செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

பெரியார் பற்றிய விமர்சனம்

                                               பெரியார் பற்றிய விமர்சனம்
                                                   ------------------------------------------

மதி வாணன்:
--------------------------
இரு புறமும் மனைவிகளோடு இருக்கும் முருகனை கும்பிடுபவர்கள், அதேபோல் இரு புறமும் கணவர்களோடு இருக்கும் பெண்ணை கடவுளாக கும்பிடுவோமா என சிந்திக்கவேண்டும்.
- பகுத்தறிவு ஆசான் ராமசாமி..

ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------
பெரியார் கேட்டதில் என்ன தவறு? ஒரு பெண் அவ்வாறு இருக்கவேண்டும் என்று அவர் கூறவரவில்லை. இந்த ஆண் ஆதிக்கச் சமுதாயத்தில் ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளோடு வாழ அனுமதிக்கும்போது, அந்த உரிமை ஏன் ஒரு பெண்ணுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் பெரியார் கேள்வி. ஆணோ பெண்ணோ அப்படி இருக்கவேண்டுமென்று அவர் கூறவரவில்லை. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா? ஒரு ஆண்மட்டும் தனக்கென்று மட்டுமே குழந்தை பெற்றுத்தரும் மனைவி வேண்டும்.. அதுதான் கற்பு என்று இச்சமுதாயம் கூறுவது மட்டும் நியாயமா? இதுதான் பெரியார் கேள்வி. ஆணின் அந்த உரிமையைப் பெண்ணுக்கும் விரிவாக்கம் செய்வது என்பதல்ல பெரியார் கருத்து. தனிச்சொத்துரிமை... ஆண் ஆதிக்கம்... சொத்து வாரிசுக்காகத் தனக்கென்று பிறக்கிற குழந்தை .... ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளோடு ஆண் வாழும் உரிமை... இதெல்லாம் சரியா? சமுதாய வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் .... சொத்துரிமை .... வாரிசு என்பவையெல்லாம் தோன்றாத காலகட்டத்தில் ... பலகணவர் மணம் இருந்தது உண்மையில்லையா? சொத்துரிமை தோன்றியபிறகுதான்.... வாரிசுக்காகக் குடும்பம் என்று ஒரு அமைப்பு தோன்றியபிறகுதான்... பலகணவர் மணம் இல்லாமல் போய்... பலதார மணம் தோன்றியது. இது வரலாற்று உண்மை. எதிர்காலத்தில்.... சோசலிச சமுதாயத்தில்... சொத்துரிமை இல்லாத சமுதாயத்தில்தான்... ஆண் ஆதிக்கம் அற்ற... ஜனநாயகரீதியான குடும்ப அமைப்பு நிலவும். அங்கே.. ஒரு ஆணுக்கு ஒரு மனைவி என்பதும் ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்பதும் உண்மையில் நடைமுறைக்கு வரும். சமூக வரலாற்றில் பெண்வழிச் சமுதாயம்தான் முதலில் நிலவியது. ஒரு குழந்தைக்குத் தகப்பன் யார் என்று தெரிந்துகொள்ளமுடியாத.. ஆனால் தாய் யார் என்று தெரிந்துகொள்ளமுடிந்த காலம் ஒன்று இருந்ததைப் பார்க்கலாம்.

புராணக் கதைகள் தோன்றிய வரலாற்றுக் காலகட்டம் பற்றிய தெளிவு இல்லாமல்.... புராணக் கதைகளை வைத்துக்கொண்டே ... அவற்றில் கூறப்படுகிற ''கடவுள்களை'' விமர்சித்து .... திட்டி.. மேற்கொள்கிற நாத்திகவாதத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அறிவியல் அடிப்படையிலான ... பிரபஞ்சத் தோற்றம்... உயிரின் தோற்றம் போன்றவற்றின் அடிப்படையிலான பொருள்முதல்வாதத்தை ஏற்றுக்கொண்டவன் நான். ''பிராமணியம்'' என்ற ஒன்றை... அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி, பிற அரசு பதவிகள் ஆகியவற்றில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்திய ஒருநிலையை... எதிர்க்கவேண்டிய ஒரு காலகட்டத்தில்... பிற மேல்சாதிகளைத் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பிராமணியத்தை எதிர்ப்பதற்கு... விமர்சனம் செய்வதற்கு... புராணக் கதைகளை அவற்றின் தோற்றம்பற்றிய ஆய்வு எதுவும் இன்றி... பெரியார் திட்டினார். . கடவுள் கோட்பாட்டை ஏன் அடித்தட்டு மக்கள் இன்றும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வரலாற்று.. சமுதாய நோக்கில் பார்க்காமல்... ''கடவுளைக் கும்பிடுகிறவன் முட்டாள்'' என்று கூறினார். அப்படியென்றால் அடித்தட்டு விவசாயிகளும் தொழிலாளிகளும் பெரும்பான்மை ''கடவுள்'' பக்தர்கள்தான். அவர்கள் எல்லாம் முட்டாள்களா? அவர்கள்தானே சமுதாயத்தில் பொருள் உற்பத்தி நடக்கிறது! எனவே பிராமணியத்தை அன்றைய கட்டத்தில் எதிர்ப்பதற்காக... முருகர், விநாயகர் போன்றவர்களை அடிப்படையாகக்கொண்ட புராணக்கதைகளைப் பற்றிய பெரியார் விமர்சனம் நமக்கு முக்கியமானது அல்ல. அன்றைய ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பிராமணியத்தை ... எதிர்க்க வேண்டிய ஒரு சூழலில் ( அது சரிதான்!) பெரியார் புராணக் கதைகளை வைத்துக்கொண்டு விமர்சனம் செய்தார். அவ்வளவுதான். ஆனாலும் அவருக்கு ஒரு சமுதாய நோக்கு இருந்தது. புராணக் கதைகளை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதை அவர் எதிர்த்தார். மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். தீண்டாமையை எதிர்த்தார் ( ஆனால் அவருடன் கைகோர்த்த மேல்சாதித் தலைவர்கள் தங்களுக்குக் கீ.ழ்ப்பட்ட சாதி மக்களைத் ''தீண்டாமல்தான் '' செயல்பட்டார்கள்!) பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பிரமாணர்கள் அல்லாத பிற மேல்சாதியினரே ( பிராமணியத்தால் 'பாதிக்கப்பட்டவர்கள்') தவிர ,,, சமுதாயத்தின் ''தீண்டாமையால்'' மிகவும் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் இல்லை! பெரியாரை அவரது அரசியல் ஈடுபாட்டுக் காலகட்டத்தில்வைத்துப் பார்க்கவேண்டும். அவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றவும் வேண்டாம். அதேபோன்று அவரைக் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் வேண்டாம். அவரிடம் இருந்த நல்ல கருத்துகளை ( மூடநம்பிக்கைகள், தமிழ் இலக்கியங்களாக இருந்தாலும், அதில் பிற்போக்கு கருத்துகள் இருந்தால் அவற்றை எதிர்ப்பது போன்ற) உள்வாங்கிக்கொள்ளலாமே! 20 ஆம் நூற்றாண்டில்... 1930-60 ஆண்டுகளில் சமூக நிகழ்வுகளில் பெரியாருக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India