சனி, 20 ஜூன், 2020

பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள்.... 74 வயது இளைஞர்... தமிழாகவே வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் தமிழ் மகன்... ஆய்வுலகிற்கு அறிமுகம் தேவையில்லாதவர்... மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளர்... கவிஞர்... மொழிபெயர்ப்பாளர்... அமைதியான தமிழ்ப் பேராசிரியர்... தமிழ் இனம், தமிழ்மொழி என்று இன உணர்வோடும் தாய்மொழி உணர்வோடும் அன்றும் இன்றும் வாழ்ந்து வருபவர்... அவரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை இன்றைய இளம் தமிழ் ஆய்வாளர்களுக்காக நான் ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு பதிவிட்ட முகநூல் பதிவை மீண்டும் இன்று மீள்பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (1946) … தமிழாய்வுலகில் நன்கு அறிமுகமான ஒரு பேராசிரியர். மிக அமைதியாகவும் ஆனால் ஆழமாகவும் ஆய்வுகளை மேற்கொண்டுவருபவர். பெரும்பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் புதல்வர். திருநெல்வேலியில் (சிந்துபூந்துறையில்) பிறந்தவர். பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் தனது புதல்வருக்குத் தனித்தமிழ்ப் பேரறிஞர் மறைமலை (அடிகளார்) அவர்களின் பெயரை இட்டார். தந்தையார் பேராசிரியராக இருந்ததால், மறைமலை அவர்கள் தமிழகத்தின் பல பள்ளிகளில் கல்வி மேற்கொண்டார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் புகுமுக வகுப்பு (1962-63), விலங்கியலில் இளங்கலை (1963-66) ஆகிய படிப்புகளை மேற்கொண்டார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டம் (1969) பெற்றார். சமசுகிருத்திலும் (1979) , எண்மக் காணொளிப் படைப்பாக்கத்திலும் (2006) பட்டயங்கள் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பொற்கோ அவர்களின் வழிகாட்டுதலில் ‘இக்காலத் தமிழில் சொல்லாக்கம் – ஆட்சித்துறைச் சொற்களில் ஒரு சிறப்பாய்வு ‘ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் (1984) பெற்றார். 1969-இலிருந்து 2005 வரை தமிழகத்தின் பல அரசுக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி, இறுதி 5 ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றுள்ளார். 1997-98 – இல் அமெரிக்காவில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இலக்கியத் திறனாய்வில் தலைசிறந்தவர். அவருடைய நூல்களில் 10-க்கும் மேற்பட்டவை இலக்கியத் திறனாய்வு தொடர்பானவையே. கவிதை நூல்களும் வெளியிட்டுள்ளார். பேராசிரியர்கள் மு.வரதராசனார், இலக்குவனார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைச் சிறந்த முறையில் எழுதி வெளியிட்டுள்ளார். கவிதைகள் மொழிபெயர்ப்பிலும் திறன்வாய்ந்த பேராசிரியர் அதிலும் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். ‘ சொல்லாக்கம்’ என்ற தலைப்பில் ஒரு மிகச் சிறந்த மொழியியல்தொடர்பான ஆய்வு நுலை வெளியிட்டுள்ளார். தற்போது இளம் கிறித்தவர் ஆடவர் (YMCA) ஆணையத்தின் வழியாக வாழும் கவிஞர்கள்பற்றித் தொடர்சொற்பொழிவாற்றி வருகிறார். ‘குறள்நெறி’ என்ற இதழுக்குப் பொறுப்பாசிரியராகவும் ‘ செம்மொழிச் சுடர் ‘ என்ற மின்னிதழின் ஆசிரியராகவும் இருந்துவருகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, வலைப்பூவில் இட்டிருக்கிறார். 2014-இல் சிட்னி தமிழ்ச்சங்கம் பேராசிரியருக்குத் தொல்காப்பியர் விருது அளித்துப் பாராட்டியுள்ளது. அமெரிக்கா. ஆஸ்திரேலியா, ஜப்பான், மோரிஷியஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்மொழி, இலக்கியம்பற்றிப் பல உரைகளை நிகழ்த்தியுள்ளார். பேராசிரியர் மறைமலையும் நானும் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் ஒரே நேரத்தில் முனைவர் பட்டம் ஆய்வு செய்தோம் என்பதில் மகிழ்வடைகிறேன். பெரும்பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டுவிழாவை 2009- ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையில் கொண்டாட (அப்போதைய துறைத்தலைவராகிய ) நான் ஏற்பாடு செய்தபோது அனைத்து உதவிகளையும் அவர் அளித்ததையும் நினைவுகூர்கிறேன். அவரது சகோதரர் திரு. திருவள்ளுவன் இலக்குவனாரும் இன்றும் தொடர்ந்து பல தமிழ்ப்பணிகளை மேற்கொண்டுவருகிறார். பேராசிரியர் மறைமலை அவர்களின் துணைவியாரும் ஒரு பொருளாதாரப் பேராசிரியர். மேலதிக விவரங்களுக்கு - https://ta.wikipedia.org/s/2n1k


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India