திங்கள், 15 ஜூன், 2020

பேரா. பெரு. பெருமாள்சாமி

பேராசிரியர் பெரு. பெருமாள்சாமி அவர்கள்.......
-------------------------------------------------------------------------------------
பேரா. பெரு. பெருமாள்சாமி அவர்கள் மைசூரில் அமைந்துள்ள இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் தற்போது பேராசிரியராகவும் துணை இயக்குநராகவும் பணியாற்றும் மொழியியல், தமிழ்மொழி அறிஞர். தமிழகத்தில் திண்டுக்கல் நகரில் பிறந்த இவர், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றபிறகு, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, பின்னர் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இவருடைய முனைவர் பட்ட ஆய்வானது தமிழ்மொழிக் கருத்தாடல் ஆய்வில் மிக முக்கியமான ஒன்றாகும். ஒருவர் தனது மொழிவழியே கருத்தாடலில் ஈடுபடும்போது, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே ஈடுபடுகிறார் . வேண்டுகோள், கட்டளை, விருப்பம், பாராட்டு... என்று பலவகைப் பேச்சுச்செயல்களை (Speech Acts) அவர் மேற்கொள்கிறார். அதுபோன்று, அவர் கருத்தாடலில் ஈடுபடும்போது, அக்கருத்தாடலை யாருடன் நிகழ்த்துகிறாரோ, அவர் இவருடன் கருத்தாடலைத் தொடர்வதற்குச் சில நெறிகளைப் பின்பற்றவேண்டும் (Principles of Co-operation) . கருத்தாடல் முறிந்துவிடக்கூடாது. அதற்கேற்ற கையில் இருவர்களும் தங்கள் பணிவையும் தங்களது தகுதிநிலையையும் (அதிகாரத்தையும்) வெளிப்படுத்தவேண்டும். இதில் அவர்கள் தவறினால், கருத்தாடல் முறிந்துவிடும். தடைபட்டுவிடும். எனவே தற்போதைய மொழியியல் ஆய்வில் மொழிக் கூறுகளோடு, குறிப்பிட்ட சமூக அமைப்பின் மேற்குறிப்பிட்ட கருத்தாடல் கூறுகளும் (Discourse features) ஆய்வு செய்யப்படுகின்றன. இதுபோன்ற ஆய்வுகள் குறிப்பிட்ட மொழிச்சமூகத்தின் சமூகக்கூறுகளை அறிந்துகொள்ள உதவுவதோடு, மொழிக்கற்றல் அல்லது கற்பித்தலுக்கும் மிகவும் பயன்படும்.
மேலும் இவர் இந்தியச் சமூக அறிவியல் கழகத்தின் (ICSSR ) குறுகிய கால ஆய்வுத் திட்டத்திற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை ஆணையர் அலுவலகத்தின் மொழிப் பிரிவில் இந்திய மொழிகளின் கணக்கெடுப்புத் திட்டத்தின் (Linguistic Survey of India) கீழ் வெளி உலகிற்கு சிறிதளவே அறியப்பட்ட மொழிகளைப்பற்றி ஆய்வு செய்து அம்மொழிகளின் கட்டமைப்புக்களை ஆய்வு அறிக்கையாக இந்திய அரசிற்குச் சமர்ப்பித்துள்ளார். இதற்கிணங்க, திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த கிசான் (ஒடிஸா), திபத்தோ – பர்மீய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த போடோ மேச், டோடோ (மேற்கு வங்காளம்), லிம்பு, தமங் (சிக்கிம்), கின்னெளரி (இமாச்சல பிரதேம்), இந்தோ –ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த போஜ்புரி, சுர்ஜாபுரி (பீகார்: இவ்விரு மொழிகளையும் மற்ற ஆசிரியர்களுடன் இணைந்து) மற்றும் ஆஸ்ட்ரோ – ஆஸியாட்டிக் (முண்டா) மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஹோ போன்ற மொழிகளையும் ஆய்வு செய்துள்ளார்.
மொழித் தரவுகளைச் சேகரிப்பதற்கு இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்றவர். இந்தியாவில் பேசப்படுகின்ற பல மொழிக் குடும்பங்களுக்கு அறிமுகமானவர். திட்ட அறிக்கைகளைச் சமர்ப்பித்தவுடன், பல்வேறு மாநிலங்களில் பேசப்படுகின்றன மொழிகளின் தொகுப்பை மாநில வாரியாக வெளியிடுவதற்கு பல்வேறு மாநிலத் தொகுதிகளில் உறுதுணை புரிந்தவர். தான் பெற்ற களப்பணி அனுபவத்தின் அடிப்படையில், பல்வேறு பல்கலைக்கழக மொழியியல் மாணவர்களுக்கு ஒரு மொழியின்/ தாய் மொழியின் மாதிரி இலக்கணத்தை (Sketch Grammar) வடிவமைப்பதற்குப் பயிற்சி கொடுத்தவர். மொழிப் பிரிவில் இயங்கும் இந்திய மொழிகளின் கணக்கெடுப்புத் திட்டம், தாய்மொழிக் கணக்கெடுப்புத் திட்டம் மற்றும் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்திய மொழிகளின் கணக்கெடுப்பு போன்றவற்றில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவில் இருந்து அயராது உழைத்தவர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் இருபத்தைந்து ஆய்வுக்கட்டுரைகளுக்குமேல் வெளியீடு செய்தவர். மொழிப்பிரிவில் வெளியிடப்பட்ட பல்வேறு மொழிகளின் மாதிரி இலக்கணங்கள் புத்தக வடிவிலும், மின் இதழாகவும் (www.censusindia.gov.in) கிடைக்கின்றன.

கொல்கத்தாவில் பணியாற்றுகின்றபொழுது தமிழ்ச் சங்கப் பணிகளிலும் பங்கேற்றார். ஆய்வு அரங்குகளிலும் , பட்டிமன்றங்களிலும், பொங்கல் விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர். மக்கள் தொகை கணக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறப்பாகப் பணியாற்றியதற்காக இருமுறை குடியரசுத்தலைவர் விருது பெற்றவர் (2001 மற்றும் 2011 மக்கள் தொகை). யுனொஸ்கோவின் உலக மொழிகள் திட்டத்திற்காகத் தமிழகத்தில் பேசப்படும் தெலுங்கு மொழிபற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை அந்நிறுவனத்திற்குச் சமர்ப்பித்தற்காக நற்சான்றிதழ் பெற்றவர்.
தற்போது இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் பேச்சொலி அறிவியல், கல்வித்தொழில்நுட்பம், மின்தரவாக்கம், மொழி மேம்பாட்டுத்திட்டம், தாய்மொழிக் கணக்கெடுப்பு போன்ற துறைகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்.
தமிழகத்தைச்சேர்ந்த இவருடைய துறை அறிவும் பணியும் ... தமிழ் ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் பயன்படும் என்பதில் ஐயம் இல்லை. அவர் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India