சனி, 27 ஜூன், 2020

பேராசிரியர் எஸ். இராஜேந்திரன்

பேராசிரியர் ச. இராஜேந்திரன். தமிழகத்தின் மூத்த கணினிமொழியியல் பேராசிரியர். கடந்த 30 ஆண்டுகளுக்குமேலாக இத்தளத்தில் மிகப்பெரிய உழைப்பை நல்கி வருபவர். அமைதியாக ஆனால் மிக ஆழமாகத் தனது ஆய்வைத் தொடர்ந்துவருபவர். அவர் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்.

தமிழறிஞர்கள்பற்றி (60)
பேராசிரியர் எஸ். இராஜேந்திரன் (1950) … எனது தொடரில் நான்காம் தலைமுறை – எனது தலைமுறையைச் சேர்ந்த மொழியியல் பேராசிரியர். தமிழகத்தில் இன்று தமிழ்க் கணினிமொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரில் ஒருவர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர். வேதியியலில் இளங்கலைப் பட்டம் (1971) பெற்றபிறகு, கேரளப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப்பட்டமும் (1971), பூனா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டமும் (1978) பெற்றார். பின்னர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனம் (1979-80), பூனா டெக்கான் கல்லூரி (1980-83), கல்கத்தாவில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் மொழிப்பிரிவு (1983-89) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியபிறகு, தமிழகத்திற்குத் திரும்பி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் விரிவுரையாளராக, இணைப்பேராசிரியராக, பேராசிரியராக, துறைத்தலைவராக 1989-2011 வரை 22 ஆண்டுகள் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றார். தற்போது கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தின் மின்னணுத்துறையில் உள்ள கணினிமொழியியல் பிரிவில் சிறப்புநிலை மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். தமிழ், ஆங்கில மொழிகளோடு, இந்தி, மலையாளம் மொழிகளிலும் புலமை உடையவர். இவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு – ‘ தமிழ் வினைச்சொற்களின் தொடரியல் , பொருண்மையியல் பண்புகள் ( Syntax and Semantics of Tamil Verbs )”. முதுமுனைவர் ஆய்வுக்குத் ‘தமிழ் வினைச்சொற்களின் பொருண்மையியல் ( Semantics of Tamil Verbs) “ என்ற தலைப்பில் தமிழ் வினைச்சொற்களைப்பற்றி மிக நுண்ணிய ஆய்வை மேற்கொண்டார். தொடர்ந்து தமிழ்ப் பொருண்மையியலில் விரிவான ஆய்வை மேற்கொண்டுவருகிற இவர், உலக அளவில் உள்ள பல்வேறு கணினிமொழியியல் நிறுவனங்களுடன் இணைந்து ‘ சொல்வலை ( WORDNET) ‘ என்ற மிகப்பெரிய ஆய்வுத்திட்டத்தில் தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளுக்கும் பணியாற்றிவருகிறார். தமிழ்த்தரவுத்தளம் ( Tamil Corpus Analysis ), தமிழ் மின்னகராதி ( Tamil E-dictionary), தமிழ் – ஆங்கில , இந்தி மற்றும் திராவிட மொழிகள் இயந்திரமொழிபெயர்ப்பு (Machine Translation) போன்ற மிக முக்கியமான கணினிமொழியியல் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தற்கால மொழியியல் நோக்கில் தமிழ்ச்சொல்லாக்கம்பற்றிய ( Word-formation – Generative Morphology) ஒரு துறையிலும் சிறப்பான பங்கை ஆற்றியுள்ளார். தமிழ்ச் சொல்லாக்கம்பற்றி இரண்டு முக்கிய நூல்கள் உட்பட 7 நூல்கள் எழுதியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் ( AU-KBC Centre ), கான்பூர் ஐஐடி , அமிர்தா பல்கலைக்கழகம் , மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுக்குத் தமிழ்க்கணினிமொழியியல் தொடர்பான பல பணிகளை மேற்கொண்டுவருகிறார். தமிழ்க் கணினிமொழியியலில் பல மாணவர்களை உருவாக்கியிருக்கிறார். ஏராளமான தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகள், பயிலரங்குகளில் பங்கேற்று ஆய்வுகளை அளித்துள்ளார். நான் ஏற்கனவே எழுதியுள்ள முனைவர் வி. தனலட்சுமி அவர்களும் இவருடைய மாணவியே. மற்றொரு மாணவி முனைவர் காமாட்சி அவர்கள் இயந்திரமொழிபெயர்ப்பில் முனைவர் பட்டம் பெற்று, இன்று சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகப் பணியாற்றுகிறார். தமிழ்க் கணினிமொழியியலில் பேராசிரியர் ஆற்றியுள்ள பணிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. கணினித்தமிழ் வளர்ச்சிக்கு இவருடைய ஆய்வுகள் பெரிதும் பயன்படும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. இவர் பணி இன்றும் தொடர்கிறது என்பதில் மகிழ்ச்சி. இவருடைய மின்னஞ்சல் முகவரி - rajushush@gmail.com.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India