புதன், 10 ஆகஸ்ட், 2016

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை.(18)

மொழிபயிற்றலில் ( Language Teaching) இன்றுள்ள பிரச்சினை... ( மொழி பயிற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும் .) (18)
--------------------------------------------------------------------------------------------
மொழிபயிற்றலில் இலக்கியக் கருத்தாடல் மிகப் பெரிய அளவு பயன்படும் என்று விடோவ்சன் போன்ற பல மொழிபயிற்றல்துறையைச் சேர்ந்த அறிஞர்கள் கருதுகின்றனர். அது 100 விழுக்காடு உண்மை! தமிழின் சிறப்பு.... அதன் இலக்கியப் பயன்படுத்தத்தில் .... இலக்கியக் கருத்தடால்களில் ... தெளிவாக வெளிப்படுகிறது.

இங்கு இலக்கிய மொழியமைப்புபற்றிச் சில கருத்துகளை முன்வைக்கவிரும்புகிறேன். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொதுவான கருத்தாடல்களில் தமிழ் எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், தொடர் இலக்கணம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று பொதுவான தமிழ் இலக்கண நூல்கள் எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக, சொல் முதலில் எந்த எழுத்துகள், இறுதியில் எந்த எழுத்துகள், இடையில் என்னவகையான இரட்டித்தல் ஆகியவை அமையலாம் என்பதற்குத் தெளிவான விதிகள்! ஒரு சொல்லோடு மற்றொரு சொல்லோ அல்லது விகுதியோ சேரும்போது, எழுத்துகளில் என்னவகையான புணர்ச்சிமாற்றங்கள் ஏற்படும் எனபதற்கான தெளிவான விதிகள்!
அதுபோன்று... சொல்லிலக்கணத்திலும் பல கட்டுப்பாடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக, '' மரம்'' என்ற மகர ஈற்றுப் பெயர்ச்சொல், வேற்றுமைவிகுதிகளை ஏற்றுவரும்போது, ''அத்து'' சாரியை பெற்றுவரவேண்டும். ''மரத்தை '' என்றுதான் அமையவேண்டும். ''மரமை'' என்று அமையக்கூடாது.
தொடர் இலக்கணத்தில்... தொடரின் எழுவாய்க்கும் வினைமுற்றுக்கும் திணை, எண், பால் ஆகிய இலக்கணக் கூறுகளில் இயைபு இருக்கவேண்டும் என்பது ஒரு முக்கியமான இலக்கணவிதி. '' அவன் வருகிறான் '' என்றுதான் எழுவாய்க்கு ஏற்றவகையில் வினைமுற்று அமையவேண்டும். '' அவன் வந்தாள்'' என்றோ... ''அவன் வந்தார்'' என்றோ... ''அவன் வந்தார்கள்'' என்றோ அமையக்கூடாது. இது அனைவருக்கும் தெரிந்த ஒரு இலக்கணவிதி.
மேற்கூறிய பொதுத்தமிழுக்கான இலக்கணவிதிகளை இலக்கியப் படைப்பாளிகளும் மீறக்கூடாது. மீறமாட்டார்கள்! பழந்தமிழ் இலக்கியங்களில் இதைத் தெளிவாகக் காணலாம். அப்படியென்றால்... ஒரு இலக்கியத்திற்கு இலக்கியப்பண்புகளை இந்தப் பொது இலக்கணத்தின் உதவிகொண்டுமட்டுமே ஏற்றிவிடமுடியுமா? இங்குத்தான் தமிழ் யாப்பிலக்கணத்தின் சிறப்பு வெளிப்படுகிறது. பொது இலக்கணமே கணிதப் பண்புகளுக்கு உட்பட்டதுதான்! ஆனால் அதற்கும்மேலே .. பொது இலக்கணக் கட்டமைப்புமீதே மற்றொரு கறாரான கட்டமைப்பை நிறுவி... ஒரு எழுத்தை இலக்கியமாக்குவதற்குத் துணைபுரிவதுதான்... தமிழ் யாப்பிலக்கணம்!
தமிழ் யாப்பிலக்கணமானது தமிழின் பொது இலக்கணத்தை மேலும் செதுக்குகின்ற ஒரு இலக்கணமாகும் ( Superimposed grammar) ! தமிழ்மொழியில் அமைகிற ஒரு படைப்பை... இலக்கியப் படைப்பாக மாற்றுவதற்குப் பயன்படும் ஒருவகையான மொழிப்பயன்படுத்த இலக்கணமாகும்!
இலக்கியப் பண்புகளை ஏற்றுவதற்குப் புலவர்களுக்கு மிக ஒழுங்கமைந்த இலக்கணக் கட்டமைப்புப் பயன்படுகிறதுபோல... சில இடங்களில் பொது இலக்கணத்திலிருந்து திட்டமிட்ட விலகல்களும் ( linguistic deviation)பயன்படுகின்றன. ஒரு பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாகவோ அல்லது ஒரு வினைச்சொல்லைப் பெயர்ச்சொல்லாகவோ படைப்பாளி பயன்படுத்தலாம். இதுதான் படைப்பாளிகளுக்கான உரிமம் ( poetic license) என்று சொல்லப்படுகிறது! ஆனால் இந்த விலகல்களுக்கும் ஒரு இலக்கியப் பயன்பாடு உண்டு! வாசகரை அந்த இடத்தில் நிறுத்தி... '' ஏன் இவ்வாறு விலகுகிறார்'' என்பதைச் சிந்திக்கவைத்து... ஒரு கருத்தை வெளிப்படுத்தப் படைப்பாளி விரும்புவார்! இது ஒரு இலக்கிய உத்தியே ( literary device) !
தொல்காப்பியரின் செய்யுளியல் (Prosody) நாம் மேலே பார்த்த இலக்கியப் பண்புகளைத் தரும் மொழிநடையையே- தமிழின் பொது இலக்கணத்தின்மீது கட்டமைக்கப்படுகிற யாப்பு இலக்கணத்தையே - விளக்குகிறது.
அவரது ஏனைய இயல்கள் எல்லாம் .... தமிழ் இலக்கியங்களின் பிற இலக்கியப் பண்புகளைப்பற்றிப் பேசுகின்றன. மொத்தத்தில் தொல்காப்பியரின் பொருளதிகாரமானது (Poetics), ஒரு படைப்பாளி தனது இலக்கியக் கருத்தாடலை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை விளக்குகின்றன. எனவே பழந்தமிழ் இலக்கியக் கருத்தாடலை மேற்கொள்ளும் புலவர்களுக்கு ... தமிழின் பொது இலக்கணம் பற்றி எழுத்ததிகாரம், சொல்லதிகாரத்திலும்.... இலக்கியத்தின் சிறப்பு மொழிநடை , பிற இலக்கியப் பண்புகள் ஆகியவைபற்றிப் பொருளதிகாரத்திலும் தொல்காப்பியர் கூறுகிறார். தொல்காப்பியரின் நோக்கமே இலக்கியக் கருத்தாடலை மேற்கொள்ளும் புலவர்களுக்குத் தேவையானவற்றை - இலக்கிய, மொழி உத்திகளை ( literary and linguisitc devices or techniques) அளிப்பதே ஆகும்!
ஆகவே தமிழ் பயிலும் மாணவர்... எவ்வாறெல்லாம் தமிழ்மொழியைப் படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்தலாம்... செதுக்கலாம் என்பதைக் கற்றுக்கொடுக்கப் பழந்தமிழ் இலக்கியங்கள் மிகவும் பயன்படும். இன்றைய உரைநடை இலக்கியங்களிலும் -- நாவல், சிறுகதை ஆகியவற்றிலும் - தமிழை எவ்வாறெல்லாம் இலக்கியக் கருத்தாடல்களுக்குப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்துகொள்வது ... தமிழ்பயிற்றலின் ஒரு மிக முக்கியமான பகுதியாகும்! 
எனவே தமிழ்பயிற்றல் என்பது தமிழ்மொழியின் சொற்களையும் இலக்கணத்தையும் மட்டும் கற்றுக்கொடுப்பது இல்லை! மாறாக, அவற்றின் கருத்தாடல் பயன்படுத்தத்தையும் ( communicative use) கற்றுக்கொடுப்பதேயாகும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India