் என்று கூறி, சாதிய அடிப்படையில்தானே அமைச்சர்களை அமர்த்துகிறார்கள்! ''அனைத்து சாதிகளுக்கும் உரிமை தருகிறோம், இடம் தருகிறோம்'' என்று கூறுவதே ''சாதிய அடிப்படையிலான பிரிவினை உணர்வைத் '' தக்கவைப்பதாகத்தானே அமையும்!
''இட ஒதுக்கீடு'' பிரச்சனைகளுக்குச் சாதிகளைக் கூறித்தானே ஆகவேண்டும் என்ற வினா இங்கு எழும்!
சாதிய அடிப்படையில் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டிருந்த சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு எவ்வாறு கல்வியிலும், அரசுப் பணிகளிலும் ''இட ஒதுக்கீடு'' கொள்கையைச் செயல்படுத்தமுடியும் என்ற வினா எழுப்பப்படும் ! நியாயமான வினாதான் ! நான் மறுக்கவில்லை!
ஏனென்றால் இடைத்தட்டுச் சாதிகளைச் சேர்ந்த இடைத்தட்டு, அடித்தட்டு மக்களும் பட்டியலினத்தைச் சேர்ந்த இடைத்தட்டு, அடித்தட்டு மக்களும் வசதி வாய்ப்புகள் இல்லாமல், கல்வி பெறமுடியாமல், அரசுப் பணிகளைப் பெறமுடியாமல் . . . நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாதுதான்!
மேல்தட்டுச் சாதிகளைச் ( பிராமணர், பிள்ளை, முதலியார், ரெட்டியார் போன்ற சாதியினர்) சேர்ந்த மேல்தட்டு வர்க்கத்தினருக்கு (இடைத்தட்டு, அடித்தட்டு மக்களைத் தவிர்த்து!) இதில் பிரச்சினை கிடையாது! சாதிய அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் இவர்களுக்குப் பிரச்சினை கிடையாது!
எனவே, அனைவருக்கும் கல்வி, வேலை கொடுக்கமுடியும் என்ற ஒரு சமுதாய அரசியல் பொருளாதார அமைப்பு நிறுவப்படுவதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு! இன்றைய பொருளாதார அமைப்பு ''கட்டிக்காக்கப்படும்வரை'' - ''நீடிக்கும்வரை'' இது ஒரு சிக்கல்தான்!
இவ்விடத்தில் ஒரு கருத்தில் தெளிவாக இருக்கவேண்டும்! வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிற இன்றைய சமுதாயத்தில் இந்த ''இட ஒதுக்கீடு'' சாதிய அடிப்படையில் பாதிக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும் வேலை கொடுத்துவிடுமா? வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் இந்த இட ஒதுக்கீட்டால் வேலை பெறும் ''இடைத்தட்டு, அடித்தட்டு சாதியினர்'' எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும் இது ஒரு மாயை என்றே! வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவின் அரசியல் பொருளாதார அமைப்பினால் நீடிக்கின்ற ஒன்று! பட்டியலினத்தினருக்கு 100 விழுக்காடு இடம் ஒதுக்கினாலும் பயன் இருக்காது . . . ஏனென்றால் அடிப்படைக் கல்வியையே பெறமுடியாத ஒரு சூழலில் இருக்கிற பட்டியலின மக்களுக்கு ( பெரும்பாலும் அடித்தட்டு வர்க்க மக்கள்!) இந்த ''இட ஒதுக்கீடு'' எப்படி உதவும்?
ஆனால் அதற்காக ''இட ஒதுக்கீடு'' வேண்டாம் என்பது பொருள் இல்லை! இங்கு நான் வலியுறுத்துவது . . . இந்த ''இட ஒதுக்கீட்டுச் சிக்கல்களுக்காக'' தமிழ்நாட்டில் தற்போது சாதியம் தக்கவைக்கப்படவில்லை! இந்த ''அழுகிய'' சமுதாய அமைப்பைக் கட்டிக்காக்கவே , திட்டமிட்டு ஆளும் வர்க்கங்களால் ( இதில் ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் அனைத்தும் அடங்கும்!) சாதியம் தக்கவைக்கப்படுகிறது!
மக்களைப் பிளவுபடுத்தி - சமுதாய மாற்றத்திற்கான மக்களின் முன்முயற்சிகளைப் பலவீனப்- படுத்துவதற்காகவே சாதியம் தக்கவைக்கப்- பட்டுக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை! இதுதான் இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிற ''சாதிய வன்முறை நிகழ்ச்சிகள்'' அனைத்துக்கும் காரணம்! இளம் வயதிலேயே ''சாதிய உணர்வு '' - பட்டியலின மக்களை மதிக்காமல் மிதிக்கிற உணர்வு - ஊட்டப்படுகிறது!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India