செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

புத்தரும் இன்றைய தமிழகத் திரைப்பட அரசியலும்

புத்தரும் இன்றைய தமிழகத் திரைப்பட அரசியலும்
-                              -------------------------------------------------------------------------------
நேற்று நான் புத்தர்பற்றிக் கூறியதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். தனது தொல்லினப் பழங்குடி மக்களின் துன்பங்களை ... புதிதாகத் தோன்றிய வர்க்க சமுதாயம். அரசு ஆகியவை அளித்த துன்பங்களை... தீர்க்கப் புத்தர் கண்டுபிடித்த ஒரு மாற்றுவழி... மக்கள் உளவியல்ரீதியாகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதே ஆகும். '' நடைமுறை வாழ்க்கையில் உள்ளத்தில் தோன்றும் ஆசைகளை அடக்கவேண்டும்''! கடவுள்வாதிகள் கடவுள் என்ற மாயையை இதற்காக உருவாக்கினார்கள். துன்பங்களை இல்லாமல் ஆக்குவதற்கான சமுதாயச் சூழலை உருவாக்கமுடியாத ஒரு நிலையில்... மக்களிடம் இந்த மாயை ஆதிக்கம் செலுத்தும். மக்களின் துன்பங்களே அவர்கள் இந்த மாயையை ஏற்றுக்கொள்வதற்குக் காரணம்!
நடைமுறையில் அன்றைய தொல்லினப் பழங்குடி மக்களின் துன்பங்களை இல்லாமல் ஆக்குவது அன்றைய வரலாற்றுக் கட்டத்தில் இயலாத ஒன்று என்பதைப் புத்தர் நன்கு உணர்ந்திருந்தார். ஆனால் அவர் கடவுள் என்ற மாயையை உருவாக்கவில்லை. துறவறம்பூண்டு மக்கள் தங்கள் உடலை வருத்திக்கொள்வதையும் அவர் விரும்பவில்லை!
அவர் காலத்திற்கேற்ற ஒரு மாயையை உருவாக்கினார். அதுதான் ''சங்கம்''! துன்பப்படுகிற மக்கள் ... தங்கள் சமுதாயத்திலிருந்து வெளியேறி... இச்சங்கங்களில் வாழுமாறு அறிவுறுத்தினார். இந்தச் சங்கங்களில் தனிச்சொத்து இல்லை! முழு அளவில் சமத்துவமும் ஜனநாயகமும் இருந்தது. பழைய சமுதாயத்தின் பெருமையை இங்கு கொண்டுவரமுடியும்! இச்சங்கங்கள்... வர்க்க சமுதாயத்திற்குள் வர்க்கமற்ற சமுதாயமாக ... இதயமற்ற உலகின் இதயம்போல.. ஆன்மா அற்ற நிலையில் ஆன்மா போலவும்... இருந்தன!.
அதாவது... யதார்த்தமான துன்பங்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தீர்வுகொடுக்கமுடியாத ஒரு சூழலில்... ஒரு கற்பனையான.. இலட்சியரீதியான தீர்வை மக்களுக்காக அளித்தார். மக்களை ஏமாற்றுவது அவர் நோக்கமல்ல! அவர் தன் மக்களுக்கு உண்னமையானவர் ! தன் மக்களுக்காக நின்றவர். மக்கள் துன்பப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக... தனது வரலாற்றுக் கட்டத்தை உணர்ந்து... தெளிந்து.. இலட்சியத் தீர்வை - ஒரு மாயையை - அளித்தார்! எனவேதான் வரலாற்றில் புத்தர் நீடிக்கிறார்!
இன்று தமிழகத்தில் மக்கள்பற்றிக் கவலை எதுவுமில்லாமல்... பணத்திற்காகவும் புகழுக்காகவும் திரைப்படங்களில் நடிப்பவர்கள் ... திரைப்படங்களில் மக்களின் ''அத்தனை'' பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும் ''வரலாற்று நாயகர்களாக'' நடிக்கின்றனர். அவர்களுக்கு மக்களும் ரசிகர் மன்றங்களை எழுப்பவும்... பாலாபிசேகம் செய்யவும்... ஏன் கோயில்கட்டவும்கூட செய்கிறார்கள்! இதைப் பார்க்கிற இந்தப் ''புரட்சி நடிகர்கள்'' உடனடியாக ''அரசியல் கட்சிகளைத் '' தொடங்கிவிடுகிறார்கள்! ஆனால் அவர்கள் எதிர்பார்க்கிற அளவிற்கு மக்கள் இப்போது ஏமாறத் தயாரில்லை!
1950-60 களில் ஏற்கனவே அரசியலில் தொடர்புடைய... ஈடுபாடுடைய ... நிலவிய சில அரசியல் தலைமைகளை எற்றுக்கொண்ட ... எம் ஜி ஆர், எஸ்.எஸ்.ஆர், எம் ஆர் ராதா போன்றவர்கள்... திரைப்படங்களிலும் மக்களின் தோழர்களாக நடித்தனர். தங்கள் அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கொண்டுசென்றார்கள்! அவர்களால் அரசியலிலும் வெற்றிபெறமுடிந்தது! அடித்தட்டு மக்களின் பல்வேறு பிரிவினர்களின் தலைவர்களாக ... பல பாத்திரங்களில் நடித்து... மக்களின் பிரச்சினைகளுக்குத் ''தீர்வு'' அளித்தார்கள்! அவை திரைப்பட ''மாயைகளாக'' இருந்தாலும்.. மக்கள் அவற்றை விரும்பினார்கள்! மக்கள் ஏமாளிகள் இல்லை! ஆனால் நடைமுறை. வாழ்க்கையில் அவர்களது துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்காத ஒரு நிலையில் .. '' திரைப்படத் தீர்வுகளை'' தங்கள் மன ஆறுதலுக்காக ஏற்றுக்கொண்டார்கள்! அதனால் அந்த நடிகர்களும் சிறப்படைந்தார்கள்! அவர்களது அரசியல் கட்சிகளுக்கும் பயன் கிடைத்தது. அதேவேளையில் அவர்கள் சார்ந்திருந்த கட்சிகளின் தொண்டர்கள் இடையேயும் ஆதரவு வளர்ந்தது! அவர்களது கட்சித் தலைமைக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகிறபோது.. அவர்களால் மக்களைத் தங்கள் பக்கம் கொண்டுசெல்ல முடிந்தது!
ஆனால் அதைத் ''தவறாகப்'' புரிந்துகொண்ட இன்றைய நடிகர்கள் சிலர் .... நடிக்க வருவதற்குமுன்னர் அரசியல் வாசனையே படாதவர்கள்... எந்தவொரு நிலவுகிற அரசியல் கட்சிகளிலும் இல்லாதவர்கள்... பணத்திற்காக மட்டுமே நடிக்க வந்தவர்கள் '' புரட்சிகரமாக'' நடித்து... மக்களின் பல்வேறு '' பிரச்சினைகளுக்கு'' தீர்வு அளிக்கும் ''தலைவர்களாக'' நடித்த சில ஆண்டுகளில் ... '' அரசியலிலும்'' பிரபலமாகலாம் என்று கட்சிகளைத் தொடங்கிவிடுகிறார்கள்! ஆனால் அவர்களால் எம்ஜிஆர், போன்று ... மக்கள் மனதில் இடம்பிடிக்கமுடியவில்லை. 
தடுமாறுகிறார்கள்!
இவ்விடத்தில் மக்களின் உளவியல் தெளிவாகத் தெரிகிறது! திரைப்படங்கள் மூலமாகமட்டுமே அரசியல் தலைவர்களாக ஆகமுடியாது ! நடைமுறைச் சமூகப் பிரச்சினைகளுக்குத் திரைப்படத் தீர்வுகள் ''மாயை'தான் என்பது மக்களுக்குத் தெரியாமல் இல்லை! இருந்தாலும்... அரசியலோடு திரைப்படங்களில் நுழைந்தவர்கள் அரசியலில் வெற்றிபெறுகிறார்கள்! எவ்வித அரசியலும் இல்லாமல் ... திரைப்படங்களில் நுழைந்தவர்கள் ... எவ்வளவுதான் ''மக்கள் தலைவர்களாக'' நடித்தாலும் அரசியலில் வெற்றிபெறமுடியவில்லை! இதை உணர்ந்துதான் மிகப்பெரிய நடிகர்கள் சிலர்... நேரடி அரசியலுக்கு வருவது இல்லை! கட்சிகள் தொடங்குவதில்லை!
புத்தர் ... உண்மையானவர்! மக்களுக்கு நேர்மையானவர்! தன் இன மக்களின் துன்பங்களைக் காணச் சகிக்காமல்... அதே வேளையில் நடைமுறை வாழ்க்கையில் உண்மையான தீர்வைக் கொடுக்கமுடியாத ஒரு வரலாற்றுச் சூழலில்... ''சங்கம்'' என்ற ஒரு ''மாயை' தீர்வை மக்களுக்கு அளித்தார். வரலாற்றை வென்றார்!
அரசியலோடு .. அது எந்த அரசியலாக இருந்தாலும் ... திரைப்படங்களில் நுழைந்து... மக்களின் பிரச்சினைகளுக்கு ''மாயை'' தீர்வை அளிப்பவர்கள் அரசியலிலும் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளமுடிகிறது!
ஆனால் அரசியல் உணர்வே இல்லாமல்... பணத்திற்காகவே நடிக்க வந்தவர்கள்.. எவ்வளவுதான் முயன்றாலும்... அரசியலில் தங்களைத் தக்கவைக்கச் சிரமப்படுகிறார்கள்!.
மக்களின் உளவியல் ... உண்மையான தீர்வுகளுக்குப் பதிலாக ''மாயைகள் '' முன்வைக்கப்பட்டாலும்... அது மாயைதான் என்று தெரிந்தாலும்... யாரை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்... யாரைப் புறம்தள்ளுகிறார்கள் என்பதுபற்றி மேலும் ஆராயவேண்டும். எனது இந்த ஆய்வு மிகவும் மேலோட்டமான ஒரு ஆய்வுதான்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India