சனி, 27 ஜூன், 2020

கொரோனாவும் மக்களுடைய பொருளாதார நெருக்கடியும்.....


கொரோனாவும் மக்களுடைய பொருளாதார நெருக்கடியும்.....
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று காலையில் பாலிமர் தொலைக்காட்சியில் ஒரு தகவல் அளிக்கப்பட்டது. வாடகைக்கு குடியிருப்பாளர்கள் கிடைக்கவில்லை என்று ஒரு வீட்டு உரிமையாளர் அதில் கூறினார். வாடகையை நம்பித்தான் தன் வீட்டார் நம்பியிருப்பதாகவும் கூறினார். அதற்குக் கூறப்பட்ட காரணம்... லட்சக்கணக்கான மக்கள் சென்னையை விட்டு நீங்கி... வெளியூர்களுக்கு , குறிப்பாகத் தங்கள் கிராமங்களுக்குச் சென்றுவிட்டார்கள் என்பதாகும்.
\
இங்கு நமக்கு இரண்டு ஐயங்கள் .....ஏன் அவ்வாறு சென்னையைவிட்டுச் சொந்தக் கிராமங்களுக்குச் செல்கிறார்கள்? அடுத்து, அப்படியென்றால், சென்னையில் தற்போது உள்ள மக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி இருக்கிறதா? இல்லை என்பதே விடை! சற்று வசதியான வாடகை வீடுகளில் இருப்பவர்கள்கூட தற்போது வருமானம் இல்லை அல்லது குறைந்துள்ளதால்.... வசதி இல்லாத சிறிய வீடுகளுக்கு மாறிக் கொள்கிறார்கள்.
காரணம் ... வேலை இழப்பு ... ஊதியம் குறைப்பு ! மென்பொருள் பணிகளில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்து ஊதியம் வாங்கலாம். ஆனால் இவர்களுக்குக்கூட ஊதியம் குறைப்பு... மேலும் பல மென்பொருள் நிறுவனங்கள் அயல்நாடுகளின் தொழில்களுக்கு மென்பொருள்கள் தயாரித்துக்கொடுக்கும் பணிகளையே மேற்கொண்டுவருவதால், அந்த நாடுகளிலும் கொரோனா பாதிப்பால் உற்பத்தி தடைபட்டு நிற்பதால், அங்கிருந்தும் மென்பொருள் உருவாக்கத்திற்கான பணிகள் இங்குள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவது குறைகிறது அல்லது நிறுத்தப்படுகிறது என்பதால், மென்பொருள் பணியாளர்களும் எந்த நேரமும் பணிகள் பறிபோய் விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
மென்பொருள் அல்லாத பிற தொழிற் சாலைகளிலும் உற்பத்தி தடைபட்டு நிற்பதால், ஊதியம் குறைப்பு.... பணி நீக்கம்! அன்றாடம் சிறுசிறு வழக்குளை நடத்தும் வழக்கறிஞர்கள், வசதியில்லாமல் சிறிய அளவில் மருத்துவத்தொழிலை மேற்கொள்ளும் மருத்துவர்கள், இவர்களை நம்பியுள்ள பிற பணியாளர்கள் ....
அன்றாட வேலைகளில் ஈடுபடுகிற மின்பழுது பார்ப்பவர்கள், தண்ணீர்க்குழாய் பழுதுபார்ப்பவர்கள், வீடுகளுக்கு வர்ணம் அடிக்கிறவர்கள், கொத்து வேலை, தச்சு வேலை செய்பவர்கள், இந்தத்தொழில்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கான கடைகளில் வேலைபார்ப்பவர்கள், கடைவசதி இல்லாமல் தெருக்களில் காய், கனி, பூ விற்பவர்கள், கடற்கரையில் (மெரினா, எலியட் போன்றவை) சிறுசிறு வியாபாரங்களைச் செய்துவருபவர்கள், கையேந்தி உணவுக்கடைகளை நடத்துபவர்கள், சுண்டல், முறுக்கு விற்பவர்கள், ஆட்டோ, சிற்றுந்து, சரக்குந்து ஓட்டுநர்கள், தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் ..... பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
எதிர்பாராத ஒரு நோய்த்தொற்றால் ... கொரோனாவால் ... சென்னை பாதிக்கப்படும்போது ( பிற நகரங்களும் கிராமங்களும்தான் ... இதுபற்றி அடுத்து எழுதுகிறேன்) ஒரு மூன்று மாத ஊரடங்கைத் தாங்கமுடியாமல் சென்னை இருப்பதற்குக் காரணம் என்ன? 73 ஆண்டுகள் நாடு விடுதலை பெற்று ஆகியும்.... இதுபோன்ற எதிர்பாராத பாதிப்பைத் தாங்கிக்கொள்ளும் திறமை ஏன் இந்தப் பொருளாதார அமைப்புக்கு இல்லை? தற்காலிக உற்பத்தித் தடை, வணிகத்தடைகளை ஏன் தாங்கிக் கொள்ளமுடியவில்லை? என்ன பலவீனம்? ஏன் இந்தப் பலவீனம்? இந்த மூன்று மாதப் பொருளாதாரப் பாதிப்புக்கான காரணம் .... 73 ஆண்டுகாலமாக நீடிக்கிற இந்தியப் பொருளாதார அமைப்பே... 73 ஆண்டுகாலமாக இந்தியாவையும் அதன் மாநிலங்களையும் ஆட்செய்து வந்துள்ள அனைத்துக் கட்சிகளும்தான் காரணம்.... தற்போது நாடளவிலும் மாநில அளவிலும் ஆட்சிபுரிகிற கட்சிகள் மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
மக்களின் பாதிப்புகளுக்கு ... நேற்று ஆட்சி செய்து, இன்று எதிர்க்கட்சிகளாக நீடிக்கிற கட்சிகள்.... இன்று ஆட்சிசெய்கிற கட்சிகள்தான் காரணம் என்று கூறுவது எந்தவகையில் சரியானது ? இதனால் இன்று ஆட்சி செய்கிற கட்சிகளை இங்கு நாம் நியாயப்படுத்தவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாகக் கடந்த 73 ஆண்டுகால மாறி மாறி ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும்தான் காரணம்! 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆளும்கட்சிகள் மாறி மாறி வந்தாலும்.... இந்தியப் பொருளாதார அமைப்பை உண்மையில் கட்டுப்படுத்திவைத்துள்ளவே பெரும் தொழில் அதிபர்களும் பிற பொருள் உற்பத்தியாளர்களுமே! இவர்கள் அனைவரும் இந்தியாவின் பொருளாதார அமைப்பைச் சுயசார்பு பொருளதார அமைப்பாக மாற்றாமல்.... அந்நிய ... பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் உள்நாட்டு ஏஜெண்டுகளாகச் செயல்பட்டு வருவதுதான் காரணம்! ஆகவேதான் அங்கு அவைகளுக்குத் '' தேள் கொட்டினாலும்'' இங்கு நமக்கு '' வலி '' ஏற்படுகிறது!
உள்தாட்டிலேயே தொழில்களுக்குத் தேவையான மூலதனத்தை உருவாக்க ... இங்குள்ள விவசாய உற்பத்திமுறை மாற்றியமைக்கப்பட்டு இருக்கவேண்டும். நமது தேவைக்கு அதிகமாக விவசாய உற்பத்தி வளர்க்கப்பட்டு, உபரியைத் தொழில் மூலதனமாக மாற்றியமைத்து இருக்கவேண்டும். அவ்வாறு கிராமப்புற விவசாயிகளின் கைகளில் உருவாகும் உபரியைத் தொழில் நிறுவனத்திற்குக் கொண்டுவர, அவர்களுக்குத் தேவையான நுகர்பொருள் உற்பத்தியை வளர்த்து இருக்கவேண்டும். அதனடிப்படையில் கனரக உற்பத்தி வளர்க்கப்பட்டு இருக்கவேண்டும். தொழில் உற்பத்தி நகர்ப்புறங்களில் மட்டும் குவிக்கப்படாமல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பகிரப்பட்டு இருக்கவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள விவசாய உற்பத்திக்கும் சிறு தொழில்களுக்கும் நுகர்பொருள்களுக்கும் தேவையான தொழிற்சாலைகள் அம்மாவட்டத்திற்குள்ளேயே இயங்கவேண்டும். மிகப்பெரிய தொழில் ஆலைகள் அனைத்து மாநிலங்களிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு இருந்திருந்தால்.....
இன்றைய கொரோனாப் பாதிப்பை நம்மால் தாங்கியிருக்கமுடியும். தற்காலிக தொழில் உற்பத்தி, வணிகத் தடைகள் , கைத்தொழில்களின் தற்காலிகப் பணிநிறுத்தம் ஆகியவற்றை மக்களால் தாங்கியிருக்கமுடியும். இதற்கென்றே தொடர்ச்சியாக மத்திய, மாநில அரசுகள் போதிய நிதியைக் கையில் வைத்திருக்கமுடியும்.
மேற்கூறிய திசையில் இந்தியப் பொருளாதார அமைப்பு செல்லாததன் காரணத்தால்தான்.... இன்றைய அத்தனை இன்னல்களும் மத்திய , மாநில அரசுகளுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளன. பிற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தற்காலிக '' மருந்துகளாக'' மக்களுக்காக அளிக்கப்படவேண்டிய ஒரு அவல நிலை! மக்கள் தெருக்களில் இலவச அரிசிக்காகவும் 1000 ரூபாய்க்காகவும் கையேந்தி நிற்கவேண்டியுள்ளது. இதனால் பிற திட்டங்களும் பாதிக்கப்படுகின்றன. அதனுடைய பாதிப்புகள் இனித் தான் தெரியவரும்.
மத்திய, மாநில அரசுகளின் கஜானா காலியாகிறது.. அவ்வாறு காலியாக்கவில்லை என்றால்.... அடுத்த தேர்தல்களில் அவற்றிற்குப் ''பாதிப்புகள் '' ஏற்படும். கடந்த 73 ஆண்டுகளாகச் சரியான திசையில் பொருளாதார அமைப்பை மாற்றிக்கொண்டுசெல்லாத தவறுக்கு ... நேற்று ஆளும் கட்சிகளாகவும் இன்று எதிர்க் கட்சிகளாகவும் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு.
எனவே.... '' ஐயோ, எங்களுக்கு வீட்டு வாடகை இல்லாமல் கஷ்டப்படுகிறோம் '' என்று அலறுகிற வீட்டு உரிமையாளர்களும் .... தொழில் உற்பத்தி, வணிகம் தடைபட்டுள்ளதே என்று கூறுபவர்களுக்கும் ரயில் போக்குவரத்து இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ள சுமைதூக்கும் கூலித்தொழிலாளிகள் வரை.... அனைவரின் இன்றைய இன்னல்களுக்கு .... இன்று மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிசெய்கின்ற ஆளுங்கட்சிகளுக்கு மட்டும் அல்ல... நேற்று ஆட்சி செய்த இன்றைய எதிர்க்கட்சிகளுக்கும் '' பொறுப்பு'' உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
கடந்த 73 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத் தாயின் கருவில் இருந்த '' பொருளாதார அமைப்பு.. உற்பத்திமுறை '' தேவையான, போதுமான , சரியான '' ஊட்டச்சத்துகள் '' கிடைக்காததால் ... இன்று ஊனமுற்ற , நலிந்த , எழுந்து நிற்கமுடியாத குழந்தையாகப் பிறந்து அழுதுகொண்டிருக்கிறது என்பதே உண்மை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India