வெள்ளி, 5 ஜூன், 2020

பேராசிரியர் ஏ ஆர்ஏ சிவகுமரன்

பேராசிரியர் ஏ ஆர்ஏ சிவகுமரன் … நான் தொடங்கியுள்ள தமிழறிஞர் தொடர் வரிசையில் இவர் நான்காவது தலைமுறையில் வருகிறார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் ( Nanyang Terchnology University - NTU ) சார்ந்த தேசியக் கல்விக் கழகத்தில் ( National Institute of Education – NIE) தமிழ்த்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திவருகிறார். தமிழகத்தைச் சார்ந்தவர். தமிழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றவர். சிங்கப்பூரில் 1992 –க்கு முன்புவரை தமிழ்மொழியில் ஆய்வேட்டை எழுதி முனைவர் பட்டம் பெற இயலாத நிலை இருந்தது. இவரே நன்யாங் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாகத் தமிழ்மொழியில் ஆய்வேட்டை அளித்து முனைவர் பட்டம் பெற்றார். ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் (1965-1990) – ஒரு திறனாய்வு ‘ என்ற தலைப்பில் பேரா. சுப. திண்ணப்பன் அவர்களின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். சிங்கப்பூர் கல்விக் கழகத்தில் முதன்முதலில் வெளிநாட்டவர்களில் தமிழாசிரியர் பயிற்சிக்கு இவர்தான் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனியாகவும் வேறு பேராசிரியர்களோடு இணைந்தும் இதுவரை எட்டு தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளார். சில சிறுவர் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சிங்கப்பூர் தவிர மலேசியா, மொரிஷியஸ், அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, இந்தோனேஷியா, தாய்லாந்து, கனடா, ரஷ்யா, லண்டன் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல அனைத்துலக ஆய்வரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளையும் முதன்மை உரைகளையும் வழங்கியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு தொடர்பான சிறப்புரைகள் ஆற்றியுள்ளார். இவரது கற்பித்தல் உத்திகளின் சிறப்பறிந்து, லண்டன் தமிழமைப்பு 500-க்கும் மேற்பட்ட தமிழாசிரியர்களுக்குக் கற்பித்தல் உத்திகள் தொடர்பான பட்டறையை நடத்துவதற்கு 2014 ஆம் ஆண்டு இவரை அழைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியத் துறையில் 2013 – இல் வருகைதரு பேராசிரியராக அழைக்கப்பட்டார். சிங்கப்பூரில் தமிழ்மொழிப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறை மறு ஆய்வுக்குழுவில் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூர் கல்வி அமைச்சால் தயாரிக்கப்படும் தமிழ்மொழிப் பாடநூல்களின் மதியுரைஞராகவும் செயல்பட்டு வருகிறார். திரு லீ குவான் இயூ இருமொழி திட்டவேலை நிதிமதிப்பீட்டுக்குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றிவருகிறார். 2013 -இலிருந்து தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘நவீனத் தமிழாய்வு ‘ என்னும் ஆய்விதழின் பதிப்பாசிரியர் குழுவில் இருந்துவருகிறார். சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் அறங்காவலராகவும் இருந்துவருகிறார். சிங்கப்பூர் இந்திய முஸ்லீம் கழகம் இவருக்கு ‘தமிழர் திருநாள் விருது’ வழங்கியுள்ளது. இவர் பணிபுரியும் தேசியக் கல்விக்கழகமும் இவருக்கு ஐந்து முறை நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளது. நன்யாங் பல்கலைக்கழகமும் இவரது பணியைப் பாராட்டி, இருமுறை நீண்டகாலச் சேவை விருது வழங்கியுள்ளது. சிங்கப்பூரில் பணிபுரிந்தாலும் தமிழகத்தை மறக்காமல், பாண்டிச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இளங்கலையில் முதலாவதாக வரும் மூன்று மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறார். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் தனது பெற்றோர்கள் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி ஆண்டுதோறும் சிறப்புச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளார். பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்திலும் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்தில் தமிழுக்காக ஒரு அறக்கட்டளையை நிறுவியுள்ளார். தற்போது தரவுமொழியியல் ( Corpus Linguistics) அடிப்படையில் தமிழைக் கற்பிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழாய்வாளர் – தமிழ்ப் பேராசிரியர் - சிங்கப்பூரில் இவ்வாறு சிறந்த தமிழ்ப்பணிகளை மேற்கொண்டு வருவது பெருமையாக உள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India