செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

புத்தரின் வெற்றி ..... மாயைத்தோற்றமும் எதார்த்தமும் ( Illusion and Reality) .

புத்தரின் வெற்றி ..... மாயைத்தோற்றமும் எதார்த்தமும் ( Illusion and Reality) .
-------------------------------------------------------------------------------------------------------------------
புத்தர் .... கங்கைநதிப் பள்ளத்தாக்கில் கிமு 5-6 ஆம் நூற்றாண்டுகளில் தொல்லினப் பழங்குடி மக்களின் சமூக அமைப்பு அழிக்கப்பட்டு.... சிறு சிறு அரசுகள் தோன்றிய .... வணிகர்கள் தோன்றி வளர்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். மகதமும் கோசலமும் இருபெரும் அரசுகளாக நிறுவப்பட்ட ஒரு காலகட்டம் அது. இந்த அரசுகளுக்கு அருகிலேயே பல்வேறு வலிமைவாய்ந்த தொல்லினப் பழங்குடி மக்கள் வாழ்ந்துவந்த காலகட்டம். இந்த தொல்லினப் பழங்குடிமக்கள் .. அருகிலே நிறுவப்பட்ட இரு அரசுகளுக்கு - மகதம், கோசலம்- மிகப் பெரிய தொல்லையாகத் தோன்றிய ஒரு காலகட்டம்! மகதமும் கோசலமும் தங்களுக்குள் பலமாக மோதிக்கொண்டாலும்... தொல்லினப் பழங்குடி மக்களின் சமூகத்தை அழிப்பதில் ஒரே கொள்கை உடையவை.தனிச்சொத்துரிமையோ அல்லது வர்க்கப் பிரிவினையோ இல்லாத சமூக அமைப்பு இந்தத் தொல்லினப் பழங்குடி மக்களின் சமூக அமைப்புகள்! அவற்றில் ஒன்றான சாக்கியத் தொல்லினப் பழங்குடி மக்கள் சமூகத்தைச் சார்ந்தவர் புத்தர். சமணத் தலைவர் மகாவீர்ர் இவரது காலத்தவரே!

தன் கண்முன்னே தன் இன மக்களின்மீதான தனியுடைமை அரசுகளின் வன்முறைத் தாக்குதல்களையும் அவற்றால் தன்னின மக்கள் பட்ட இன்னல்களையும் கண்டு மனம் நொந்தவர் புத்தர். ஆனால் சமூக மாற்றத்தின் நியதிகளையும் வளர்ச்சி விதிகளையும் மிகவும் உணர்ந்த புத்தர்... வன்முறை அரசுகளின் தாக்குதல்களிலிருந்து தன் இன மக்களை எவ்வாறு காப்பாற்றுவது... அவர்களின் வர்க்கமற்ற, சொத்துரிமையற்ற சமூக அமைப்பு உணர்வுகளை எவ்வாறு தக்கவைப்பது ... என்பதற்கான ஆழந்த ஆய்வில் ஈடுபட்டவர். வன்முறை அரசுகளின் வளர்ச்சியைத் தடுக்கமுடியாது என்பதைத் தெரிந்துகொண்ட புத்தர்... அதேவேளையில் தன் மக்களின் இன்னல்களை .... அவர்களது பழைய இனச்சமுதாய உணர்வுகளையும் மரபையும் பண்பாட்டையும் எவ்வாறு காப்பாற்றுவது என்பதைப்பற்றி ஒருமுடிவுக்கு வந்தார். பழைய இனச் சமுதாயத்தின் பண்புகளைக்கொண்ட '' சங்கம்'' என்று ஒரு அமைப்பை முன்னிலைப்படுத்தினார். அச்சங்கத்தில் பழைய இனக்குழு மரபுகளே நீடிக்கவேண்டும்... தக்கவைக்கப்படவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். இது தன் மக்களின் வேதனைகளை... புற மற்றும் அக வேதனைகளுக்கு மாற்றாக அமையும் என்று முடிவுக்கு வந்தார். அவ்வாறு '' சங்கம்'' கட்டியெழுப்பப்படாமல் இருந்தால்... தன் இனமக்கள் வர்க்க அடிப்படையிலான அரசுகளின் வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடுவார்கள்... ஆனால் அவற்றைத் தோற்கடிக்கமுடியாமல், தன் மக்கள்தான் அழிவார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட புத்தர்... '' சங்கம்'' என்ற ஒரு அமைப்பை.. தொல்லினப் பழங்குடி மக்கள் பின்பற்றிவந்த வாழ்க்கைமுறைகளைப் பின்பற்றும் ஒரு அமைப்பை உருவாக்கினார். அதாவது எதார்த்த ( Reality) இன்னல்களிலிருந்து விடுபட நேரடியான போராட்டத்திற்குப்பதிலாக... ''சங்கம்'' என்ற ஒரு மாயைத்தோற்றத்தை ( Illusion) முன்வைத்தார். எனவே அவரால் அவரது காலத்து தொல்லினப் பழங்குடி மக்களின் இன்னல்களுக்கு ஒரு விடையை ... அது மாயைத்தோற்றமாக இருந்தாலும்... எதார்த்த உலகிற்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பை முன்வைக்கமுடிந்தது. இது வன்முறை அரசுகளுக்கு வசதியாகப் போய்விட்டது. தங்களை எதிர்த்த .. தங்களால் வன்முறையால் தோற்கடிக்கமுடியாத..தொல்லினப் பழங்குடி மக்களின் போராட்டத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளமுடிந்தது. புத்தர் தன் இன மக்களின் இன்னல்களை .. அனைத்து மக்களின் இன்னல்களாகப் பொதுமைப்படுத்தி.... ஒரு கருத்தியல் கோட்பாட்டையும் முன்வைத்தார். அரசர்களே முன்வந்து அவரது கோட்பாடுகளையும் ''சங்கத்தையும்'' பின்பற்றும்படி மக்களிடம் பரப்புரை மேற்கொண்டனர். புத்தர் வரலாற்று வளர்ச்சி விதிகளைப் புரிந்துகொண்டு... குறிப்பிட்ட வரலாற்றுக்கட்டத்தில் தனிச்சொத்துரிமையும், வர்க்கங்களும், அரசுகளும் தோன்றுவது தவிர்க்க இயலாதது... அதேவேளையில் தன் இன மக்களும் இன்னல்களுக்கு உட்படக்கூடாது. இதுவே அவரது அடிப்படையான... உண்மையான... மக்கள்பால்கொண்ட அன்பினால் ... முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளும் சங்கமும். தன் இன மக்களை ஏமாற்றுவது அல்ல அவரது நோக்கம்! சமூக வரலாற்று வளர்ச்சிகளைப் புரிந்துகொண்டு ஒருவர் .... தனியுடைமை , வர்க்கச் சமுதாயத்தின் கோரங்களையும் அதேவேளையில் வரலாற்றில் அது தவிர்க்கமுடியாத ஒரு கட்டம் என்பதையும் புரிந்துகொண்ட ஒரு நல்ல உள்ளத்தின் செயல்பாடு அது! அவ்வாறு புரிந்துகொள்ளாமல், அக்காலகட்டத்தில் வேறுபல வழிமுறைகளை ... கோட்பாடுகளை முன்வைத்தவர்கள் எல்லோரும் புத்தர்முன் தோல்வியடைந்தார்கள்! புத்தரால் வரலாற்றில் வெற்றிபெறமுடிந்தது!
மேலும் கௌடில்யர் போன்று தனியுடைமை அரசுகளுக்கு ஆதரவாக... மிக மோசமான வழிமுறைகளையும் மேற்கொண்டு... தொல்லினப் பழங்குடி மக்களைப் புத்தர் ஏமாற்றவில்லை. கௌடில்யர் தொல்லின மக்களை அழித்தொழிக்க நின்ற தனியுடமை அரசுகளுக்கு ஆதரவாக நின்றவர். ஆனால் புத்தரோ தன் மக்களுக்காக நின்றவர்!
இதுபற்றி மேலும் தெளிவு பெற விரும்புவர்கள் தயவுசெய்து, தத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் '' உலகாயதம்'' என்ற நூலின் ( தமிழாக்கம் பேரா. எஸ். தோதாத்ரி - என்சிபிஎச் பதிப்பகம்) 
''சங்கமும் நியதியும்: எதார்த்தமும் மாயத்தோற்றமும் பற்றிய ஆய்வுகள்'' என்ற இயலைப் (பக்கம் 599-686) படிக்கவும்.

ஏன் திடீரென்று நான் புத்தருக்குச் சென்றுவிட்டேன் என்று எனது முகநூல் நண்பர்கள் திகைக்கலாம்! நாளை அதற்கு விடைதருகிறேன்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India