வியாழன், 25 மே, 2023

தமிழ்மொழிக்கு ஏன் இந்த நிலை?

 தமிழ்மொழிக்கு ஏன் இந்த நிலை?

----------------------------------------------------------------------------------------------------------
இன்றைய நாளிதழ்களில் ஒரு செய்தி!
தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழிப் படிப்புகளுக்கு ஒரே ஒரு மாணவர்தான் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் தமிழ்வழிப் படிப்புகளை ரத்து செய்யமாட்டோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சரும் பொறியியல் படிப்புகளுக்கான துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்!
ஏன் இந்த நிலை தமிழ்வழிப் படிப்புகளுக்கு?
தமிழ் மக்களே - தமிழ்ப் பெற்றோர்களே - தமிழ்வழிப் பொறியியல் படிப்புகளுக்கு ஆதரவாக இல்லை! இந்த நிலை உயர்நிலைப் படிப்புகளில்மட்டும் இல்லை! பாலர் வகுப்பிலிருந்தே இது நீடிக்கிறது!
இது ஒரு பொருளாதாரம்சார்ந்த சமூக உளவியல் பிரச்சினை!
ஒரு பாட அறிவு தமிழில் படித்தாலும் அதே அறிவுதான்! ஆங்கிலத்தில் படித்தாலும் அதே அறிவுதான்! எந்தவகையிலும் மொழி அடிப்படையில் தமிழ் தாழ்ந்ததோ அல்லது ஆங்கிலம் உயர்ந்ததோ இல்லை!
இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு கருத்து - தவறான கருத்து - நிலவுகிறது! ஆங்கிலத்தில் படித்தால் உயர் பதவிகளுக்குச் செல்லலாம்! அயல்நாடுகளில் வேலைக்குச் செல்லலாம்! ஆனால் தமிழில் படித்தால்? தமிழ்நாட்டிலேயே உயர்பதவிகள் - வேலை வாய்ப்புகள் - கிடைக்காது!
இந்தக் கருத்து மக்கள் இடையே நிலவுவதற்குக் காரணம் . . . மறைமுகமான ஒரு கருத்துத் திணிப்புத்தான்! நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) வேறொரு துறைக்குப் பயன்படுத்திய ஒரு சொல் இங்கும் பொருந்தும்!
''இசைவை உற்பத்தி செய்தல் (Manufacturing Consent) "!
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் மறைமுகமாக அரசியல் , பொருளாதாரச் சூழல்கள் மக்களிடையே ''ஆங்கிலத்திற்கான இசைவை'' உற்பத்தி செய்துள்ளன! இதன் தாக்கத்தினால் தமிழ்ப் பெற்றோர்கள் உளவியல் ரீதியில் ''சலவை'' செய்யப்பட்டுள்ளனர்!
பண்டைத் தமிழர் பெருமை, தமிழ் இலக்கியப் பெருமை ஆகியவற்றைமட்டுமே முன்னிலைப்படுத்துவது . . .
அவற்றை 'அலங்காரக் கண்காட்சிகளில்'' வைத்து பெருமைப்படுவது . . .
தமிழறிஞர்களுக்கு விருதுகள், வீடுகள், மாதாந்திரப் பண உதவி, அவர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் , படிப்புக்களில் '' இட ஒதுக்கீடு'' அளிப்பது . . .
தமிழ் மாநாடுகள் நடத்துவது . . . மறைந்த தமிழறிஞர்களுக்குச் சிலை வைப்பது . . .
தமிழறிஞர்களின் ''நூல்களை'' அரசுடைமையாக்குவது . . .
தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்வது . . .
இத்தனையும் இங்கு நடைபெறுகின்றன!
ஆனால் . . . பாலர் பள்ளியிலிருந்து உயர்நிலைப் படிப்புவரை . . . . பாடமொழியாக . . . பயிற்றுமொழியாக நீடிக்க . . . தமிழ்மொழிக்கு - தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழியாகிய தமிழுக்கு - உரிமையோ அல்லது வாய்ப்போ கிடையாது!
தமிழ்மொழியை நாம் ''அருங்காட்சியகத்தில்'' வைத்துப் பார்க்க விரும்புகிறோமேதவிர, 'அறிவியல் ஆய்வுக்கூடங்களில்'' வைத்துப் பார்க்க விரும்பவில்லை!
இன்று அரசுகள் கூறலாம் . . . ''நாங்கள் தமிழ்வழிப் படிப்புக்களை அறிமுகப்படுத்தத்தான் செய்யலாம் ! ஆனால் அதில் மாணவர்கள் சேராததற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்?''
இங்குதான் நான் முன்கூறிய ''இசைவை உற்பத்தி செய்தல்'' என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும்!
தமிழ்வழிப் படிப்புக்கு எதிராக நீடிக்கிற மக்களின் நிலைபாட்டுக்குக் காரணம் . . .
பல ஆண்டுகளாக . . . மக்கள் மனதில் உருவாக்கப் -பட்டுள்ள ஒரு அச்சமே!
1) ''தமிழில் படித்தால் ஆங்கில அறிவு கிடைக்காது''
2) ''தமிழில் படித்தால் உலக அளவிலான அறிவு கிடைக்காது''
3) ''தமிழில் படித்தால் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலை கிடைக்காது''!
இந்த ''பொய்ம்மையான அச்சம் '' மக்களிடமிருந்து அகற்றப்பட்டால் ஒழிய . . .
கல்வியில் தமிழ்மொழி பயிற்றுமொழியாக ஆவது என்பது நடவாத ஒன்றே ஆகும்!
இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கவேண்டும்! தவறான சமூக உளவியலை மாற்றி அமைக்கவேண்டும்! இதில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு!
புராணக் கதைகளில் படித்திருப்போம் . . . ''ஒரு அரக்கனைக் கொல்வதற்கு அவனைத் தாக்கினால் போதாது. அவனுடைய உயிர் எங்கேயோ ஒரு இடத்தில் ஒரு கிளியிடமோ, குருவியிடமோ இருக்கும்! அதைப் பிடித்துக் கொன்றால்தான் அரக்கன் சாவான்''!
அதுபோல . . . தமிழ்மொழி வாயிலான கல்விக்குத் தமிழ் மக்கள் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதற்கு அடிப்படையான காரணத்தைப் புரிந்துகொண்டு . . . அதைத் தகர்த்து எறியாமல் . . . தமிழகத்தில் தமிழ்வழிப் படிப்பு வராது!
உண்மையான தமிழ்த்தாய் அன்பு என்பது . . . அந்தத் தாயைச் சிலைவடிவிலும், விருதுகள், மாநாடு வடிவங்களிலும் பார்ப்பது மட்டும் இல்லை. . . .
மக்களின் அறிவுக்கு அடிப்படையான கல்வியில் . . . பாலர் பள்ளியிலிருந்து உயர்நிலைக் கல்விவரை . . . பாடங்களில் தமிழைப் பார்ப்பதே ஆகும்! அதுதான் உயிர் உள்ள தமிழ்த்தாய்!
கலைப்பாடம், அறிவியல் பாடம் இரண்டையுமே தாய்மொழியில் - தமிழில் படிக்கலாம் . . . படிக்கவேண்டும்! ஆங்கிலத்தையோ - அல்லது வேறு எந்த மொழியையோ - மொழி என்ற அடிப்படையில் நன்றாகவே கற்றுக்கொடுக்கலாம். அப்போது மாணவர்கள் தங்களுடைய அறிவை அந்தப் பிறமொழிகளிலும் வெளிப்படுத்தலாம்.
இதுதொடர்பான நிறைய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இங்கு எப்படிப்பட்ட ஒரு சூழல் என்றால் . . . சுயமான அறிவு வளர்ச்சியும் தடைபடுகிறது. ஆங்கிலமும் அரைகுறையாகத் தெரிகிறது. உயர் நிலைகளில் விரும்பினால் ''English for Science and Technology" " English for specific Purpose" என்று கற்றுக்கொடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட வகுப்புவரை பொது ஆங்கிலம் . . . பின்னர் மாணவர்களின் துறைக்கேற்ப ஆங்கிலம் கற்றுக்கொடுத்தல் . . . இதுவே சரியான அணுகுமுறை என நான் கருதுகிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India