ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

பிறமொழி எழுத்துக்களுக்குத் தமிழில் இடம் தரவேண்டுமா?

 பிறமொழி எழுத்துக்களுக்குத் தமிழில் இடம் தரவேண்டுமா?

----------------------------------------------------------------------------------------------------
மனிதனின் பேச்சுறுப்புக்களைக்கொண்டு ( தொண்டை, வாயறை, நாக்கு, அண்ணம், பல், உதடு, மூக்கு உட்பட) நூற்றுக்கணக்கான பேச்சொலிகளை ( Phones) உருவாக்கமுடியும். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட மொழியும் அந்த அத்தனைப் பேச்சொலிகளையும் உருவாக்கிப் பயன்படுத்துவது கிடையாது. எனவே ஒவ்வொரு குறிப்பிட்ட மொழியும் பொதுவாகக் கிட்டத்தட்ட 50 பேச்சொலிகளைப் பயன்படுத்தலாம்.
அடுத்து, அந்தப் பேச்சொலிகளையும் அந்தக் குறிப்பிட்ட மொழி பொருள் வேறுபாட்டுக்காகப் பயன்படுத்துவது கிடையாது. எடுத்துக்காட்டாக, ஒலிப்புள்ள (Voiced phones) 'க்' 'ட்' இரண்டும் இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் பொருள் வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமைகிறது. எனவே, அவை அந்த மொழிகளில் ஒலியன்களாக ( Phonemes) அமைகின்றன. இது அந்த மொழிகளின் மரபு. ஆனால் இந்த இரண்டும் தமிழில் பொருள் வேறுபாட்டுக்குப் பயன்படுத்தப்படவில்லை. இந்த இரண்டு பேச்சொலிகளும் தமிழில் உண்டு. ஆனால் பொருள் வேறுபாட்டுக்கான ஒலியனாகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, மாற்றொலிகளாகப் ( Allophones) பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக, பொருள் வேறுபாட்டுக்கு அடிப்படையான ஒலியன்களுக்குத்தான் எழுத்துக்கள் ( graphemes) மொழிகளில் உண்டு. இதனால்தான் இந்தியில் இந்த இரண்டுக்கும் தனித்தனி எழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் அதற்கான எழுத்து கிடையாது.
எனவே தமிழில் கடம், அக்கா, தங்கம், பகல் என்ற சொற்களில் [k] [g] [x] பேச்சொலிகள் (phones) பயின்றுவந்தாலும், அவை மூன்றுமே ஒரே எழுத்தால் குறிக்கப்படுகிறது. அவை வரும் இடத்தைப் பொறுத்து தமிழ்மக்கள் அவற்றை வேறுபட்ட பேச்சொலிகளாகப் (Allophones) பயன்படுத்துகின்றன,
எனவே, எழுதும்போது, ஒரு ஒலியனின் (Phoneme) பேச்சொலியை (Allophone) . . . அந்த எழுத்து அல்லது ஒலியன் வரும் சூழலை மனதில் கொண்டு மக்களால் பலுக்குகிறார்கள்.
இவ்வாறு இருக்கும்போது, இந்தியில் ஒலியனாக இருக்கிற /g/ -க்கு எழுத்து இருக்கும்போது, தமிழில் அவ்வாறு ஏன் எழுத்து இல்லை என்று கேட்பது அறிவியல் அடிப்படை - மொழியியல் அடிப்படை கிடையாது. ஆனால் அடுத்த வினா வரும் . . . பேசுவதை அப்படியே - பேச்சொலிகளாகவே எழுதவேண்டுமென்று ஒருவர் விரும்பினால் என்ன செய்வது? , அதற்குப் பன்னாட்டு பேச்சொலியியல் கழகம் (International Phonetic Association IPA scripts) ) உருவாக்கிவைத்துள்ள பேச்சொலிகளுக்கான வரிவடிவங்களைப் பயன்படுத்தலாம்; பயன்படுத்தவேண்டும்.
உலகில் மனிதனால் பயன்படுத்தப்படுகிற அல்லது ஒலிக்கக்கூடிய அத்தனைப் பேச்சொலிகளுக்கும் அதில் வரிவடிவம் (Phonetic scripts) உண்டு. அதைப் பயன்படுத்தலாம்.
எனவே ஒரு மொழியியல் உள்ள எழுத்துக்கள் எல்லாம் இன்னொரு மொழியில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
மேலும் ஆள், இடம், பொருள் போன்ற சொற்களுக்குத்தான் (Proper names) சிக்கல் உண்டு. மாறாக, தமிழில் 'பஸ்' 'புஷ்பம்' ' ஸங்கீதம்' 'ஜனனம்' என்று அயல்மொழிச்சொற்களை அப்படியே எழுதவேண்டும் , அதற்கு அந்த எழுத்துக்கள் தேவை என்று கருதக்கூடாது. இங்கு இவற்றிற்கெல்லாம் தமிழில் சொற்கள் உண்டு. பேருந்து, மலர், இசை என்றுதான் தமிழில் எழுதவேண்டும்.
Proper names - க்கு ஒருவர் விரும்பினால் அந்தப் பெயர்களில் இடம்பெற்றுள்ள - தமிழில் இல்லாத - எழுத்துக்களைப் பயன்படுத்திக்கொள்ளட்டும். ஆனால் அதற்காக, அந்த அயல்மொழி எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்களாகக் கருதி, தமிழ் எழுத்துவரிசையில் சேர்க்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India