வெள்ளி, 12 ஜூன், 2020

பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம்


பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம் (1926-2009) … வ(டசேரி) (அய்)யம்பெருமாள் சுப்பிரமணியம் … துறைகள் பலவற்றையும் பேராசிரியர்கள் பலரையும் உள்ளடக்கிய ஒன்றுதான் பல்கலைக்கழகம் என்றால், பேரா. வ.அய்.சு. அவர்களும் நம்மிடையே நடமாடிய உயிர்ப்புள்ள , துடிப்புள்ள ஒரு பல்கலைக்கழகம்தான்! கேரளத்தில் மொழியியல்துறையை (1963) உருவாக்கினார். திராவிட மொழியியல் கழகத்தை நிறுவினார் (1971). உலகத் திராவிட மொழியியல் பள்ளியை (1997) நிறுவினார். தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வடிவமைத்தார். ஆந்திரத்தில் குப்பம் என்ற இடத்தில் திராவிடப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். ஹம்பியில் கன்னடப் பல்கலைக்கழகமும் உருவாகக் காரணமாக அமைந்தார் எனப் பேரா. தமிழவன் கூறுகிறார். பேராசிரியர்கள் ச. அகத்தியலிங்கம், இராம. சுந்தரம், ச.வே. சுப்பிரமணியன், பி.ஆர். சுப்பிரமணியன், இரா. தாமோதரன் , இளவரசு … பேராசிரியர் உருவாக்கிய மாணவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். பேரா. வையாபுரிப்பிள்ளை அவர்களின் வழிகாட்டுதலில் வளர்ந்த ஒரு பேராசிரியர். 1943-இல் நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் .. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பி.ஏ.,ஹானர்ஸ் - முதுகலைப்பட்டம் (1946). அமெரிக்காவில் இந்தியானாப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேரறிஞர் ஹவுஸ்கோல்டர் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் (1957). நெல்லை மதிதா இந்துக்கல்லூரியில் 6 ஆண்டுகள் (1947-53) ஆசிரியப்பணி. 1953 முதல் 58 வரை அன்றைய திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் பணி. பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் மொழியியல் துறையில் பணி. 1963 – இல் மொழியியல்துறை தோற்றுவிக்கப்பட்டபிறகு அதன் தலைவராகச் செயல்பட்டார். தமிழகத்தில் 1981-இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவித்தபோது அதன் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு, தொடர்ந்து இரண்டாவது தடவையும் அப்பதவியில் சில ஆண்டுகள் நீடித்தார். ஆந்திரத்தில் திராவிடப் பல்கலைக்கழகம் உருவாகியபோது, அதன் இணைவேந்தராகப் பணியேற்றார் (1997-2001). செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வுநிறுவனம் அமைக்கப்பட்டபோது, அதன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகம், திராவிடப் பல்கலைக்கழகம், விசுவபாரதிப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உட்பட ஆறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு டி.லிட்., பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளன. சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது இவருக்கு 2007-இல் வழங்கப்பட்டது. பேரா. தனிநாயகம் அடிகளாருடன் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தைத் தொடங்கினார். 1972 – இல் இவர் தொடங்கிய “International Journal of Dravidian Linguistics “ இன்றுவரை தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. DLA News என்ற ஒரு செய்தி இதழையும் தொடங்கிவைத்தார். ‘ புறநானூற்றுச் சொல்லடைவு ‘ என்பது இவரது ஆய்வேடாகும். இவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, இரண்டு தொகுதிகளாக – ‘ மொழியும் பண்பாடும் ‘, ‘ இலக்கணமும் ஆளுமையும்’ – வெளிவந்துள்ளன. DLA வெளியீடுகளாக ‘திராவிடக் களஞ்சியம் - 3 தொகுதிகள்’, ‘திராவிடப் பழங்குடி மக்கள் களஞ்சியம் – 3 தொகுதிகள்’ , ‘ தொல்காப்பிய மூலவேறுபாடுகள்’, தொல்காப்பியச் சொல்லடைவு’, தென்னிந்தியாவில் சமணர்’, ‘தெலுங்கு இலக்கணக் கோட்பாடுகள் ‘ ஆகியவை வெளிவந்துள்ளன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்க்கலை’, “Tamil Civilization “ என்ற இரு ஆய்விதழ்களைத் தொடங்கினார். மொழியியலில் நிலவுகிற புளூம்பீல்டு அமைப்பியல் கோட்பாடு ( Structural Linguisitcs), பைக் டாக்மீமிக்ஸ் கோட்பாடு (Pike’s Tagmemics) , ஹெம்ஸ்லேவ் கிளாஸ்மேடிக் கோட்பாடு ( Hjelmslev’s Glossematics), சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடு ( Chomskey’s Generative Grammar) என்று பல கோட்பாடுகளைப் பின்பற்றி , தன் மாணவர்களைத் தமிழ்ச் சங்க இலக்கியங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்தது உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய சாதனையாக நான் பார்க்கிறேன். அவரது மாணவர் ஒருவர் தனது பேராசிரியரை Very important Subrmaniom (VIS) என்று குறிப்பிட்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நான் மேற்கொண்ட கணினிமொழியியல் ஆய்வுகளின் விவரங்களைப்பற்றி DLA News வெளியிடுவதற்காக ஒரு பேராசிரியரை அவர் நேரில் அனுப்பிவைத்ததை நான் மறக்கமுடியாது. பேராசிரியர்பற்றிய மேலதிக விவரங்களுக்குப் பின்கண்ட இணையதளங்களைப் பார்க்கலாம். http://keetru.com/…/2009-10-07-1…/09/320-2009-08-27-08-38-34 http://www.kalachuvadu.com/issue-116/page75.asp


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India