செவ்வாய், 23 ஜூன், 2020

பேராசிரியை வி. ரேணுகா தேவி

பேராசிரியை வி. ரேணுகா தேவி (1954) … தமிழகத்தில் மொழியியல் துறையில் சிறந்து விளங்குகிற பெண் மொழியியலார்களில் ஒருவர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையிலேயே பயின்று , அங்கேயே விரிவுரையாளர், இணைப் பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் , புலத்தலைவர் என்று பல பணிகளை மேற்கொண்டு, தற்போது பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளார். இளங்கலையில் வேதியியல் கல்வி பெற்ற இவர், முதுகலையில் மொழியியல் துறையைத் தேர்ந்தெடுத்தார். தமிழிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 1987-90 ஆம் ஆண்டுகளில் மதுரையில் உள்ள இந்திய ஆய்வியலுக்கான அமெரிக்க நிறுவனத்தில் ( American Institute of Indian Studies) தமிழ்மொழி பயிற்றுநராகப் பணியாற்றினார். ஆங்கிலம், தமிழ் இரண்டின் தொடரியல் அமைப்பை ஒப்பிட்டுப் பார்க்கும் ( Typological Study ) ஒரு மிக முக்கிய ஆய்வைத் தனது முனைவர் பட்டப் படிப்பில் மேற்கொண்டார். 1990 –இல் மதுரைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் ஆசிரியப் பணியில் இணைந்தார். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு( UGC) , இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம் ( Indian council of social Science Research – ICSSR) போன்ற பல ஆய்வு நிறுவனங்களின் உதவிகளோடு மொழிசார்ந்த பல ஆய்வுத்திட்டங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார். மொழி வகைப்பாட்டியல் ( Language Typology) , கருத்தாடல் ஆய்வு ( Discourse Analysis), உலகமயமாக்கமும் மொழிகளும் ( Globalization and Languages) , மொழிக்கல்வி, மொழிபெயர்ப்பு, மொழியியல் நோக்கில் தமிழ் இலக்கணம் ஆகிய பல மிக முக்கியமான ஆய்வுத் தளங்களில் இவர் தமிழ்மொழி, இலக்கியம் சார்ந்த ஆய்வுகளை அளித்துள்ளார். ‘தமிழ்ப்பொழில்’, ‘செந்தமிழ்’, ‘மொழியியல்’. போன்ற இதழ்களில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மதுரை வானொலி நிலையத்தின் வாயிலாக மொழி, இலக்கியம் சார்ந்த பல உரைகளை ஆற்றியுள்ளார். 7 ஆய்வுநூல்களை வெளியிட்டும், 4 ஆய்வுநூல்களைப் பதிப்பித்தும் உள்ளார். 90 –க்கும் மேற்பட்ட மொழிசார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் பல்வேறு ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். நூற்றுக்கணக்கான தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகள், மாநாடுகள், பயிலரங்குகளில் பங்கேற்றுள்ளார். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கல்விப் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் மொழிச் சிறுபான்மையினர் , குறிப்பாகச் சௌராஷ்டிரா மொழியினர் பற்றிப் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தற்போது மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தின் ‘ அபாயத்திற்குள்ளாகியுள்ள இந்தியமொழிகள் ( Endangered Languages - SPPEC)’ பற்றிய திட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவருடைய முக்கிய ஆய்வான “ Grammatical Comparison of Tamil and English – A Typological Stuidies” என்ற நூல், தற்போதைய கணினித்தமிழின் ஒரு மிக முக்கியத் திட்டமான ‘தமிழ் – ஆங்கில இயந்திர மொழிபெயர்ப்புக்கு ( Tamil - English Machine Translation)’ மிகவும் பயன்படும். இவருடைய வழிகாட்டுதலில் ஏராளமான மாணவர்கள் எம்ஃபில், முனைவர் பட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இவருடைய வாழ்க்கைத் துணைவர் முனைவர் பசும்பொன் ( உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர்) அவர்களும் ஒரு மொழியியல் ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மின்னஞ்சல் முகவரி prof.renuga@gmail.com


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India