சனி, 24 ஆகஸ்ட், 2024

பேச்சாங்கிலம் கற்றுக்கொடுப்பதில் உள்ள சிக்கல்கள்

பேச்சாங்கிலம் கற்றுக்கொடுப்பதில் உள்ள சிக்கல்கள்

----------------------------------------------------------------------------------------------

ஒலிப்பில் மேற்கூற்று ஒலியன்கள் (suprasegmental phonemes) ஆங்கிலத்தில் எவ்வாறு அமைகின்றன என்பது ஒரு சிக்கல்.

(1) தமிழைப்பொறுத்தவரை, ஒரு சொல்லுக்குள் அசையழுத்தம் (Syllabic stress) பொருள் வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமையாது. ஆனால் ஆங்கிலத்தில் அது மிக மிக முக்கியம். ஒரே எழுத்துக்களைக்கொண்ட சொல்லில் உள்ள அசைகளில் குறிப்பிட்ட அசைக்கு அழுத்தம் கொடுப்பதைப்பொறுத்து, அச்சொல் பெயரா வினையா என்று முடிவுக்கு வரவேண்டும். per-mit என்பதில் உள்ள இரண்டு அசைகளில் முதல் அசைக்கு அழுத்தம் கொடுத்தால் (primary stress) பெயர்ச்சொல், இரண்டாவது அசைக்கு அழுத்தம்கொடுத்தால் வினைச்சொல் . ஆங்கில அகராதிகளில் சொற்களைக் கொடுக்கும்போது, இந்த அசையழுத்தத்தைக் குறியிட்டுக் காண்பிக்கிறார்கள். ஆனால் இந்த வேறுபாட்டை ஆங்கிலம் கற்கிற நாம் கற்றுக்கொள்கிறோமா அல்லது கற்றுக்கொடுக்கப்படுகிறதா என்பது ஐயமே.

(2) அதுபோல , ஒரு ஆங்கிலச்சொல்லில் ஒரு சில எழுத்துக்கள் ஒலிக்கப்படுவது இல்லை. Plumber என்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதில் "b" ஒலிக்காது. ஆனால் நாம் அதையும் சேர்த்துத்தான் ஒலிக்கிறோம்.

(3) அடுத்து, ஆங்கில வாக்கியங்களில் பொதுவாக இலக்கணச் சொற்கள் - have, has, been போன்ற சொற்கள் - ஏனைய பொருண்மைச் சொற்களைவிட வெளிப்பாடுகளில் சற்று மறைந்தே நிற்கும் - I have been coming - என்பதில் "I" , "coming" ஆகிய சொற்களைவிட have, been போன்ற இலக்கணச்சொற்கள் சற்றுக் குறைவாக வெளிப்படையாகத் தெரியும்.

மேற்கூறியவற்றில் இங்கு நாம் பேசுகிற ஆங்கிலம் எந்த அளவு சரியாக இருக்கிறது என்பது ஐயத்திற்கு உரியதே ஆகும். எனவே, பொதுவாக இங்கு நாம் கற்றுக்கொள்கிற பேச்சாங்கிலம் உண்மையில் எழுத்து ஆங்கிலமே. இதனால்தான் ஆங்கிலேயர்களின் உரையாடல்களை நாம் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

நமது பள்ளிகளில் ஆங்கிலப்பாடத்தில் இலக்கணத்தை முழுமையாக வெளிப்படுத்துகிற வாக்கியங்களைக் கற்றுக்கொடுக்கிறோம். இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள இது தேவைதான். ஆனால் நடைமுறை உரையாடலில் இந்த வாக்கியங்களை (Sentences) எவ்வாறு கூற்றாக (utterance) மாற்றியமைப்பது என்பதுபற்றிய பாடம் குறைவு.

what is your name ? - My name is sundaram (Sentences)

Your name, please - Sundaram (Utterances)

முதலாவது வாக்கியம், ஆங்கில இலக்கணத்தை (Structure of sentences) வெளிப்படுத்துகிறது.

இரண்டாவது கூற்று, நடைமுறைக் கருத்தாடல் (Structure of utterances) எவ்வாறு அமையவேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. கருத்துப்புலப்படுத்த மதிப்பு (Communicative value) உள்ள கூற்று இது. இந்த இரண்டாவதுதான் பேச்சாங்கிலத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இங்கு பள்ளிகளில் எழுத்தாங்கிலத்தையே பேச்சாங்கிலமாகவும் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பது எனது கருத்து. (நானும் இப்படித்தான் கற்றுக்கொண்டு, ஆங்கிலத்தைப் 'பேசி வருகிறேன்'!) .

மேலைநாடுகளில் தற்போது கருத்தாடல் நோக்கில் அல்லது கருத்துப்புலப்படுத்தநோக்கில் (discourse approach / Language as communication and for communication) மொழிக்கல்வி என்பது பின்பற்றப்படுகிறது. ஆனால் இங்கே நாம் இன்னும் வாக்கிய இலக்கண அறிவை வெளிப்படுத்தும்நோக்கிலேயே மொழியைக் கற்றுக்கொடுக்கிறோம்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

எது இரட்டைவழக்குமொழி?

 எழுத்துமொழியானது எந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கோ, வட்டாரத்திற்கோ அல்லது குழுவுக்கோ உரிய ஒரு வழக்காக இருக்காது. பொது வழக்காகத்தான் இருக்கும். ஆனால் பேச்சுமொழி, வட்டாரம், சமூகப்பிரிவு போன்றவற்றைப் பொறுத்துப் பல வழக்குகளாக நீடிக்கும்.

இயற்கை மொழிகளில் எழுத்துமொழியானது பேச்சுமொழியோடு வேறுபட்டுத்தான் பொதுவாக இருக்கும். ஆனால் இந்த வேறுபாடு குறிப்பிட்ட எல்லைக்கு அல்லது அளவுக்குமேலே சென்றால்தான் அந்த மொழி இரட்டைவழக்குமொழி என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவுகோல்மட்டுமே ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்குப் போதாது. மொழிச்செயல்பாடுகளில் இந்த இந்தச் செயல்பாடுகளுக்கு எழுத்துத்தமிழ், இந்த இந்தச் சொயல்பாடுகளுக்குப் பேச்சுமொழி என்று அந்தக் குறிப்பிட்ட மொழிச்சமுதாயம் வரையறுத்து இருக்கவேண்டும். அடுத்து, மக்களின் நோக்கும் இந்த வழக்குகளைப் பொறுத்து மாறும். எழுத்துவழக்கை உயர் வழக்காகவும் பேச்சுவழக்கைத் தாழ்வான அல்லது கொச்சையான வழக்காகவும் அந்த மொழியைப் பேசுபவர்கள் கருதுவார்கள். எனவே ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்கு மொழியமைப்பு வேறுபாடு மட்டும் அல்லாமல், வேறு சில பண்புகளும் அமைந்திருக்கவேண்டும்.

எழுத்துமொழியானது எந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கோ, வட்டாரத்திற்கோ அல்லது குழுவுக்கோ உரிய ஒரு வழக்காக இருக்காது. பொது வழக்காகத்தான் இருக்கும். ஆனால் பேச்சுமொழி, வட்டாரம், சமூகப்பிரிவு போன்றவற்றைப் பொறுத்துப் பல வழக்குகளாக நீடிக்கும்.

இயற்கை மொழிகளில் எழுத்துமொழியானது பேச்சுமொழியோடு வேறுபட்டுத்தான் பொதுவாக இருக்கும். ஆனால் இந்த வேறுபாடு குறிப்பிட்ட எல்லைக்கு அல்லது அளவுக்குமேலே சென்றால்தான் அந்த மொழி இரட்டைவழக்குமொழி என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவுகோல்மட்டுமே ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்குப் போதாது. மொழிச்செயல்பாடுகளில் இந்த இந்தச் செயல்பாடுகளுக்கு எழுத்துத்தமிழ், இந்த இந்தச் செயல்பாடுகளுக்குப் பேச்சுமொழி என்று அந்தக் குறிப்பிட்ட மொழிச்சமுதாயம் வரையறுத்து இருக்கவேண்டும். அடுத்து, மக்களின் நோக்கும் இந்த வழக்குகளைப் பொறுத்து மாறும். எழுத்துவழக்கை உயர் வழக்காகவும் பேச்சுவழக்கைத் தாழ்வான அல்லது கொச்சையான வழக்காகவும் அந்த மொழியைப் பேசுபவர்கள் கருதுவார்கள். எனவே ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்கு மொழியமைப்பு வேறுபாடு மட்டும் அல்லாமல், வேறு சில பண்புகளும் அமைந்திருக்கவேண்டும்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

ஆங்கிலம் இரட்டைவழக்குமொழியா?

 எழுத்துமொழி உள்ள மொழிகளில் உறுதியாக பேச்சுமொழியும் இருக்கும். அதில் ஐயம் இல்லை. ஆங்கிலத்திலும் பேச்சுமொழி உண்டு. எழுத்துமொழி உண்டு. ஆனால் இரட்டை வழக்குமொழி என்று ஒரு மொழியைச் சொல்லவேண்டுமென்றால் ( to categorize) இவை இரண்டுக்கும் இடையில் உள்ள அமைப்பு வேறுபாடு (Structural difference) அதிகமாக இருக்கவேண்டும். அதை எவ்வாறு கண்டறிவது? எவ்வளவு வேறுபாடுகள் இருந்தால் (Quantification of differences) ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறலாம்? இதற்கு எழுத்துமொழி, பேச்சுமொழி இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியை அளக்கவேண்டும். எவ்வாறு அளப்பது? எழுத்துமொழிச் சொற்களைப் பேச்சுமொழிச் சொற்களாக மாற்றுவதற்கு எத்தனை மாற்று விதிகள் (Conversion rules) தேவைப்படுகின்றன என்பதை வைத்து அளக்கலாம்.

1) தலை - தலெ (இடைவெளி ஒரு விதி).
2) இலை - எலெ (இடைவெளி இரண்டு விதிகள்)
3) தேய்த்துக்கொள் - தேச்சுக்கோ (இடைவெளி மூன்று விதிகள்)
4) உடைத்தான் - ஒடெச்சா(ன்) (இடைவெளி நான்கு விதிகள்)
தமிழில் இவ்வாறு சில சொற்களுக்கு நான்கு மாற்றுவிதிகள் தேவைப்படுகின்றன. ஆங்கிலம்போன்ற மொழிகளில் இந்த அளவுக்கு இடைவெளி கிடையாது. தமிழில் மாற்றுவிதிகள் சுமார் 30 உள்ளன.
மேலும் இரட்டைவழக்குமொழிகளில் எழுத்து, பேச்சுமொழிகள் இரண்டையும் தனித்தனியே கற்றுக்கொள்ளவேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கற்றுக்கொள்ளமுடியாது. ஆனால்ஆங்கிலம் போன்ற மொழிகளில் எழுத்து ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டால், பேச்சுக்குத் தக்க பேச்சுமொழியாக மாற்றமுடியும். எனவேதான் தமிழ்மொழி படிக்க வருகிற அந்நியர்களிடம் முதலில் கேட்கப்படவேண்டியது அவர்கள் கற்க விரும்புவது எழுத்துமொழியையா அல்லது பேச்சுமொழியையா என்ற வினா. கள ஆய்வுக்கு போகவிரும்புகிறவர்கள் பேச்சுத்தமிழைக் கற்றுக்கொள்வார்கள், தமிழ் நூல்களைமட்டும் வைத்துக்கொண்டு ஆய்வுசெய்யவிரும்புபவர்கள் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொள்வார்கள். இரண்டும் தேவைப்படுகிறவர்கள் ஒன்றை முதலில் கற்றுக்கொண்டு மற்றொன்றை அடுத்துத் தனியாகக் கற்பார்கள். இரட்டைவழக்கு இல்லாத ஆங்கிலம்போன்ற மொழிகளில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் மற்றொன்றைச் சில மாற்றங்களுடன் நடைமுறையில் கற்றுக்கொள்ளலாம். இதுபற்றிய நீண்ட ஆய்வுகள் சமூகமொழியியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரட்டைவழக்குமொழிச்சூழல் என்பது ஒரு சமூகமொழியியல்ச் சூழல். இதுபற்றிப் பெர்குசன்(Ferguson), பிஷ்மேன் (Fishman) , டி சில்வா (De Silva) போன்றோர் ஆய்வுகள் செய்துள்ளனர். தமிழுக்குப் பேரா. இரா.பி.சேதுப்பிள்ளை, பேரா. முத்துச்சண்முகம், பேரா. ஞானசுந்தரம் ஆகியோர் செய்துள்ளனர். இரண்டு முனைவர் பட்ட ஆய்வேடுகள் ( ஒன்று, எனது ஆய்வேடு, மற்றொன்று ஜான் பிரிட்டோ (அமெரிக்க வாழ் பேராசிரியரின் ஆய்வேடு. ). நான் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் படிக்கும்போது இங்கிலாந்து யார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் வருகைதரு பேராசிரியராக வந்திருந்தார். அவரிடம் நான் சமூகமொழியியல் கற்றுக்கொண்டேன். அவர் தமிழ் இரட்டைவழக்குபற்றி ஒரு சிறப்பான நூலை எழுதியுள்ளார்.
இடைவெளியை மாற்றுவிதிகள் கொண்டு அளக்கலாம் என்ற கருத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் பேரா. பொற்கோ. அவருடைய வழிகாட்டுதலில்தான் நான் முனைவர் பட்ட ஆய்வே மேற்கொண்டேன்.
சமூகமொழியியலில் இரட்டைவழக்கு என்பது துறைசார்ந்த ஒரு முக்கியமான கருத்து.

தமிழில் இரட்டைவழக்குச் சூழல் மாற்றப்படவேண்டுமா?

திரு. இராமசாமி செல்வராஜ்

----------------------------------------------------

இரட்டை வழக்கு மாற்றப்படவேண்டிய ஒன்று என்று இங்கே நீங்கள் கூறுவது சிறுவியப்பை அளிக்கிறது ஐயா. இதற்கு முன்னர் எழுத்துவழக்கில் தான் எழுதவேண்டும், பேச்சுவழக்கில் பேசவேண்டும் என்று நீங்கள் கூறியதாக நினைவு. இது மாற்றமா? இருவழக்கையும் நெருங்கக்கொண்டுவரவேண்டும் என்பதற்கான தேவை என்ன என்பதும் எனக்குத் தெரியவில்லை.

ந. தெய்வ சுந்தரம்

---------------------------------

நண்பரே. நான் என் நிலையை மாற்றவில்லை. இன்றைய இரட்டைவழக்குச் சூழலில் எழுத்தில் எழுத்துத்தமிழ், பேச்சில் பேச்சுத்தமிழ்தான் இருக்கவேண்டும். ஆனால் ஒரு நீண்ட கால வரலாற்றில் எவ்வாறு இரட்டை வழக்குச் சூழல் தோன்றியதோ அது போன்று எதிர்கால வரலாற்றில் இந்த இரட்டைவழக்குச் சூழல் மறையும். இன்றைய பொதுப்பேச்சுத்தமிழைத் தனிநபர்கள் உருவாக்கவில்லை. சமூக வளர்ச்சிதான் உருவாக்கியுள்ளது. அதுபோல பண்டித எழுத்துத் தமிழும் இன்று சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் தமிழாக மாறியுள்ளது. தமிழ்மொழியின் இந்த இயங்கியல் வளர்ச்சி எதிர்காலத்தில் இண்டுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும். இந்த இடைவெளிக் குறைப்பைத்தான் " இரட்டைவழக்குச் சூழல் மறைவு" என்று கூறுகிறேன். இதுபற்றித் தனியே ஒருபதிவு இடுகிறேன்.

திரு. இராமசாமி செல்வராஜ்

------------------------------------------------

சிறுகேள்விகளுக்கும் விரிவாக நீங்கள் கருத்துகளை முன்வைத்து விளக்குவது மிகவும் சிறப்பு. போற்றத்தக்கது. எழுதுங்கள் ஐயா, தெரிந்துகொள்கிறோம்.

ஒருவகையில் முந்தைய காலத்து உரைநடையைவிட இப்போது எளிமையாகியிருப்பது உண்மையே. இதன் தொடர்ச்சியாக இன்னும் எளிமையாகும்; அது பேச்சுத்தமிழுக்கு நெருங்கும் எனில் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அது மாற்றப்படவேண்டிய ஒன்று என்று சொன்னதால் தான் எனது ஐயத்தை எழுப்பினேன். எல்லோரும் அணுகும்விதத்தில் மொழி எளிமைப்படவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளும்படியான கருத்துத்தான். சங்க இலக்கிய காலத்துத்தமிழைப் பலரால் இயல்பாகப்படித்துப் புரிந்துகொள்ள இயலாதுதான். ஆனால், தற்காலத்தமிழ் எளிமையானது தானே. அதைக் கற்று, எழுதி, பழகி, சிறப்பாகக் கையாள முடியவேண்டும் தானே? ஆனால், அதற்கான குறைந்தளவு முயற்சியும் கைக்கொள்ளாமல், இயல்பானது பேச்சுத்தமிழே; செந்தமிழ் எல்லாம் தேவையில்லை என்று மேம்போக்காகக்கூறிச்சென்றுவிடும் சிலருக்காக (அது பலராகவும் இருக்கலாம்), மொழியின் சிறப்பை, அழகை விட்டுக்கொடுக்கவேண்டுமா எனும் ஆதங்கத்தில் எழும் கேள்வி.

எனது அனுபவத்தில் இதைப்போன்றே முன்னர், இலக்கணம், ஒற்றுப்பிழை எல்லாம் முக்கியமில்லை; கருத்துவெளிப்பாடுதான் முக்கியம் என்று சிலர் என்னிடம் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். அதை ஏற்க இயலவில்லை. அதுபோன்றே இரட்டைவழக்கு மாறவேண்டும் எனில் அது யாருக்காக, எதற்காக, ஏன், என்று கேள்விகள் எழுகின்றன. காலப்போக்கில் இயல்பாக இதன் வேறுபாடுகள் மறையும் என்றால் அது சரியே. (என் கற்பனைக்கு அது சற்று எட்டாததாய் இருக்கிறது 🙂 ).

ந. தெய்வ சுந்தரம்

---------------------------------

நன்றி நண்பரே. உறுதியாக எழுத்துத்தமிழின் அமைப்பை எதற்காகவும் விட்டுக்கொடுக்கவேண்டிய தேவை இல்லை. சிலர் எழுத்துத்தமிழே வேண்டாம், பேச்சுத்தமிழையே எழுதுவோம் என்று கூறலாம். அது நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுதப்பட்ட இலக்கியங்கள், இன்றைய எழுத்துத்தமிழில் உள்ள நூல்களை எதிர்காலத்தில் எவ்வாறு படிக்கமுடியும்? அதுபோன்று பேச்சுத்தமிழைக் கைவிடச்சொல்லி, எழுத்துத்தமிழையே அனைவரும் நடைமுறை உரையாடல்களுக்கும் பயன்படுத்தவேண்டும் என்று கூறுவதும் போகாத ஊருக்கு வழிகூறுவதுபோலவே அமையும். எனவே, இந்த இரட்டைவழக்குப் பிரச்சினையைச் சற்றுக் குறைக்கச் சில திட்டமிட்ட மொழிவளர்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளலாம். அவ்வளவுதான். நான் முன்பேகூறியதுபோல, எதிர்காலச் சமுதாய வளர்ச்சியில் இந்த இரட்டைநிலை வழக்கு இல்லாமல் போகலாம். ஆனால் அது எப்போது நடைபெறும், எப்படி நடைபெறும் என்பதுபற்றியெல்லாம் இப்போது ஒன்றும் நாம் கூறமுடியாது.

வங்காளமொழியில் ஒரு கட்டத்தில் இரட்டைவழக்குச் சூழல் நிலவியதாகவும் (சாது பாஷா, சலித் பாஷா) , பின்னர் தாகூர் காலத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளால் அதில் இரட்டைவழக்குச் சூழல் மாறியதாகவும் கூறப்படுகிறது. அதுபோன்று, தெலுங்கிலும் இரட்டைவழக்குச் சூழல் தோன்றி நீடிப்பது தடுக்கப்பட்டது என்று பேராசிரியர் பி. எச். கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். கன்னடத்திலும் உயர்வழக்கு என்பது பிராமணியச் சமுதாயத்தின் வழக்காக இருந்ததாகவும் பேச்சுவழக்கு மற்றவர்களின் வழக்காக இருந்ததாகவும், பின்னர் இந்த நிலை மாறிவிட்டது என்றும் பேரா. எச்.எம். நாயக் கூறியுள்ளார்.

இரட்டைவழக்குச் சூழலால் சில பாதிப்புகள் உண்டுதான். முறைசார்ப் பள்ளிக்கல்வி பெறாதவர்கள் எழுத்துத்தமிழைப் படிக்கவோ, அதில் எழுதவோ முடியவில்லை என்பது ஒரு பிரச்சினை. இதனால் முதியோர் கல்வியில் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்கின்றனர். அதுபோன்று தமிழ்க் குழந்தைகள் பிறந்து வளரும்போது இயற்கையாகப் பேச்சுத்தமிழைப் ''பெற்றுக்கொள்கின்றனர்''. ஆனால் பள்ளிக்குச் செல்லும்போது பாடங்கள் எழுத்துத்தமிழில் இருப்பதால், அதை ஒரு பிறமொழிபோன்று படிக்கிறார்கள். இருப்பினும் 10,12 ஆண்டுகள் படித்தபிறகும் எழுத்துத்தமிழில் தவறு இல்லாமல் எழுதமுடியவில்லை. அதுபோன்று தமிழைக் கற்றுக்கொள்ள வருகிற பிறமொழிக்காரர்கள் இரண்டு வழக்குகளையும் தனித்தனியே கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. ஒரு வழக்கைமட்டும் கற்றுக்கொண்டு, மற்றொரு வழக்கையும் கையாளுவதில் சிக்கல் உண்டு. இந்தச் சிக்கல்களை எல்லாம் ஆய்ந்து, அவற்றின் பாதிப்பைக் குறைப்பதற்கான மொழிவளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

முதலில் மாற வேண்டியது . . . இரண்டுவழக்குகள்பற்றிய மக்களின் சமூகநோக்கு. காலையிலிருந்து இரவு வரை பேசுகிற பேச்சுத்தமிழைக் கொச்சைத்தமிழ் என்றும் எழுத்துத்தமிழே உயர்தமிழ் என்றும் கருதுகிற மனப்பாங்கு அகலவேண்டும். இரண்டுமே தமிழ்தான், சரியான தமிழ்தான் என்ற கருத்து ஓங்கவேண்டும்.

ஆங்கிலமும் தமிழும் - உச்சரிப்பில்!

திரு. வேல்முருகன் சுப்பிரமணியன்: 

ஐயா ஒரு ஐயம்.

know என்பதை பேச்சுமொழியில் சரியாகச்சொல்ல தேவைப்படும் அறிவை மாற்றுவிதிகளின் எண்ணிக்கைக்குள் கொண்டுவரவேண்டுமா?

ந. தெய்வ சுந்தரம் :

ஆங்கிலத்தில் எழுதுவதை அப்படியே பல நேரங்களில் வாசிக்கமுடியாது. cat, cut, car என்பதை உச்சரிக்கும்போது c" ஐ ''k" என்று உச்சரிக்கிறோம். ஆனால் city, cipher போன்றவற்றை உச்சரிக்கும்போது , "c" என்பதை "c" என்றே உச்சரிக்கிறோம். Psychology என்பதை உச்சரிக்கும்போது, "p" ஐ விட்டுவிடுகிறோம். 'creche" என்பதை "krush" என்று வாசிக்கிறோம். இதன் காரணமாகத்தான் ஆங்கில அகராதியில் ஒவ்வொரு சொல்லுக்கும் அடைப்புக்குறிக்குள் உச்சரிப்பைத் தருகிறார்கள். உச்சரிப்புக்கான தனி அகராதிகளும் Daniel Jones, Gimpson போன்றவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. ஏன் இவ்வாறு மாறியமைகிறது என்பதற்கான காரணங்களுக்கு இப்போது நான் செல்லவில்லை.

ஆனால் தமிழில் எழுதுவதை அப்படியே வாசிக்கலாம். மாற்றொலி விதிகள்மட்டும் தெரிந்திருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, சொல்முதலிலும் சொல் இடையில் இரட்டித்துவரும்போது 'க' என்பது ஒலிப்பில்லா வல்லினமாகவும் (கடல், அக்காள்) , சொல் நடுவில் மெல்லினத்திற்குப்பின் வரும்போது ஒலிப்புள்ள ஒலியாகவும் ( தங்கை, பங்கம்) , சொல் நடுவில் இரண்டு உயிர்களுக்கு நடுவில் வரும்போது சற்று உரசல் தன்மையுடனும் உச்சரிக்கப்படுகிறது. இதற்கு இவ்வாறு தெளிவான விதிகள் இருப்பதால் எழுதுவதை அப்படியே வாசிக்கமுடியும். இந்தச் சிக்கலும்கூட வல்லினங்களுக்குமட்டும்தான் உண்டு. முற்றுகரம், குற்றுகரத்திற்கும் உண்டு. மற்றபடி சிக்கல் இல்லை.

தாங்கள் கூறியுள்ள know என்பதில் உள்ள k உச்சரிக்கப்படவில்லை. ஆனால் இதுபோன்ற வேறுபாடுகளுக்கும் சில விதிகளைக் கூறலாம். c என்ற எழுத்துக்கு அடுத்துப் பின்னுயிர்கள் a, u போன்றவை வந்தால் k என்று உச்சரிக்கப்படும். அவ்வாறு இல்லாமல் முன்னுயிர்கள் வந்தால் c என்றே உச்சரிக்கப்படும். மேலும் ஆங்கிலம் பிறமொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கும்போது, அவற்றின் உச்சரிப்புகளையும் சேர்த்து கடன் வாங்கிவிடுகிறது.

அடுத்து, தமிழில் ஒலியன்களுக்குமட்டும் எழுத்துகள் இருப்பதால் , அயல்மொழிச்சொற்களைக் கடன் வாங்கும்போதும் , ஒலிப்புள்ள ஒலியாக இருந்தாலும், தமிழில் உள்ள எழுத்துகளையே பயன்படுத்துகிறோம். குண்டு (bomb), குண்டு (stout) ; பாவம் (expression) , பாவம் (sin) , பால் (ball), பால் (milk) போன்ற சொற்களைப் பார்த்தால் இது வெளிப்படையாகத் தெரியும். இந்தச் சொற்களை வாசிக்கும்போது குழந்தைகளுக்குச் சிக்கல் ஏற்படலாம். ஆனால் பெரியவர்களுக்கு இந்தச் சிக்கல் பெரும்பாலும் வராது.


தமிழ் இரட்டைவழக்குபற்றிய இரண்டு ஐயங்கள் .

 தமிழ் இரட்டைவழக்குபற்றிய இரண்டு ஐயங்கள் . . .

----------------------------------------------------------------------
தமிழ் இரட்டைவழக்குபற்றிய என் பதிவில் நண்பர் திரு. மாலன் இரண்டு ஐயங்களை எழுப்பியுள்ளார். உண்மையில் வரவேற்கவேண்டிய ஐயங்கள் இந்த இரண்டும். இதற்கான விளக்கம் அனைவருக்கும் பயன்படும் என்பதால், இதைத் தனிப்பதிவாக இடுகிறேன்.
ஐயம் 1 : இரட்டை வழக்குத் தோன்றுவதற்கான சூழல்/சமூகக் காரணிகள் என்ன?
ஐயம் 2 : பேச்சிலிருந்து எழுத்தா, எழுத்திலிருந்து பேச்சா என்ற புதிருக்கான விடையை அறிதல் இயலுமா?
ஐயம் 2-க்கான பதிலை முதலில் விவாதிக்கலாம் எனக் கருதுகிறேன். எழுத்துமொழி உள்ள எந்தவொரு (இயற்கை) மொழியிலும் பேச்சுமொழி இல்லாமல் இருக்காது. இந்தப் பேச்சுமொழிதான் அந்த மொழிச்சமுதாயத்தில் முதலில் நீடித்திருக்கமுடியும். அந்த மொழிச்சமுதாயத்தின் வளர்ச்சியையொட்டி - அந்தப் பேச்சுமொழிக்கு வரிவடிவம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். அங்கு ஒரு பேச்சுவழக்குதான் இருந்திருந்தால், அந்தப் பேச்சுமொழிக்கு வரிவடிவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் இருந்திருந்தால், அச்சமுதாயத்தில் ''உயர்ந்தோர்'' பேச்சுவழக்குக்கு வரிவடிவம் கொடுப்பது என்பது இயற்கைதான். அந்த வர்க்கத்தின் கலை, இலக்கிய, பண்பாட்டுத் தேவைகளுக்காக அதனுடைய 'பேச்சுவழக்கு' எழுத்துவழக்காகவும் வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால் ஒன்று உறுதி . . . பேச்சுவழக்குதான் எந்தவொரு சமுதாயத்திலும் தோன்றி நீடித்திருக்கமுடியும். எழுத்துமொழி பின்னர்தான் - ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பேச்சுமொழிக்கான எழுத்துவடிவமாக - தோன்றியிருக்கமுடியும். இதில் ஐயத்திற்கு இடமே இல்லை என்பது எனது கருத்து.
இப்போது ஐயம் 1-க்கான பதிலை அறிய முயலலாம்.
எழுத்துவழக்கு தோன்றிய முதல் காலகட்டத்தில் எழுத்துவழக்குக்கும் பேச்சுவழக்குக்கும் இடையில் வேறுபாடு இருந்திருக்கமுடியாது. அவ்வாறு உருவாக்கப்பட்ட எழுத்துமொழியில் இலக்கணங்கள், இலக்கியங்கள் உருவாகும்போது, ஒருவகையான தரப்படுத்தம் - codification, standardization, modernization - மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
இந்தத் தரப்படுத்தப்பட்ட எழுத்துமொழியானது, தொடர்ந்து தன் பண்புக்கூறுகளை மாற்றாமல் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த எழுத்து வழக்கிற்கு அடிப்படையான பேச்சுவழக்கு சமுதாயத்தின் தேவைகளையொட்டி மாறிக்கொண்டுதான் இருக்கும். அதை எந்தவொரு தனிமனிதராலும் அல்லது குழுவாலும் தடுத்துநிறுத்தமுடியாது.
ஆனால் எழுத்துமொழியை மாற்றாமல் அப்படியே தக்கவைக்க குறிப்பிட்ட குழுவால் முடியும். இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வளர்ந்து , மாறிவந்த பேச்சுமொழிக்கும் ஒரு குழுவின் தேவைக்காகத் தரப்படுத்தப்பட்டு, அவ்வளவு சீக்கிரத்தில் - பேச்சுவழக்கின் வேகத்திற்கு ஈடுகொடுத்து மாறாத எழுத்துமொழிக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கும். எழுத்துவழக்கும் காலப்போக்கில் சற்று மாறலாம். ஆனால் அந்த மாற்றத்தை அந்த ஆதிக்கக்குழுவினர் கட்டுப்படுத்தமுடியும். ஆனால் பேச்சுவழக்கைக் கட்டுப்படுத்தமுடியாது.
அதன் விளைவு . . . இரண்டு வழக்குக்கிற்கும் இடையில் வேறுபாடு - இலக்கண அமைப்பு, மொழிச்செயல்பாடு, சமுதாயநோக்கு ஆகியவற்றில் வேறுபாடு - தோன்றுவது இயற்கையே. இதன் விளைவுதான் இரட்டைவழக்குகள் தோற்றமும் நீடிப்பும் ஆகும்.
பொதுவாக, மிகவும் பழமையான மொழிகளில்தான் - கிரேக்கம், லத்தீன், தமிழ் போன்ற மொழிகளில்தான் - இந்த இரட்டைவழக்குச் சூழல் நீடிக்கிறது. ஆனால் இந்த இரட்டைவழக்குச்சூழல் தோன்றுவதற்கு மொழிக்குடும்பமோ அல்லது பூகோள வரையறையோ காரணம் கிடையாது.
'இரட்டை வழக்கு' தமிழ் ஒரு திராவிட மொழிக்குடும்பம் (பூகோளப் பகுதி தென்னிந்தியா); 'இரட்டைவழக்கு' சிங்களம் இந்தோ-ஆரியக்குடும்பம் (பூகோளப்பகுதி இலங்கை) ; 'இரட்டை வழக்கு' கிரேக்கம்' இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் (பூகோளப்பகுதி கிரீக்) ; 'இரட்டை வழக்கு 'அரபுமொழி' செமிட்டிக் குடும்பம் (பூகோளப்பகுதி அராபியநாடுகள்).
இரட்டைவழக்குச் சூழல் நிலவிய அல்லது நிலவுகிற மொழிகள் சில:
கிரேக்கம், அரபுமொழி, ஸ்விஸ் ஜெர்மன், ஹைத்தியன் கிரியோல், தமிழ், சிங்களம், வங்காளம், தெலுங்கு, கன்னடம். இவற்றில் தற்போது வங்காளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றில் இரட்டைவழக்குச் சூழல் மறைந்துவிட்டன அல்லது மறைந்துவருகின்றன.
இரட்டைவழக்குமொழிகளைப்பொறுத்தவரையில் உயர்வாகக் கருதப்படுகிற 'எழுத்துமொழி அல்லது இலக்கியமொழி' தனது வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட குழுவின் வழக்காக இல்லாமல், ஒரு பொதுவழக்காக மாறி அமைகிறது. ஆனால் பேச்சுவழக்குகள் அவ்வாறு இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பேச்சுவழக்குகள் நீடிக்கலாம். அவற்றின் இடையே ஒற்றுமைகள் இருந்தாலும் வேற்றுமைகளும் நீடிக்கும்.
சில கட்டங்களில் எழுத்துமொழிகளில்கூட ஒன்றுக்குமேற்பட்ட பிரிவுகள் தோன்றலாம். 'செந்தமிழ்ச்செல்வி' போன்ற தமிழ் இலக்கிய இதழ்களின் எழுத்துத்தமிழ் நடை அனைவருக்கும அவ்வளவாகப் புரியாது. ஆனால் தினமணி, தினத்தந்தி, தினமலர், ஆனந்த விகடன், கல்கி, பாடநூல்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிற எழுத்துத்தமிழை அனைவராலும் புரிந்துகொள்ளமுடியும். இருப்பினும் பேச்சுத்தமிழில் இருக்கிற பல்வேறு வழக்குகள் போன்று பல்வேறு எழுத்துவழக்குகள் இருக்காது.
தமிழில் நீடிக்கிற எழுத்துவழக்கு- பேச்சுவழக்கு வேறுபாடுபற்றி பேராசிரியர்கள் ரா.பி. சேதுப்பிள்ள, முத்துச்சண்முகம் ஆகியோர் ஆய்ந்து இருந்தாலும், அவர்களது ஆய்வுகள் தமிழைத் தாண்டிச் செல்லவில்லை. ஆனால் Ferguson என்ற சமூகமொழியியல் அறிஞர் உலகில் நீடிக்கின்ற பல்வேறு இரட்டைவழக்கு மொழிகளை ஆய்ந்து, 'இரட்டைவழக்கு - Diglossia ' என்ற ஒரு மொழியியல் வகைப்பாட்டை முன்வைத்தார். அவரும் இரட்டைவழக்கு மொழிகளுக்கான அனைத்துப் பண்புகளும் உடைய மொழிக்கான எடுத்துக்காட்டாக, தமிழ்மொழியைக் கூறினார். அதற்குப்பின்னர் மொழியியல் அறிஞர்கள் பலர் பலமுனைகளில் இரட்டைவழக்குச் சூழல்பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்றனர்.
இரட்டைவழக்குத் தமிழில் எழுத்துவழக்கானது எந்தவொரு குறிப்பிட்ட பகுதியினரின் அல்லது பகுதியின் வழக்கு இல்லை; ஆனால் பேச்சு வழக்குகள் தமிழில் பூகோளப் பகுதிகளையொட்டி - மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், குமரித்தமிழ், சென்னைத் தமிழ் என்று - பல வழக்குகளாக நீடிக்கின்றன. ஆனால் இன்றைய தமிழகத்தில் கல்வி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகியவற்றின் வளர்ச்சியால் ஒரு பொதுப் பேச்சுத்தமிழும் (Common Spoken Tamil) தோன்றி நீடிக்கிறது. இன்றைய திரைப்படங்களில் பயன்படுத்துகிற பேச்சு வழக்கு ஒரு பொது வழக்காக இருப்பதால்தான் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் அதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. (பழைய தமிழ்த் திரைப்படங்களில் அரசர்கள் உட்பட உயர்ந்த நிலைந்த நிலையில் உள்ள மக்கள் எழுத்துத்தமிழில் பேசினார்கள். நகைச்சுவைக்காகப் பேசும் பாத்திரங்களே பேச்சுத்தமிழில் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) இன்றும் திரைப்படங்களில் பாத்திரங்களின் யதார்த்தத்திற்காகக் குறிப்பிட்ட பகுதிகளின் வழக்குகள் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். மற்றபடி பொதுப்பேச்சுத்தமிழ்தான் பயன்படுத்தப்படுகிறது.
இரட்டைவழக்குச் சூழல் உண்மையில் மாற்றப்படவேண்டிய ஒன்று. இது ஒரு சமூகமொழியியல் பிரச்சினை. ஆனால் எவ்வாறு இதைத் தீர்ப்பது என்பதில் பல கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. பொதுப்பேச்சுவழக்கையே எழுத்துவழக்காகக் கொள்ளலாம்; அல்லது எழுத்துவழக்கையே பேச்சுவழக்காக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டுக்குமே நடைமுறை யதார்த்தத்தில் வாய்ப்பு இல்லை. இதற்கு மாற்றாக, பொதுப் பேச்சுவழக்குக்கும் பொது எழுத்துவழக்குக்கும் இடைவெளியைக் குறைக்க முயலலாம். இதற்கான மொழி மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளலாம். இதுபற்றித் தனியாக விவாதிக்கவேண்டும்.

இரட்டை வழக்குமொழி என்றால் என்ன?

 ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறுவதற்கான அடிப்படைபற்றி ஒரு உரையாடல் . . .

----------------------------------------------------------------------
பேரா. நயினார் எம். அனந்தபுரி
-----------------------------------------
ஆங்கிலமும் தமிழைப்போல் (தமிழ் அளவுக்கு இல்லையென்றாலும்) இருவழக்கு மொழி தானே. Spoken English என்று சொல்கிறார்களே! முறையாக ஆங்கிலம் படித்தவர்களும் 'Spoke English ' வகுப்புகளுக்குச் செல்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பேரா. கோவிந்தசுவாமி இராஜகோபால்
---------------------------------------------
To larger extent, English too a Diglossic language.
ந. தெய்வ சுந்தரம்
---------------------
நன்றி பேராசிரியர் அவர்களே. எழுத்துமொழி உள்ள மொழிகளில் உறுதியாக பேச்சுமொழியும் இருக்கும். அதில் ஐயம் இல்லை. ஆங்கிலத்திலும் பேச்சுமொழி உண்டு. எழுத்துமொழி உண்டு. ஆனால் இரட்டை வழக்குமொழி என்று ஒரு மொழியைச் சொல்லவேண்டுமென்றால் ( to categorize) இவை இரண்டுக்கும் இடையில் உள்ள அமைப்பு வேறுபாடு (Structural difference) அதிகமாக இருக்கவேண்டும்.
அதை எவ்வாறு கண்டறிவது? எவ்வளவு வேறுபாடுகள் இருந்தால் (Quantification of differences) ஒரு மொழியை இரட்டைவழக்குமொழி என்று கூறலாம்? இதற்கு எழுத்துமொழி, பேச்சுமொழி இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியை அளக்கவேண்டும். எவ்வாறு அளப்பது? எழுத்துமொழிச் சொற்களைப் பேச்சுமொழிச் சொற்களாக மாற்றுவதற்கு எத்தனை மாற்று விதிகள் (Conversion rules) தேவைப்படுகின்றன என்பதை வைத்து அளக்கலாம்.
1) தலை - தலெ (இடைவெளி ஒரு விதி).
2) இலை - எலெ (இடைவெளி இரண்டு விதிகள்)
3) தேய்த்துக்கொள் - தேச்சுக்கோ (இடைவெளி மூன்று விதிகள்)
4) உடைத்தான் - ஒடெச்சா(ன்) (இடைவெளி நான்கு விதிகள்)
தமிழில் இவ்வாறு சில சொற்களுக்கு நான்கு மாற்றுவிதிகள் தேவைப்படுகின்றன. ஆங்கிலம்போன்ற மொழிகளில் இந்த அளவுக்கு இடைவெளி கிடையாது. தமிழில் மாற்றுவிதிகள் சுமார் 30 உள்ளன.
மேலும் இரட்டைவழக்குமொழிகளில் எழுத்து, பேச்சுமொழிகள் இரண்டையும் தனித்தனியே கற்றுக்கொள்ளவேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் ஆங்கிலம் போன்ற மொழிகளில் எழுத்து ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டால், பேச்சுக்குத் தக்க பேச்சுமொழியாக கற்றுக்கொள்ளமுடியும்.
எனவேதான் தமிழ்மொழி படிக்க வருகிற அந்நியர்களிடம் முதலில் கேட்கப்படவேண்டியது அவர்கள் கற்க விரும்புவது எழுத்துமொழியையா அல்லது பேச்சுமொழியையா என்ற வினா. கள ஆய்வுக்குப் போகவிரும்புகிறவர்கள் பேச்சுத்தமிழைக் கற்றுக்கொள்வார்கள், தமிழ் நூல்களைமட்டும் வைத்துக்கொண்டு ஆய்வுசெய்யவிரும்புபவர்கள் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொள்வார்கள். இரண்டும் தேவைப்படுகிறவர்கள் ஒன்றை முதலில் கற்றுக்கொண்டு மற்றொன்றை அடுத்துத் தனியாகக் கற்பார்கள். இரட்டைவழக்கு இல்லாத ஆங்கிலம்போன்ற மொழிகளில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் மற்றொன்றைச் சில மாற்றங்களுடன் நடைமுறையில் கற்றுக்கொள்ளலாம்.
இதுபற்றிய நீண்ட ஆய்வுகள் சமூகமொழியியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரட்டைவழக்குமொழிச்சூழல் என்பது ஒரு சமூகமொழியியல்ச் சூழல். இதுபற்றிப் பெர்குசன்(Ferguson), பிஷ்மேன் (Fishman) , டி சில்வா (De Silva) போன்றோர் ஆய்வுகள் செய்துள்ளனர். தமிழுக்குப் பேரா. இரா.பி.சேதுப்பிள்ளை, பேரா. முத்துச்சண்முகம், பேரா. ஞானசுந்தரம் ஆகியோர் செய்துள்ளனர். இரண்டு முனைவர் பட்ட ஆய்வேடுகள் ( ஒன்று, எனது ஆய்வேடு, மற்றொன்று ஜான் பிரிட்டோ (அமெரிக்க வாழ் பேராசிரியரின் ஆய்வேடு. ).
நான் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் படிக்கும்போது இங்கிலாந்து யார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி சில்வா வருகைதரு பேராசிரியராக வந்திருந்தார். அவரிடம் நான் சமூகமொழியியல் கற்றுக்கொண்டேன். அவர் தமிழ் இரட்டைவழக்குபற்றி ஒரு சிறப்பான நூலை எழுதியுள்ளார்.
இடைவெளியை மாற்றுவிதிகள் கொண்டு அளக்கலாம் என்ற கருத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் பேரா. பொற்கோ. அவருடைய வழிகாட்டுதலில்தான் நான் முனைவர் பட்ட ஆய்வே மேற்கொண்டேன்.
சமூகமொழியியலில் இரட்டைவழக்கு என்பது துறைசார்ந்த ஒரு முக்கியமான கருத்து.
பேரா. பொற்கோ அவர்கள் மிக அழகாகச் சொல்வார்கள் . . . ''இரட்டைப்பழங்கள் வேறு; இரு பழங்கள் வேறு.'' என்று. இருமொழியம் (Bilingualism) என்பது வேறு , இரட்டைவழக்குகள் (Diglossia) என்பது வேறு.

புதன், 21 ஆகஸ்ட், 2024

தவறின்றித் தமிழ் எழுத . . .

பேச்சுத்தமிழை இயற்கையாக நாம் கற்றுக்கொள்வதால் பிழை, தவறுகள் வராது. ஆனால் எழுத்துத்தமிழை நாம் 5 வயதுக்குப்பிறகுதான் பள்ளிகளில் முறைசார் கல்வியில் பயில்கிறோம். இதனால் ஒரு சிக்கல், மாணவர்களின் எழுத்துத்தமிழில் பேச்சு வழக்கு கலந்துவரும். இதைத் தவிர்ப்பதற்குத் தனியாகவே சில பாடங்கள் இருக்கவேண்டும். அடுத்து, எழுத்துத்தமிழில் முறைசார் இலக்கணத்தை அனைவரும் பயில்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே தவறுகள் நேர்வது இயல்பே. ஒரு மருத்துவர் தம் துறையில் மிகச் சிறந்த வல்லுநராக இருக்கலாம். ஆனால் எழுத்துத்தமிழ் இலக்கணத்தை முறைசார் கல்வியில் முழுமையாக அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம். . இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். எனவே தமிழ்மொழித்துறை சார்பான மாணவர்கள், ஆசிரியர்களுக்குமட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. அப்படியென்றால் என்ன செய்வது?

ஒருவர் தமது எழுத்துக்களில் தவறு இல்லாமல் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார் . . . ஆனால் முறையான இலக்கணத்தைப் பெற அவருக்கு வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். இதுபோன்ற வேளைகளில் கணினி மென்பொருள்கள் உதவலாம். யாரும் தவறாக எழுதவேண்டுமென்று நினைக்கமாட்டார்கள். ஆனால் தவறாக எழுதிவிட்டால் மற்றவர்கள் குறைசொல்வார்களே என்று பலர் தமிழில் எழுதாமலேயே இருந்துவிடுவார்கள்.

இதைத் தவிர்க்க ஒரே வழி . . . ஒருவர் தவறாக எழுதினாலும் பல முனைகளில் அதைத் திருத்தித்தரும் தமிழ் மென்பொருள்கள் இருந்தால் போதும். இச்சிக்கலைத் தீர்க்கலாம். இதுவே தமிழ் மக்களுக்கு நாம் செய்யும் ஒரு பெரிய உதவியாக இருக்கும். எனக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் முறையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் தவறு இருக்கலாம் என்று கருதி, ஆங்கில மென்பொருள்களைப் பயன்படுத்தி எனது ஆங்கிலப் பிழைகளைச் சரிசெய்துகொள்கிறேன்.

மேலும் வேறுபட்ட நோக்கங்களைக்கொண்ட வேறுபட்ட ஆங்கில எழுத்துக்களுக்கு . . . கடிதம், கட்டுரை, ஆய்வுக்கட்டுரை என்று . . . பல தரப்பட்ட கருத்தாடல்களுக்கு ஏற்ப ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு இன்று செய்யறிவுத்திறன் மென்பொருள்கள் - ChatGPT. Gemini, Meta ai, Claude என்று பல மென்பொருள்கள் கிடைக்கின்றன. நான் தற்போது பல உதவிகளை அவற்றிடமிருந்து பெற்றுக்கொள்கிறேன். இதுபோன்று தமிழுக்கும் இருந்தால் . . . ? உறுதியாக, தமிழ் அனைவரின் உரைகளிலும் தவறுகள் இல்லாமல் இடம் பெறும்.

ஆனால் ஒரு எச்சரிக்கை! மேற்கூறிய மென்பொருள்களையே நமக்கு வேண்டியதை எழுதித்தரச் சொல்லக்கூடாது. நாம் முதலில் நமது உரையை நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எழுதிவிட்டு, பின்னர் அதை மேற்கூறிய மென்பொருள்கள்கொண்டு திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் நமக்கு இருக்கிற ஆங்கில அறிவும் மறந்து . மறைந்து விடும்.

சிலர் பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர் ''மேற்குறிப்பிட்ட மென்பொருள்கள் கதை எழுதும், கவிதை இயற்றும்''என்று. இந்தக் கருத்து தவறானது. உதவிக்குத்தான் இந்த மென்பொருள்களைப் பயன்படுத்தவேண்டும். அவற்றையே சார்ந்து இருக்கக்கூடாது.

பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் உண்டா?

 சிலர்  இலக்கணம் என்று கருதுவது மொழியில் இருக்கிற இலக்கணத்தை ஆய்ந்து எழுதப்படுகிற இலக்கணநூலைக் (தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்கள்) குறிக்கிறது எனக் கருதுகிறேன். இலக்கண ஆசிரியர்கள் ஒரு மொழியின் இலக்கணத்தை உருவாக்கவில்லை. மாறாக, அதை ஆராய்ந்து எழுதுகிறார்கள். பேச்சுத்தமிழுக்கு முழுமையான இலக்கணம் உண்டு. ஆனால் அதை ஆய்ந்து எழுதப்பட்ட இலக்கண நூல்கள் குறைவு. பேராசிரியர்கள் குமாரசாமி ராஜா, முத்துச்சண்முகம், ஹெரால்ட் ஷிப்மேன், வாசு இரங்கநாதன் ஆகியோர் எழுதியுள்ளனர். நானும் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வில் கொடுத்துள்ளேன்.

இலக்கணம் இல்லாமல் எந்தவொரு மொழியும் - பேச்சுமொழி உட்பட - இருக்கமுடியாது. நாம் பேச்சில் '' நான் வருவான்' 'மரமெ பாத்தேன்' 'நாளெய்க்கு வந்தேன்' என்றெல்லாம் பேசமாட்டோம். எனவே பேச்சுத்தமிழுக்கும் இலக்கணம் முழுமையாக உண்டு. எழுத்துத்தமிழிலிருந்து வேறுபடும் இடங்களில்கூட குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில்தான் பேச்சுமொழி மாறி அமைகிறது. எழுத்துத்தமிழ் ' இலை' என்பது பேச்சுத்தமிழில் 'எலெ' என்று மாறுகிறது. அதாவது 'இ' என்பது 'எ' என்று மாறுகிறது. ஆனால் 'இரும்பு' என்பது 'எரும்பு' என்று மாறாது. எழுத்துத்தமிழில் 'இ' அல்லது 'உ' என்று அமைகிற சொற்கள், அவற்றையடுத்து ஒரு மெய்யும் 'அ' அல்லது 'ஐ' வந்தால்தான் 'எ' என்று மாறும். 'இரும்பு' என்பதில் 'இ' -யை அடுத்து ஒரு மெய் வந்தாலும் , அதையடுத்து 'உ' வருவதால் அது, 'எ' என்று மாறுவதில்லை. 'உலகம் என்பது 'ஒலகம்' என்று மாறுகிறது. ஆனால் 'உண்மை' என்பது 'ஒண்மை' என்று மாறாது.

எனவே, பேச்சுத்தமிழுக்கு எழுத்துத்தமிழ் போன்று முழுமையான இலக்கணம் உண்டு. அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார்கள். மற்றவர்கள் அதைப் புரியமுடியாது.

இன்னும் சொல்லப்போனால், பேச்சுத்தமிழுக்கும் எழுத்துத்தமிழுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றுதான். சொற்களின் ஒலியன் அமைப்பில்தான் வேறுபாடு உண்டு. அதனால்தான் எழுத்துத்தமிழை முறைசார்க் கல்வியில் படிக்காதவர்கூட, எழுத்துத்தமிழை நாம் வாசிக்கும்போது அதைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களால் எழுத்துத்தமிழில் எழுதமுடியாமல் இருக்கலாம். இதற்குக் காரணம், பேச்சுத்தமிழ் குழந்தை பிறந்து வளரும்போது இயற்கையாக 'வளர்கிறது'. ஆனால் எழுத்துத்தமிழை முறைசார்க் கல்வியில்தான் குழந்தை 'கற்றுக்கொள்கிறது'.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

எழுத்துவழக்கில் சந்தி விதிகள் தேவையா இல்லையா?

 எழுத்துவழக்கில் சந்தி விதிகள் தேவையா இல்லையா என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் திரு மாலன் அவரகளும் நானும் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் . . .

------------------------------------------------------------------
நண்பர் திரு. மாலன் அவர்கள்:
தமிழ்ச் சமூகம் குறுகியது அல்ல உலகளாவியது பேச்சு வழக்கில் உள்ளதைப் போன்று எழுத்து வழக்கிலும் வேற்பாடு இருக்கும் பேச்சு வழக்கிற்கு அருகில் எழுத்து வழக்கைக் கொண்டு வருவதுதான் உகந்தது பேச்சு வழக்கில் வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக இடம் பெறுவதில்லை எடுத்துக்காட்டாக என் வீடு, உன் பணம் அஃறிணைக்குரிய விகுதிகள் உயர்திணைக்குப் பயன்படுத்தப்படுகின்றன உதாரணம் என் மனைவி ஒருமை பன்மை மங்குகின்றன எடுத்துக்காட்டு: விருதுகள் வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் அனுமதிப்பவர்கள் அல்லது கண்டும் காணாதிருப்பவர்கள் ஒற்றுப் பிழைகளுக்கு, ஒற்று விடுபடலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். மொழி அடிப்படையில் மக்களுடையது அவர்கள் வழக்கிற்கு ஏற்ப இலக்கணம் அமைய வேண்டும் காலுக்குத்தான் செருப்பு.
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------
தமிழ்மொழிபற்றிப் பேசும்போது, தமிழ் ஒரு இரட்டைவழக்குமொழி (Diglossic language) என்பதை மனதில் கொள்ளவேண்டும். எழுத்துவழக்கு, பேச்சுவழக்கு என்று இரண்டு இரட்டைவழக்குக்கள் நிலவுகின்றன. தமிழ்மொழிச் சமுதாயம் இந்த இரண்டையும் பயன்படுத்துகிறது.
ஆனால் மிகத் தெளிவாக, பேச்சுவழக்கை எங்கெங்கே பயன்படுத்தவேண்டும், எழுத்துவழக்கை எங்கே பயன்படுத்தவேண்டும் என்பதை வரையறுத்து வைத்துள்ளது. சில மொழிச்செயல்பாடுகளில் இரண்டும் கலந்துவரும். கட்டுரைகள், நூல்கள், பாடங்கள் போன்றவற்றிற்கு எழுத்துத்தமிழைத்தான் பயன்படுத்தவேண்டும்; அன்றாட உரையாடல் போன்றவற்றிற்குப் பேச்சுவழக்கைத்தான் பயன்படுத்தவேண்டும். யாரும் தனது வீட்டில் அல்லது உறவினர்கள், நண்பர்களிடம் எழுத்துவழக்கைப் பேசமாட்டார்கள். இந்தச் செயல்பாட்டுப் பங்கீட்டைத் (Functional distribution) தனிநபர்கள் தீர்மானிப்பதில்லை. தமிழ்ச் சமுதாயமே தீர்மானித்துவைத்துள்ளது.
உண்மையில் இரட்டைவழக்குச் சூழல் ஒரு பிரச்சினைதான் (language problem). ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது நீடித்துவருகிறது. இந்த இரண்டுவழக்குக்களுக்கும் இடையில் சொல் அளவில் அமைப்பு வேறுபாடு (Structural difference) உண்டு. தொடர் அளவில் இது குறைவுதான். மக்களுடைய நோக்கும் (Social attitude) வேறுபடுகிறது. காலையிலிருந்து இரவுவரை பேசுகிற பேச்சுவழக்கைத் தாழ்வானதாகவும் எழுத்துவழக்கை உயர்வாகவும் கருதுகிறது. code mixing என்ற ஒரு நிலையும் இங்குக் காணப்படுகிறது. இரண்டுவழக்குக்களும் சில இடங்களில் கலந்துவரும்.
பேச்சுவழக்கைப் பயன்படுத்தும்போது, உரையாடுபவர்கள் நேரில் இருப்பதால் , பல மொழிக்கூறுகளை - சந்தி, சில ஒலியன்கள், சில சொல் அல்லது தொடரமைப்பு விதிகளை- பயன்படுத்தாவிட்டாலும் உரையாடுபவர்களுக்குப் பொருளைப் புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்காது. ஆனால் எழுத்துவழக்கு அப்படிப்பட்டது இல்லை. எழுதுபவர்களுக்கும் அதை வாசிப்பவர்களுக்கும் இடையில் இடம், காலம் போன்றவை உண்டு. எனவே சில இலக்கணக் கூறுகளை எழுதுபவர் பின்பற்றினால் கருத்துப்பரிமாற்றம் தடையின்றி இருக்கும்.
பேச்சுமொழியிலும் சந்தி, சாரியை போன்றவை இடம்பெறத்தான் செய்கின்றன. யாரும் பேச்சுவழக்கில் 'மரத்தை' என்பதை 'மரமை' என்று கூறமாட்டார்கள். 'மரத்தெ' என்று கூறும்போதும் சாரியை இடம்பெறுகிறது. அதுபோன்று 'படிச்சுப்பார்' என்றுதான் பேசுகிறோம். 'படிச்சு பார்' என்று கூறுவதில்லை. இதுபற்றிப் பேச்சொலியியல் அடிப்படையில் ஆய்வுசெய்தால் உணரலாம். எனவே, பேச்சுத்தமிழில் சந்தி இல்லை என்று கருதவேண்டாம். சந்தியை விட்டுவிட்டாலும் உரையாடுபவர்கள் பேச்சுச்சூழலை வைத்துக்கொண்டு புரிந்துகொள்வார்கள். ஆனால் எழுத்துத்தமிழில் அவ்வாறு இல்லை. 'அவன் வேலை பார்க்கிறான்' 'முக்கிய தலைவர்' 'நாளை காலை(ப்)பார்க்கலாம்' போன்றவற்றில் சந்தி இல்லையென்றால் குழப்பம் ஏற்படும். எனவே ''ஒற்று விடுபடலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்.'' என்று கூறுவது சரி இல்லை எனக் கருதுகிறேன்.
'செருப்புக்குத் தகுந்த கால்' என்பது சரிதான். ''பேச்சுத்தமிழுக்குத் தகுந்த இலக்கணம், எழுத்துத்தமிழுக்குத் தகுந்த இலக்கணம் '' என்று இருக்கவேண்டும். இரண்டும் ஒரே வழக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு எழுத்துத்தமிழைத்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். பேச்சுத்தமிழை இல்லை. பேச்சுத்தமிழ் குழுந்தைகளுக்குத் தானாக உருவாகக்கூடியது.
எனவே எழுத்துத்தமிழின் கட்டமைப்பைக் கைவிடுவது சரி இல்லை. ஆனால் இந்த இடத்தில் ஒரு கருத்தை வலியுற்றுத்த விரும்புகிறேன். பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் இரண்டுமே தொடர்ந்து மாறிக்கொண்டுதான் வருகின்றன. சொல்வளம் மட்டுமல்லாமல், இலக்கண வளமும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. எனவே அதைக் கருத்தில்கொண்டு, இன்றைய எழுத்துத்தமிழில் நிலவுகிற இலக்கணத்தை ஆராய்ந்து முன்வைக்கவேண்டும். தொல்காப்பியம், நன்னூல்மட்டுமே போதும் என்று கருதக்கூடாது. விதிகள் மாறலாம். ஆனால் விதிகளே கூடாது என்று கருதுவது சரியல்லை என்பது எனது கருத்து.
குழந்தைகள் வளர வளர, அவர்களின் உடைகளின் அளவும் (செருப்பு உட்பட) மாறித்தான் ஆகவேண்டும். இது ஒரு இயற்கையின் இயற்கை விதி.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

இலக்கண நூலிலேயே இலக்கணப் பிழை . . .

 தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கு உதவுவதற்காக எழுதப்பட்ட ஒரு நூலின் (2009) பதிப்புரையில் ...

''எவ்வித கைம்மாறும் '',
''தமிழை படியுங்கள்'' போன்ற சொற்றொடர்களைப் பார்த்தேன். உறுதியாக ஆசிரியருக்கு இவை தவறு என்று தெரியும். இதில் எனக்கு ஐயம் இல்லை. அச்சுப்பிழையாக இருக்கலாம். இருந்தாலும் இதுபோன்ற தவறுகள் நிகழ்வது தவிர்க்கப்படவேண்டும்.

தவறு (mistake) , பிழை (error) இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஒன்றைப் பற்றி அறியாமல் இருப்பதைப் பிழை என்று கூறலாம். ஆனால் அறிந்த ஒன்றையே முறையாகச் செய்யாதது தவறு.
பிழைகளைத் தவிர்க்க முறையான அறிவைப் பெறுவதே வழி.
தவறுகளைத் தவிர்க்க எழுதும்போது கவனத்துடன் எழுதவேண்டும். நம்மை அறியாமல் தெரிந்த ஒன்றையும் தவறாக எழுதிவிடுவோம். இதைத் தவிர்க்க நாம் எழுதியதையே மீண்டும் மீண்டும் படித்துப்பார்க்கவேண்டும்.
தட்டச்சு செய்யும்போது இரண்டுவகைகளில் பிழைகள் ஏற்படலாம். ஒன்று, தட்டச்சுச் செய்யும்போது. தவறுதலாக விசைகளைப் பயன்படுத்துவதனால் ஏற்படுவது ஆகும். இதை ஆங்கிலத்தில் typographical error என்று அழைப்பார்கள்.
மற்றொன்று ''எனக்கு உங்கள்மீது அக்கறை உண்டு'' என்று எழுதும்போது, 'அக்கறை'' என்ற சொல்லில் வருவது வல்லின ''ற'' -ஆவா அல்லது இடையின ''ர'' -ஆவா என்ற குழப்பம் ஏற்படுவது ஆகும். இதை ஆங்கிலத்தில் ""Cognitive error "" என்று குறிப்பிடுகிறார்கள்.
மூன்றாவது தவறு ஒன்று உண்டு. ''அவனுக்கு மனம் சரியில்லை'' என்று கூறுவதற்குப் பதில் ''அவனுக்கு மணம் சரியில்லை'' என்று அவசரத்தில் செய்கிற தவறு. ''மல்லிகைப் பூவிற்கு நல்ல மணம் உண்டு'' என்பதற்குப் பதில் ''மல்லிகைப் பூவிற்கு நல்ல மனம் உண்டு'' என்று எழுதிவிடுவது ஆகும். இதை ஆங்கிலத்தில் "Real Word error" என்று அழைக்கிறார்கள். 'மனம்' 'மணம்' என்ற இரண்டு சொற்களும் தமிழில் உண்டு. எனவே இதில் ஏற்படும் பிழையைக் கணினி கண்டறிவது சற்றுக் கடினம்.
தற்போதைய கணினி உலகில் தமிழ்மொழியைப் பயன்படுத்துபவர்கள் மேற்கூறிய எந்தவொரு பிழையைச் செய்தாலும் அதைத் திருத்தித்தரும் மென்பொருள் - சொல்லாளர் மென்பொருள் - உருவாக்கப்படவேண்டும். ஆங்கிலத்திற்கு MS Word -ஐப் பயன்படுத்தும்போது, மேற்கூறிய பிழைகளையெல்லாம் அது சுட்டிக்காட்டுகிறது. அதுபோன்ற மென்பொருள் தமிழுக்கு உருவாக்கப்பட்டால், நமது கோப்புக்களில் தவறுகள் இல்லாமல் ஆக்கலாம். ஆனால் இதை உருவாக்குவதற்கு ஒலியனியல், உருபனியல், தொடரியல், பொருண்மையியல் போன்ற பல இலக்கண நுட்பங்கள் தெரிந்திருக்கவேண்டும். பல நேரங்களில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்க ஆங்கிலத்தைப் பயன்படுத்திவிடுகிறோம். நாம் எந்தவொரு தவறு செய்தாலும் - தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் - கணினி திருத்திக்கொடுத்துவிடும் என்ற நிலையைக் கணினித்தமிழில் ஏற்படுத்துவது முதன்மையான பணியாகும். தமிழ் இலக்கண அறிவு, மொழியியல் அறிவு, கணினியியல் அறிவு மூன்றும் இணைக்கப்படும்போதுதான் இந்த வளர்ச்சிநிலை உருவாகும். இன்றைய செய்யறிவுத்திறன் மென்பொருள்கள் வளர்ச்சியடைந்த சூழலில் இதைச் செய்யமுடியும். செய்யவேண்டும்.

பேச்சுத்தமிழை இயற்கையாக நாம் கற்றுக்கொள்வதால் பிழை, தவறுகள் வராது. ஆனால் எழுத்துத்தமிழை நாம் 5 வயதுக்குப்பிறகுதான் பள்ளிகளில் முறைசார் கல்வியில் பயில்கிறோம். இதனால் ஒரு சிக்கல், மாணவர்களின் எழுத்துத்தமிழில் பேச்சு வழக்கு கலந்துவரும். இதைத் தவிர்ப்பதற்குத் தனியாகவே சில பாடங்கள் இருக்கவேண்டும். அடுத்து, எழுத்துத்தமிழில் முறைசார் இலக்கணத்தை அனைவரும் பயில்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே தவறுகள் நேர்வது இயல்பே. ஒரு மருத்துவர் தம் துறையில் மிகச் சிறந்த வல்லுநராக இருக்கலாம். ஆனால் எழுத்துத்தமிழ் இலக்கணத்தை முறைசார் கல்வியில் முழுமையாக அவருக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம். . இது எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். எனவே தமிழ்மொழித்துறை சார்பான மாணவர்கள், ஆசிரியர்களுக்குமட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கிறது. அப்படியென்றால் என்ன செய்வது?
ஒருவர் தமது எழுத்துக்களில் தவறு இல்லாமல் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார் . . . ஆனால் முறையான இலக்கணத்தைப் பெற அவருக்கு வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். இதுபோன்ற வேளைகளில் கணினி மென்பொருள்கள் உதவலாம். யாரும் தவறாக எழுதவேண்டுமென்று நினைக்கமாட்டார்கள். ஆனால் தவறாக எழுதிவிட்டால் மற்றவர்கள் குறைசொல்வார்களே என்று பலர் தமிழில் எழுதாமலேயே இருந்துவிடுவார்கள்.
இதைத் தவிர்க்க ஒரே வழி . . . ஒருவர் தவறாக எழுதினாலும் பல முனைகளில் அதைத் திருத்தித்தரும் தமிழ் மென்பொருள்கள் இருந்தால் போதும். இச்சிக்கலைத் தீர்க்கலாம். இதுவே தமிழ் மக்களுக்கு நாம் செய்யும் ஒரு பெரிய உதவியாக இருக்கும். எனக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் முறையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் தவறு இருக்கலாம் என்று கருதி, ஆங்கில மென்பொருள்களைப் பயன்படுத்தி எனது ஆங்கிலப் பிழைகளைச் சரிசெய்துகொள்கிறேன்.
மேலும் வேறுபட்ட நோக்கங்களைக்கொண்ட வேறுபட்ட ஆங்கில எழுத்துக்களுக்கு . . . கடிதம், கட்டுரை, ஆய்வுக்கட்டுரை என்று . . . பல தரப்பட்ட கருத்தாடல்களுக்கு ஏற்ப ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு இன்று செய்யறிவுத்திறன் மென்பொருள்கள் - ChatGPT. Gemini, Meta ai, Claude என்று பல மென்பொருள்கள் கிடைக்கின்றன. நான் தற்போது பல உதவிகளை அவற்றிடமிருந்து பெற்றுக்கொள்கிறேன். இதுபோன்று தமிழுக்கும் இருந்தால் . . . ? உறுதியாக, தமிழ் அனைவரின் உரைகளிலும் தவறுகள் இல்லாமல் இடம் பெறும்.
ஆனால் ஒரு எச்சரிக்கை! மேற்கூறிய மென்பொருள்களையே நமக்கு வேண்டியதை எழுதித்தரச் சொல்லக்கூடாது. நாம் முதலில் நமது உரையை நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எழுதிவிட்டு, பின்னர் அதை மேற்கூறிய மென்பொருள்கள்கொண்டு திருத்திக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் நமக்கு இருக்கிற ஆங்கில அறிவும் மறந்து . மறைந்து விடும்.
சிலர் பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர் ''மேற்குறிப்பிட்ட மென்பொருள்கள் கதை எழுதும், கவிதை இயற்றும்''என்று. இந்தக் கருத்து தவறானது. உதவிக்குத்தான் இந்த மென்பொருள்களைப் பயன்படுத்தவேண்டும். அவற்றையே சார்ந்து இருக்கக்கூடாது.

பிழையோ தவறோ இல்லாமல் எழுத்துத்தமிழில் அனைவராலும் எழுதமுடியுமா?

 பிழையோ தவறோ இல்லாமல் எழுத்துத்தமிழில் அனைவராலும் எழுதமுடியுமா?

----------------------------------------------------------------------------------------------------------
நேற்று நான் இட்ட பதிவில் எழுத்துத்தமிழில் எழுத்துப்பிழையோ ஒற்றுப்பிழையோ சொற்றொடர்ப்பிழையோ இல்லாமல் ஒருவர் எழுதினால் சிறப்பு எனக் கூறியிருந்தேன். அதையொட்டியதுதான் இந்தப் பதிவு.
எழுத்துத்தமிழைப் பயன்படுத்துபவர்களை இரண்டுவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, முறைசார்ப் பள்ளிக் கல்வியில் தமிழைக் கற்றவர்கள். அடுத்து, அவ்வாறு பள்ளிக்குச் செல்லாமலேயே நடைமுறையில் தமிழைக் கற்றுக்கொண்டவர்கள்.
பள்ளிக்கல்வியில் இரண்டாம் மொழியாக ( அல்லது முதல்மொழியாக) ஆங்கிலக் கல்வியைப் பெறுபவர்கள் , தங்கள் சொந்த விருப்பம், முயற்சி போன்றவற்றின் அடிப்படையில் தங்களது ஆங்கில (எழுத்து) மொழித்திறனை மிகவும் உழைத்துக் கற்றுக்கொள்கிறார்கள். He is coming என்றுதான் எழுதவேண்டும். மாறாக, He are coming என்று எழுதக்கூடாது என்று தெளிவாகக் கற்றுக்கொள்கிறார்கள். நேரடியாக ஆங்கில இலக்கணத்தைக் கற்றுக்கொள்வதுமூலம் அல்லது நேரடிப் பழக்கத்தின்மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.
(எழுத்துத்தமிழை) முதல்மொழியாகப் படித்தாலும் அல்லது இரண்டாம் மொழியாகப் படித்தாலும், ஆங்கிலம்போன்று தமிழைக் கற்றுக்கொள்ளலாம். மேலும் தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதற்கான அத்தனை வாய்ப்புக்களும் உள்ளன. வாசிப்பது, கேட்பது மூலம் தமிழைக் கற்றுக்கொள்வதற்குச் சுற்றுப்புற வாய்ப்பு ஏராளம். அவ்வாறு இருந்தும் முறைசார்க் கல்விமூலம் தமிழைக் கற்றவர்கள் ஏன் தவறு செய்யவேண்டும்? ஆங்கிலத்திற்கு அளிக்கிற முக்கியத்துவத்தைத் தமிழுக்கு அவர்கள் ஆங்கிலத்திற்கு அளிப்பதில்லை. இதற்கு ஆங்கிலம் பற்றிய அவர்களது நோக்குக்கும் தமிழ்பற்றிய அவர்களது நோக்குக்கும் இடையில் உள்ள வேறுபாடே.
பேச்சுத்தமிழை இயற்கையாகப் பெற்றுக்கொள்கிற குழந்தைகள் மூன்று வயதுக்குள் பேச்சுத் தமிழ் இலக்கணத்தை (முறைசார் கற்றல் மூலம் இல்லை!) கற்றுக்கொள்கின்றன. தங்களது சூழலில் கிடைக்கிற தரவுகளை வைத்துக்கொண்டே கற்றுக்கொள்கின்றன. எந்த ஒரு குழந்தையும் தனது ஐந்து வயதில் ''நான் நாளைக்கு வந்தேன்'' என்று கூறாது. நேரடியாகக் குழந்தை எந்தவொரு இலக்கண விதியையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
அடுத்து, இன்று ஒரு மிகப் பரந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள செய்யறிவுத்திறன் மென்பொருள்கள் தங்களுக்கு அளிக்கப்படுகிற கோடியே கோடித் தரவுகளைப் பயன்படுத்தி ( நேரடியாக இலக்கணத்தைக் கற்றுக்கொள்ளாமல்) எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்கின்றன.
அவ்வாறு இருக்கும்போது, எழுத்துத்தமிழைமட்டும் சரியாகக் கற்றுக்கொள்ள சிலரால் ஏன் முடிவதில்லை? ஒற்று இடுவது தேவையா, எழுத்துப்பிழை இருந்தால் என்ன நட்டம் போன்ற கேள்விகளை முன்வைத்துத் தங்கள் எழுத்துத்தமிழ் பற்றாக்குறையை - இயலாமையை - முயற்சியின்மையை - நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். ஆங்கிலத்தில் அவ்வாறு தவறு செய்வார்களா? மாட்டார்கள். ஏன்?
அடுத்து, முறைசார்த் தமிழ்க் கல்வி பெறாதவர்கள்கூட எழுத்துத்தமிழ் இதழ்களை நாம் வாசித்துக்காட்டினால் தெளிவாகப் புரிந்துகொள்கவார்கள். மேடையில் எழுத்துத்தமிழில் பேசினால் புரிந்துகொள்கிறார்கள். எனவே பெரும்பான்மையான இலக்கண விதிகள் பேச்சுத்தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் பொதுவானவேயே. இரண்டும் வேறு வேறு மொழிகள் இல்லை. இரட்டைவழக்குமொழி. அவ்வளவுதான்!
ஒற்று இடுவதற்குக் காரணம் உண்டு. பொருண்மையைச் சரியாக வெளிப்படுத்த அது தேவை. மேலும் ஒற்று விதிகள் ஒன்றும் நூற்றுக்கணக்கில் இல்லை. அதுபோன்று சொல் அமைப்பு, சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றிற்கான விதிகளும் நூற்றுக்கணக்கில் கிடையாது. எனவே விதிகளின் எண்ணிக்கை இங்குப் பிரச்சினை இல்லை.
தமிழ்மொழிபற்றிய நமது நோக்கே - தாழ்வாகப் பார்க்கிற நோக்கே - தமிழைத் தவறாக எழுதுவதற்கு அடிப்படை. தமிழ்ப் பயன்பாடும் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.
உண்மையில்லாத காரணங்களைக் கூறித் தமிழைத் தவறாக எழுதுவதை நியாயப்படுத்துவது சரி இல்லை. தவறாக ஆங்கிலம் எழுதிவிட்டு அதற்கு ஆங்கில மொழி அமைப்பே , இலக்கணமே கடினமாக இருக்கிறது யாராவது கூறுகிறார்களா? கூறமாட்டார்கள்.
எனவே முறையாக, தவறுகள் இல்லாமல், எழுத்துத்தமிழை நாம் கற்றுக்கொள்ளலாம். கொஞ்சம் முயற்சி தேவை. விருப்பமும் தேவை. தமிழ்மொழி நமது இனத்தின் மொழி - அடையாளம் - என்ற தாய்மொழி உணர்வும் தேவை.
ஆங்கிலத்தைத் தவறு இல்லாமல் பேசவும் எழுதவும் முயல்கிற நாம் . . . அதே உணர்வுடன் எழுத்துத்தமிழையும் தவறு இல்லாமல் எழுத முயலலாமே. எழுத்துத்தமிழுக்கும் பேச்சுத்தமிழுக்கும் இடையில் சொற்களில் அமைகிற எழுத்துக்களில் சற்று வேறுபாடு உண்டு. அவ்வளவுதான். ''ஒலகம்'' என்று சொல்வதை ''உலகம்'' என்று எழுதுகிறோம். இந்த உ - ஒ வேறுபாட்டுக்கும் தெளிவான விதி இருக்கிறது. 'உண்மை' என்ற சொல் பேச்சுத்தமிழில் 'ஒண்மை' என்று மாறுவது கிடையாது. இதுபோன்ற விதிகள் ஏறத்தாழ 30 விதிகள் உள்ளன. அவ்வளவுதான். மற்றபடி சொற்றொடர் அமைப்பில் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது.
எனவே, மொழிபற்றிய தெளிவான கொள்கை, மொழி கற்றல்பற்றிய தெளிவான கொள்கை, தாய்மொழி உணர்வு , கற்றுக்கொள்வதற்கான முயற்சி - இவையே நமக்குத் தேவை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India