வெள்ளி, 5 ஜூன், 2020

பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன்

இன்றைய தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்... அவரைப்பற்றி 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் இட்ட முகநூல் பதிவு இது. // தமிழகத்தின் மன்னார்குடியைச் சேர்ந்த அவருடைய ஆய்வுத்திறனை அவருடைய சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் நேரடியாகப் பயன்படுத்தும் வாய்ப்பு விரைவில் ஏற்படும், ஏற்படவேண்டும் என நம்புகிறேன்.// தற்போது மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன் (1959) … இன்றைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியர். நான்கு மாநிலங்கள் ( ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம்) இணைந்து குப்பம் என்ற ஊரில் உருவாக்கியுள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழிகள் ஆய்வு மற்றும் கணினிமொழியியல் துறையின் இன்றைய பேராசிரியர் ... துறைத் தலைவர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறையில் முதுகலைப் பட்டமும் (1983) முனைவர் பட்டமும் (1989) பெற்றவர். (மறைந்த) மொழியியல் பேராசிரியர் ஜே. நீதிவாணன் அவர்களின் வழிகாட்டுதலில் “ A Survey of Methods for Teaching Tamil as other Tongue from Primary to Secondary School Level” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். தமிழிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 1987-89 இரண்டாண்டுகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவிட்டு, 1989 முதல் 2006 வரை கேரளா கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் மலையாளத்துறையில் தமிழுக்கான மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன்பின்னர் இன்றுவரை திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகிறார். இடையில் இரண்டாண்டுகள் ( 2009-11) போலந்து வார்சாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 2011 –இல் பிராக் சார்லஸ் பல்கலைக்கழகத்திற்கு ஒரு மொழியியல் ஆய்வுத்திட்டத்திற்காக சென்றுள்ளார். அகராதியியல், மொழிவளர்ச்சித்திட்டம், சமூகமொழியியல், மொழிபெயர்ப்பியல் ஆகியவற்றில் பல சிறப்பான ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். தமிழிலிருந்து மலையாளத்திற்கும் மலையாளத்திலிருந்து தமிழுக்கும் பல மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். 2013 – இல் ஆந்திர அரசின் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றுள்ளார். பல முனைவர் பட்ட , எம்ஃபில் பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார். தேசிய அளவிலும் உலக அளவிலும் பல கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவர். தொடர்ந்து திராவிடமொழிகள், கணினிமொழியியல் , தமிழிலக்கணம் ஆகியவற்றில் சிறப்பான பல ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டுவருகிறார். தமிழகத்தின் மன்னார்குடியைச் சேர்ந்த அவருடைய ஆய்வுத்திறனை அவருடைய சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் நேரடியாகப் பயன்படுத்தும் வாய்ப்பு விரைவில் ஏற்படும், ஏற்படவேண்டும் என நம்புகிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India