வியாழன், 3 ஆகஸ்ட், 2023

சாதி பற்றிய எனது கருத்துக்கள் சில

சாதி பற்றிய எனது கருத்துக்கள் சில

------------------------------------------------------------

 நண்பர் மணி மணிவண்ணன்:

----------------------------------------------------------------

//பெரியார் மண்ணில் கூடச் சாதிவெறி தலைவிரித்தாடுகிறதல்லவா?//

ந. தெய்வ சுந்தரம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்றதாகக் கூறப்படும் ''பகுத்தறிவுப் புரட்சி'' என்பது பிராமண சாதிக்கு எதிரான பிற மேல்தட்டுச் சாதிகள், இடைத்தட்டுச் சாதிகளில் உள்ள மேல்வர்க்கத்தினரின் ''பண்பாட்டு உரிமைகளுக்கான'' போராட்டங்களே ஆகும்.

இந்தப் பிராமணர் அல்லாத மேல்தட்டுச் சாதியினரும் இடைத்தட்டுச் சாதியினரும் தங்கள் ''சாதியத்தை'' விட்டுக்கொடுக்கவில்லை அல்லது கைவிட்டு விடவில்லை. பிராமண மேல்தட்டினருக்கு உள்ள அத்தனை 'பண்பாட்டு உரிமைகளும்' தங்களுக்கும் வேண்டும்; தங்கள்மீது பிராமண சாதியினரின் 'பண்பாட்டு ஆதிக்கம்' இருக்கக்கூடாது என்பதுதான் இவற்றின் 'கோரிக்கைகள்'!

மேலும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட , 'தீண்டத்தகாத' சாதிகள் என்ற அழைக்கப்படும் மக்களின்மீதான அச்சாதிகளின் சாதிய ஒடுக்குமுறை எள்ளவும் குறையவில்லை - இன்றளவும்! குறையாதது மட்டுமல்ல . . . மேலும் மேலும் கூர்மையடைந்துகொண்டுதான் இருக்கிறது.

'ஆணவக் கொலைகள்' எல்லாம் பிராமணச் சாதியினருக்கும் பிற சாதியினருக்கும் இடையில் இல்லை! பிராமணர் அல்லாத மேல்தட்டு, இடைத்தட்டு சாதியினருக்கும் ''தாழ்த்தப்பட்ட'' சாதியினருக்கும் இடையிலான 'கொலைகளாகவே' நீடிக்கின்றன. ஒரு பிரமாணர் குடும்பத்திற்கும் 'தாழ்த்தப்பட்ட சாதிக் குடும்பத்திற்கும்' இடையிலான 'கொலைகளாக' அவை இல்லை!

அப்படியென்றால் . . . இன்று 'சாதியத்தைத்' தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் யார்? ஏன் அவர்கள் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்? எனவே, மேற்குறிப்பிட்ட 'பிராமணர் - பிற மேல்சாதி, இடைத்தட்டு சாதியினரின்'' போராட்டங்கள் எப்படி தமிழகத்தில் சாதியத்தை ஒழித்திருக்கமுடியும் என்று எதிர்பார்க்கமுடியும்?

மேலும் 'சாதியத்திற்கு' எதிராக என்னதான் மேல்தளத்தில் போராடினாலும் . . . ஒரு முழுமையான அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும் அதற்கான சமுதாய அமைப்பும் தோன்றி வளராமல் 'சாதியம்' ஒழிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பது சரி இல்லை! கிராமப்புறங்களில் நீடிக்கிற அரை நிலவுடைமை உற்பத்தி உறவுகள் - பொருளாதார உறவுகள் - முழுமையாகத் தகர்க்கப்படாமல், இந்த 'சாதியம்' ஒழியாது!

 

எனக்கு இரண்டு புள்ளி விவரங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று, கிராமப் புற விவசாய நில்ஙகள், தோப்புகள் ஆகியவற்றின் உடைமையாளர்களில் “தாழ்த்தப்பட்ட சாதியினர் “ விகிதம் , பிற மேல்தட்டு, இடைத்தட்டு சாதியினர் விகிதம் எவ்வளவு? விவசாயத் தொழிலாளிகளில் இது போன்ற விகிதம் தேவை. நகர்ப்புறத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், தொழிலாளிகள் என்பதிலும் இந்த விகிதக் கணக்கு கிடைத்தால் நல்லது.

அதுபோல, தற்போது தமிழகத்தில் தலைதூக்கி நிற்கிற . . . பாராளுமன்றத் திறப்புவிழாவிலே மிகவும் 'கௌரவிக்கப்பட்ட' . . . ஆதினங்களில் 'பார்ப்பனர்' கிடையாது என நினைக்கிறேன். அனைவரும் பார்ப்பனர் அல்லாத 'உயர்' 'இடைமட்ட' சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான்! இவர்களே இன்று கிராமப்புறங்களில் தனிப்பெரும் 'நிலவுடைமையாளர்களாக' 'கோடிஸ்வரர்களாக' நீடிக்கின்றனர். இவர்களைப்போன்ற மடாதிபதிகள் 'தாழ்த்தப்பட்ட சாதிகளில்' நீடிக்கிறார்களா? விவரம் தெரியவில்லை. தெரிந்தால் கூறுங்கள்!

தமிழகத்தின் 'வாக்கு வங்கி' அரசியல் கட்சிகளிலும் மேல் தட்டுகளில் நீடிக்கிற 'தலைவர்கள்' எந்தச் சாதியினர் என்றும் ஆராயவேண்டும்!

பொதுவாக ஒன்று கூறமுடியுமா என்று சிந்தித்துப்பார்க்கலாம். 70-களுக்குமுன்னால் கிராமப்புறங்களில் பெரும் நிலவுடைமையாளர்களாக நீடித்த பிராமண சாதியின் பெரும்பணக்காரர்கள் . . . தங்கள் சொத்துக்களை நகர்ப்புறத் தொழிற்சாலைகளுக்கு மாற்றிவிட்டிருப்பார்கள்போல் தெரிகிறது. அவர்களில் இடைத்தட்டுப் பிரிவினர் கல்வித்துறையில் தங்களைத் தக்கவைத்துக்கொண்டு, மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர்கள், ஐ ஏ எஸ் அதிகாரிகளாக மாறுவதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். ஏராளமானோர் அயல்நாடுகளிலும் குடியேறிவிட்டார்கள்! ஒரு 'அமைதியான' 'திரைமறைவில்' நடைபெற்ற மாற்றங்களாக இவற்றைப் பார்க்கலாம். ''காலத்திற்கேற்றாப்போலத்'' தங்களை மாற்றிக்கொண்டார்கள்! இதனால் பொருளாதார இழப்பு, பாதிப்பு அவர்களுக்கு இல்லை!

மொத்தத்தில் கிராமப்புறங்களில் பிரமாணர் அல்லாத மேல்சாதியினர், இடைத்தட்டுச் சாதியினர் பொருளாதார ஆதிக்கம்தான் இன்று மேலோங்கி இருக்கலாம். ஆனால் இதுபற்றிய தெளிவான ஆய்வுகள் இல்லாமல், பொத்தம்பொதுவாகக் கூறமுடியாது. இது ஒரு அநுமானம்தான்! இந்த அநுமானம் சரியாக இருந்தால், இன்று கிராமப்புறங்களில் சாதிய ஒடுக்குமுறை நீடிப்பதற்குப் பிராமணர் அல்லாத மேல்சாதியினரும் இடைத்தட்டுச் சாதியினரும்தான் அடிப்படை என்று கருதலாம். இதன் ஒரு வெளிப்பாடே 'ஆணவக்கொலை'! 'கோயில் நுழைவு - திருவிழா ' கலவரங்கள் போன்றவை!

மற்றொரு செய்தி. பார்ப்பனர் அல்லாத மேல்தட்டு 'உயர் சாதியினர்' பார்ப்பனியத்தை எதிர்ப்பதைவிட, தங்களைப் 'பார்ப்பனியர்களாக' மாற்றிக்கொள்வதில்தான் 'ஆர்வமாக' உள்ளார்கள். இங்கு நாம் 'பார்ப்பனியம்' என்றால் என்ன? அது எவ்வாறு பொருளாதாரத் தளம், அரசியல் தளம், பண்பாட்டுத்தளம் ஆகியவற்றில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது? என்பதை சற்று ஆராயவேண்டும்.

நான் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புவது ... பார்ப்பனியத்தின் பொருளாதார அடிப்படை, அரசியல் அடிப்படை, பண்பாட்டு அடிப்படை ஆகியவையாகும். பார்ப்பனியம் என்பது வெறும் ' 'வேதங்கள், புராணங்கள், சடங்குகள், இறைவழிபாட்டில் ஆதிக்கம், தீண்டாமைக்கொள்கை,'' ஆகியவற்றோடுமட்டும் தொடர்பு உடையதா? அப்படியென்றால் அது சமுதாய அமைப்பின் மேல் கட்டமைப்புப் பிரச்சனைதான்! நான் அப்படிப் பார்க்கவில்லை ! பார்ப்பனியத்தின் 'பொருளாதாரக் கொள்கை' என்ன? 'அரசியல் கொள்கை ' என்ன? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்துவருகிற பார்ப்பனியமானது, சமுதாய மாற்றத்தில் தனது பொருளாதாரக்கொள்கை, அரசியல் கொள்கை, பண்பாட்டுக் கொள்கையில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் என்ன? இதுபோன்ற வினாக்களுக்கு நாம் தெளிவான விடைகளைக் காணவேண்டும்! அப்போதுதான் ஆர் எஸ் எஸ் - இயக்கத்தின் அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

 

இன ஒடுக்குமுறை, மத ஒடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை - இவையெல்லாமுமே உடைமைவர்க்கங்களின் வேறுபட்ட பாசிச ஒடுக்குமுறைகள்தான்! ஒடுக்குமுறை என்று சொல்லும்போதே . . . . ஒடுக்குவதற்கான தேவை, கருவி, வலிமை யாருக்கு இருக்கிறதோ . . . அந்த சக்திகள்தான் அவற்றைப் பயன்படுத்தும்! பயன்படுத்தமுடியும்! என்பது தெளிவாகிறது! இவை அனைத்துக்கும் பின்னணி . . . பொருளாதார ஆதிக்கத்தையும் அரசியல் ஆதிக்கத்தையும் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் ஆளும் வர்க்கங்களின் பாசிச அடக்குமுறை வழிமுறைகளே ஆகும். வெவ்வேறு காலக்கட்டங்களில் தேவைக்கேற்ப . . . நெருக்கடிக்கேற்ப . . . வெவ்வேறு வழிமுறைகளை அவை செயல்படுத்தும்! இனத்தின் அடிப்படையில் மக்கள் இணைந்தால் அப்போது மத அடிப்படையும் சாதி அடிப்படையும் மக்களைப் பிரித்தாளப் பயன்படுத்தப்படும்! மத அடிப்படையில் மக்கள் இருந்தால், சாதி அடிப்படையானது மக்களைப் பிரித்தாளப் பயன்படுத்தப்படும்!

தமிழக வரலாறுபற்றிப் போதிய அறிவும் தெளிவும் எனக்குக் கிடையாது என்று தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல . . . சில முடிவுகளுக்கு வருமுன்னர், மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பது எனது கருத்து. ஆனாலும் ... சில ஊகங்கள் !

கிபி 5,6 ஆம் நூற்றாண்டுகளுக்குப்பின்னர்தான் தமிழகத்தில் நிலவுடமைச் சமுதாயம் தோன்றி வலுவடைந்திருக்குமெனக் கருதுகிறேன். அதையொட்டிய பல்லவர் ஆட்சி இறுதி, சோழர் ஆட்சியின் தொடக்கத்தில்தான் விவசாய வளர்ச்சிக்குத் தேவையான பாசனவசதி வளர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. அப்போது ஊர்களில் பிற தொழில்கள் - குறிப்பாக வணிகம் - மூலமாக வசதிபெற்றவர்கள் (உயர்சாதியினர்) தங்கள் தங்கள் பகுதிகளில் வசதியற்றவர்களைக்கொண்டு . . . தங்கள் ஊர் மண்ணை விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மாற்றியிருக்கவேண்டும். அதன்மூலமாக அவர்கள் அந்த நிலங்களின் சொந்தக்காரர்களாக ஆகியிருக்கவேண்டும். ஆனால் அதேவேளையில் ஆட்சியதிகாரத்தில் இருந்த மன்னர்களுக்குத் தேவையான ''செல்வத்தை'' அரசுக்கான தங்கள் பங்காக அளித்து, தங்களது உடைமைகளையும் உரிமைகளையும் தக்கவைத்திருக்கவேண்டும். அவர்கள்தான் அரசுக்குப் படைக்குத் தேவையான 'ஆள் சக்தியையும்' அளித்திருக்கவேண்டும்.

அதேவேளையில் அரசர்களும் தங்களது 'இறை பக்தியை' வெளிப்படுத்தும்வகையில் பிரமதேயம்போன்ற நிலங்களை பிராமணர்களுக்கு அளித்திருக்கவேண்டும். அரசர்கள் மேலும் தங்களுக்குப் 'பலவகையில் உதவுபவர்களுக்கு - படைத்தளபதிகள், அமைச்சர்கள் ' போன்றவர்களுக்கு நிலங்களை அளித்திருக்கவேண்டும். இவ்வாறு பிற உயர்சாதியினருடன் பிராமணர்களும் 'நிலப்பிரபுக்களாக'' நீடித்திருக்கவேண்டும். மேலும் அரசர்கள் ஆதரவு, 'கடவுளுக்கும் மக்களுக்கும் இடைப்பட்ட தூதுவர்களாக, பூசாரிகளாக' இருப்பதற்கான அங்கீகாரம் போன்றவை இவர்களுக்கு ஊர்களில் 'பண்பாட்டு ஆதிக்கத்தை' அளித்திருக்கவேண்டும். மேலும் அரசர்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஏராளமான நிலங்களை அளித்து, அவற்றைப் 'பராமரிக்கும் உரிமையையும்' பிராமணர் அல்லாத பிற உயர்சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அளித்திருக்கவேண்டும். இவ்வாறு பலவகைகளில் பிராமணர்களும் பிற உயர்சாதியினரும் சமூகத்தில் 'ஆளும் வர்க்கங்களாக ' நீடித்திருக்கின்றனர். இந்த நிலங்களில் உடலுழைப்பை அளித்தவர்கள் 'தாழ்த்தப்பட்ட சாதியினர்களாக' ஆக்கப்பட்டிருக்கவேண்டும். எனவே, ஊர்களில் பிராமணர்கள் மட்டுமல்ல, பிற உயர்சாதியினர்களும் நிலவுடைமையாளர்களாக இருந்தனர் என்பதே உண்மை! எனினும் தங்களுடைய 'பண்பாட்டு ஆதிக்கத்தால்' பிராமண நிலப்பிரபுக்கள் , பிற உயர்சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்களுக்கும் இடையில் மோதல்கள் நிலவியிருக்கவேண்டும். அதேவேளையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் 'ஒன்றுபட்டு 'நின்றிருக்கவேண்டும். 'ஒற்றுமையும் போராட்டமும் ' என்ற செயல்பாடுகளுக்கு இடையேதான் பிராமண நிலப்பிரபுக்கள் - பிற உயர்சாதியின நிலப்பிரபுக்கள் நீடித்திருக்கவேண்டும். காலனியாதிக்க முதலாளித்துவம் இங்குக் காலூன்றியபிறகு, அதனுடன் முதலில் சமரசம் செய்துகொண்டு, தங்கள் வாழ்நிலையை வேறு திசையில் செலுத்த முனைந்தனர்.

ஆனால் 'சாதிப் பிரிவினை' எப்போது, எப்படி தோன்றியது? உயர், இடை, கீழ் சாதியினர்கள் என்ற வேறுபாடு எப்படி , எப்போது தோன்றி நிலவத் தொடங்கியது? இது ஒரு மிகப்பெரும் ஆய்வு!

இவையெல்லாம் இப்போது எனது ஊகமே. தயவுசெய்து 'கதை' எழுதத் தொடங்கிவிட்டேன் என்று நினைக்கவேண்டும். சில ஊகங்களே ஆராய்ச்சிக்கு அடிப்படையாக அமையும். அப்படி எடுத்துக்கொள்ளுங்கள்!

-----------------------------------------------------------------------------------------------------

திருமணமும் குடும்ப உறவுகளுமே இன்று சாதிப் பிரிவினையின் ஆணிவேர்களாக இருக்கின்றன. இந்த ஆணிவேர்கள் அகற்றப்படாமல் சாதிகள் ஒழியாது! ஒரு சாதிக்குள் வர்க்க வேறுபாடுகள் உண்டு. அதுவும் திருமணங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன! திருமணத்தில் மதங்கள்கூட வேறுபட்டிருக்கலாம். ஆனால் சாதி வேறுபட்டு இருக்கக்கூடாது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதை அதிகமாகவே நான் பார்த்திருக்கிறேன். மாப்பிள்ளை இந்துவாக இருப்பார்; பெண் கிறித்தவராக இருப்பார். ஆனால் இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே சாதியும் வர்க்கமுமே இன்றைய திருமணங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் மிகப் பெரிய முதலாளித்துவக் குடும்பங்களில் வர்க்கம் மட்டுமே முதன்மை! மதமும் சாதியும் அதற்கு அடுத்ததுதான்! சாதி . . . மதம் . . . வர்க்கம் - மூன்றுக்குமிடையே உள்ள உறவுகளைத் தீர்மானிப்பது அடிப்படையில் பொருளாதார உறவுகளே! 'திணிக்கப்பட்ட' கருத்தியலுக்கும் இதில் பங்கு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை!

சாதிகள் ஒழிந்துதான் ஆகவேண்டும். சாதிப்பிரிவினைகள் ஒரு வரலாற்றுப் பொருளே. குறிப்பிட்ட சமுதாயச் சூழலில் தோன்றிய சாதியம், இன்னொரு வரலாற்றுச் சூழலில் மறைந்துதான் தீரும். இது நமது விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது இல்லை. சமுதாயத்தின் இயங்கியல் இது. சாதியம் மனிதத்திற்கு எதிரானது. இதில் ஐயமே கிடையாது. எந்த ஒரு வகையிலும் சாதியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

மதம், சாதி, வர்க்கம் - இவை அனைத்துமே வரலாற்று விளைபொருள்கள்தான். மனிதச் சமுதாய வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் தோன்றியவைதான் இவை. எனவே சமுதாயத்தின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இவை மூன்றுமே மறைந்துவிடும். இதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை!

 

மனித குல வளர்ச்சி முன்னேதான் செல்லும். மேலும் அது சுருள்வில்லாகத்தான் (spring) இருக்கும். அதாவது மீண்டும் மீண்டும் வட்டம் (circle) என்பதுபோலத் தோன்றினாலும் அது உயர்மட்டத்திலான வட்டமாக- சுருள்வில்லாகத்தான் அமையும். எனவே மனிதகுலம் தனது வளர்ச்சியில் பல நிலைகள் தோன்றலாம். ஆனால் ஒன்றுக்கு அடுத்தது அதைவிட உயர்ந்த ஒன்றாக அல்லது வளர்ந்த ஒன்றாகத்தான் இருக்கும். இன்று நம் முன் இருக்கிற 'சாதி' போன்ற சமுதாயத்தைப் பிளவுபடுத்தி ஒடுக்கும் ஒரு பிரிவாக இருக்காது. கம்யூன் (commune) போன்று அமையலாம்.

 

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India