வெள்ளி, 19 ஜூன், 2020

பேராசிரியர் ரா. வேல்முருகன்

பேரா. ரா. வேல்முருகன் இன்று நம்மிடையே இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த இவர் சிங்கப்பூரில் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எப்போதும் சிரித்த முகம். சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தார்


பேராசிரியர் ரா. வேல்முருகன் … தமிழகத்தின் உருவாக்கம் … தற்போது சிங்கப்பூரில் தமிழ்ப்பணி. தமிழில் இளங்கலைப் பட்டம் (1978) பெற்றபிறகு, மொழியியல் துறையில் நாட்டம்கொண்டு, மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (1980) பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் மேலாய்வு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்று, 1981-85 – இல் முழுநேர ஆய்வாளராகப் பணிமேற்கொண்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழிலும் முதுகலைப் பட்டமும் (1986) கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். 2000- ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தேசியக் கல்விக் கழகத்தில் - NIE ( நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – NTU) ஆசிய மொழிகள் மற்றும் பண்பாட்டுப் பிரிவில் உதவிப் பேராசிரியராக இணைந்து, இன்று முதுநிலை விரிவுரையாளராகவும் பதவி உயர்வு பெற்று, அங்கேயே பணியாற்றி வருகிறார். இவருடைய முக்கிய ஆய்வானது மொழிச்சிறுபான்மையினரின் – குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கன்னடம் பேசும் மக்களின் – மொழிபற்றியதாகும் சிங்கப்பூரில் பணியில் சேர்ந்ததிலிருந்து கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்மொழியைக் கற்றுக்கொடுத்தல் தொடர்பான ஆய்வில் குறிப்பிடத்தக்க பல பணிகளை மேற்கொண்டுவருகிறார். சிங்கப்பூர் தமிழ்மொழிபற்றியும் , அங்குத் தமிழைக் கற்றுக்கொடுப்பதில் உள்ள சிக்கல்கள்பற்றியும் பல ஆய்வுகளை அளித்துள்ளார். இது தொடர்பான சில சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை “ Singapore Tamil Language , Literature – A multi-dimensional Approach” என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் வெளியிட்டுள்ளார். “ A Linguistic Study of a Minority Language in Tamilnadu” என்ற இவருடைய முனைவர் பட்ட ஆய்வை அடிப்படையாகக்கொண்ட ஒரு நூலும் வெளிவந்துள்ளது. சிங்கப்பூர் சூழலில் மாணவர்களுக்குத் தமிழ் உச்சரிப்பு உட்பட பல திறன்களை ஒலி-ஒளி நாடாக்கள் துணையுடன் கற்றுக்கொடுக்கும் சில திட்டங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார். சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் தமிழ்ப் பிரிவுக்கு ஆலோசகராகவும் இருந்துவருகிறார். பாடத்திட்டம் தயாரித்தல், நூல் உருவாக்கம் ஆகியவற்றிற்குத் தேவையான பல தமிழ்ப்பணிகளை அங்கு மேற்கொண்டுவருகிறார். சிங்கப்பூரில் தமிழ்மொழிக்கான மொழியியல் நோக்கிலான ஆய்வுகளில் முனைவர் வேல்முருகன் பல குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டுவருகிறார். மொழி ஆய்வில் மட்டுமல்ல, தற்காலத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு. கவிஞர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வைரமுத்து ஆகியோர்பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பல பன்னாட்டுக் கருத்தரங்குகளில் பங்கேற்று ,தமிழ்மொழி பயிற்றல்பற்றிய சிறந்த கட்டுரைகளை அளித்துவருகிறார். அங்கே பேராசிரியர் சுப. திண்ணப்பனுக்கு ( தமிழகத்திலிருந்து சென்ற பேராசிரியர்தான்) அடுத்து மொழியியல் துறை, தமிழ்த்துறை இரண்டிலும் முறைசார் கல்விபெற்று, தமிழாய்வுகளையும் தமிழ் கற்பித்தலையும் மேற்கொண்டுவருகிற ஒரே தமிழ் மொழியியலாளர் இவர்தான். தற்போது தமிழ்மொழி ஆய்வில் ஈடுபடும் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துவருகிறார். பழகுவதற்கு இனியவர். தமிழறிஞர்கள்பற்றிய எனது இத்தொடரில் இவர் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழ்மொழியாய்வாளர். இவரைப்பற்றிய மேலதிக விவரங்களுக்கு - C:\Users\Windows 7\Desktop\Rakkappan Velmurugan _ Staff Directory _ National Institute of Education (NIE), Singapore.html. இவரது மின்னஞ்சல் முகவரி – velmurugan.r@nie.edu.sg

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India